என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற தேர்தல்"

    • தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.
    • அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் இப்போதே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    அந்த வகையில் தி.மு.க.வில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் மண்டல அளவில் நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் சமயத்தில் பி.எல்.ஏ.-2 முகவர்கள் மூலமாகத்தான் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படும்.

    இதனால் தகுதியான கட்சி நிர்வாகிகளை பார்த்து அதில் நியமித்துள்ளனர். இவர்களை ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றன.

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சினை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சினை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் நிகழ்வும் நடந்து வருகிறது. கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு இந்த சமரச முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது பாராளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில் அ.தி.மு.க.வில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் உள்ளதை போன்று தி.மு.க. விலும் அதே போன்று மாவட்டங்களை பிரிக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    தற்போது தி.மு.க.வில் கட்சி ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் சில மாவட்டத்தில் 4 அல்லது 5 சட்டசபை தொகுதிகள் வரை உள்ளன.

    தேர்தல் சமயத்தில் ஏதாவது பிரச்சினை என்றால் அந்த தொகுதிக்கு உடனடியாக செல்வதில் சுணக்கம் ஏற்படும் என்றும் இதை தவிர்க்க எல்லையை சுருக்கினால் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர்களை நியமித்தால் அ.தி.மு.க.வுக்கு சரிசமமாக ஈடுகொடுக்க வசதியாக இருக்கும் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக ஏற்கனவே இப்பிரச்சினை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவர் அதை விரும்பவில்லை. அந்த ஆலோசனையை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்நிலையில் இப்போது மாவட்டங்களை பிரிக்கும் கோரிக்கை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. அனேகமாக டிசம்பர் மாதத்திற்குள் அதற்கான நடவடிக்கைகளை தலைவர் மேற்கொள்வார் என்று கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

    • தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
    • அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    புதுடெல்லி:

    இந்தியாவின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.

    இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகள் உடன் தொகுதிப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த மூத்த நிர்வாகிகள் 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது.

    அக்குழுவில், அசோக் கெலாட், பூபேஷ் பாகெல், முகேஷ் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், மோகன் பிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • அரசியல் நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
    • ரேபரேலி தொகுதியை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு வருவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.

    தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அங்கு சோனியா காந்தி அறிவித்த 6 முக்கிய வாக்குறுதிகள் தான் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

    மேலும் சோனியா காந்தி தனி தெலுங்கானா உருவாக முக்கிய பங்காற்றியதாகவும் அந்த மாநிலத்தில் பிரசாரம் செய்தனர். இதனால் சோனியா காந்திக்கு தெலுங்கானா மாநிலத்தில் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக அந்த கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக வருகிற பாராளுமன்ற தேர்தலில் சோனியா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என அந்த மாநில காங்கிரஸ் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அரசியல் நெருக்கடி காலத்தில் இந்திரா காந்தி தெலுங்கானா மாநிலத்தில் மேடக் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    அதே பாணியில் சோனியா காந்தி நல்கொண்டா மற்றும் கம்பம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    அவர் ரேபரேலி தொகுதியை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு வருவது உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும்.

    இந்த கோரிக்கையை சோனியா காந்தி ஏற்க மறுத்தால் பிரியங்கா காந்தியை தெலுங்கானா மாநிலத்தில் போட்டியிட வலியுறுத்துவோம் என தெலுங்கானா காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.
    • தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வந்து விட்டது. தேர்தல் பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடங்கி தீவிரப்படுத்தி உள்ளது.

    வருகிற 22-ந்தேதி அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் மற்றும் பிப்ரவரி 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    மே மாதம் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும் என்ற நிலையில் சற்று முன் கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே ஆளும் பாரதிய ஜனதா கட்சி இந்த தடவை 400 முதல் 450 தொகுதிகளுக்கு குறி வைத்து இருக்கிறது. அதாவது மொத்தம் பதிவாகும் வாக்குகளில் 50 சதவீத வாக்குகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் பிரதமர் மோடி தீவிரமாக உள்ளார்.

    இதற்காக 543 தொகுதிகளிலும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பாரதிய ஜனதா வேட்பாளர் தேர்வை நடத்தி வருகிறது. 150 முதல் 170 தொகுதிகளை பலவீனமான தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது.

