search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Summer Health Care"

    வெப்பத்தின் காரணமாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.
    கோடை காலம் தொடங்கி விட்டது. கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் உக்கிரம் அடைவதற்கு முன்பே வெயில் நம்மை வறுத்தெடுக்கிறது. பொதுவாக கோடையில் இந்தியாவில் வெயிலின் அதிகமாக இருக்கும். குறிப்பாக தென் இந்தியாவில் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும்.

    வெப்பத்தின் காரணமாக உடலில் சோர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படும். குறிப்பாக தோலில் அதிக பாதிப்புகள் உருவாகும். அரிப்பு, வியர்வை, கொப்பளங்கள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும். இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்து கொள்வது எப்படி? என பார்ப்போம்.

    வியர்க்குரு

    கோடை காலத்தில் வெப்ப நிலை சாதாரணமாக 40-ல் இருந்து 45 டிகிரியை தொடுகிறது. ஆனால் மனித உடலில் இயல்பான வெப்ப நிலை 37 டிகிரி செல்சியல். எனவே உடலை குளிர்விக்க அதிக அளவில் வியர்வை சுரக்கிறது. எனவே உடலை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

    அவ்வாறு பராமரிக்காவிட்டால் தோலில் உள்ள வியர்வை சுரப்பிகளில் அழுக்கு சேர்ந்து அடைத்துக் கொள்ளும். இதனால் வியர்க்குரு வரும். எனவே வெயில் காலத்தில் தினமும் 2 தடவை குளிர்ந்த நீரில் குளித்தால் வியர்க்குரு வராது.

    வியர்வையை உடம்பில் தங்க விடாமல் முகத்தை வெறும் நீரால் கழுவுவது, உடம்பை ஈரமான துணியால் துடைத்துக் கொள்வது நல்லது. காலமின் லோஷனை பூசினால் அரிப்பு குறையும். அதன் விலை குறைவு.

    வேனல் கட்டிகள்

    தோலின் மூலம் வெளியேற வேண்டிய உப்பு, யூரியா போன்றவை சரியாக வெளியேற முடியாமல் அழுக்கு போல் தங்கி விடும். அப்போது அங்கு பாக்டீரியா தொற்றிக் கொள்ள அந்த இடம் வீங்கி புண்ணாகி விடும். இது வேனல் கட்டி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள், வலி நிவாரணிகள், வெளிப்பூச்சு களிம்புகள் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும். வெயிலில் அலைவதை தவிர்க்க வேண்டும். கட்டிகள் சீழ்பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்த கட்டிகளை கையால் தொடவோ, கிள்ளவோ கூடாது. இதன் சீர் மற்ற இடங்களில் பட்டால் அங்கேயும் கட்டிகள் தோன்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.

    படை - தேமல்

    உடலில் ஈரமுள்ள பகுதிகளில் பூஞ்சை கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்ளும். குறிப்பாக வியர்க்குருவில் இந்த தொற்றும் சேர்ந்து கொண்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் தோன்றும். அதை குணப்படுத்த களிம்பு அல்லது பவுடரை தடவ வேண்டும். அவற்றை நேரடியாக மருந்து கடைகளில் வாங்க வேண்டாம். தோல் சிகிச்சை நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற்று அவரது அறிவுறுத்தலின்படி பயன்படுத்தலாம். உள்ளாடைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் பூஞ்சை, படை வருவதை தடுக்கலாம்.

    கோடை காலத்தில் சிறுநீர் கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுவதாலும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காததும் இதற்கு முக்கிய காரணமாகும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் நீர்க்கடுப்பு பிரச்சினை தீரும்.

    தொற்று நோய்கள்

    வெயில் காலத்தில் சமைத்த உணவு வகைகள் விரைவில் கெட்டுவிடும். அவற்றில் நோய் கிருமிகள் அதிக அளவில் பெருகும். இந்த உணவுகளை சாப்பிடு வதால் வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபதி, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் வரும். ஆகவே வெயில் காலத்தில் சமைத்த உணவுகளை உடனுக்குடன் பயன்படுத்த வேண்டும். உணவு மீது ஈக்கள் மொய்க்காமல் மூடி பாதுகாக்க வேண்டியது அவசியம். தண் ணீரை கொதிக்க காய்ச்சிஆற வைத்து குடியுங்கள்.

