என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது.
- ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான்.
தேனி:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் தேனி தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமியை ஆதரித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பாஜக கூட்டணியில் அமமுக என்று சொல்லுபவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பக்கம் எட்டிப்பார்க்காதவர், வராதவர். ஜெயலலிதாவால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சியில் இருந்து 10 ஆண்டுகளுக்கும் மேலே ஒதுக்கி வைக்கப்பட்டார். ஜெயலலிதா மறைந்த பிறகுதான் அவர் தமிழ்நாட்டிலேயே தலை காட்ட ஆரம்பித்தார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று மக்களிடையே 20 ரூபாய் நோட்டை காண்பித்து ஏமாற்றி அந்த தொகுதி பக்கமே போகாமல் அந்த தொகுதியிலே நிற்க முடியாமல் கோவில்பட்டியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் நின்றார். அங்கேயும் மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்காமல் அவரை புறக்கணித்து தோல்வி அடையச் செய்தார்கள். கடைசி புகலிடமாக தேனி பாராளுமன்ற தொகுதியை தேடி வந்திருக்கிறார். இங்கேயும் மக்கள் ஏற்க தயாராக இல்லை. வீராப்பு எல்லாம் தேனி தொகுதியில் எடுபடாது என்று அவருக்கு தெரியும்.
நாராயணசாமிக்கு தான் வெற்றி உறுதியாகி இருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை உங்களை பார்த்து பயந்தது உண்மைதான். இப்ப எல்லாம் நீங்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு எல்லாம் புழு கூட பயப்படாது. அ.தி.மு.க. தொண்டன் சுதந்திர காற்றை சுவாசிக்கிறான். உங்களிடம் இருந்து விடுதலை பெற்று இந்த இயக்கமும், இந்த இயக்க தொண்டர்களும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம். அதனால் இந்த பூச்சாண்டி காட்டுறது, நையாண்டி பண்றது எல்லாம் ஜெயலலிதா இருந்தவரைக்கும் கேட்டுக்கிட்டு இருந்தது உண்மைதான். உங்க வீட்டுக்கு காவல் நாயாக இருந்திருக்கிறோம். இப்ப நீங்க எங்களை சீண்டி பார்த்தீங்கன்னு சொன்னா அதுக்கு அ.தி.மு.க. இரண்டரை கோடி தொண்டர்கள் சீறும் சிங்கமாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறோம் என்று கூறினார்.
- 13-ந்தேதி மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர்.
- 15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம்.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், 13, 14, 15 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் கீழ்வருமாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
13-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணிக்கு சிதம்பரம் தொகுதி-காமராஜர் திடல், அரியலூர். மாலை 6 மணிக்கு பெரம்பலூர் தொகுதி-துறையூர் சாலை, கனரா வங்கி அருகில், பெரம்பலூர் (வேன் பிரசாரம்), இரவு 7.15 மணிக்கு துறையூர் பைபாஸ்.
14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கள்ளக்குறிச்சி தொகுதி-மாலை 4.30 மணிக்கு எம்.ஜி.ஆர். திடல், ஆத்தூர், மாலை 5.30 மணிக்கு தியாக துருகம் ரோடு, யமாகா ஷோரூம் எதிரில் கள்ளக்குறிச்சி. இரவு 7 மணிக்கு விழுப்புரம் தொகுதியில் விழுப்புரம் நகரம்.
15-ந்தேதி (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் தொகுதியில் காலை 9 மணிக்கு காஞ்சிபுரம் மாநகராட்சியில் வேன் பிரசாரம், மாலை 4 மணிக்கு மத்திய சென்னை தொகுதியில் டானா தெரு, புரசைவாக்கம், இரவு 7 மணிக்கு சென்னை தெற்கு தொகுதி வேளச்சேரி ரோடு, சின்ன மலை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சேலம் மாவட்டத் தலைவர் பெரியசாமி, துளுவ வேளாளர் சங்கத் தலைவர் ராஜீ உள்பட பலர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
- சக்கரபாணி, வேட்பாளர் செல்வ கணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
சென்னை:
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சேலத்தில் இன்று 26 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் சந்தித்து தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சேலம் மாவட்டத் தலைவர் பெரியசாமி, துளுவ வேளாளர் சங்கத் தலைவர் ராஜீ உள்பட பலர் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி, வேட்பாளர் செல்வ கணபதி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.