    பாரதீய ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக அதாவது பலவீனமாக கருதப்படும் தொகுதிகள் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், ஒடிசா, உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் ஆகிய 9 மாநிலங்களில் இருப்பதாக கணக்கெடுத்துள்ளனர். தமிழகத்தில் 36, ஆந்திராவில் 25, மராட்டியத்தில் 24, மேற்குவங்காளத்தில் 23, கேரளாவில் 20, உத்தரபிரதேசத்தில் 12, பீகாரில் 12, ஒடிசாவில் 12, தெலுங்கானாவில் 12 என 140 தொகுதிகள் மிக மிக பலவீனமான தொகுதிகளாக கணக்கெடுத்துள்ளனர்.

    மேலும் 20 தொகுதிகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டு 160 தொகுதிகளை அதிக கவனம் செலுத்த வேண்டிய தொகுதிகளாக பாரதிய ஜனதா கருதுகிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் பணி தற்போது ஓசையின்றி நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    வடமாநிலங்களில் மகர சங்கராந்தி வரை நல்ல காரியங்கள் எதையும் தொடங்கமாட்டார்கள். 15-ந்தேதி தை மாதம் பிறந்த பிறகுதான் அவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட தொடங்குவார்கள். எனவே பாரதிய ஜனதா முதல் வேட்பாளர் பட்டியலை அடுத்த வாரம் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    குறிப்பாக 15-ந்தேதி முதல் 22-ந்தேதிக்குள் ஏதாவது ஒரு நாளில் முதல் வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அதிரடியாக அறிவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அடுத்த கட்டமாக பிப்ரவரி 14-ந் தேதிக்குள் 2-வது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா அறிவிக்கும் என்று பீகார் மாநில பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    முதல் மற்றும் 2-வது வேட்பாளர் பட்டியலில் 70 முதல் 75 சதவீதம் வரை புதுமுக வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள் என்றும் பாரதிய ஜனதா வட்டாரத்தில் கூறப்படுகிறது. தமிழகத்திலும் வேட்பாளர் தேர்வு ஓசையின்றி நடப்பதாக கூறப்படுகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர்களுக்கு தெரியாமல் சில பட்டியலை மேலிடம் தயாரித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாரதிய ஜனதாவின் 2024-ம் ஆண்டு தேர்தல் வியூகங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.

    • கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
    • கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் எல்லா கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகளை தேர்வு செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து கேட்டார்.

    தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனையின்போது கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற தொகுதிகள், இந்த தேர்தலில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, வெற்றி வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    இதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. எனவே கடந்த முறை 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக தொகுதிகள் கேட்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் 9 தொகுதிகளில் குறைய கூடாது என்று தெரிவித்து உள்ளார்கள்.

    அதே நேரம் கடந்த முறை காங்கிரஸ் வென்ற சில தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வும், ஒரு சில கூட்டணி கட்சிகளும் விரும்புவதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் காங்கிரசும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று கருதப்படுகிறது. அப்படியானால் மாற்று தொகுதிகளாக எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது? அதற்கு பதிலாக எந்த தொகுதியை கேட்பது? என்ற குழப்பம் வரும்.

    கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது தொகுதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து அந்த பட்டியலையும் தருமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டு உள்ளது.

    இதையடுத்து புதிதாக 9 தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:-

    திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு.

    இந்த தொகுதிகள் பட்டியலும் மேலிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை தேர்வு செய்வதற்கு காரணம் தென்காசியில் 9 முறையும் மயிலாடுதுறையில் 7 முறையும் காங்கிரஸ் வென்றுள்ளது. தஞ்சாவூரில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் மற்றும் நெல்லையில் தலா 2 முறையும் காங்கிரஸ் வென்று உள்ளது.

    எனவே வெற்றி பெற முடியும் என்று நம்பப்படும் தொகுதிகளை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.

    இதற்கிடையில் தி.மு.க. தரப்பிலும் ஒரு பட்டியல் காங்கிரஸ் மேலிடத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    அதில் தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர இதர கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகள், அந்த தொகுதிகளில் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளன. இந்த பட்டியலில் 30 தொகுதிகளுக்கு மேல் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தொகுதிகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்கள்.

    • அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தேர்தல் பிரசாரம் செய்ததாக 1,000 புகார்கள் வந்துள்ளன.
    • 89 சதவீத புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டு இருக்கிறது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த 16-ந் தேதி வெளியிட்டது. அன்று முதலே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    இந்த விதிகள் தீவிரமாக பின்பற்றப்படும் என கூறிய தேர்தல் கமிஷன், நடத்தை விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க 'சி-விஜில்' என்ற செல்போன் செயலியை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த செயலி மூலமாக பொதுமக்கள் புகார்களை வழங்கலாம் என்றும் அறிவித்தது.

