search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதாகிருஷ்ணன்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-அமைச்சர் தினந்தோறும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
    • லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இங்குள்ள சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் இந்த மையத்தில் படிக்கும் 235 மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்தனர்.

    இதில் 2 மாணவர்களுக்கு முதலில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே மேலும் 29 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தனியார் மற்றும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள் அந்த மைய வளாகத்திலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மாணவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மருத்துவ வல்லுனர்கள் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு தற்போது உள்ள உருமாறிய வைரசால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று தெரிவித்து உள்ளனர்.

    தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மாணவர்கள் என்பதும் குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு இந்த தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே நாம் கடைபிடித்த முகக்கவசம், தனிமனித இடைவெளி, கூட்டங்களை தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ச்சியாக கடைபி டித்தால் ஆரோக்கியமான உடல் நலம் காக்கப்படும்.

    முதல்-அமைச்சர் தினந்தோறும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    தற்போது முற்றிலும் கொரோனாவை தமிழ்நாட்டில் இருந்து முடிவுக்கு கொண்டு வரும் நேரத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வந்து கரை ஒதுங்கும் நேரத்தில் தமிழக மக்கள் கவனக் குறைவாக இருந்து மூழ்கும் நிலைக்கு போகக் கூடாது.

    மேலும் பொதுமக்கள் லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பிரிய ராஜ் உடன் இருந்தனர்.

    ×