search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறந்த குழந்தை"

    • குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது.
    • ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. நேற்று வீட்டில் இருந்த போது குழந்தையை படுக்க வைத்து விட்டு தாயார் குளிக்கச் சென்றார்.

    அந்த நேரத்தில் வீட்டில் இருந்த எலி ஒன்று குழந்தை அருகில் வந்தது. திடீரென குழந்தையின் மூக்கை எலி கடித்தது.

    இதனால் குழந்தை கதறி அழுதது. சத்தம் கேட்டு குழந்தையின் தாய் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்த்தனர்.

    அப்போது குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம் நிற்காமல் வந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    எலி இருக்கும் வீடுகளில் குழந்தையை தரையில் படுக்க வைக்க வேண்டாம் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம் கொராடச்சேரி பகுதியை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மனைவி நாகப்பட்டினம் மாவட்டம் கோகூர் கிராமத்தை சேர்ந்த சரண்யா. இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது.

    குழந்தை பாக்கியம் இல்லாமல் மனவேதனை அடைந்து வந்துள்ளனர். மனகஷ்டத்தில் இருந்த அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளை அணுகி எந்த பலனும் அளிக்காத நிலையில் தனது தாயின் வீட்டிற்கு வந்து தங்கிய சரண்யா நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை எடுத்துள்ளார்.

    அதனை தொடர்ந்து சரண்யா கருவுற்று நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    பின்னர் சரண்யாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதி குறை பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. முறையான உருவமே இல்லாத நிலையில் 540 கிராம் எடையில் பிறந்த குழந்தையை கண்டு சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்த நாகை அரசு டாக்டர்கள் குழந்தையை இன்குபெட்டர் கருவியில் வைத்து நம்பிக்கையோடு 100 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். தாய்ப்பால் குடிக்கும் திறன் இல்லாமல், மூச்சு திணறல், கிருமி தொற்று, ரத்த சோகை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்த குழந்தையை தரமான சிகிச்சையால் டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர்.

    செயற்கை சுவாசம் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் கொடுக்கப்பட்டு குழந்தையை மீட்ட டாக்டர்கள் பின்னர் தாய்ப்பால் எடுத்து பாலாடை மூலம் குழந்தைகளுக்கு பாலூட்டி பின்னர் நேரடியாக தாய் பால் கொடுக்க பயிற்சி அளித்து 540 கிராமில் பிறந்த குழந்தையை 1.5 கிலோ எடைக்கு கொண்டு வந்துள்ளனர். நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்த தாய்ப்பால் வார நிறைவு விழாவில் குழந்தையை பெற்றோர்களிடம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மகிழ்ச்சியோடு ஒப்படைத்தார்.

    நாகையில் 540 கிராம் எடை கொண்ட குழந்தையை போராடி காப்பாற்றி பெற்றோர்களிடம் ஒப்படைத்த நாகை அரசு டாக்டர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    • அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் தாய்ப்பால் வார விழா நடந்தது
    • பச்சிளம் குழந்தைகளின் நிபுணர் பேச்சு

    வேலூர்:

    வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல பிரிவு சார்பில உலக தாய்ப்பால் வார தின விழா ஒரு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் பாப்பாத்தி தலைமை தாங்கினார்.

    குழந்தைகள் நலத்துறை தலைவர் கல்பனா, உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தைகள் நலத்துறை டாக்டர் தாட்சியாயினி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சென்னை குழந்தைகள் நல மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நிபுணர் அனிதா கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூடியதாவது:-

    குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 2 மணி நேரத்திற்கு ஒருமுறை பால் கொடுக்க வேண்டும்.

    கட்டாயம் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். மாட்டு பசும்பால், பால் பவுடர், தேன், சர்க்கரை தண்ணீர், கழுதைபால் போன்றவை கொடுக்க கூடாது. தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுக்கும்போது "கங்காரு" அரவணைப்பு போன்று பால் கொடுக்க வேண்டும்.

    அதிக பட்சமாக 2 ஆண்டுகள் வரை பால் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரும்.

    இவ்வாறு அவர் கூறினார். இதில் பேராசிரியர்கள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

    • கள்ளக்காதலன் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எப்படி வெளியுலகிற்கு காட்டுவது? என்று கவலையுற்றார்.
    • கொல்லப்பட்ட குழந்தையின் உடலை கடற்கரையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவ னந்தபுரம் அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்தவர் ஜூலி (வயது 40). இவரது கணவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஜூலி தனது 15 வயது மகனுடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் ஜூலிக்கு வேறொருடருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதனால் ஜூலி கர்ப்பமானார்.

    கணவர் இறந்து 12 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து வரும் நிலையில், கள்ளக்காதலனால் தான் கர்ப்பமானதை, கள்ளக்காதலை போன்று ஜூலி யாரிடமும் கூறாமல் ரகசியமாக வைத்துள்ளார். நாட்கள் செல்லச்செல்ல அவரது வயிறு பெரிதாக தொடங்கியது.