- பறக்கும் படையினரால் நடத்தப்படும் வாகன சோதனைகள் வியாபாரிகளுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தேர்தல் நேரத்தில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50,000-க்கு மேல் யாரும் பணம் கொண்டுபோனால் வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக, வியாபாரிகளுக்கு பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவுக்கு பல்வேறு புகார்கள் சென்றது. அதில் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், ரூ.50,000 பணம் எடுத்துச்செல்வதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை செய்து முடிவெடுக்கும். விரைவில் ரொக்கப் பணம் கொண்டுசெல்வது குறித்த புதிய அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிவித்தார்.
- தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் கி.வீரமணி, அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார்.
- 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் கி.வீரமணி, 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
சென்னை:
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இவர் தனது பிரசாரத்தை வருகிற 2-ந்தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17-ந்தேதி தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார். அவரது சுற்றுப்பயண திட்டமும் தயாராகி உள்ளது.
வருகிற 2-ந்தேதி மாலை 6 மணிக்கு தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் அவர், அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார். 3-ந்தேதி தூத்துக்குடி, விருதுநகரிலும், 4-ந்தேதி ஆண்டிப்பட்டி, மதுரையிலும், 5-ந்தேதி பழனி, உடுமலைப்பேட்டையிலும், 6-ந்தேதி கோவை, மேட்டுப்பாளையத்திலும், 7-ந்தேதி சத்தியமங்கலம், கோபி செட்டிப்பாளையத்திலும், 8-ந்தேதி சேலம், அரூரிலும் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
பின்னர் கி.வீரமணி தனது 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அரக்கோணத்தில் தொடங்கும் அவர் அன்று இரவு 8 மணிக்கு திருவள்ளூரில் பிரசாரம் செய்கிறார். 11-ந்தேதி அம்பத்தூர், வடசென்னையிலும், 12-ந்தேதி திண்டிவனம், தியாக துருவத்திலும், 13-ந்தேதி ஜெயங்கொண்டம், பெரம்பலூரிலும், 14-ந்தேதி துறையூர், திருச்சியிலும், 15-ந்தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திலும், 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் அவர், 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.
- ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
- ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது.
அறந்தாங்கி:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜனதா கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் சுயேட்சை சின்னத்தில் தேர்தலை சந்திக்கிறார்.
ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் செல்லும் இடங்களில் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கிறார்கள்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
ஒரு பெண் ஆரத்தி எடுத்தபோது ஓ.பன்னீர்செல்வம் அவரது தட்டில் ரூ.2000 போட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் ஓ. பன்னீர்செல்வம் ஆரத்தி காட்டிய பெண்ணுக்கு கொடுப்பதற்காக தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறார். அதில் 500 ரூபாய் நோட்டுகளாக வருகிறது. அதில் 4 நோட்டுகளை எடுத்து அவர் அந்த பெண்ணுக்கு கொடுக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு ஓ.பன்னீர் செல்வம் ரூ.2000 வழங்கியது தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் எழுந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
- வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு-புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பாரதிய ஜனதா கூட்டணி மோதும் அரசியல் களத்தில் நாம் தமிழர் கட்சி தனியாக களம் இறங்கி உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வேணுகோபால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்த நிலையில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அண்ணாமலை, 'ஸ்ரீபெரும்புதூரில் இருக்க கூடிய அன்பு சொந்தங்களே நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். ஒருத்தர் சம்பந்தமே இல்லாம 1980-ல் பேசியதே பேசுறாங்க. இந்தி, சமஸ்கிருதம், இது, அது, வடக்கு தெற்கு-ன்னு. இன்னும் இந்த பிஞ்சி போன செருப்ப அவங்க தூக்கி எரியலைங்க. இது தி.மு.க.' என்று பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
- தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
- டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது.
கடலூர்:
கடலூரில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
அகில இந்திய அளவில் மோடி வழங்கக்கூடிய வாக்குறுதிகள், தமிழ்நாடு சம்பந்தமான வாக்குறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் வருகிறது. பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடக்கூடிய தொகுதிக்கு தனி வாக்குறுதி வழங்கப்படும்.
கேள்வி:-பிரதமர் மோடி தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது என கடும் விமர்சனம் எழுப்பி உள்ளார். ஆனால் தமிழகத்தில் பா.ம.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது தொடர்பாக தொடர்ந்து சர்ச்சை எழுப்புகிறது.
