என் மலர்
நீங்கள் தேடியது "ADMK"
- எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
- தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை அ.திமு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடன் முன்னாள் அமைச்சர்களும் ஆளுநரை சந்தித்தனர்.
தமிழக அமைச்சரவை கூட்டம் மற்றும் தமிழக சட்டசபை வருகிற 20-ந்தேதி கூட உள்ள நிலையில் ஆளுநருடனான எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடன் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 11 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.
சந்திப்பின்போது, அமைச்சர்கள் தொடர்புடைய முறைகேடுகளுக்கான ஆதாரங்களை ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நகராட்சி நிர்வாகத்துறை ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என்.நேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும், அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான மணல் கொள்ளை வழக்கில் ரூ.3,000 கோடி முறைகேடு தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி புகார் மனு அளிக்க உள்ளார்.
- வாங்கிய லேப்டாப்புகளையே விநியோகம் செய்யாமல் வீணடித்த பழனிசாமி அறிவுடன்தான் பேசுகிறாரா?
- தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு.
தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து திமுக அரசு வகுத்து வருவதை பார்த்து பொறாமையில் குமைகிறார் எடப்பாடி பழனிசாமி.
'நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு அவன் பேர் மனிதனல்ல. நாவில் ஒன்று நினைவில் ஒன்று அதன் பேர் உள்ளமல்ல' என எம்.ஜி.ஆர் பாடிய பாடல் அப்படியே எடப்பாடி பழனிசாமிக்கு பொருந்தும்! சேலத்து மேடையில் அரசியல் நடிப்பை அரங்கேற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
''திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி'' எனச் சொல்லும் பழனிசாமியின் அதிமுக, அடிமை கம்பெனியாக மாறி பல வருடங்கள் ஆகிவிட்டது.
2016-ஆம் ஆண்டிலிருந்து 2024-ஆம் வரை தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற பழனிசாமி 'வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைப்பதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது' என்று சொல்வதைக் கேட்டு சின்னக் குழந்தையும் கெக்க பெக்க என சிரிக்கும்.
''2021-ல் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 இடங்களில் 10 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. இது அதிமுகவின் கோட்டை'' என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளை திமுக கூட்டணி கைப்பற்றியது. அந்த 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் அடங்கியிருக்கும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம் பெற்றது பழனிசாமிக்கு தெரியாதா? அதிமுகவின் கோட்டையான சேலத்திலேயே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஓட்டை விழுந்ததை எல்லாம் மறந்துவிட்டாரா?
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2019-ஆம் ஆண்டிலேயே லேப்டாப் வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டு 'கல்விக்கான ஆயுதமாக மடிக்கணினியை, தொடர்ந்து வழங்கி வந்தது எனது அரசு' எனப் பச்சைப் பொய் சொல்கிறார் பழனிசாமி.
அதிமுக ஆட்சியில் 68 கோடி ரூபாயில் வாங்கிய 55 ஆயிரம் லேப்டாப்கள் வீணடிக்கப்பட்டதை CAG என்ற இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த லேப்டாப் முறைகேட்டை அம்பலப்படுத்திய CAG அறிக்கை 2023 ஏப்ரலில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
2017-2018-ஆம் ஆண்டு போட்டித் தேர்வுக்குத் தயாரான 12-ஆம் மாணவர்களுக்கு லேப்டாப்புகள் வழங்க எல்காட் நிறுவனம் மூலம் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லேப்டாப்புகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 79 லேப்டாப்புகள் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. 55 ஆயிரம் லேப்டாப்புகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அந்த லேப்டாப்புகளின் பேட்டரிகள் வாரண்டி காலாவதி ஆகிவிட்டது. இதனால், 68 கோடியே 71 லட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டது என CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
'அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட லேப்டாப் திட்டம் மாணவர்களுக்கு அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்த திட்டம்' எனச் சொல்கிறார் பழனிசாமி. வாங்கிய லேப்டாப்புகளையே விநியோகம் செய்யாமல் வீணடித்த பழனிசாமி அறிவுடன்தான் பேசுகிறாரா?