    எண்ணெய் சேர்ந்த உணவுகள் மற்றும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். ஆவியில் வேக வைத்த காய்கறிகள், இயற்கையிலேயே குளிர்ச்சியான உணவுகள், பழங்கள், மோர், இளநீர், தண்ணீர் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

    சரும நோய்கள்

    இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளால் சருமத்தில் வியர்வை தேங்கி படர்தாமரை, அரிப்பு, தோல் வீங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அதிக தூசு, வெப்பம் கலந்த காற்று காரணமாகவும் சருமத்தில் அலர்ஜி ஏற்படும். உடலை மறைக்கும் தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது, தோல் வீங்கிய பகுதிகளை கையால் தொந்தரவு செய்யாமல் இருப்பது, முடிந்தவரை உடலை தூய்மையாக வைத்திருப்பது, படர்தாமரைக்காக கிரீம்களை மருத்துவர் ஆலோசனையோடு தடவுவது போன்றவற்றை மேற்கொண்டாலே பிரச்சினை தீர உதவும்.

    குளிக்கும்போது மிகவும் மிருதுவான (மைல்ட்) சோப்பை பயன்படுத்துவது நல்லது.கடுமையான வெப்பத்தால் சருமம் பாதிக்கப்படுகிறது. அதற்கு காரணம் சூரிய ஒளியில் உள்ள ‘அல்ட்ராவைலட்’ ஒளியே காரணம். அதுவே தோல் வறண்டு போக காரணமாகிறது. எனவே ‘பிரெஷ்’ ஆன பழச்சாறு, காய்கறி சாறு போன்றவற்றை பருகுங்கள். இது உடலின் ஈரப்பசையை காக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    அது தவிர தினமும் 8 டம்ளர் தண்ணீர் பருகலாம். அதுவும் உடலின் ஈரத்தன்மையை பாதுகாக்கும். கோடை காலத்தில் காபி, தேநீர் குடிப்பதை குறைத்து கொள்ள வேண்டும். வாயு நிரப்பப்பட்ட செயற்கை மென்பானங்கள் மற்றும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்.
    அதற்கு பதிலாக இளநீர், மோர், சர்பத், பதநீர் போன்றவற்றை அதிக அளவில் குடிக்கலாம். எலுமிச்சை பழ சாற்றில் சமையல் உப்பு அல்லது சர்க்கரை கலந்து குடிப்பதும் உடல்நலத்துக்கு சிறந்தது.

    தர்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, பலாப்பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் சாப்பிடலாம் அல்லது இவற்றை சாறு எடுத்தும் பருகலாம்.

    தொடர்ந்து வெயிலில் இருப்பதை தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியில் இருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அப்படி வெளியே செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்து கொள்ளலாம். இதுபோன்ற சில எளிய முன்எச்சரிக்கை நடவடிக்கைககளை மேற்கொண்டால் கோடையை வெகுவாக அனுபவிக்கலாம்.

    docmurli@gmail.com
    வெயில் காலத்தில் அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.
    தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இயற்கையை வெல்ல எவராலும் முடியாது. எனவே அதனோடு இசைந்து வாழ கற்றுக்கொள்வது சாலச்சிறந்தது. கொடூரமாக கொளுத்தும் வெயில் காரணமாக வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சிலர் சுருண்டு விழுந்து மரணம் அடைகிறார்கள்.

    தமிழ்நாட்டில் வெயில் கொடுமையால் பகல் வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும் வீட்டிற்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கம் மக்களை வாட்டுகிறது. குழந்தைகள், முதியவர்கள் என பாகுபாடு இன்றி அனைவரும் வெயிலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நகர்ப்புற பகுதிகளில் வெயில் மண்டைய பிளக்கிறதே என நினைத்தால், கிராமப்புறங்களில் அதைவிட மோசம். பெரும்பாலானோர் கோடை வெயிலுக்கு பயந்து கொண்டு உச்சி நேரங்களில் வெளியில் வருவதே இல்லை.

    நமது உடலின் தட்பவெப்பநிலை சீராக இல்லாமல், திடீர் என மாறிக்கொண்டே இருப்பது, உடலை வெகுவாக பாதிக்க செய்கிறது. வெயிலின் கொடுமையினால் நம் உடல் மட்டுமல்ல... நமது தலைமுடி, கண்கள், சருமம் என அனைத்தையும் உஷ்ணம் ஒரு கை பார்த்துவிட்டுத்தான் செல்லும்.

