search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்குவரத்து நெரிசல்"

    • நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.
    • யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    அமெரிக்காவின் மொன்டானா நகரில் சர்க்கஸ் யானை ஒன்று சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. பரபரப்பான சாலையில் நாலாபுறமும் ஓடிய யானையால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

    ஜோடான் வேர்ல்ட் சர்க்கசில் இருந்து இந்த யானை திடீரென வெளியேறி உள்ளது. பயோலா என்று அழைக்கப்பட்ட இந்த யானையை குளிப்பாட்டி கொண்டிருந்த போது திடீரென கார் சத்தத்தால் அச்சமடைந்து சர்க்கசில் இருந்து ஓட்டம் பிடித்துள்ளது. பின்னர் ஒரு வாலிபர் கையில் தடியை ஏந்திக் கொண்டு யானையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர தீவிரமாக போராடிய காட்சிகளும் வீடியோவில் இருந்தது.

    ஆனாலும் அந்த யானையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனினும் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த யானையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். யானை சாலையில் அங்கும், இங்குமாக ஓடிய நிலையிலும் அதிர்ஷ்டவசமாக யாரையும் துரத்தவில்லை என சர்க்கஸ் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
    • சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    அரசு தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் பலரும் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் படிப்பதை காணமுடியும். அந்த வகையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நேரத்திலும் ஜோமோட்டோ ஊழியர் ஒருவர் தேர்வுக்கு படிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    'எக்ஸ்' தளத்தில் ஆயுஸ் சங்கி என்ற பயனர் பகிர்ந்த அந்த வீடியோவில், பரபரப்பான சாலையில் போக்குவரத்து நெரிசலில் ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் நிற்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அப்போது அந்த வாலிபர் தனது செல்போனில் யூனைடெட் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ( யு.பி.எஸ்.சி.) விரிவுரைகளை பார்க்கும் காட்சிகள் உள்ளது. இந்த வீடியோவை பார்த்த பிறகு, கடினமாக படிக்க உங்களுக்கு வேறு உந்துதல் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று ஆயுஸ் சங்கி பதிவிட்டுள்ளார்.

    இந்த வீடியோ 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வைகளையும், 1500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பயனர்கள் பலரும் ஜோமோட்டோ ஊழியரின் ஆர்வத்தை பாராட்டி பதிவிட்டனர். சிலர், இந்த வீடியோ மிகவும் ஊக்கமளிக்கிறது. இது முன்பை விட கடினமாக உழைக்க வேண்டும் என்ற உந்துதலை தருகிறது என பதிவிட்டுள்ளனர். அதேநேரம் சில பயனர்கள் தங்களது பதிவில், சாலைகளில் செல்லும்போது இதுபோன்ற செயல்கள் ஆபத்தை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளனர்.

    • மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது.
    • பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் தென் மாவட்டங்களுக்கும், அதேபோல் அங்கிருந்து வரும் லாரிகள் வட மாநிலங்களுக்கும் சென்று வருகிறது. இதனால் எப்போதும் சென்னிமலை நகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு.

    சென்னிமலை பஸ் நிலையத்தை கடந்து பெருந்துறை மற்றும் வெள்ளோடு ரோடு வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் தெற்கு ராஜ வீதி, மேற்கு ராஜ வீதி வழியாக குமரன் சதுக்கத்தை அடைந்து செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது. அதேபோல் குமரன் சதுக்கம் வழியாக பஸ் நிலையம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் வடக்கு ராஜ வீதி மற்றும் கிழக்கு ராஜ வீதி வழியாக செல்லும் வகையில் ஒரு வழி பாதையாக உள்ளது.

    ஆனால் சென்னிமலை முருகன் கோவிலுக்கு கார்களில் வரும் பக்தர்கள் வடக்கு ராஜ வீதி மற்றும் தெற்கு ராஜ வீதி வழியாக பார்க் ரோட்டை அடைந்து முருகன் கோவிலுக்கு செல்லாமல் குமரன் சதுக்கத்தில் இருந்து ஒரு வழிப்பாதையாக உள்ள மேற்கு ராஜவீதி வழியாக நுழைகின்றனர்.