CAG அறிக்கையில் 53-ஆம் பக்கத்தில் மடிக்கணினிகளின் தேவை, கொள்முதல் மற்றும் விநியோகம் தொடர்பாக அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2017 -2018 முதல் 2020 – 2021 வரை 11 மற்றும் 12-ம் வகுப்பில் 18.60 லட்சம் தகுதியான மாணவர்கள் இருந்தார்கள். ஆனால், 20 சதவிகித மாணவர்களுக்கு வழங்காமல் புறக்கணித்தார்கள். 2017-2018 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 2.32 லட்சம் மாணவர்கள், பள்ளிப் படிப்பை முடிக்கும் வரை லேப்டாப்புகளை பெறவில்லை.
55 ஆயிரம் மடிக்கணினிகளை மாணவர்களுக்கு வழங்காமல் வீணடித்த எடப்பாடி பழனிசாமி, லேப்டாப் பற்றி எல்லாம் பேசுவதற்கு அருகதை இருக்கிறதா?
20 லட்சம் கல்லூரி மாணாக்கருக்கு லேப்டாப் வழங்கும் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார். தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD, Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டு மாணவர்கள் உலத்தோடு போட்டியிடும் வகையில் ஒவ்வொரு திட்டமாக வகுத்து வருகிறது திமுக அரசு.
மகளிர், அரசு ஊழியர், மாணாக்கர் என ஒவ்வொரு பிரிவினரும் மாண்புமிகு முதலமைச்சரின் திட்டங்களால் பயன்பெறுவதைப் பார்த்து பொறுத்துக் கொள்ள முடியாமல் குமைகிறார் பழனிசாமி.
டீ கடையில் காசு இல்லாமல், ''டேய் ஒரு டீ குடிக்க எவ்ளோ நடிக்க வேண்டியது இருக்கு உங்க முன்னாடி'' என வடிவேலு பேசும் காமெடிதான் பழனிசாமி பேசுவதைக் கேட்கும் போது நினைவுக்கு வருகிறது. டீ கடையில் இரண்டு பேப்பர் படிக்கும் போது அதில் உள்ள செய்திகளில் தனக்கு எல்லாம் தெரிந்தவர் போல வடிவேலு தலையிட்டு உதார் விடுவார். அப்படிதான் திராவிட மாடல் அரசின் திட்டங்கள் எல்லாம் தன்னால்தான் வந்தது என பழனிசாமி நடிக்க வேண்டியிருக்கிறது. மகளிர் உரிமத் தொகை, லேப்டாப், போன்றவற்றை அதிமுக குரல் கொடுத்ததால்தான் திமுக அரசு கொண்டு வந்தது என பழனிசாமி சொல்லிக் கொள்ளும் வரிசையில் இப்போது பொங்கல் பரிசுத் தொகுப்பிலும் பழனிசாமி தலையை நுழைத்திருக்கிறார். அடுத்து நாம் ஓர் திட்டம் கொண்டு வர முடிவு செய்தாலே, உடனே முந்திக் கொண்டு அதற்கு ஒரு கருத்தைச் சொல்லி, அது தன்னால்தான் வந்தது எனப் பெருமைப்பட்டு அரசியல் செய்வது எல்லாம் எதிர்க கட்சித் தலைவர் செய்யும் செயலா?
"எல்லாமே என்னால்தான் நடந்தது" என்று ஒரு Mindsetஃபோபியா சிலருக்கு உண்டு. அதில், பழனிசாமியும் சேர்ந்து கொண்டார். "நான்தான் எல்லாம் செய்பவன்'' என்ற "God Complex" அதாவது கடவுள் மனப்பான்மையில் பழனிசாமி வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நம்முடைய திட்டங்கள் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் ஆதரவை எதிர்க் கட்சித் தலைவரே உணர்ந்ததால்தான் இப்படியெல்லாம் பேசி வருகிறார். பழனிசாமி அரசியல் செய்வதற்கும் நம்முடைய சாதனை திட்டங்கள் காரணமாக அமைந்திருக்கிறது. Election Eyewash-க்காக லேப்டாப் கொடுகிறார் என சொல்கிறார் பழனிசாமி. அவருடைய God Complex-ஐ என்ன சொல்ல?
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் புதுக்கோட்டையில் உரையாற்றி கொண்டிருந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, ''ஏப்ரலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வளர்ச்சி பாதையில் பங்கேற்போம்'' என்றார். 'கூட்டணி ஆட்சி' என ஆட்சியில் பங்கு என்றதோடு பழனிசாமியின் பெயரைக்கூட அமித்ஷா உச்சரிக்கவில்லை.
