search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பரிசுத்த அதிசய பனிமாதா அன்னை ஆலய தேர் பவனி
    X

    பரிசுத்த அதிசய பனிமாதா அன்னை ஆலய தேர் பவனி

    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா அன்னை ஆலயத்தில் திருவிழாவை முன்னிட்டு தேர் பவனி நடந்தது.
    வள்ளியூர் அருகே உள்ள தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா அன்னை ஆலய திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான 133-வது ஆண்டு திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு முதல் திருப்பலியும், அதனை தொடர்ந்து திருயாத்திரை திருப்பலியும் நடந்தது. மாலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனாக தத்து கொடியை கோவிலை சுற்றி வந்து காணிக்கையாக செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பின்னர் நற்கருணை ஆசீருடன் கொடியேற்றம் நடந்தது. மதுரை மறை மாநிலம் அருட்தந்தை ஆனந்தம் மறையுரை வழங்கினார்.

    10 நாட்கள் நடந்த திருவிழாவில் தினமும் காலையில் திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 8-ம் திருநாள் காலையில் வடக்கன்குளம் மறை மாவட்ட முதன்மை குரு ஜான்பிரிட்டோ தலைமையில் திருயாத்திரை திருப்பலியும், மாலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கோட்டாறு மறை மாவட்ட இளைஞர் இயக்குனர் ஜெனிபர் எடிசன் மறையுரை வழங்கினார். 9-ம் திருநாளான நேற்று முன்தினம் இரவு பரிசுத்த அதிசய பனிமாதா தேர் பவனி நடந்தது. தொடர்ந்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலையம் பங்குத்தந்தை ஜோசப் இசிதோர் மறையுரை வழங்கினார்.

    நேற்று தக்கலை மறை மாவட்ட ஆயர் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. விழாவில் தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை பங்குந்தந்தை ஜாண்சன்ராஜ், உதவி பங்கு தந்தை கலைச்செல்வன், தர்மகர்த்தா ஜெபஸ்டின் ஆனந்த் மற்றும் தெற்கு கள்ளிகுளம் கத்தோலிக்க கிறிஸ்தவ நாடார் மகமை சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், இறை மக்கள் செய்திருந்தனர். 
    Next Story
    ×