பதில்-டாக்டர் சவுமியா அன்புமணி தர்மபுரியில் போட்டியிடுகிறார். சுற்றுச்சூழலுக்காக தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்து உள்ளார். மேலும் கட்சிக்கு வந்தவுடன் சீட்டு வாங்கவில்லை. தனி அங்கீகாரத்துடன் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இதில் எப்படி தவறு சொல்ல முடியும். மேலும் பா.ம.க.வில் தனி திறமை உள்ள வேட்பாளர்கள் தான் போட்டியிடுகின்றனர்.
மேலும் சிதம்பரம் தொகுதியில் முன்னாள் மேயரான பட்டியலின பெண் போட்டியிடுகிறார். இதன் மூலம் அவரை வெற்றி பெற செய்து உயர் பதவிக்கு கொண்டுவர போட்டியிட வைத்துள்ளோம். ஆனால் தி.மு.க.வில் அப்பா அமைச்சர், மகன்கள் எம்.பி, எம்.எல்.ஏ.வாக உள்ளனர் என்பதனை நீங்கள் பார்க்க வேண்டும்.
கடலூரில் தி.மு.க. எம்.பி. ரமேஷ் மீது கொலை வழக்கு உள்ளது. இதுதான் சாதனையாகும். இதன் காரணமாக தான் கடலூர் பாராளுமன்ற தொகுதியை கூட்டணிக்கு தி.மு.க. தள்ளிவிட்டு உள்ளனர். ஆகையால் தங்கர் பச்சானுக்கு போட்டி யாரும் இல்லை.
கே-பா.ஜ.க.வுடன் உள்ள கூட்டணி கட்சிக்கு அவர்கள் விருப்பப்படும் சின்னம் வழங்கப்பட உள்ளதா குற்றச்சாட்டு உள்ளதே?
ப:-தேர்தல் ஆணையத்திற்கு தனியாக விதிமுறைகள் இருக்கிறது. ஆனால் நாம் தமிழர் கட்சி சார்பில் சின்னம் கிடைப்பதற்கு முன்னதாகவே பதிவு செய்யவில்லை. ஆனால் தேர்தல் ஆணையத்தில் யார் முன்னதாக சின்னம் கேட்டு பதிவு செய்கின்றார்களோ அவர்களுக்கு சின்னம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முதலில் அவர்களுக்கு தேவையான சின்னங்கள் தொடர்பாக கேட்டுள்ளனர். மேலும் இவர்கள் கேட்பதற்கு முன்பாக யாரும் அந்த சின்னத்தை கேட்கவில்லை. இதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முன்னுரிமை அடிப்படையில் இவர்களுக்கு சின்னம் ஒதுக்கி உள்ளனர். மேலும் ஒரு இடத்தில் நிற்கக்கூடிய கட்சிகளுக்கு அவர்கள் கேட்கும் சின்னம் வழங்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவாகும். தேர்தல் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக நீதிமன்றங்கள் தெளிவான விளக்கம் மற்றும் உத்தரவு வழங்கி உள்ளனர்.
தற்போது நாம் தமிழர் கட்சி சீமான் ஒவ்வொரு முறையும் நடைபெறும் தேர்தலில் ஒவ்வொரு கட்சியினரும் புது புது சின்னத்தில் போட்டியிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வந்து விட்டால் களத்தில் உறவினர்கள், அண்ணன், தம்பி என்று பார்க்கக்கூடாது. இங்கு நிற்கக்கூடிய தங்கர் பச்சான் பலமான வேட்பாளராக உள்ளார். மேலும் பா.ம.க. சார்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்த வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிற்க வைத்துள்ளனர். நான் ஐ.பி.எஸ். ஆக இருந்தபோது சொந்த பணத்தில் நிலம் வாங்கினேன். தற்போது அதனுடைய மதிப்பு 11 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் டி.ஆர்.பாலு மனைவி சொத்து மதிப்பு 450 சதவீதம் அதிகரித்து உள்ளது. நான் தேர்தலில் நிற்பது நல்ல அரசியலுக்காகவும், மாற்றத்திற்காகவும் நிற்கின்றேன். மேலும் கோயம்புத்தூரில் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கிடையாது என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளேன். அங்குள்ளவர்களிடம் சவால் விட்டு உள்ளேன். ஆனால் மற்ற கட்சியினர் இதனை சொல்ல தயாராக உள்ளனரா? நேர்மையான அரசியலை நான் முன்னெடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார்.
- நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.
