search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Small onion cultivation"

    • விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர்.
    • சின்ன வெங்காய நாற்றுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர்.

    குண்டடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம் சுற்று வட்டார பகுதிகள் மிகவும் வறட்சியான பகுதி என்பதால் குண்டடம் சூரியநல்லூர், மேட்டுக்கடை, தும்பலப்பட்டி, வெறுவேடம்பாளையம், குங்குமம்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீர் மூலம் நிறைந்த லாபத்தை தரும் பயிர்களை தேர்வு செய்து பயிர்செய்கின்றனர். அதன்படி தற்போது சின்னவெங்காய நாற்றுகள் மூலம் அதிகப்படியான லாபத்தை ஈட்டிவருகின்றனர்.

    இது குறித்து ஒரு விவசாயி கூறியதாவது:- தற்போது பெய்துள்ள மழை மற்றும் பி.ஏ.பி பாசனத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரை கொண்டு இப்பகுதி விவசாயிகள் அதிகப்படியான அளவில் தக்காளி, மிளகாய், கத்திரி, சின்ன வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்தப்பயிர்களுக்கு ஏற்ற நிலம் என்பதால் நல்ல மகசூல் தருகிறது. தற்போது இப்பகுதி விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளதால் அதிகளவில் பயிர்செய்துள்ளனர். இதில் கோ ஆன் 5 மற்றும் ஒரிய நாற்று ரகங்கள் பயிர்செய்ய 1 ஏக்கருக்கு விதைகள் 35 கிலோ மூலம் 400 பாத்திகள் விதை விடுகின்றனர். 1 கிலோ விதை ரூ.5ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதற்கான செலவுகள் ஏக்கருக்கு விதை, கூலி, களை எடுத்தல், இடுபொருட்கள் உள்பட ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவாகிறது.

    இந்த பயிர்கள் 40 முதல் 45 நாட்களில் பிடுங்கி நடவு செய்யலாம். இந்த நிலையில் தற்சமயம் திருப்பூா் மாவட்டம் முழுவதும் பரவலாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. மேலும் வனப்பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீா்வரத்தும் அதிகரித்து வருகிறது. ஆங்காங்கே உள்ள குளம், குட்டைகளுக்கு தண்ணீா் வந்த வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனா். அந்த வகையில் தற்போது சின்ன வெங்காயத்தின் தேவை அதிகம் இருப்பதாலும், போதிய விலை கிடைப்பதாலும் சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். அதன்படி தேனி, கம்பம், திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பல்லடம் பொங்கலூர், பூளவாடி, உடுமலை உள்பட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் சின்ன வெங்காய நாற்றுகளை வாங்கிச்செல்கின்றனர். இங்கு நல்ல தரமான நாற்றுகளை விற்பனைக்கு பயிர்செய்வதால் வாங்கிச்செல்லும் விவசாயிகளுக்கும் பயிர்செய்து அறுவடையின்போது நல்ல மகசூல் கிடைப்பதால் இப்பகுதி நாற்றுகளுக்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வருடமும் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சின்னவெங்காய நாற்றுகளை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×