    அதன்பிறகும் அவர் தான் கர்ப்பமாக இருப்பதை யாரிடமும தெரிவிக்கவில்லை. அவர் ரகசியமாக மருத்துவரிடம் உடல்நிலையை பரிசோதித்தபடி இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜூலிக்கு குழந்தை பிறந்திருக்கிறது.

    கள்ளக்காதலன் மூலம் தனக்கு பிறந்த குழந்தையை எப்படி வெளியுலகிற்கு காட்டுவது? என்று கவலையுற்றார். ஆகவே அவர் அந்த குழந்தையை கொலை செய்து புதைத்துவிட திட்டமிட்டார். அதன்படி அங்குள்ள கடற்கரைக்கு பிறந்த குழந்தையை எடுத்துச்சென்றிருக்கிறார்.

    அங்கு குழந்தையின் மூக்கு மற்றும் வாயை பொத்தி மூச்சு திணற வைத்து கொடூரமாக கொலை செய்தார். குழந்தை பிறந்த சில மணித்துளிகளிலேளே இந்த கொடூர செயலில் ஜூலி ஈடுபட்டுள்ளார். கொல்லப்பட்ட குழந்தையின் உடலை கடற்கரையில் தோண்டப்பட்ட குழியில் போட்டு மூடிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடற்கரையில் ஜூலி புதைத்த குழந்தையின் உடல் வெளியே வந்துவிட்டது. நாய்கள் குழந்தையின் உடலை கடித்து குதறியபடி இருந்தன. இதனைப்பார்த்த சிலர் குழந்தை பிணம் கிடப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் குழந்தை உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் குழந்தை மூச்சை திணறடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. குழந்தையை கொன்றது யார்? என்று துப்பு துலக்கும் நடவடிக்கை யில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

    அப்போது தான், ஜூலிக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததை போலீ சார் கண்டறிந்தனர். இதை யடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் தனக்கு குழந்தையே பிறக்க வில்லை, அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

    ஆனால் ஜூலி வீடு உள்ள பகுதியை சேர்ந்த சிலர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜூலி கர்ப்பமாக இருந்ததும், அங்குள்ள ஒரு மருத்துவ மனையில் குழந்தை பெற்றதும் தெரியவந்தது. அக்கம்பக்கத்தினர் கூறிய தகவல்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை தெரிவித்து ஜூலியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அவர் தனக்கு குழந்ைதை பிறந்ததையும், அதனை மூச்சு திணறடித்து கொன்று கடற்கரையில் புதைத்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஜூலியை போலீசார் கைது செய்தனர்.

    கணவர் இறந்து விதவை யாக வாழ்ந்து வந்தநிலையில், கள்ளக்காதலன் மூலம் கருவுற்று குழந்தை பெற்றது வெளியே தெரிந்தால் தன்னை அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் கேவலமாக பேசுவார்கள் என்பதால், கர்ப்பமானதையும், குழந்தை பெற்றதையும் மறைத்துவிட்டதாகவும், பெற்ற குழந்தையை பிறந்த சிறிது நேரத்தி லேயே கொன்று புதைத்து விட்டதாகவும் போலீசாரிடம் ஜூலி தெரிவித்திருக்கிறார்.

    கள்ளக்காதலன் மூலம் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கொடுரமாக கொன்று புதைத்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது.
    • பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    வேளச்சேரி, சசி நகர் அருகே உள்ள ஏரிப் பகுதியில் நேற்று மாலை பச்சிளம் பெண் குழந்தை உடல் மிதந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வேளச்சேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீ சார் நடத்திய விசாரணையில் சசிநகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்த சங்கீதா (வயது26) என்பவர் கள்ளக்காதலன் மூலம் குழந்தை பிறந்ததால் அதனை ஏரியில் வீசி கொலை செய்து இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி கார்த்திக் என்ற கணவரும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளது. கார்த்திக் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மனைவியின் செயலை அறிந்து அவர் அதிர்ச்சியில் உள்ளார்.

    சங்கீதாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இந்த தொடர்பை சங்கீதா தனது கணவருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டார். இதனால் அவர் மீது கணவருக்கும் பெரிய அளவில் சந்தேகம் ஏற்படவில்லை.

    இதற்கிடையே சங்கீதா, கள்ளக்காதலன் மூலம் கர்ப்பம் அடைந்தார். அந்த குழந்தையை கலைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர் வயிற்றில் குழந்தை இருப்பதை அக்கம் பக்கத்தினருக்கு தெரியாமல் மறைத்தார்.

    வயிறு பெரிதானதும் கணவர் மற்றும் உறவினர்கள் கேட்டபோது சாப்பிட்டு தூங்குவதால் வயிறு பெரிதாகி விட்டது என்று கூறி சமாளித்து உள்ளார்.

    இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கணவர் இல்லாத நேரத்தில் சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

    பின்னர் கணவர் வருவதற்குள் அந்த பச்சிளம் குழந்தையை அருகில் உள்ள ஏரியில் வீசி விட்டு சங்கீதா வீட்டுக்கு வந்து உள்ளார். இதில் ஏரி தண்ணீரில் மூழ்கி குழந்தை இறந்து போனது.