சென்னை:
சென்னை, அகரம், ஜெகநாதன் தெருவில், வட சென்னை பாராளுமன்ற இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தளவில் தினந்தோறும் தேர்தல் பணியை எப்போதும் செய்து கொண்டிருக்கின்ற கழகத் தோழர்கள் நிறைந்த பகுதி, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவரின் நல்வழியை பின்பற்றுகின்ற மக்கள் நல விரும்பிகள் தான், இந்த தொகுதியில் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களாகவும், கட்சியினுடைய முக்கிய பொறுப்புகளில் இருப்பதால் மக்களோடு தினசரி மக்களுடைய பிரச்சினைகளை அணுகுவதால் இந்த முறை இந்த கொளத்தூர் தொகுதியிலேயே பதிவாகின்ற வாக்குகளில் 75 சதவீதம் அளவிற்கு தி.மு.க. உதயசூரியன் சின்னம் பெறும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை.
கலாநிதி, நமது ஆட்சி வந்த பிறகு 34 மாதங்கள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஆட்சி இல்லாத போது அரசிடம் போராடி பல்வேறு நலத்திட்டங்களை பெற்றவர், பல்வேறு அடிப்படை கட்டமைப்புகளை உயர்த்துவதற்குண்டான நடவடிக்கையில் ஈடுபட்டவர். ஆட்சி வந்த பிறகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய காலத்தில் கொடுங்கையூர் குப்பைகள் கொட்டும் வளாகம், கணேசபுரம் மேம்பாலம். ஆர்.கே. நகர் மேம்பாலம் போன்ற, மக்களுக்கு கால காலத்துக்கும் பயன்படுகின்ற பல நலத்திட்டங்களை கொண்டு வந்தவர்.
மீண்டும் அவரை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இந்த வட சென்னை பாராளுமன்ற தொகுதியினுடைய வளர்ச்சிக்கும், தேவைகளுக்கும் கட்டமைப்புகளை உயர்த்துவதற்கும் தொடர்ந்து இப்போது போல் பாடுபடுவார்.

முதலமைச்சர் வட னெ்னையில் தனிக்கவனம் செலுத்தி, வடசென்னை வளர்ச்சி திட்டத்தை அறிவித்திருக்கின்றார். சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தற்போது வட சென்னையில் வடசென்னை வளர்ச்சி திட்டத்தில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. பூங்காக்கள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள், கடற்கரையை அழகுபடுத்துகின்ற பணிகள், சந்தைகள், வணிக வளாகங்கள் அதேபோல டயாலிசிஸ் அமைப்புகள் என்று கிட்டத்தட்ட மாநகராட்சி சமூக நலக்கூடங்கள் என்று 1,000 கோடி ரூபாய்க்கு மேலாக, ஏற்கனவே வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த மாதம் 14-ந் தேதி, சென்னை தங்க சாலை மணிக் கூண்டு அருகிலே ரூபாய் 4,414 கோடி அளவிற்கு வளர்ச்சி திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கின்றார். அறிவித்தார் என்பதைவிட பிரகடனப்படுத்தி இருக்கின்றார்.
நிச்சயம் அந்த பணிகள் அனைத்தையும் மேற்கொண்டால் வடசென்னை தென் சென்னைக்கு நிகராக உயரும்.
அனைவருடைய மேம்பாட்டிற்காகவும் நிச்சயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கின்ற இந்த திட்டங்களை நிறைவேற்றுவார்.
தொடர் பயணமாக 20 ஆண்டுகளுக்கு இந்த மாவட்டத்தை முன்னேற்றத்துடன் கூடிய ஒரு மாவட்டமாக கொண்டு வருவதற்கு அனைத்து பணிகளையும் தொலைதூர நோக்கோடு திட்டமிட்டு இருக்கின்றார். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் இனி கால் நூற்றாண்டுகள் தி.மு.க. ஆட்சிதான் தமிழகத்திலேயே என்ற நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொலை நோக்கு திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
- குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது.
தூத்துக்குடி:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை கொண்டு வந்தனர். ஸ்டெர்லைட் ஆலை இல்லை என்றால் தாமிரம் தட்டுப்பாடு வந்து விடும் என்று சொன்னார்கள். ஆனால் இங்குள்ள நிலமும், தண்ணீரும் கெட்டு விடும் என்று சொல்லவில்லை.
ஸ்டெர்லைட் ஆலையால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலையை மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க சென்றபோது அதனை வாங்கி இருக்க வேண்டும். ஆனால் தடியடி நடத்தி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய அருணா ஜெகதீசன் அறிக்கை தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 6 மாதமாக அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட போலீ சாருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பத்திரம் மூலம் தி.மு.க., வேதாந்தா நிறுவனத்திடம் இருந்து 19 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இதேபோல் அனைத்து கட்சிகளும் பணம் பெற்றுள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும் பணம் பெறவில்லை.
