என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.
    • நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயம் ரூ.1000 கோடி அளவுக்கு சொத்து வைத்துள்ளார் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டை கூறினார்.

    இந்த நிலையில் உப்பளம் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து வாக்கு சேகரித்த முதலமைச்சர் ரங்கசாமி, நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்து பிரசாரம் செய்தார்.

    பா.ஜனதா வேட்பாளரும், உள்துறை அமைச்சருமான நமச்சிவாயத்துக்கு ரூ.1000 கோடி சொத்து உள்ளதாக நாராயணசாமி கூறியுள்ளார். இவருக்கு ரூ.1000 கோடி சொத்துன்னா, அவருக்கு எத்தனை ஆயிரம் கோடி சொத்து இருக்கும்?


    அவர் முதலமைச்சர், மத்திய அமைச்சர், பிரதமர் அலுவலக இணை அமைச்சர், 15 ஆண்டு ராஜ்யசபா எம்.பி.யாக இருந்துள்ளார். அப்படியென்றால் அவரிடம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும்? அவரிடம் உள்ள சொத்து விபரங்களை அவர் கூறினால் நன்றாக இருக்கும்.

    நம்ம புதுச்சேரியிலும் இவ்வளவு பெரிய பணக்காரர் இருக்கிறார் என்ற பெருமை கிடைக்கும், எங்களுக்கும் சந்தோஷமாக இருக்கும். அவர் எதையாவது சொல்லனும் என போகிற போக்கில் சொல்லிக் கொண்டே போகிறார்.

    இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது
    • ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார்

    பாராளுமன்ற தேர்தலில் 17 பேர் கொண்ட வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது.

    இந்த வேட்பாளர் பட்டியலில் ஒடிசாவில் இருந்து 8 வேட்பாளர்கள், ஆந்திராவில் இருந்து 5 பேர், பீகாரில் இருந்து 3 பேர் மற்றும் மேற்கு வங்காளத்தில் இருந்து ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.

    ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சர் ஜெகன்மோகனின் சகோதரியுமான ஒய்.எஸ்.சர்மிளா கடப்பா தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்பி முகமது ஜாவேத்தும், கதிஹார் தொகுதியில் மூத்த தலைவர் தாரிக் அன்வரும், பகல்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ அஜீத் சர்மாவும் போட்டியிடுகின்றனர்.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் எம்.எம்.பள்ளம் ராஜூ போட்டியிடுகிறார். ஒடிசாவின் பர்கர் தொகுதியில் முன்னாள் எம்.பி சஞ்சய் போய் போட்டியிடுகிறார்.

    • வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்
    • இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும் - பாஜக எம்.பி ஆனந்த குமார்

    வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும் எனப் பிரதமர் மோடி கூறினார்.

    அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என ராஜஸ்தான் மாநிலம் நாகூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஜோதி மிர்தா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள ஜோதி மிர்தா மக்களிடையே பேசுகையில், "அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும். அதற்கு மக்களவையிலும் மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பலம் வேண்டும். அதற்கு பெரியளவில் பெரும்பான்மை பெற்று இம்முறை நாம் வெற்றி பெற வேண்டும்" என கூறியுள்ளார்.

    இதற்கு முன்னதாக இதே போல அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று கர்நாடகா பாஜக எம்.பி அனந்த் குமார் ஹெக்டே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மார்ச் 9-ம் தேதி கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தின் சித்தாபுராவில் உள்ள ஹலகேரி என்ற கிராமத்தில், முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பியுமான அனந்த் குமார் பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றினார்.

    அப்போது, "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனப் பிரதமர் மோடி ஏன் கூறினார். தற்போது மக்களவையில் 2/3 பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.

    எனவே, அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இந்துக்களை ஒடுக்கும் விதிகள் மற்றும் சட்டங்களை திருத்த அரசியலமைப்பில் மாற்றங்களை செய்யவேண்டும். அதற்கு, இந்த பெரும்பான்மை போதாது." எனப் பேசினார். இவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையானது.

    இதனையடுத்து 6 முறை எம்.பி ஆக இருந்த ஆனந்த குமாருக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்தது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "பெரும்பான்மை பெற பாஜக விரும்புவதன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியதும் ஆனந்த் ஹெக்டேவை வேட்பாளர் பட்டியலிலிருந்து பாஜக நீக்கியது. இப்போது இன்னொரு பாஜக வேட்பாளர், அரசியல் சாசனத்தை மாற்றுவதே பாஜகவின் நோக்கமென வெளிப்படையாக பேசியிருக்கிறார். உண்மையை எத்தனை நாள் பாஜக மறைக்க முயலும்?" என தெரிவித்துள்ளார். 

    • போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது.
    • பாராளுமன்ற தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.

    புதுச்சேரி:

    ஏனாம் பிராந்திய பா.ஜனதா தலைவர் தெம்மாடி துர்காபிரசாத் கடந்த சட்டசபை தேர்தலின்போது ஏனாம் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டார்.

    ஏனாமில் பா.ஜனதா, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார். இதனால் அதிருப்தியடைந்த துர்காபிரசாத் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கினார். பா.ஜனதா அவரை கட்சியிலிருந்து நீக்கியது.

    இந்த நிலையில் அவர் மாயமாகி 5 நாட்களுக்கு பிறகு வந்தார். அவரை சிலர் கடத்தி மனுவை வாபஸ்பெற மிரட்டியதாக தெரிவித்தார்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது. இதனால் போலீசார் 5 நாட்கள் கடும் அலைச்சலுக்கு ஆளாகினர்.


    இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

    புதுச்சேரியில் தற்போது நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் 7 அரசியல் கட்சி வேட்பாளர்கள், 19 சுயேட்சை வேட்பாளர்கள் என 26 பேர் போட்டியிடுகின்றனர்.

    அனைவருக்கும் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் நாள் முழுவதும் பாதுகாப்புக்கு இருக்கு வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    போலீஸ்துறையில் சிக்மா, நுண்ணறிவு, குற்றம், கடலோர காவல், பயிற்சி பள்ளி என பிற பணிகளில் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டு வேட்பாளர்களுடன் வலம் வருகின்றனர்.

    வேட்பாளர் எங்கு செல்கிறார் என தொடர்ந்து கண்காணிக்கின்றனர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் பலர் பிரசாரம் ஏதும் செய்யாமல் தங்கள் வீடுகளில்தான் உள்ளனர். அவர்கள் வீடுகளில் போலீசார் காவல் காத்து வருகின்றனர்.

    • தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.
    • 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள நெரூர் அரங்கநாதன்பேட்டையில் தேர்தல் கண்காணிப்பு அலுவலர் வினோத்குமார் தலைமையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெரூர் அருகே உள்ள மறவாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் அ.தி.மு.க. தேர்தல் பிரசார வாகனங்களுக்கு பின்னால் கண்காணிப்பு குழுவினர் சென்றனர்.

    இந்த வேளையில் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ரமேஷ்குமார், மதுசூதணன், கார்த்திக், ஜெகன் மற்றும் பலர் தேர்தல் கண்காணிப்பாளர் வினோத்குமார் சென்ற அரசு வாகனத்தை வழிமறித்து தகராறு செய்ததாக தெரிகிறது.

    இது தொடர்பாக வாங்கல் காவல் நிலையத்தில் வினோத்குமார் புகார் செய்தார். அதன்பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 5 பேர் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாச வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

    • தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
    • உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    தென்காசி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதனை ஒட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வருகிற 5-ந்தேதி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவர் ஹெலிகாப்டர் மூலமாக தென்காசி அருகே இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளியில் வந்து இறங்குகிறார்.

    பின்னர் அவர் ஆசாத் நகரில் இருந்து தென்காசி புதிய பஸ் நிலையம் வரை திறந்தவெளி வாகனத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார் என தென்காசி மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    இதையொட்டி உள்துறை மந்திரி அமித்ஷா வந்து செல்லும் பகுதிகளில் தென்காசி மாவட்ட காவல்துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.
    • அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தி.மு.க.-அ.தி.மு.க. இரு கட்சிகளையும் கடுமையாக தாக்கி உள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டணி அமைத்து இருப்பதாகவும் அந்த பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கேள்வி:- கூட்டணி அமைப்பது தொடர்பாக உங்களுக்கும், உங்களது தந்தைக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானதே?

    பதில்:- அது அ.தி.மு.க. உருவாக்கிய புரளி. நானும், எனது தந்தையும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பதை எப்போதோ தீர்மானித்து விட்டோம். அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவே இல்லை.

    எனது தந்தையை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்து பேசிய பிறகுதான் இந்த புரளி கிளம்பியது.

    கேள்வி:- பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க என்ன காரணம்?

