search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சில மணிமொழிகள்
    X

    பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சில மணிமொழிகள்

    பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் பல அற்புதங்கள் பதிவில் இருக்கின்றன. ஆனால் அவை வெளியில் அவ்வளவாக தெரியவில்லை. அவரது அற்புதங்களில் ஓரிரு நிகழ்வுகளைப் பார்ப்போம்.
    ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். இவரைப் பற்றி அறியாதவர்கள் மிகக் குறைவே எனலாம். நம் மண்ணில் மக்களை நல்வழிப்படுத்த இறைவனே அவ்வப்போது மனித உருவில் தோன்றி மக்களை நல்வழிப்படுத்துவார். அப்படி தோன்றி வாழ்ந்த மகானே ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர். இவரது ஜெயந்தி அன்று அவரைப் போற்றி வணங்குவதே அம்மகானுக்கு நாம் காட்டும் மரியாதையாக அமையும்.

    பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பிறப்பு : 18.2.1836, இடம்: ஹக்னி, பெங்கால், பெற்றோர் : தந்தை- குடிராம் சடோபாத்யா. தாய்-சந்திரா மணி, ஆன்மீகம்- இந்து மதம், அத்வைதம், அனைத்து மதங்களும் உண்மையே என்று கூறியவர். ஆன்மீகப் பாதையினை எளிதாய் உணர்த்தியவர்.

    சமாதி - 16.8.86. கொல்கத்தா.

    ஸ்ரீராமகிருஷ்ணர் மகா காளியின் உயர்ந்த பக்திமான். அவருக்கு காளி வாழ்வது உண்மையே. காளியும் அவரோடு பேசினாள். அவர் தந்த உணவினை உண்டாள். ஆரம்பத்தில் காளியின் தரிசனம் வேண்டி தன் தூய பக்தியினால் காளியிடம் வேண்டினார். மன்றாடினார். காளி தரிசனம் கிடைக்கவில்லையே என மனம் நொந்து அங்கிருந்த கத்தியால் தன்னை மாய்த்துக் கொள்ளவே முயன்றார்.

    காளி ஒளிரூபமாய் அவர் முன் தோன்ற அவர் நினைவின்றி விழுந்தார். பின்னர் ஒரு முறை பரமஹம்சர் இந்நிகழ்வினை பற்றி கூறும்போது பிரபஞ்ச சக்தி தோன்றிய போது வேறு எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளார். இப்படியரு கடும் தவம் புரிந்து காளியினைக் கண்ட அவருடன் எப்போதும் அன்னை காளி உடன் இருந்தாள்.

    இந்நிகழ்வினை எழுதுவதன் காரணம் அவரது தவ வலிமையினை உணர்த்துவதற்காகவே. இவரால் உருவாக்கப்பட்ட சீடர்களும் உயர்ந்த ஆன்மீக நிலையினை அடைந்தனர்.

    சுவாமி விவேகானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிரதான சீடர்களில் ஒருவர் என்பது உலகு அறிந்ததே.

    மனைவி என்று உறவு சொன்னாலும் அன்னை சாரதா தேவியினை பரமஹம்சர் காளியின் ரூபமாகவே பார்த்தார். அன்னை சாரதாதேவியும் பரமஹம்சரின் ஆன்மீக வழியினை பின்பற்றி அவரது சீடர்களுக்கு அன்னையாகவே விளங்கினார்.

    நாம் எந்த ரூபத்தில் இறைவனை வணங்குகின்றோமோ அவர் அந்த ரூபத்திலேயே நமக்கு காட்சி அளிப்பார் என்று பரமஹம்சர் கூறியுள்ளார். பகவான் ஸ்ரீராம கிருஷ்ணரின் பல அற்புதங்கள் பதிவில் இருக்கின்றன. ஆனால் அவை வெளியில் அவ்வளவாக தெரியவில்லை. எனவே அவரது அற்புதங்களில் ஓரிரு நிகழ்வுகளைப் பார்ப்போம்.

    பீகாரில் ஃலைளி நாத்நேரு ‘ரேணு’ என்பவர் வாழ்ந்து வந்தார். சிறந்த எழுத்தாளர். அரசாங்கம் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருதினை அளித்தது. அவருக்கு அரசாங்கத்தால் பென்சன் கூட அளிக்கப்பட்டது. ஆனால் ரேணு இரண்டினையும் ஏற்க மறுத்து விட்டார். அவருக்கு திடீரென காசநோய் ஏற்பட்டு கடுமையாய் பாதிக்கப்பட்டார்.

    மருத்துவமனையில் இருந்தார். அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை. ரத்த வாந்தியும் அதிகமாய் இருந்தது. மருத்துவர்கள் கை விட்டுவிட்டனர். அந்நிலையில் ரேணுவிற்கு கண்ணெதிரே ஒரு முகம் தெரிந்தது. ஆனால் அவர் யார் என்று ரேணுவிற்குத் தெரியவில்லை. அப்போது அந்த முகம் ‘ரேணு’விடம் பேசியது.