மணிப்பூரில் கலவரம் ஏற்பட்டபோது இங்குள்ள அனைத்து கட்சியினரும் துடித்தனர். ஆனால் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது யாரும் வாய் திறக்கவில்லை. நான் மட்டும்தான் அது குறித்து துடித்தேன்.
வீட்டுக்கு தேவையான பொருட்களை தரம் பார்த்து நல்ல பொருட்களாக வாங்குவதை போல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் நல்ல வேட்பாளர்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக பல்வேறு கட்சியினர் என்னை தொடர்பு கொண்டு பேசினர். ஆனால் தனித்து போட்டி என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால் அதனை மறுத்து விட்டேன்.
தேர்தல் வெற்றிக்காக கடந்த 18 வருடங்களாக போராடிக்கொண்டு இருக்கிறேன்.
குறைந்த வாக்கு சதவீதம் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கேட்ட சைக்கிள் சின்னம் கிடைக்கிறது. ஆனால் அதை விட அதிக ஓட்டு சதவீதம் கொண்ட நாம் தமிழர் கட்சிக்கு நாங்கள் கேட்ட சின்னம் தர மறுக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும்.
- மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது.
கடலூர்:
கடலூரில் பா.ஜ.க. கூட்டணி பா.ம.க வேட்பாளரை ஆதரித்து கடலூர் முதுநகரில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் கடலூர் மாவட்டத்தில் செய்துள்ள வேலைகள் தற்போது குறிப்பிடுகிறேன். இதில் கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலைக்கு ரூ.1507 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . பிரதமர் வீடு கட்டு திட்டம் மூலம் 5803 குடும்பம், 3 லட்சத்து 7 ஆயிரம் கழிப்பறை, 2 லட்சத்து 40 ஆயிரத்து 800 மக்களுக்கு சமையல் எரிவாயு, மருத்துவ காப்பீடு மூலம் 2 லட்சத்து 88 ஆயிரம், 2 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு பாரபட்சம் இன்றி பாரத பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் வெறும் வாய் பேச்சு தான். முதலமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் போன்றவர்கள் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் செய்யவில்லை . ஆனால் தங்கர் பச்சானை நீங்கள் வெற்றி பெற செய்தால் முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை உடனடியாக கொண்டுவரப்படும்.
விவசாய மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் உடனடியாக செயல்படுத்தப்படும். ஆனால் தி.மு.க . ஆட்சியில் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு ரூ.100 மானியம், பெட்ரோல் விலை குறைக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் மோடி 3 முறை பெட்ரோல் விலை குறைத்துள்ளார்.
ஆகையால் தி.மு.க அறிக்கை என்பது வெற்று அறிக்கை, பொய் அறிக்கையாகும். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சானை அதிக வாக்கு வித்தியாசத்தில் மாம்பழ சின்னத்தில் வாக்களித்து நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். மாற்றத்திற்கான அரசியலை உருவாக்க தேர்தல் நடைபெறுகின்றது. மேலும் செல்லும் இடங்களில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வருவதால் பா.ஜ.க. வெற்றி பயணத்தை நோக்கி செல்கின்றது. 10 ஆண்டு மோடி ஆட்சி மக்களின் ஆதரவுடன் இன்னும் 5 ஆண்டுகள் தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
- தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.
இதன்படி தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னையில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு 3,719 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 579 வாக்குச்சாவடிகள் பதட்டமான சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சாவடிகள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.
சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 16 கம்பெனியை சேர்ந்தவர்கள் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் சென்னைக்கு இதுவரை 2 கம்பெனி துணை ராணுவ படையினர் மட்டுமே வந்து உள்ள நிலையில் மீதமுள்ள 14 கம்பெனி படையினரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வர உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி 200 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக பிரிந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களிலும் கடந்த 16-ந்தேதி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களும் சிக்கியுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பறக்கும் படை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன்மூலம் தேர்தலுக்கு முன்னர் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக பறக்கும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகளை கண்காணித்து வரும் போலீசார் அவர்களின் செல்போன்களையும் கண்காணித்து வருகிறார்கள்.
இதன்மூலம் தலைமறைவாக உள்ள ரவுடிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இப்படி தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.