    அதன்படி இந்த செயலி வழியாக தொடர்ந்து புகார்கள் வருவதாக தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அந்தவகையில் இதுவரை 79 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்கள் வந்திருப்பதாக தேர்தல் கமிஷன் நேற்று கூறியுள்ளது.

    இதில் 58,500-க்கு (73 சதவீதம்) அதிகமான புகார்கள் சட்ட விரோதமான பதாகைகள் மற்றும் பேனர்கள் தொடர்பானவை ஆகும்.

    வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மது வினியோகம் தொடர்பாக 1,400-க்கு மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. சுமார் 3 சதவீத (2,454) புகார்கள் சொத்துகளை சேதப்படுத்தியது சம்பந்தப்பட்டவை ஆகும்.

    துப்பாக்கியை காட்டுதல் மற்றும் மிரட்டல் தொடர்பாக 535 புகார்கள் வந்துள்ள நிலையில், அவற்றில் 529 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து தேர்தல் பிரசாரம் செய்ததாக 1,000 புகார்கள் வந்துள்ளன.

    இதுவரை வந்துள்ள 79 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார்களில் 99 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளன. இதில் 89 சதவீத புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு காணப்பட்டு இருக்கிறது.

    இந்த தகவல்களை தேர்தல் கமிஷன் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

    • காங்கிரஸ், பா.ஜ.க என்ற பலமான அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க முடியாமல் பி.ஆர்.எஸ் கட்சி திணறி வருகிறது.
    • சந்திரசேகரராவ் கட்சி முக்கிய தலைவர்களை இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் மிகப்பெரிய அரசியல் சக்தியாக வலம் வந்தார்.

    ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகரராவின் பாரத் ராஷ்டிரீய சமிதி கட்சி கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்தது. அதன்பிறகு பிறகு கட்சி நிலைகுலைந்து விட்டது.

    சந்திரசேகரராவின் மகள் கவிதா டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவருக்கு வீட்டு சாப்பாடு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்திரசேகரராவ் மன உளைச்சல் அடைந்துள்ளார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்க திணறி கொண்டிருந்த நேரத்தில் முதல் ஆளாக 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார்.

    சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவர்கள், தற்போதைய எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பெரும்பாலான தலைவர்கள் ஆளும் கட்சியான காங்கிரசிலும் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்து வரும் பாரதிய ஜனதா கட்சியிலும் சேர்ந்து வருகின்றனர்.

    மேலும் கட்சியில் இருக்கும் வலுவான மூத்த தலைவர்கள் இந்த முறை போட்டியிட தயங்குகின்றனர். இதனால் காங்கிரஸ், பா.ஜ.க. என்ற பலமான அரசியல் எதிரிகளை தேர்தல் களத்தில் சந்திக்க முடியாமல் பி.ஆர்.எஸ். கட்சி திணறி வருகிறது.

    இந்நிலையில் பி.ஆர்.எஸ். கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர்.

    சந்திரசேகரராவ் முதல் மந்திரியாக இருந்தபோது துணை முதல் மந்திரியாக இருந்தவர் ஸ்ரீஹரி. அவரது மகள் காவ்யா, வாரங்கல் தொகுதி பி.ஆர்.எஸ். வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

    சந்திர சேகரராவின் ஆட்சியில் நடந்த ஊழல் தொடர்பாக வரும் புகார்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் ஆகியவை கட்சிக்கு மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தி இருப்பதால் தேர்தலில் போட்டியிடப் போகவில்லை என அவர் கூறியுள்ளார்.

    இதேபோல் மேலும் சில வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.

    சந்திரசேகரராவ் கட்சி முக்கிய தலைவர்களை இழுக்கும் வேலையில் காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

    வலுவான வேட்பாளர்கள் எல்லோரும் காங்கிரஸ் பா.ஜ.க.வுக்கு தாவிய நிலையில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிலிருந்து விலகத் தொடங்கி இருப்பது சந்திரசேகரராவ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அவர் பரிதவிப்பில் உள்ளார்.

    • தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் கி.வீரமணி, அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார்.
    • 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் கி.வீரமணி, 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். இவர் தனது பிரசாரத்தை வருகிற 2-ந்தேதி தென்காசியில் தொடங்கி ஏப்ரல் 17-ந்தேதி தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார். அவரது சுற்றுப்பயண திட்டமும் தயாராகி உள்ளது.