''கூட்டணிக்கு தலைமை எடப்பாடி பழனிசாமிதான்'' என அடிமைகள் வீராவேசம் காட்டினாலும் எஜமானர் அமித்ஷா, பழனிசாமி பெயரைக்கூட சொல்ல மறுக்கிறார். . 'கூட்டணிக்கு தலைமை' என்ற பதவியிலேயே தடுமாறிக் கொண்டிருக்கும் பழனிசாமிதான் 'முதல்வர் பதவி'க்கு வரப் போகிறாரா? ''இந்த அவமானம் உனக்கு தேவையா?'' என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு பொருத்தமான கேரக்டர் பழனிசாமிதான்! அவமானங்களை தாங்கி கொள்வது ஆயக்கலைகளிலும் அடக்காத ஒன்றுதான் போல!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் பாஸ்கரன் நீக்கம்.
- உடன்பிறப்புகள் யாரும் பாஸ்கருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
திருவள்ளூர் மாவட்ட அதிமுக துணை செயலாளர் பாஸ்கரன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட பாஸ்கரன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ ஹ. பாஸ்கரன் இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார்.
- தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியனும் இன்று தாவெகவில் இணைகிறார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், நிர்வாகிகள் கட்ச தாவி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று, திமுக மற்றும் அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைகின்றனர்.
அதன்படி, தஞ்சை மத்திய மாவட்டம் திமுக வர்த்தக அணி அமைப்பாளர் சுந்தரபாண்டியன் இன்று தவெகவில் இணைகிறார்.
விஜய் தலைமையில் நடக்கும் விழாவில் ஒட்டன்சத்திரம் திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் கண்ணாயிரம் தவெகவில் இணைகிறார்.
புதுவை முன்னாள் ஐஜி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ பெரியசாமி, காங்கிரஸ், தேமுதிக நிர்வாகிகளும் தவெகவில் இணைகின்றனர்.
நாதகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்த ஜெகதீச பாண்டியனும் இன்று தாவெகவில் இணைகிறார்.
மேலும், சென்னை மாநகராட்ச 23வது வார்டு கவுன்சிலர் ராஜன் பர்னபாஸ் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித்ஷா ஆலோசனை.
- கூட்டத்தில் திமுகவிற்கு எதிராக அமித்ஷா கருத்துகளை முன்வைத்தார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயண நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
பின்னர், அங்கு திமுகவிற்கு எதிராக அமித்ஷா கருத்துகளை முன்வைத்தார்.
விழாவிற்கு பிறகு, திருச்சியில் தங்கியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் அதிமுக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் எம்பிக்கள் ரத்தினவேல், ப. குமாருடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார்.
சட்டமன்றத் தேர்தல் வியூகம் தொடர்பாக அமித் ஷாவுடன் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை செய்ததாக தகவல்
மேலும் தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
- தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கஷ்டம்?
- அதிமுகவின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலையை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியது.
சேலத்தில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டு மக்களை பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்படாமல் இருக்கிறார். பொது மக்களை பற்றி கவலைப்பட்டிருந்தால் தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்திருப்பார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என முதலமைச்சர் நினைத்தால் உடனடியாக டிஜிபியை நியமனம் செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு டிஜிபி நியமனம் செய்வதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என்ன கஷ்டம்?
திமுக ஒரு கார்ப்பரேட் கட்சி, அதிமுக தான் உண்மையான கட்சி. வரும் தேர்தலுடன் திராவிட முன்னேற்றக் கழக வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. திமுகவிற்காக உதயநிதி ஸ்டாலின் எத்தனை காலம் உழைத்திருக்கிறார்?
திட்டங்களை நிறைவேற்ற நிதியில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூப்பாடு போடுகிறார். கார் பந்தயம் நடத்த, கடலில் பேனா சிலை வைக்க தேவையில்லாமல் நிதி செலவழிப்பு.
கடந்த தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. திமுக அரசு அளித்த வாக்குறுதியின்படி 100 நாள் வேலை நாட்களை உயர்த்தினார்களா?
அதிமுகவின் கோரிக்கையை ஏற்று 100 நாள் வேலையை மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியது.
அதிமுக எப்படி கூட்டணி அமைக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு.
- விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வரும் 9ம் தேதி தொடங்கப்படுகிறது.
ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவரகளுக்கான நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஜனவரி 12, 24 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வரும் 9ம் தேதி தொடங்கப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஜனவரி 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்பாளர்களுக்கான நேர்காணல்.