    அதிக நேரம் வெயிலில் அலைந்துவிட்டு குளிர்சாதன அறைக்குள் சென்றால் மோசமான பின்விளைவுகளை உண்டாக்கும். வெயிலின்போது தேவைக்கு அதிகமாக காபி, டீ, உடலுக்கு வேண்டாத குளிர்பானங்கள் போன்றவை மென்மேலும் தாகத்தை தூண்டும். உணவுப் பழக்கங்களும் வெயில் காலத்தில் கவனிக்க வேண்டியது. அதிக காரமான உணவுகள், சூடான உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் போன்றவற்றை பெரும்பாலும் தவிர்க்கவும். வெயில் நேரங்களில் இதுபோன்ற உணவுகள் அஜீரணம் உள்ளிட்ட வயிற்றுக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

    எனவே இயற்கையான பானங்களை அதிகம் பருக வேண்டும். பழச்சாறுகள், இளநீர், கூழ், மோர் போன்றவை அதிகம்குடிக்கலாம். வெள்ளரி, தர்ப்பூசணி சூப், தக்காளி சூப் வகைகளை சாப்பிடலாம். திராட்சை, சாத்துக்குடி ஆரஞ்சு, எலுமிச்சை,மாதுளை, முலாம் பழம், ஆப்பிள் போன்றவற்றின் பழச்சாறுகளையும் பருகலாம். நுங்கு, கொய்யா போன்றவையும் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும்.

    வெயிலில் வெளியே செல்வதாக இருந்தாலும் சரி, வெளியே சென்று வந்தாலும் சரி ஒரு முறை குளியலை போட வேண்டும். குறைந்தபட்சம் நாள் ஒன்றுக்கு 2 முறை குளிக்கலாம். இரவு உறங்கும் முன் குளித்துவிட்டு உறங்கினால் உடல் குளிர்ச்சி அடையும். வெயில் நேரத்தில் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது குடை எடுத்துச்செல்லலாம். அல்லது தலைக்கு தொப்பி அணிந்துகொள்ளலாம். கண்களுக்கு கூலிங் கிளாஸ் அணிந்துகொள்ளலாம். பெரும்பாலும் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதையே தவிர்க்கலாம்.

    உடல் அதிகமான உஷ்ணத்தை பெறும் நேரத்தில், நன்றாக தண்ணீர் அருந்த வேண்டும். அதனால் வெளியேறும் வியர்வை உள்ளே செல்லும் தண்ணீர் என இணைந்து, நமது உடலின் உஷ்ண நிலையை சீராக வைத்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. அந்த வகையில் வெயிலுக்கு உகந்த உடைகள் என்றால் அது பருத்தி உடைகள்தான். பொதுவாக கருப்பு ஆடைகள் வெயிலை உள் இழுக்கும் என்பது அனைவரும் அறிந்த அறிவியல். எனவே ஆடைகளையும் இந்த காலகட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்து அணியலாம்.

    பருத்தி ஆடைகளுக்கு இயல்பாகவே வியர்வையை உறிஞ்சும் தன்மை உள்ளதால், மதிய நேரத்தின் போது வெளியே சென்றால் பருத்திஆடைகளை உடுத்துங்கள்.

    வீடுகளில், மொட்டை மாடியில் காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றுங்கள். இது ஓரளவு வெப்பத்தை குறைக்கும்.

    வெயில் காலம் முடியும் வரை அனைவருமே ஒரு நாளைக்கு 3 லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள். வீட்டில் பிரியாணி, சாம்பார் சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுக்கு பதில் நீர் வகையிலான உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளுங்கள்.

    மண் பானையில் நீர் ஊற்றி வைத்து மண்பானையில் இருந்து கிடைக்கும் குளிர்ந்த நீரை குடிக்கலாம். 
    உடலில் உள்ள எலும்பு சத்துக்களை ஒன்றிணைக்க கூடிய வைட்டமின் ‘டி’ இந்த கோடைக்காலத்தில் தான் சூரிய ஒளியின் மூலம் அதிகமாக கிடைக்கிறது.
    மனித ஆரோக்கியத்துக்கு கோடைக்காலம் உகந்தது. ஏனென்றால் உடலில் உள்ள எலும்பு சத்துக்களை ஒன்றிணைக்க கூடிய வைட்டமின் ‘டி’ இந்த கோடைக்காலத்தில் தான் சூரிய ஒளியின் மூலம் அதிகமாக கிடைக்கிறது. இதனால் எலும்பு தேய்மானம், எலும்பு அரிப்பு, மூட்டுவாதம், முடக்குவாதம், குதிக்கால் வலி, மூட்டு வலி, கழுத்துவலி இந்த மாதிரியான பாதிப்புகள் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டியால் தடுக்கப்படுகிறது.