    இதனால் மேற்கு ராஜ வீதி வழியாக வடக்கு நோக்கி வரும் வாகனங்கள் ஸ்தம்பித்து நிற்கிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நூற்றுக்கணக்கான கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வருவது உண்டு. அப்போது ஒரு வழிப்பாதையான மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் நுழைவதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    தினமும் காலை நேரங்களில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள் மேற்கு ராஜ வீதி வழியாக செல்லும்போது மலைக்கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் எதிரே வருவதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

    இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மாலை நேரத்திலும் இதே பிரச்சனை தான் ஏற்படுகிறது.

    சென்னிமலை போலீஸ் நிலையத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலேயே மேற்கு ராஜ வீதி இருப்பதால் குமரன் சதுக்கத்தில் இருந்து மேற்கு ராஜ வீதி வழியாக கார்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் செல்லாமல் இருக்க போலீசார் அங்கு கண்காணித்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். மேலும் கனரக வாகனங்கள் நகருக்குள் வரால் இருக்க புற வழி சாலை ரிங் ரோடு அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
    • நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    விவசாயிகளின் 4-வது நாள் போராட்டம் காரணமாக டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பல அடுக்குகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

    இதையொட்டி பஞ்சாப் முதல் ஹரியானா,டெல்லி வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    டெல்லியின் காஜிபூர் எல்லையிலும் தீவிர கண்காணிப்பு உள்ளது. தடுப்புவேலிகள் அமைத்து வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. நோயாளிகளை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ்களும் இந்த நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.

    டெல்லிக்கும் ஹரியானாவுக்கும் இடையே உள்ள 2 பெரிய எல்லைகளான திக்ரி மற்றும் சிங்கு எல்லையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி மூடப்பட்டு உள்ளன.

    மேலும் அங்கு விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைவதை தடுக்க டெல்லி போலீசார் பல அடுக்கு முள்கம்பிகள், கான்கிரீட் தடுப்பு வேலிகள் அமைத்து உள்ளனர்.



    • போக்குவரத்து நெரிசலால் பள்ளி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
    • தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.

    கண்டமங்கலம்:

    விழுப்புரம்-புதுச்சேரி நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரெயில்வே கேட் சர்வீஸ் சாலை உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு சொகுசு ரக கார்களை ஏற்றி வந்த கனரக கண்டெய்னர் லாரி ரெயில்வே பாதையை கடக்க முற்பட்டது. கண்டமங்கலம் ரெயில்வே கிராசிங்கில் அமைக்கப்பட்டு இருக்கும் உயர் மின்னழுத்த பாதுகாப்பு தடுப்பு கட்டையை கடந்து செல்ல முடியாமல் கனரக வாகனம் பாதியிலேயே நின்றது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 கிலோ மீட்டர்களுக்கு மேலாக மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி மற்றும் கனரக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காலை நேரம் என்பதால் தனியார் பள்ளி, கல்லூரிகள் பஸ்களும் நெரிசலில் சிக்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முற்பட்டனர்.

    கண்டமங்கலம் பகுதியில் உள்ள தனியார் வாகன டிரைவர்கள் போலீசாருடன் இணைந்து, வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஒரு புற வாகனங்களை மாற்று வழியில் திருப்பப்பட்டு சொகுசு கார்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை விழுப்புரத்திற்கு திருப்பி அனுப்பினர். பின்னர் கண்டமங்கலம் ரெயில்வே கேட் சாலை இயல்பு நிலைக்கு திரும்பியது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த இந்த திடீர் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    • போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
    • இதில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    பிரமாண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி எல்லைப் பகுதிக்கு படையெடுத்தனர்.

    நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மூலம் எல்லைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வரிசைகட்டி செல்கின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது இன்று போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறி சென்றனர்.

    விவசாயிகள் போராட்டத்தால் இன்று டெல்லியில் உள்ள சாலைகளில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரமாக கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவித்தன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

    • உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
    • இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது.

    ஆம்ஸ்டர்டாம்:

    உலகளவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. நெதர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் இந்த ஆய்வை நடத்தியது.

    இந்நிலையில், 2023-ம் ஆண்டுக்கான ஆய்வு பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், உலகளவில் அதிக நெரிசல் மிகுந்த நகரமாக 6வது இடத்தை இந்தியாவின் பெங்களூரு பிடித்துள்ளது. பெங்களூருவில் 10 கிலோமீட்டர் தூரம் பயணிக்க 28 நிமிடங்கள் 10 நொடிகள் ஆகிறது என கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது ஒரு நிமிடம் குறைவாகும். அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பெங்களூருவாசிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    கடந்த ஆண்டு 2-வது இடத்தில் இருந்த பெங்களூரு இந்த ஆண்டு 6ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டியலில் இங்கிலாந்து தலைநகர் லண்டன் முதல் இடம் பிடித்துள்ளது. அங்கு ஒரு மணி நேரத்திற்கு 14 கிலோமீட்டர் மட்டுமே நெரிசல் மிகுந்த நேரத்தில் பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அயர்லாந்தின் டப்ளின் 2-வது இடத்திலும், கனடாவின் டொரண்டோ 3-வது இடத்திலும், இத்தாலியின் மிலன் 4-வது இடத்திலும், பெரு தலைநகர் லிமா 5-வது இடத்திலும் உள்ளன. மகாராஷ்டிராவின் புனே 7வது இடத்தில் உள்ளது.

    முறையான சாலை இணைப்பு இல்லாத காரணத்தாலே இந்த நகரங்களில் மிகப்பெரிய அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

    • 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
    • கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னை நகரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்களை கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. 5 இடங்களில் மேம்பாலம் கட்டுவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கமும் மக்கள் நெருக்கமும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. ஒருபுறம் மெட்ரோ ரெயில் விரிவாக்கப் பணிகள் நடந்து வந்தாலும்கூட நகரில் நெரிசல் குறைந்தபாடில்லை. கொருக்குப்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தை கடக்க மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதேபோல வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலம் கட்டும் பணியும் தொடங்கி மெதுவாக நடக்கிறது.

    இந்த மேம்பால பணியை இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்க 2,437 சதுர மீட்டர் தனியார் நிலத்தையும் 194 சதுர மீட்டர் அரசு நிலத்தையும் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணி டிசம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுதொடர்பாக விரைவில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

    வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ரூ.195.19 கோடி மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது. வள்ளுவர் கோட்டம் சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைகிறது. இந்த பாலம் 570 மீட்டர் நீளம் கொண்டதாகும். 15 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது.

    மேம்பாலம் கட்டுவதற்கு தனியார் 30 பேரின் நிலம் தேவைப்படுகிறது. 2860 சதுரமீட்டர் அளவுள்ள தனியார் இடங்கள் கையகப் படுத்தப்பட வேண்டும். அரசு துறை நிலம் 8019 சதுர மீட்டர் நிலம் தேவைப்படுகி றது. மொத்தம் 10,879 சதுர மீட்டர் நிலம் இந்த திட்டத்திற்கு தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் சென்னை கலெக்டரால் நியமிக்கப்பட்டு நடக்கிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிக்காக பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது. சென்னை மாவட்ட கலெக்டர் மற்றும் நிலம் கையகப்படுத்தும் துறை அதிகாரிகள் மூலம் இவை நடத்தப்படும். நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும் டெண்டர் கோரப்படும் என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த மேம்பாலம் கான் கிரீட் தூண்கள் மூலம் அமைத்தாலும் உத்திரங்கள் (கிரேடர்) இரும்பு ராடுகளை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. ரெயில்வே மேம்பாலங்களுக்கு இதுபோன்ற இரும்பு உத்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கட்டுமான பணி காலம் குறையும்.