    பதில்:- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இல்லாத புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களது இலக்கு. தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்து பட்டதுபோதும். இதை கருத்தில் கொண்டுதான் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

    கேள்வி:- அடிக்கடி கூட்டணி மாறுவதால் உங்கள் கட்சி மீது குற்றச்சாட்டுகள் எழுப்பபடுமே?

    பதில்:- எந்த கூட்டணி என்றாலும் பாட்டாளி மக்கள் கட்சி முழுமையாக பாடுபட்டு உள்ளது. இதை எந்த கட்சியும் மறுக்க இயலாது. நாங்களாக ஒருபோதும் கூட்டணியை மாற்றிக் கொள்வது இல்லை. உண்மையில் தி.மு.க., அ.தி.மு.க.வால்தான் நாங்கள் கூட்டணியில் மாற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    தற்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க.தான் எங்கள் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்றுள்ளது. எங்களது கூட்டணி நிச்சயம் அதிகாரத்துக்கு வரும்.

    கேள்வி:- மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக உள்ளது. அது உங்கள் கொள்கைக்கு மாறுபட்டதாக கருதப்படுகிறதே?

    பதில்:-சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக இருப்பதாக மத்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் கட்சிதான் சில மாநிலங்களில் ஆதாயத்துக்காக கணக்கெடுப்பு பற்றி பேசியது.

    தற்போதைய கூட்டணியில் டாக்டர் ராமதாஸ் தான் மூத்த தலைவர். அவர் பிரதமரிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நல்ல தீர்வு காண்பார்.

    சமூகநீதிதான் எங்களது லட்சியம். அதற்காக எந்த கூட்டணியில் இருந்தாலும் போராடுவோம்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்:- எங்களது கூட்டணிக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். அது 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மாற்று அணி உருவெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். அந்த தேர்தலின் போது நாங்கள் மிக பிரமாண்டமான அணியை உருவாக்குவோம்.

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதை திட்டவட்டமாக இப்போதே என்னால் சொல்ல முடியும்.

    கேள்வி:- பா.ம.க. உங்களை முன் நிறுத்தினாலும் தமிழகம் முழுக்க ஆதரவு கிடைக்குமா?

    பதில்:- வன்னியர் சங்கம் அடிப்படையில்தான் பா.ம.க. உருவானது. ஆனால் நாளடைவில் அதில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு தலித்தான் பொதுச் செயலாளராக இருக்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டது.

    இப்போது பா.ம.க. மீதான மக்கள் எண்ணம் மாறி வருகிறது. தமிழக மக்கள் அன்புமணியை ஒரு வன்னியர் தலைவராக மட்டும் பார்ப்பது கிடையாது. படித்தவர், டாக்டர், நாட்டுக்கு நல்லது செய்பவர் என்ற கோணத்தில்தான் பார்க்கிறார்கள்.

    கேள்வி:- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 3-வது முறையாக ஆட்சி அமைக்கும்பட்சத்தில் மேல்சபை எம்.பி.யாக இருக்கும் நீங்கள் மத்திய மந்திரியாக வாய்ப்பு உள்ளதா?

    பதில்:- இல்லை. பா.ஜ.க. தலைவர்களுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசிய போது மத்திய மந்திரி பதவி பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. அது அவர்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. நான் மாநில அரசியலில் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்.

    எனது மனைவி சவுமியா தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார். நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அவர் மிக சிறந்த எம்.பி.யாக திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.
    • இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் வெற்றிகளைக் குவிப்பதற்காக களத்தில் நீ கொடுக்கும் உழைப்பையும், நீ காட்டும் உறுதியையும் நினைத்து மனம் நெகிழ்ந்து போய், உன்னை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகத் தான் இந்த மடலை நான் வரைகிறேன்.

    பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை கண்ட மக்களவைத் தேர்தல்களில் இருந்து இந்தத் தேர்தல் முற்றிலும் மாறானது. தமிழ்நாட்டின் தலையெழுத்தை நாங்கள் தான் நிர்ணயிப்போம் என்று மார்தட்டி வந்த அ.தி.மு.க.வையும், திமுகவையும் ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணியை அமைத்து, புதிய பயணத்தை நாம் தொடங்கியிருக்கிறோம்.

    இந்தத் தேர்தலில் நாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று நான் கூறுவதற்கு பதவிகளை பிடிக்க வேண்டும் என்ற ஆசை காரணமல்ல. மாறாக, தடைப்பட்டுக் கிடக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும் என்ற வேட்கை தான் காரணம் ஆகும்.


    தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் தான் போட்டி என்று இரு கட்சிகளும் மூச்சுக்கு முந்நூறு முறை கூறிக்கொள்கின்றன. ஆனால், அவர்களின் அடிமனதில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கூட்டணியைக் கண்டு பெரும் அச்சம் நிலவுகிறது. அவர்களின் அச்சத்தை நிரந்தரமாக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தேர்தலில் நாம் போட்டியிடும் 10 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்; நமது கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுவையில் 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இதுவே நமது இலக்கு.

    அந்த இலக்கை அடைவதற்காக இப்போது கடுமையாக உழைக்கும் பாட்டாளி இளஞ்சிங்கங்கள் அனைவரும் இனி இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். நமது வேட்பாளர்களாலும், கூட்டணியின் வேட்பாளர்களாலும் அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் செல்வது சாத்தியமல்ல. நீங்கள் தான் காடுகளையும், மேடுகளையும், ஆறுகளையும், மலைகளையும் கடந்து சென்று மக்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும்.

    அந்த ஆதரவின் உதவியுடன் 40 இடங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது என்ற செய்தி தேனாக நம் செவிகளில் பாய வேண்டும். அதற்காக இனிவரும் நாட்களில் கடுமையாக உழைத்து வெற்றிகளை சாத்தியமாக்குங்கள். அது தான் எனது 45 ஆண்டுகால பொதுவாழ்க்கைப் பணிகளுக்கு நீங்கள் அளிக்கும் அங்கீகாரமாக அமையும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கணேசபுரம் மேம்பாலம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படும்.
    • வடசென்னையில் பிரத்யேகமாக மாசுகட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும்.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வடசென்னை பகுதி கொளத்தூரில் பிரசாரம் செய்தார். தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து அவர் பேசும் போது கூறியதாவது:-

    தேர்தலில் போனமுறை நம்முடைய எதிரிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வந்தார்கள். இருந்தாலும் மிகப்பெரிய வெற்றியை தந்தீர்கள். இந்த முறை நமது எதிரிகள் தனித்தனியாக பிரிந்து அணி அணியாக வருகிறார்கள். எனவே நமக்கு இந்த முறை வெற்றி மிக சுலபம் என நினைத்து விடாதீர்கள்.

    சென்னை வடக்கு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு பற்றாக்குறை மற்றும் வளர்ச்சியில் உள்ள இடைவெளியை நிவர்த்தி செய்யும் வகையில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 நாட்களுக்கு முன்புதான் முதலமைச்சர் வந்து இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை ஐ.சி.எப்.-கொளத்தூர் பகுதியை இணைக்கும் புதிய மேம்பாலம் ரூ.62 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை காமராஜ் துறைமுகத்தின் சமூக பொறுப்பு நிதி குஜராத்துக்கு செல்வதை தடுத்து ரூ.162.85 கோடி செலவில் பல நலத்திட்ட உதவிகளை வட சென்னை மக்கள் பயன்பாட்டுக்கு நாம் வழங்கி இருக்கிறோம்.

    இப்போது கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் சென்னை மாநகராட்சி சார்பாக ரூ.106 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    எண்ணூர் அனல் மின் நிலையம் விரிவாக்க பணிகள் ரூ.6,381 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவர்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான எண்ணூர் கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் ரூ.141 கோடி செலவில் தூண்டில் வளைவு அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது.

    இதுபோன்ற பல்வேறு சாதனைகளை நமது அரசு செய்து கொடுத்துள்ளது. நமது தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நான் உங்களிடம் நினைவுபடுத்த விரும்புகிறேன். விம்கோ நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து எண்ணூர் வரை ரெயில் பாதை நீட்டித்து அமைக்கப்படும்.

    ராஜாஜி நகர் மக்கள் பயன்பெறும் வகையில் வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து தெற்கு பக்கமாக செல்வதற்கு சுரங்க நடைபாதை அமைத்து தரப்படும். கணேசபுரம் மேம்பாலம் ரூ.147 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி விரைந்து முடிக்கப்படும்.

    வடசென்னையில் பிரத்யேகமாக மாசுகட்டுப்பாடு வாரியம் அமைக்கப்படும். மக்களின் சுகாதாரத்தை உறுதி செய்யும் வகையில் கொடுங்கையூரில் உள்ள குப்பைமேடு சீரமைக்கப்படும்.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் பட்டா பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. பலர் பட்டா பெற முடியாத நிலை உள்ளது. இதை சரி செய்ய முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்து உள்ளார்.