    வருகிற 2-ந்தேதி மாலை 6 மணிக்கு தென்காசியில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கும் அவர், அன்று இரவு 8 மணிக்கு திருநெல்வேலியில் பிரசாரம் செய்கிறார். 3-ந்தேதி தூத்துக்குடி, விருதுநகரிலும், 4-ந்தேதி ஆண்டிப்பட்டி, மதுரையிலும், 5-ந்தேதி பழனி, உடுமலைப்பேட்டையிலும், 6-ந்தேதி கோவை, மேட்டுப்பாளையத்திலும், 7-ந்தேதி சத்தியமங்கலம், கோபி செட்டிப்பாளையத்திலும், 8-ந்தேதி சேலம், அரூரிலும் முதல்கட்ட பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

    பின்னர் கி.வீரமணி தனது 2-வது கட்ட பிரசாரத்தை வருகிற 10-ந்தேதி மாலை 6 மணிக்கு அரக்கோணத்தில் தொடங்கும் அவர் அன்று இரவு 8 மணிக்கு திருவள்ளூரில் பிரசாரம் செய்கிறார். 11-ந்தேதி அம்பத்தூர், வடசென்னையிலும், 12-ந்தேதி திண்டிவனம், தியாக துருவத்திலும், 13-ந்தேதி ஜெயங்கொண்டம், பெரம்பலூரிலும், 14-ந்தேதி துறையூர், திருச்சியிலும், 15-ந்தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினத்திலும், 16-ந்தேதி அறந்தாங்கி, பேராவூரணியிலும் பிரசாரம் செய்யும் அவர், 17-ந்தேதி தஞ்சாவூரில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    • அரசியல் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை இடைவிடாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
    • வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனையை தொடர்ந்து வருகிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    பறக்கும் படையினர் மற்றும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையில் அடையாறு இந்திரா நகர், திருவான்மியூர், அபிராமபுரம் ஆகிய 3 இடங்களிலும் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கினார்கள். இதே போன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனை இன்று 3-வது நாளாக நீடிக்கிறது. அரசியல் பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை இடைவிடாமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

    வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் கோடிக்கணக்கான பணம் கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்கிற தகவலின் பேரிலேயே வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    நேற்று இரவோடு சோதனை முடிவடைந்து விடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாகவும் சோதனையை தொடர்ந்து வருகிறார்கள். இந்த சோதனையின்போது கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலையில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் வருமான வரித்துறையினர் 3 நாட்களாக நடத்திய சோதனையில் எத்தனை கோடி பணம் பிடிபட்டுள்ளது என்பது பற்றிய முழுமையான தகவல்கள் தெரிய வரும்.

    இதைத் தொடர்ந்து வருமான வரித்துறையினர் 3 நாள் சோதனையில் எத்தனை கோடி பணத்தை கைப்பற்றியுள்ளனர் என்பது தேர்தல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது.
    • 100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது.

    பல்லடம்:

    தமிழக பா.ஜ.க. தலைவரும், கோவை பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வடுகபாளையம்புதூர் பிரிவு பகுதியில் அவர் வாக்காளர்கள் மத்தியில் பேசியதாவது:-

    அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க இருக்கிறீர்கள். பெண்கள் பாதுகாப்பை பற்றி சிந்திக்கிறார்கள். தொழில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என ஆண்கள் சிந்திக்கிறார்கள். சிலர் கான்கிரீட் வீடு கிடைக்குமா? குடிநீர் கிடைக்குமா ? என சிந்திக்கிறார்கள். எல்லோரும் வெவ்வேறு சிந்தனையோடு இருக்கிறார்கள். அனைவரின் எண்ண ஓட்டத்தையும் சரி செய்வோம். கஞ்சா நம் வீட்டுக்கு வீதிக்கு வரக்கூடாது.

    காமராஜர் காலத்தில் 14 அணை கட்டப்பட்டது. அதன் பிறகு யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதன் தாக்கத்தை காண்கிறோம். அணைகள் கட்டுவதற்கு இங்குள்ள அரசு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனைமலை நல்லாறு திட்டத்தை கொண்டு வர வேண்டும். அதனை நாங்கள் செய்து காட்டுவோம் .100 சதவீதம் பணத்தை மத்திய அரசு கொடுத்தும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்காமல் திராவிட அரசு உள்ளது. குடிநீர் திட்டம் 100 சதவீதம் மத்திய அரசு திட்டம்.

