என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

"இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ... உங்களை நம்பி வந்த தொண்டர்கள்தான் பாவம்": அ.தி.மு.க. விமர்சனம்
- ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. கரை போட்ட துண்டை அணிவித்தார்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர் செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக இருந்தார். எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கி சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர்.
மேலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு 2023-ம் ஆண்டு நடந்த கட்சி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆனார். இதை அ.தி.மு.க. பொதுக்குழுவும் அங்கீகரித்தது.
இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது.
அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்குகள் அனைத்தும் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வந்தார். பின்னர் அதை அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்று மாற்றினார்.
மேலும் பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வை ஒருங்கிணைப்பேன் என்ற கோஷத்துடன் செயல்பட்டு வந்தார். ஆனால், அவரால் அ.தி.மு.க.வை மீட்க முடியவில்லை. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் இருந்ததால் ஓ.பன்னீர்செல்வத்தின் முயற்சி பலிக்கவில்லை.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேர்தலை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம், தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டார். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக அவரிடம் இருந்து விலகி மாற்று கட்சிகளில் இணைந்தனர். அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர். ஜே.சி.டி. பிரபாகர் த.வெ.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ.வான தர்மர் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் அய்யப்பன் எம்.எல்.ஏ. மட்டும் இருந்தார்.
ஆதரவாளர்கள் அனைவரும் பிரிந்து சென்றதால் ஓ.பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டார். இதையடுத்து அவர் என்ன முடிவு எடுப்பார் என்று கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நிறைவடைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். இதையடுத்து அவர் தி.மு.க. வில் சேரப்போவதாக தகவல் பரவத்தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் நேற்று அண்ணா அறிவாலயத்துக்கு வரவில்லை.
மேலும் ஓ.பன்னீர் செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். நள்ளிரவு 1 மணி வரை இந்த ஆலோசனை நீடித்தது. அப்போது தி.மு.க.வில் இணையலாம் என்று அவர்கள் முடிவு எடுத்தனர்.
இந்த நிலையில் இன்று காலை சென்னை தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஓ.பன்னீர்செல்வத்தை, அமைச்சர் பி.கே.சேகர்பாபு சந்தித்து பேசினார். பின்னர் ஓ.பன்னீர்செல்வமும், பி.கே.சேகர்பாபுவும் அங்கிருந்து ஒரே காரில் ஏறி சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் அண்ணா அறிவாலயத்துக்கு சென்றதும் அங்கிருந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அவரை வரவேற்று அண்ணா அறிவாலயத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஓ.பன்னீர் செல்வம் தி.மு.க.வில் இணைந்தார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார்.

ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சால்வை அணிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்துக்கு தி.மு.க. கரை போட்ட துண்டை அணிவித்தார். பின்னர் தி.மு.க. உறுப்பினர் படிவத்தில் ஓ.பன்னீர் செல்வம் கையெழுத்திட்டார்.
இதேபோல் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், அய்யப்பன் எம்.எல்.ஏ. ஆகியோரும் தி.மு.க.வில் இணைந்தனர்.
ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் 3 முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா சிறைக்கு சென்ற கால கட்டத்தில் 2 முறையும், ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு ஒரு முறையும் முதலமைச்சராக இருந்தார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்த காலகட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருந்தார். 2022-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் தனியாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தி.மு.க.வில் இணைந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வில் இணைந்திருப்பதன் மூலம் தமிழக அரசியலில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு அ.தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க. ஐ.டி. பிரிவு சார்பில் எக்ஸ் வலைதளத்தில் காரசாரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:-
"ரோஸி டீக்கடை" நடத்திட்டு இருந்த உங்களை, ஆளாக்கி, அமைச்சராக்கி, ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம். அம்மா வளர்த்த இயக்கத்திற்கு ஏ-பார்ம், பி-பார்ம் கையெழுத்து போடும் பெருமையைக் கொடுத்து அழகு பார்த்தார்கள் அண்ணா தி.மு.க.தொண்டர்கள். ஆனால் நீங்களோ, உள்ளே இருந்தும், உ.பி.யாகவே இருந்தீர்கள்.
எம்.ஜி.ஆர். மாளிகையில் கருணாநிதி வசனப் புத்தகம் படித்துக் கொண்டிருந்தீர்கள். உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல், வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள். பாவம் சும்மா விடுமா?
அரசியல் அனாதையாக, இனி நீங்கள் அ.தி.மு.க. வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர் ரத்தத்தின் ரத்தமான தொண்டர்கள். பசுத்தோல் போர்த்திக் கொண்டு நீங்கள் நடத்திய நாடகமெல்லாம் அம்பலப்பட்டு நின்றதும், வேறு வழியே என்றதும், ஓனர் வாசப்படிக்கே போயாச்சோ? இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு அம்மா எல்லாம் சும்மா தானே.
இந்த கருமத்துக்கு தர்ம யுத்தம் 1.ஓ, 2.ஓ ன்னு வேற... உங்களையும் நம்பி வந்து ஏமாந்த அந்த சில தொண்டர்களின் பாவம் தலைமுறைக்கும் தொடரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