    தேர்தல் முடிந்ததும் பட்டா பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டு வீட்டு மனை பெற்ற அனைவருக்கும் வழங்கப்படும் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

    மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை, புதுமைப்பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

    முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து உரிமைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் அடகு வைத்து விட்டார். அவர்களிடம் விலை போய் விட்டார். அனைத்து முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதும் சி.பி.ஐ. ரெய்டு, ஐ.டி.ரெய்டு என பல வழக்குகளை பதிவு செய்து அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். அவர்களது அடிமைகளாக வைத்துக் கொண்டனர்.


    அதே போல் தி.மு.க.வையும் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார்கள். தி.மு.க. அதற்காக பயப்படுமா? நாங்கள் சொல்லி விட்டோம். மோடிக்கும் பயப்பட மாட்டோம். ஈடிக்கும் பயப்பட மாட்டோம். மோடியோட டாடி வந்தாலும் பயப்பட மாட்டோம்.

    தமிழ்நாட்டு மக்களும் பெரியாரும் எங்களுக்கு சுயமரியாதை கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு நாம் எல்லாம் சேர்ந்து ஒரு செல்ல பெயர் வைத்து உள்ளோம்.

    இனிமேல் நீங்கள் அவரது பெயரை சொல்லி கூப்பிடக்கூடாது. அவருக்கு ஒரு பெயர் வைத்துள்ளேன். இனிமேல் நீங்கள் அத்தனை பேரும் ஒன்றிய பிரதமர் மிஸ்டர் 29 பைசா என்று அந்த பெயரை சொல்லிதான் கூப்பிட வேண்டும்.

    ஏன் 29 பைசா என்று கூப்பிட வேண்டும் என சொல்கிறேன் என்றால், ஜி.எஸ்.டி. மூலம் நாம் 1 ரூபாய் கொடுக்கிறோம். ஆனால் திருப்பி நமக்கு பிரதமர் வெறும் 29பைசா தான் தருகிறார். ஆனால் மற்ற மாநிலங்களுக்கு வாரி வாரி கொடுக்கிறார்.

    தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்கிறார். எனவே அவருக்கு பாடம் புகட்ட இந்த தேர்தலில் நீங்கள் எங்கள் வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    • தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
    • மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.

    மதுரை:

    கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மற்றும் தி.மு.க. ஒருவரையொருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 1974-ம் ஆண்டு கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி இந்த விவகாரத்தில் வாய்மூடி மவுனியாக இருந்தார். எந்த போராட்டமும் நடத்தவில்லை, இது வரலாறு.

    ஆனால் இன்றைக்கு பா.ஜ.க. கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. இதற்கு தி.மு.க.வும் பதிலளித்து பேசி வருகிறது. கச்சத்தீவு விவகாரத்தை பொறுத்தவரை தி.மு.க. பொய் பேசுகிறது என்றால் பா.ஜனதா பயங்கர பொய்யை பேசுகிறது. இது அவர்களது தேர்தல் ஸ்டண்டாகும்.

    ஆனால் தமிழக மீனவர்கள் பிரச்சனையில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. எனவே மீனவர்கள் இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர். எனவே தான் பா.ஜனதாவும், தி.மு.க.வும் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து கபடநாடகம் நடத்துகிறது.


    கடந்த 2006, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா, கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமை பாதுகாக்க கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பலமுறை கடிதங்கள் மூலம் கோரிக்கை வைத்தார்.

    கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்களிலும் இந்த விவகாரம் குறித்து அம்மா பேசினார். அப்போது பதில் அளித்த கருணாநிதி, தமிழக மீனவர்கள் பேராசைப்பட்டு இலங்கை கடற்பகுதிக்குள் மீன்பிடிக்க செல்வதால்தான் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்படுவதாக தெரிவித்தார். இந்த கருத்தை அன்றைக்கு அம்மா கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மேலும் எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து கச்சத்தீவு விவகாரத்தில் சட்டப் போராட்டங்கள் நடத்தியது. இதை தி.மு.க., பாரதிய ஜனதா தலைவர்கள் மறந்தாலும் மீனவர்கள் மறக்கமாட்டார்கள். இன்றைக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு பற்றி எதுவுமே தெரியாமல் யாரோ எழுதிக் கொடுத்ததை படிக்கிறார்.