- அசல் ரசீதுடன் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிப்பு.
ஜனவரி 9ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தங்களுக்காக விருப்ப மனு பெற்றவர்கள் மட்டும் அசல் ரசீதுடன் வந்து நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் அறிக்கை குழு பயணம் மேற்கொள்கிறது.
- அதிமுக குழு 10 மண்டலங்களாகப் பிரித்து, 20ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு வரும் 7ம் தேதி முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
அதன்படி, 7ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் அதிமுக தேர்தல் அறிக்கை குழு பயணம் மேற்கொள்கிறது.
அதிமுக குழு 10 மண்டலங்களாகப் பிரித்து, 20ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
பல தரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்த தரவுகளை நிர்வாகிகள் கொடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் விரிவாக தெரிவித்துள்ளது.
- முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- அண்ணா படத்திற்கு செங்கோட்டையன் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்குமண்டல அமைப்பு செயலாளருமான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று மேட்டுப்பாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இதற்காக அவர் கோபியில் இருந்து கார் மூலமாக சிறுமுகை, ஆலாங்கொம்பு வழியாக மேட்டுப்பாளையத்துக்கு வந்தார். அவருக்கு சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதனை தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் தமிழக வெற்றிக்கழகத்தினர் ஆலாங்கொம்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.
இந்த சிலை அ.தி.மு.க சார்பில் அமைக்கப்பட்டது என்பதால் அ.தி.மு.க.வினர் செங்கோட்டையன் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்து, முன்கூட்டியே சிலைக்கு பூட்டு போட்டு சென்றனர்.
இதையடுத்து செங்கோட்டையன் மேட்டுப்பாளையம் வந்தார். மேட்டுப்பாளையம் வந்ததும் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின்னர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த கட்சியினருடன் சென்றார்.
ஆனால் தமிழக வெற்றிக்கழகத்தினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அனுமதி வாங்காததால், அண்ணா சிலையும் பூட்டப்பட்டு இருந்தது.
இதையடுத்து அண்ணா சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்திற்கு செங்கோட்டையன் கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அதனை தொடர்ந்து காரமடையில் உள்ள அரங்கநாதர் கோவிலிலும் அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து அவர் மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் புதிய அலுவலகத்தை திறந்து வைக்க உள்ளார்.
- கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது.
- எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
இன்றும் நாளையும் நடைபெற உள்ள வாக்காளர் சிறப்பு திருத்த முகாமில் விடுபட்ட வாக்காளர்களையும், புதிய வாக்காளர்களையும் சேர்க்க நிர்வாகிகள் உதவ வேண்டும். பெயர் திருத்தம் செய்ய விரும்பும் வாக்காளர் உள்பட வீடு தோறும் சென்று தங்கள் பகுதியில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்து அவர்களின் பெயரை பட்டியலில் சேர்க்க வேண்டும்.
கடந்த முறை வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் முதல் 15 நாட்கள் முறையாக நடைபெற்றது. அதன்பிறகு மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே 6,7,8 வாக்காளர் விண்ணப்ப படிவங்களில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
100 நாள் வேலைத்திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளின் படிதான் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026-ல் நல்லாட்சி மலர்கின்றபோது 150 நாட்களாக உயர்த்தப்படும்.
ஆனால் 100 நாள் வேலை திட்டத்தையே நிறுத்தி விடுவார்கள் என தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
தேர்தலின் போது கள்ள ஓட்டு போடுவதில் தி.மு.க.வினர் வல்லவர்கள். அவர்கள் ஒவ்வொரு பூத்துகளின் மூலம் பி.எல்.ஓ.க்களை கொண்டு 300 வாக்குகளை சேர்த்து உள்ளனர். அதனை நீக்க வேண்டுமென மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட உள்ளது. அ.தி.மு.க. பூத் ஏஜெண்டுகள் நம்பிக்கைக்கு உள்ளவர்களாக பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
விண்ணை முட்டும் அளவு உயர்ந்துள்ள தி.மு.க. ஆட்சியின் விலைவாசி உயர்வு பட்டியலை கட்சியினர் துண்டு பிரசுரங்களாக பிரசுரித்து மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோரது பிறந்த நாள் விழாக்களை சிறப்பாக கொண்டாட வேண்டும். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கட்சியினர் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்றார்.






