என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.வில் சேர்ந்தது தவறான முடிவு: ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள் த.வெ.க.வில் இணைகிறோம்- நிர்வாகி
    X

    தி.மு.க.வில் சேர்ந்தது தவறான முடிவு: ஓ.பி.எஸ்.ஆதரவாளர்கள் த.வெ.க.வில் இணைகிறோம்- நிர்வாகி

    • ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.
    • தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.

    குன்னூர்:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.க.வில் இணைந்தார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் தன்னை தி.மு.க.வில் இணைத்து கொண்டார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் இணைந்தனர்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்தது தவறான முடிவு என அவரது ஆதரவு நீலகிரி மாவட்ட செயலாளராக இருந்த பாரதியார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு 3 முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம்.

    அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கவும், அ.தி.மு.க. ஒன்றிணையவும் எத்தனையோ முறை கோரிக்கை விடுத்து பார்த்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி அதனை கண்டு கொள்ளவில்லை. 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்கு பொதுச்செயலாளர் எடப்பாடியே காரணமாக அமைந்துவிட்டார்.

    பலமுறை கோரிக்கை விடுத்தும் அ.தி.மு.க.வில் சேர்க்காததால், ஓ.பன்னீர்செல்வம் இன்று தி.மு.கவில் இணைந்து விட்டார். அவர் சூழ்நிலை காரணமாக தி.மு.க.வில் இணைந்து இருந்தாலும் அவர் எடுத்த இந்த முடிவு என்பது தவறான முடிவு.

    ஏனென்றால் ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்றிருந்தவர் ஓ.பி.எஸ்.

    தற்போது அவர் தி.மு.க.வில் இணைந்ததை அ.தி.மு.க. தொண்டர்களும், தமிழக மக்களும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுக்கு சென்று விட்டதால், நாங்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய உள்ளோம்.

    அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டது. இணைப்புக்கான தேதியை அவர்கள் அறிவிப்பார்கள். இருப்பினும் இன்றோ அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களாகிய நாங்கள் இணைய உள்ளோம்.

    தமிழக மக்கள் மத்தியில் த.வெ.க தலைவர் விஜய்க்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. மக்கள் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய வரவேற்பு அளிக்கிறார்கள். அவர் சட்டசபை தேர்தலில் கட்டாயம் முதலமைச்சராக பதவியேற்றார். வருகிற தேர்தலில் விஜயை முதலமைச்சராக அரியணையில் ஏற்றுவதற்காக நாங்கள் தீவிர களப்பணியாற்ற உள்ளோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×