    தி.மு.க.வும், பா.ஜ.க.வும் கச்சத்தீவு பிரச்சனையில் நடத்துகிற கபட நாடகம், வேஷங்களை தமிழக மீனவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது ஒரு தேர்தல் ஸ்டண்டாகவே அவர்கள் பார்க்கிறார்கள். எனவே மீனவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் அ.தி.மு.க. பக்கம் திரும்பி உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகாரில் கடந்த முறை பா.ஜனதா 40-ல் 39 இடங்களில் வெற்றி பெற்றது.
    • இந்த முறை 40 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் முனைப்பில் கூட்டணியுடன் களம் இறங்கியுள்ளது.

    பீகார் மாநிலத்தில் முசாபர்புர் மக்களவை தொகுதி எம்.பி.யாக அஜய் குமார் நிஷாத் இருந்து வருகிறார். பா.ஜனதாவை சேர்ந்த இவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க அக்கட்சி மறுத்துவிட்டது. தொகுதியில் எதிர்ப்பு இருப்பதாக காரணம் தெரிவித்த பா.ஜனதா, ராஜ் புஷன் நிஷாத்திற்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

    இதனால் அதிருப்தி அடைந்த அஜய் குமார் நிஷாத் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் மற்றும் பீகார் மாநில பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    பீகாரில் காங்கிரஸ் கட்சியை வலிமைப்படுத்துவதும், ஒருவரின் அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதும்தான் முக்கிய வேலை எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும் "தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு கூட இறுதி ஆசை என்ன என்பதை தெரிவிக்க வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு முன் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இது பண அதிகார தேர்தலாக இருக்காது. மக்கள் வலிமையின் தேர்தலாக இருக்கும்" என்றார். 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா பீகாரில் 40 தொகுதிகளில் 39-ல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
    • எனக்கான அங்கீகாரம் பாரதிய ஜனதா கட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த விஜயதரணி, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணனுக்கு பா.ஜனதா வாய்ப்பு வழங்கியது.

    எனவே விளங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மீண்டும் பா.ஜ.க. சார்பில் விஜயதரணி களமிறக்கப்படுவார் என்று பேசப்பட்ட நிலையில், அதுவும் நடக்கவில்லை. அங்கு வேட்பாளராக நந்தினி களமிறக்கப்பட்டார். இதையடுத்து விஜயதரணி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டது.

    இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது விளவங்கோடு இடைத்தேர்தலில், 4 முனை போட்டி நிலவுகிறது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால் தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ளது.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தபோது, விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவுகளை, தனது பதவியை ராஜினாமா செய்த விஜயதரணியிடம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நகைச்சுவையாக கூறினார். கனிமொழி எம்.பி. பிரச்சாரத்தின்போது, இந்த தொகுதியில் நடப்பது தேவையற்ற தேர்தல்... மக்களுக்கு தேவையான தேர்தல் என்று கூறினார்

    இந்த நிலையில் விளவங்கோடு தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விஜயதரணி நேற்று வந்தார். அவர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொண்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    எனக்கான அங்கீகாரம் பாரதிய ஜனதா கட்சியில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. விளவங்கோடு தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்றி உள்ளேன். பல்வேறு திட்டங்களை போராடி செய்துள்ளேன். இது மக்களுக்கு தெரியும். கடின உழைப்பால் இந்த தொகுதியை உயர்த்தி காட்டி உள்ளேன். தற்பொழுது இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கு பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை நான் பெருமையாக கருதுகிறேன்.

    மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி பிரதமர் மோடி தலைமையில் அமையும். தமிழகத்தில் 39 எம்.பி.க்கள் உள்ளனர். வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றால் எந்த நன்மையையும் கிடைக்காது. எனவே கன்னியாகுமரி உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். மத்தியில் எந்த கட்சி ஆட்சி நடத்து கிறதோ அந்த கட்சியை சேர்ந்தவர் வெற்றி பெற்றால் மட்டுமே, தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற முடியும். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ கத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள், பாராளுமன்றம் முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தியதுடன் வேறு எதுவும் செய்யவில்லை. இந்த நிலை மாற வேண்டும். ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வரவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், நாகர்கோவிலில் தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். இதிலும் விஜயதரணி பங்கேற்றார். முன்னதாக பார்வதிபுரம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் பொன். ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்தார். அவருக்கு பூசாரி விபூதி பூசி ஆசி வழங்கினார். விஜயதரணிக்கும் ஆசி வழங்கிய பூசாரி, தனது இரண்டு கைகளால் அவரது கன்னத்திலும் விபூதியை பூசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக தொடங்கியுள்ளது.

    ×