    ‘ஏன் அழுகின்றாய்?’ எழுந்திரு. உனக்கு நோய் சரியாகி விட்டது. நன்றாக இருக்கிறாய். உன் பேனாவால் ஒரு முறையாவது என் பெயரை நீ எழுதியிருக்கின்றாயா?’ என்று கூறி மறைந்தது.

    ரேணுவிற்கு ஒன்றும் புரியவில்லை. அதே நேரத்தில் 1 வருடமாக விடாது இருந்த காய்ச்சல் கொஞ்சம் கொஞ்ச மாக குறையத் தொடங்கியது. பின்னர் மருத்துவரும் ‘ரேணு’வின் உடல்நிலைப்பற்றிய கவலை நீங்கியதாகக் கூறினார். சிறிது நாட்களுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். உடல்நலம் தேறிய பிறகு ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற ரேணு ஒரு புத்தகத்தில் ஒருவர் படத்தினை கண்டு அதிசயித்தார். தன்னுடன் மருத்துவ மனையில் பேசிய அதே முகம் பின்னர் அவர் அது ஸ்ரீபகவான் ராமகிருஷ்ணர் என்று அறிந்தார். பரமஹம்சரைப் பற்றியும், சுவாமி விவேகானந்தர் பற்றியும் அதிகம் படித்தார். தன் பேனாவினால் எழுதினார்.

    இதே போன்றுதான் பாண்டிச்சேரி ‘அரவிந்தர்’ மகான் அவர்களுக்கு பரமஹம்சர் பல சூட்சுமங்களை அவர் முன் தோன்றி (தியானத்தில்) சொல்லிக் கொடுத்தார். இதனை ஸ்ரீஅரவிந்தரே குறிப்பிட்டுள்ளார்.

    இப்படி பல பதிவுகளை கூற முடியும். இந்நன்னாளில் அவரது போதனைகள் சிலவற்றினை படிப்பது நல்லது. பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் பேசியதிலிருந்து அவரின் சில மணிமொழிகள்.....

    * பணத்தை கையால் தொட்டால் என் கைகள் முறுக்கிக் கொள்கின்றன. என் மூச்சு நிற்கின்றது. ஆனால் பணத்தினை கடவுள் வழிபாட்டுக்காக புனித மக்களுக்காக, பக்தர்களுக்காக முறையாக அளவாக செலவிடலாம்.

    * கர்மமார்க்கம், ஞானமார்க்கம், பக்திமார்க்கம் இப்படி எந்த வழியிலும் இறைவனை அடைய முடியும்.

    * வழிபாட்டு ஆனந்தம் என்பது இறைவனின் நாமத்தினையும், இறைவனின் புகழையும் கூறிக்கொண்டே இருப்பது, பிரம்ம ஆனந்தம் என்பது கடவுளின் தரிசனம். இதனை அனுபவித்தவர்கள் ரிஷிகள். சைத்யயை தேவர் ஆழ்நிலை தியானத்தில் சமாதி நிலையில் இருப்பார். அல்லது பாதி உலக நினைவில் இறைவனைப் பற்றி கூறிக்கொண்டு இருப்பார். அல்லது இறைவனை பற்றி பாடிக்கொண்டும், பெயரை உச்சரித்துக் கொண்டும் இருப்பார்.

    * இறைவன் கற்பவிருட்சம். நாம் அங்கேயே அவருடனேயே இருக்க வேண்டும்.

    * கடவுள் எல்லா மனிதர்கள் இடத்திலும் உள்ளார். ஆனால் எல்லா மனிதர்களும் கடவுள் இல்லை.

    * நீங்கள் பைத்தியமாய் இருங்கள். உலக சுகங்களுக்காக அல்ல, இறைவனின் அன்பு வேண்டி பைத்தியமாய் இருங்கள்.

    * கடவுள் தரிசனம் கிடைத்தவருக்கு நல்லது, கெட்டது, உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்காது.

    * கடுகளவு தற்பெருமை இருந்தாலும் கடவுளை உணர முடியாது.

    * கடவுள் இரண்டு சமயங்களில் சிரிக்கின்றார். ஒரு மருத்துவர் நோயாளியிடம் கவலைப்படாதீர்கள். நான் காப்பாற்றி விடுவேன் என்று சொல்லும்பொழுது ‘நான் இந்த உயிரினை எடுக்கப் போகின்றேன். இவர் காப்பாற்றி விடுவேன்’ என்று சொல்கின்றாரே என்று சிரிக்கின்றார்.
    அதே போன்று இரு உறவினர்கள் நிலத்தினை அளந்து இது என்னுடையது. இது உன்னுடையது என பிரித்துக்கொண்டால் போதும் கடவுள் சிரிக்கின்றார். இவை அனைத்தும் கடவுளுடையது. மனிதன் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகின்றானே என கடவுள் சிரிக்கிறார்.