    பிரதமர் மோடி இலவசமாக கொடுக்கக்கூடிய திட்டத்தை இங்குள்ள கும்பல் சுரண்டுகிறது. ஏழைகளின் ரத்தத்தை சுரண்டி ஏழையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை ஓடஓட விரட்ட வேண்டும். இதற்கான மாற்றத்தை கொடுக்க உங்கள் வீட்டுப்பிள்ளையாகிய என்னை வெற்றி பெற செய்ய வேண்டும். நம் பணி பூர்த்தியாகவில்லை. இன்னும் 5 ஆண்டுகள் மோடி வர வேண்டும்.

    கோவை பாராளுமன்ற தொகுதிக்கு மாநில அரசால் நிலத்தை கொடுக்கவில்லை என்றால் ஊருக்குள் அப்பார்ட்மெண்ட் கட்டி கொடுக்கப்படும். நிலம் இல்லை என்றால் இதுதான் வழி. பிரச்சனைகளை முடித்து கொடுக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுங்கள். இங்கிருந்து எம்.பி.யாக சென்றவர்கள் பாராளுமன்றத்தில் மவுனம் காத்து தற்போது திரும்பி வந்திருக்கிறார்கள். நான் தமிழகம் முழுவதும் நடந்து சென்று வந்து விட்டேன். எல்லா பிரச்சனைகளையும் உற்று பார்த்து விட்டேன். ஒரே ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். நான் மாற்றி காட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ராசிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் 17-ம் தேதி மாலையுடன் முடிவடைகிறது. இதனால் அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ரூ.50,000-க்கு மேல் பணம் வைத்திருப்போர் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் அப்பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரின் கார்களிலும் சோதனை நடத்தப்படுகிறது.

    நேற்று தாம்பரம் ரெயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலை மடக்கி ரூ.4 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

    இந்நிலையில் ராசிபுரம் அடுத்த மல்லூர் அருகே ரூ.7.86 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 10 கிலோ தங்கம், 29 கிலோ வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

    சேலத்தில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஈச்சர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வினோத் குமார் ஜோசப்பை அமலாக்கத்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
    • தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் பணியாற்றி வரும் அப்பு என்கிற விநாயகனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுவதையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். வருமான வரித்துறையினரும் அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் அடிக்கடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இப்படி பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

    இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் செலவுக்காக துபாயில் இருந்து ரூ.200 கோடி ஹவாலா பணத்தை கொண்டு வர திட்டமிட்டிருக்கும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த வினோத் குமார் ஜோசப் துபாயில் இருந்தபடியே இதுபோன்ற ஹவாலா பண பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்துள்ளார்.

    இது போன்ற மேலும் பல குற்றச்சாட்டுகளின் பேரில் வினோத் குமார் ஜோசப் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளார். சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் பயன்படுத்தி ஐ-பேட், செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தபோது தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகருக்காக ரூ.200 கோடி பணத்தை ஹவாலா முறையில் அனுப்ப திட்டமிட்டது உறுதியானது. இது தொடர்பான தகவல்களை வருமான வரித்துறையினர் வெளியிட்டிருந்தனர்.

    இதையடுத்து வினோத் குமார் ஜோசப்பை அமலாக்கத்துறையினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் தங்களது விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர்.

    ஹவாலா பண பரிமாற்ற விவகாரம் துபாய், மலேசியா நாடுகளுடனும் தொடர்பில் இருப்பதால் அமலாக்கத் துறையினர் இதன் பின்னணியில் இருப்பவர்களிடம் அடுத்த கட்டமாக விசாரணை நடத்த முடிவு செய்து உள்ளனர்.

    தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி பிரமுகருக்கு ஹவாலா பணத்தை சட்ட விரோதமாக கடத்தி வருவதற்கு தேர்தல் பிரசார களத்தில் உள்ள அப்பு என்கிற விநாயகன் என்பவரும் முக்கிய பங்காற்றியிருப்பதும் தெரிய வந்து உள்ளது. துபாயில் இருந்து வந்த வினோத் குமார் ஜோசப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் செல்வம் என்பவரும் ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் திட்டம் தீட்டி செயலாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழகத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகரிடம் பணியாற்றி வரும் அப்பு என்கிற விநாயகனிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அவருக்கு சம்மன் அனுப்ப உள்ளனர்.

    இந்த விசாரணையின்போது ஹவாலா பணப் பரிமாற்ற விவகாரத்தில் யார்-யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது பற்றிய தகவல்களை திரட்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் யாருக்காக இந்த பணத்தை அனுப்ப திட்டமிட்டார்களோ? அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் ஹவாலா பணம் விவகாரத்தில் அரசியல் கட்சியை சேர்ந்த முக்கிய புள்ளியும் விரைவில் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுகிறார்.

    ×