    இந்த மேம்பாலம் 18 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப் பட்டதும் பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.
    • அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    தைப்பூசம், குடியரசுதினம் மற்றும் வார இறுதிநாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதன்காரணமாக கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகளான மூஞ்சிக்கல், அண்ணாசாலை மற்றும் சுற்றுலா இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக சுற்றுலா இடங்களுக்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர். இருந்தபோதும் மோயர்பாயிண்ட், பைன்பாரஸ்ட், பில்லர்ராக், கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, குணாகுகை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளை கண்டு ரசித்தனர்.


    மேலும் பிரையண்ட் பூங்கா, செட்டியார்பூங்கா, ரோஜா பூங்காவில் மலர்களையும் அவர்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்ந்தனர். பகல் பொழுதில் அதிகவெயில் காணப்பட்டது. இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவியது.

    2 மாறுபட்ட சீதோஷ்ண நிலையையும் சுற்றுலா பயணிகள் அனுபவித்தனர். இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. இதனால் பல்வேறு சாலைகளில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடுமுறை நாட்களில் போதியஅளவு போலீசார் நியமித்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 5 நாட்கள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.
    • மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டுள்ளன.

    பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    ஏற்கனவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை என்பதால், மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை இருந்தது.

    இதனால், வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில மக்கள் ஆகியோர் சொந்த ஊர்களுக்கு கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் படையெடுத்தனர்.

    5 நாட்கள் விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் மக்கள் சென்னை திரும்பி வருகின்றனர்.

    சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    மேலும், மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் திரண்டுள்ளன.

    கூடுதல் கவுண்டர்கள் அமைக்கப்பட்டாலும், சூழலுக்கு ஏற்ப வாகனங்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதால் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இல்லை எனவும் கூறப்படுகிறது.

    • 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    • வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    ஓசூர்:

    தமிழகத்தில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகை, இன்று போகியுடன் தொடங்கியது. வருகிற புதன்கிழமை (17-ந் தேதி) வரை பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு அரசு விடுமுறை என்பதால், கர்நாடகா மாநிலம் பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் ஓசூர் வழியாக தமிழகத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதலே தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர்.

    ஒரே நேரத்தில் கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளி சுங்கச்சாவடி வழியாக தமிழகத்திற்கு கடந்த 2 நாட்களாக கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் படையெடுத்ததால், ஓசூர் அருகே தமிழக - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி சுங்கச்சாவடி முதல் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதி வரை 3 கிமீ தொலைவிற்கு கார்கள், லாரிகள், பேருந்துகள் என நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    போக்குவரத்து நெரிசலால், ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல், ஓசூர் நகர பகுதிகளிலும் நேற்று போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. 

    • பொங்கலுக்கு மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டன.
    • கடந்த 2 நாளில் பேருந்து, ரெயில், விமானம் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் கடந்த 12-ம் தேதி முதல் சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் நேற்று முன்தினம் 1.95 லட்சம் பேர் பயணித்தனர். நேற்று 1,071 வழக்கமான பேருந்துகள், 658 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்த 50 ஆயிரம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

    கடந்த 2 நாட்களில் சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம் பேர் என மொத்தமாக 5 லட்சம் பேர் பேருந்துகளில் சொந்த ஊர் சென்றுள்ளனர்.

    மேலும் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில்நிலையங்களில் நேற்று காலை முதலே மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் இயக்கப்பட்ட ரெயில்களில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். விமானம் மூலமாகவும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

    இந்நிலையில், கடந்த 2 நாட்களில் பேருந்து, ரெயில், விமானங்கள் மூலம் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்.

    ×