    2 நாட்களுக்கு பிறகு குழந்தையின் உடல் தண்ணீரில் மிதந்து கரை ஒதுங்கியதால் போலீசாரின் விசாரணையில் சங்கீதா சிக்கிக்கொண்டார்.

    தவறான உறவின் மூலம் பிறந்ததால் குழந்தையை ஏரியில் வீசி கொலை செய்ததாக சங்கீதா எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்து உள்ளார்.

    குழந்தை பெற்றதும் சங்கீதா ஏரிப்பகுதிக்கு சென்று குழந்தையை தண்ணீரில் வீசி இருக்க முடியாது என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே குழந்தை கொலையில் சங்கீதாவுக்கு கள்ளக்காதலன் உதவினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கள்ளக்காதலில் பிறந்ததால் பச்சிளம் குழந்தையை கல்நெஞ்சம் படைத்த தாயே ஏரியில் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை.
    • நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    மும்பை :

    மும்பை பாண்டுப்பை சேர்ந்தவர் பிரியா காம்ப்ளே. நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவத்திற்காக அங்குள்ள மாநகராட்சி சாவித்ரிபாய் புலே மகப்பேறு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி குழந்தைக்கு பால் புகட்ட பிரியா காம்ப்ளே தீவிர சிகிச்சை பிரிவுக்கு சென்றார். அங்கு குழந்தையின் வாயில் பிளாஸ்டிக் டேப் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தைக்கு பால் புகட்ட நர்சுகள் அனுமதிக்கவில்லை. மறுநாள் காலை 8 மணிக்கு வரும்படி அவரிடம் கூறி அனுப்பினர். இதன்பின்னர் நள்ளிரவு 1 மணி அளவில் மீண்டும் குழந்தையை பார்க்க பிரியா காம்ளே சென்றார்.

    அப்போதும் தனது குழந்தையின் வாயில் ஒட்டிய டேப் அகற்றப்படாமல் இருந்ததை கண்டு நர்சிடம் விசாரித்தார். இதற்கு குழந்தை அழாமல் இருப்பதற்காக டேப் ஒட்டியதாக நர்ஸ் தெரிவித்தார். இதனை கேட்டு திகைத்துப்போன பிரியா காம்ப்ளே மற்ற குழந்தைகளையும் கவனித்தார். அங்கிருந்த மேலும் 3 குழந்தைகளுக்கும் இதே போன்று டேப் ஒட்டப்பட்டு இருந்தது.

    இதுபற்றி அவர் முன்னாள் கவுன்சிலர் ஜக்ருதி பாட்டீலிடம் தெரிவித்தார். அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் மாநகராட்சி உதவி கமிஷனரிடம் புகார் அளித்தார். குழந்தையின் உயிருக்கு ஆபத்தான செயலில் ஈடுபட்ட நர்சை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது.

    • பெண்ணுடன் வந்த அவரது மூத்த மகன், தாயாருக்கு பிறந்த குழந்தை கழிவறையில் வீசப்பட்டதாக டாக்டர்களிடம் கூறினார்.
    • அதிர்ச்சி அடைந்த டாக்டர், குழந்தைகள் நல அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டம் கோட்டா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

    வீட்டிலேயே குழந்தை பெற்ற அந்த பெண்ணுக்கு ரத்த போக்கு அதிகமாக இருந்தது. இதனால் அவர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். அப்போது தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும், இப்போது ரத்த போக்கு அதிகமாக இருந்ததால் ஆஸ்பத்திரிக்கு வந்ததாகவும் கூறினார்.

    ஆனால் பெண்ணுடன் வந்த அவரது மூத்த மகன், தாயாருக்கு பிறந்த குழந்தை கழிவறையில் வீசப்பட்டதாக டாக்டர்களிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர், குழந்தைகள் நல அலுவலருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    உடனே அந்த பகுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் பெண்ணின் வீட்டு கழிவறையில் ஒரு பக்கெட்டுக்குள் அழுது கொண்டிருந்த குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அந்த குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் குழந்தை உயிர் பிழைத்தது. இதையடுத்து அந்த குழந்தையை ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் தத்து எடுத்துக்கொண்டது.

    இந்த சம்பவம் குறித்து கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு உள்ளார். அதில் பிறந்த சில நிமிடங்களில் தாயாரால் உதாசீனப்படுத்தப்பட்ட குழந்தையை போராடி மீட்டு உயிர் பிழைக்க வைத்த டாக்டர்கள் மற்றும் போலீசாரை பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தையை காரில் வந்த பெண் ஒருவர் தெருவில் விட்டுச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. #caughtoncamera
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மிசாபர்நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் சன்ரோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஒரு வீட்டு வாசலில் நின்றது. காரில் இருந்த பெண் பிறந்த குழந்தையை வெளியே வீசினார். பின்னர் அந்த கார் வேகமாக அங்கிருந்து சென்று விட்டது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமேராவில் பதிவானது.

    இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானர். அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #caughtoncamera
    ×