search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அங்கிட் திவாரி"

    • மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை லஞ்ச ஒழிப்புத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
    • வரும் 15-ம் தேதி வரை அங்கிட் திவாரியை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் ஒரு கார் நேற்று காலை வந்தது. மத்திய பிரதேச பதிவெண் கொண்ட இந்தக் காரில் லஞ்ச பணம் கொண்டு வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை திண்டுக்கல் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

    காரில் வந்த நபர் முன்னுக்குப்பின் முரணான தகவல் தெரிவித்தார். மத்திய அரசு பணி என்று காரில் எழுதப்பட்டிருந்த நிலையில் அவர் அதிகாரியாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன்பேரில் அவர் வைத்திருந்த அடையாள அட்டையைப் பார்த்தபோது அமலாக்கத் துறையை சேர்ந்த அங்கிட் திவாரி என கண்டறியப்பட்டது. இவர் கொண்டு வந்த பணம் லஞ்சம் வாங்கிய பணமாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. அதன் அடிப்படையில் அவர் வைத்திருந்த ஆவணங்கள் அவரது செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகள் ஆகியவற்றை சோதனை நடத்தினர்.

    இதுகுறித்து ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறை மதுரை எஸ்.பி. சரவணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரும் விசாரணை மேற்கொண்டார்.

    விசாரணையில், திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர்மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அமலாக்கத்துறை வழக்கை எடுக்காமல் இருக்க டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ 1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி.

    இதனால் அச்சப்பட்ட டாக்டர் சுரேஷ் ஏற்கனவே ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டும் என்பதால் மேலும் ரூ.31 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் தெரிவித்தார்.

    புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கிட் திவாரியிடம் டாக்டர் சுரேஷ்பாபுவால் கொடுக்கப்பட்டது. இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட உடனேயே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் அங்கிட் திவாரி. அவரை விரட்டிச் சென்ற திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிமறித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்சப் பணம் ரூ.20 லட்சம் மொத்தமாக கைப்பற்றப்பட்டது தெரிய வந்தது.


    அங்கிட் திவாரியின் கூட்டாளிகள் யார்? அங்கிட் திவாரி யாருக்கு எல்லாம் லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்தார் என பல மணிநேரம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

    மதுரையில் உள்ள அங்கிட் திவாரி வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். நேற்று மாலை தொடங்கிய இந்த சோதனை விடிய விடிய தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திக்கொண்டிருந்தபோது சி.ஆர்.பி.எப். போலீசார் இரவில் பாதுகாப்புக்காக வந்தனர். ஆனால், பாதுகாப்புக்கு வந்த சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு படையினருக்கு தமிழக காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் 5 மணி நேரமாக வெளியே காத்துக்கொண்டிருந்த அவர்கள், பின்னர் திரும்பிச்சென்றனர்.

    மதுரை துணை மண்டல அமலாக்கத்துறை அலுவலகத்தை தமிழக காவல்துறையினர் பாதுகாப்புடன் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.

    மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கிட் திவாரியின் வீடு, அலுவலகத்தில் பயன்படுத்திய 3 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நீதிபதி முன் ஆஜர்படுத்திய நிலையில், தொடர்ந்து, வரும் 15-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணிநேரம் அதிரடி சோதனை நடத்தியதும் அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×