    * நான் வாழும் வரை கற்றுக்கொள்வேன்.

    * அனைத்து மதங்களும் உண்மையே.

    * இல்லற வாழ்வில் இருந்தாலும் இறையருள் பெற விரும்புபவர்கள் அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று இறைவனுக்காக ஏங்கி அழ வேண்டும்.

    * உலக வாழ்வில் ஈடுபட்டாலும் இறைவனே நமக்கு சொந்தமானவர் என்னும் உள்ள உறுதியோடு வாழ வேண்டும்.

    * மக்களுள் பெரும்பாலானோர் புகழுக்காகவோ, புண்ணியத்தைத் தேடும் பொருட்டோ பரோபகாரம் செய்கின்றனர். அத்தகைய சேவைகள் சுய நலத்தை அடிப் படையாகக் கொண்டவை.

    * மனத்தூய்மையால் மட்டுமே பிரபஞ்ச உண்மையினை உணர முடியும்.

    * அறியாமையின் காரண மாகத்தான் அகம்பாவம் மனிதனுக்கு ஏற்படுகின்றது. அந்த அகம்பாவம் மனிதனை அழிக்கின்றது.

    * மனித பிறவியினை எடுத்து விட்டு கடவுளை அறியும், உணரும் பாதையில் செல்லாவிட்டால் இந்த வாழ்க்கை வீணே.

    * உண்மையாய் எளிமையாய் இறைவனிடம் வேண்டினாலே போதும். இறைவனுக்கு கேட்கும்.

    * இரவில் தெரியும் நட்சத்திரங்கள் பகலில் தெரிவதில்லை என்பதால் நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியாது. ஆகவே மனிதா உனக்குக் கடவுள் தெரியவில்லை என்பதால் கடவுள் இல்லை என்று சொல்லாதே.

    ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரைப்பற்றி சுவாமி விவேகானந்தர் கூறிய சில செய்திகள்

    1902-ம் ஆண்டு பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாள் விழாவில் வேலூரில் சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட சில செய்திகளை அறிவோம்.

    * அவரை கண்ணால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பாக்கியம் செய்தவர்கள். மற்றவர்களுக்கும் அவர் தரிசனம் கிடைக்கும். அவர் ஸ்ரீ ராமகிருஷ்ணராக இப்பூவுலகிற்கு வந்த பொழுது அவரை யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் அருகில் இருந்த பலருக்குகூட அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. சிலருக்கே அந்த பாக்கியம் கிடைத்தது.

    * எனக்கு இப்பொழுது ஓய்வு இல்லை. என் உடலினையும் ஆத்மாவினையும் பகவானின் ‘காளி’ உரிமை எடுத்துக் கொண்டுள்ளாள். இது பகவான் சமாதியாகும். 2-3 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதனால் நான் வேலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன்.

    * என் குரு அவரது அன்பால் என்னை அவருக்கு அடிமை ஆக்கி விட்டார்.

    * என் சொல், செயல், சிந்தனை எல்லாமே என் குருவினுடையது. என்னுடையது அல்ல.

    * பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சரிதத்தினை படித்தாலே வேதத்தின் முக்கியத்துவம் புரியும்.

    * என் குருவின் முன்னால் வந்தாலே மனிதன் ஒழுங்காகி விடுவான். அவருடைய உதடுகள் யாரையும் சபித்ததில்லை. கேலி செய்ததில்லை. அவர் பார்த்தது எல்லாம் புனிதமே! நலமே.

    * என் குரு சொன்னது! ஒரு மனிதன் தன்னை ஒரு குகைக்குள்ளே அடைத்து ஒரே சிந்தனையாக இருந்து உயிர் நீக்கும் பொழுது அவரது அந்த எண்ணம் அக்குகைகளில் அதிர்வை ஏற்படுத்தி குகைகளின் சுவற்றினை ஊடுருவி பிரபஞ்சத்தின் வழியாக மனித இனத்தினை சென்று அடையும். ஆக எண்ணங்கள் மிக வலுவானது என்று எண்ண வலுவினைப் பற்றி கூறியுள்ளார்.

    * எனது குரு மிகப்பெரிய சக்தி. இன்னும் அவரது பக்தர்கள் மூலமாக அவர் இந்த உலகில் வேலை செய்து கொண்டிருக்கின்றார்.

    * அவருக்கு ஒவ்வொரு பெண்ணின் முகமும் அவர் வணங்கும் மாகாளியே.
    Next Story
    ×