    இந்த கோடைக்காலத்தில் தான் எலும்புகள் முழுமையாக வளர்ச்சியடைகிறது. மேலும் பலம் பெறுகிறது. ஆகவே வெயிலை கண்டு பயந்து, குளிர்சாதன அறைக்குள்ளே தங்குவதோ அல்லது வீட்டினுள்ளே முடங்கிப்போய் கிடப்பதோ தவறு. இயற்கையாக கோடைக்காலத்தை பக்குவமாக அனுபவித்து காலை நேரத்தில் சுமார் 10 மணி வரையிலும், மாலை வேளையில் சுமார் 3 மணிக்கு மேலும் நன்றாக வியர்வை சிந்த, விளையாடி அல்லது உடற்பயிற்சி செய்வதின் மூலம் உடல் பலமடைந்து, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

    வெயிலுக்காக ஏ.சி அறையில் அதிக நேரம் தங்குவது, செயற்கை குளிர்பானங்கள் அருந்துவது, தொடர்ந்து ஐஸ் தண்ணீர் அருந்துவது, ரசாயன சுவையூட்டி மற்றும் ரசாயன கலர்கள் கலந்து உணவுகள் உட்கொள்வது எலும்பின் முனைப்பகுதியில் உள்ள குறுத்தெலும்புகளில் நீர் கட்டுகள் ஏற்பட்டு எலும்பை சிதைக்கும். இதற்கு மாறாக பதநீர், இளநீர், பழச்சாறு, புளிக்காத மோர், சிறுதானிய கூழ்வகைகள், வெள்ளரிக்காய், தர்பூசணிக்காய் போன்ற நீர் சத்துக்கள் நிறைந்த இயற்கையான காய்கறிகள், உணவு வகைகளை உட்கொள்வது மிகவும் நல்லது.

    மேலும் வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளித்தல், தினமும் தொப்புள், காலபெருவிரல்களில் விளக்கெண்ணை வைத்துக்கொள்வதும் மிகவும் நல்லது மற்றும் உடலுக்கு ஏற்றது. உடல்நலக்குறைவு ஏற்பட்டவர்கள், எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், முடிந்த வரை வெயிலை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்பு சக்தி குறைவான குழந்தைகளுக்கு எலும்பு மூட்டுக்களின் அதாவது முழங்கை மூட்டு, தோள்பட்டை பந்து கிண்ண மூட்டு, கால் தொடைக்கு மேல், இடுப்புக்கு இடையில் உள்ள பந்து கிண்ண மூட்டின் முனைப்பகுதியில் கோடை வெயிலின் உஷ்ணத்தால் கட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    இந்த கட்டிகளை சுளுக்கு என்றோ, சாதரண வீக்கம் என்றோ, தடவி விடக்கூடாது. இந்த கட்டிகள் வராமல் தவிர்க்க கீழாநெல்லிசாறு அருந்துவது நல்லது. மேலே குறிப்பிட்டபடி இளநீர், பதநீர், பழச்சாறு, பழங்கள், வெள்ளரிக்காய், தர்பூசணிக்காய், சிறுதானிய கூழ்வகைகள் உட்கொள்வதின் மூலம் தவிர்க்கலாம். தோல் அலர்ஜி உள்ளவர்களுக்கு தோலின் மேல் தேங்காய் எண்ணெய் பூசிக்கொள்வது பாதுகாப்பாக அமையும். “என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்” என்ற வள்ளுவன் கூற்றிற்கு இணங்க எலும்பு இல்லாத புழுக்களைத்தான் வெயில் சுட்டெரிக்குமே தவிர, எலும்பு கூடுகளால் வடிவமைக்கப்பட்ட நமக்கு வெயில் காலம் நல்லதே!

    ஆர்.எஸ்.வேலுமணி, பாரம்பரிய வைத்தியர், சென்னை
    ×