என் மலர்tooltip icon

    உலகம்

    • நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் வரியை திருப்பி செலுத்த வேண்டியிருக்கும்.
    • கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீதும் வரிகள் விதிக்கப்பட்டன.

    அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதிபர் டொனால்ட் டிரம்பின் இறக்குமதி வரி தொடர்பான வழக்கின் தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்துள்ளது. நேற்று நீதிமன்றம் மூன்று வெவ்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்த போதிலும், டிரம்பின் வரி விதிப்பு தொடர்பான முக்கிய வழக்கில் முடிவெடுக்கவில்லை.

    மேலும் உச்ச நீதிமன்றம் தற்போது நான்கு வார கால விடுமுறைக்கு செல்வதால், இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அல்லது தீர்ப்பு பிப்ரவரி 20 வரை வெளிவர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற விசாரணையின்போது 1977 ஆம் ஆண்டின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தை பயன்படுத்தி நாடு தழுவிய அளவில் வரிகளை விதிப்பது அதிபரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டதா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    ஒருவேளை நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்பிற்கு எதிராக அமைந்தால், அவர் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு அவர் சந்திக்கும் மிகப்பெரிய சட்டப்பூர்வ தோல்வியாக இது இருக்கும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நீதிமன்றம் டிரம்பிற்கு எதிராகத் தீர்ப்பளித்தால், ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் $130 பில்லியன் (சுமார் ₹10 லட்சம் கோடிக்கும் மேல்) வரியை இறக்குமதியாளர்களுக்கு அமெரிக்க அரசு திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்தும் திட்டங்களை எதிர்த்தால் ஐரோப்பிய நாடுகள் மீது மேலும் வரிகளை விதிக்கும் அவரது தற்போதைய அச்சுறுத்தலுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன் உள்ள இந்த வழக்கு, ஏப்ரல் 2-ம் தேதி டிரம்ப் அறிவித்த 'விடுதலை நாள்' (Liberation Day) வரிகள் தொடர்பானது. இது பெரும்பாலான இறக்குமதிகள் மீது 10 முதல் 50 சதவீதம் வரை வரி விதித்தது. கனடா, மெக்சிகோ மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீதும் இந்த வரிகள் விதிக்கப்பட்டன.  

    • சுனிதாவை 1998-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக்கொண்டது.
    • 2006 ஆம் ஆண்டு முதல்முறையாக சுனிதா விண்வெளிக்கு சென்றார்

    உலகளவில் பேசப்படும் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர். சுனிதாவின் தந்தையான அமெரிக்க விஞ்ஞானி தீபக் பாண்டியா, குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.

    ஸ்லோவேனியா வம்சாவளியை சேர்ந்த போனிக்கு 3-வது மகளாக 1965-ல் பிறந்தார் சுனிதா வில்லியம்ஸ். சிறு வயதிலேயே விண்ணில் பறக்க வேண்டுமென்ற ஆசை சுனிதாவின் கனவு பின்னாளில் அது நனவானது.

    அமெரிக்காவின் நீதம் என்ற இடத்தில் பள்ளிக்கல்வியை படித்த சுனிதா, புளோரிடாவில் பொறியியல் படிப்பை முடித்தார். அமெரிக்க கடற்படையில் விமானியாக சேர்ந்த சுனிதாவை 1998-ல் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அழைத்துக்கொண்டது.

    2006 ஆம் ஆண்டு முதல்முறையாக அவர் விண்வெளிக்கு சென்றார். விண்ணை தொட்ட விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக மண்ணைத்தொட்டார். அவரது சாதனையை பாடப்புத்தகங்கள் பேசின.

    கடந்த ஆண்டு 59 வயதான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரும்(62) மற்றும் சில குழுவினருடன் நாசாவின் சார்பில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று.

    286 நாட்கள் (9 மாதங்கள்) நாட்களுக்கு பிறகு இந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு பத்திரமாக அழைத்து வரப்பட்டனர்.

    இந்நிலையில், 27 ஆண்டுகள் நாசாவில் பணிபுரிந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

    இதுவரை 3 முறை விண்வெளிக்கு சென்று, 608 நாட்கள் விண்வெளியில் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது.
    • ரெயில்கள் மோதிய விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்

    ஜனவரி 18 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே திடீரென தடம் புரண்டது.

    தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு ரெயில்களுமே பலத்த சேதமடைந்தன.

    இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், ஸ்பெயினின் பார்சிலோனா அருகே மற்றொரு பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ரெயில் ஓட்டுநர் உயிரிழந்தார். ஏராளமான பயணிகள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    • 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலா எதிர்க்கட்சி தலைவருக்கு அளிக்கப்பட்டது.
    • நார்வே நாட்டின் பிரதமர் அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தான் 8 போர்களை நிறுத்தி உள்ளதால் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து கூறி வந்தார்.

    ஆனால், 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான மரியா கொரினா மச்சாடோவுக்கு அளிக்கப்பட்டது. இதனால் டிரம்ப் ஏமாற்றம் அடைந்தார்.

    இதற்கிடையே, நோபல் பரிசு வழங்கும் நார்வே நாட்டின் பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோருக்கு அதிபர் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், 8 போர்களை நிறுத்திய எனக்கு நோபல் பரிசு வழங்கவில்லை. எனவே இனி அமைதி பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து அதிபர் டிரம்புக்கு பதில் அளித்த நார்வே பிரதமர் ஜோனஸ்கர் ஸ்டோர், "நோபல் அமைதிப் பரிசைப் பொறுத்தவரை அதிபர் டிரம்ப் உள்பட அனைவருக்கும் தெளிவாக விளக்கியுள்ளேன். அந்தப் பரிசு நார்வே அரசாங்கத்தால் வழங்கப்படுவது அல்ல. ஒரு சுதந்திரமான நோபல் குழுவால் வழங்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், "நான் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும். நான் லட்ச கணக்கானோரை காப்பாற்றியுள்ளேன். நார்வேவுக்கும் நோபல் பரிசுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை நம்பவேண்டாம்"

    நார்வேவில் தான் நோபல் குழு இருக்கிறது. நோபல் குழுவை நார்வே அரசு தான் கட்டுப்படுத்துகிறது. நான் நார்வே மீது வைத்திருந்த மரியாதையை இழந்துவிட்டேன்" என்று காட்டமாக தெரிவித்தார்.

    • காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது இந்த குழுவின் நோக்கம்.
    • மேலும் பல நாடுகள் விரைவில் இதில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது.

    இதன் மூலம் இக்குழுவில் இணையும் முதல் அரபு நாடு என்ற அந்தஸ்தை அமீரகம் பெற்றுள்ளது.

    காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.

    இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில்  அமீரகத்தின் இந்த முடிவைத் டிரம்ப் பாராட்டியுள்ளார்.

    இது மத்திய கிழக்கில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் என்றும், மேலும் பல நாடுகள் விரைவில் இதில் இணையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

     இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார்.

    • ரஷியாவில்146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது.
    • உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது.

    ரஷியாவின் பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது ரஷியாவில்146 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடுமையான பனிப்பொழிவு என்று கூறப்படுகிறது.

    கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் பனியால், வீடுகள் மற்றும் கட்டிடங்களின் கூரை வரை பனி படர்ந்துள்ளது. பல இடங்களில் பனியின் உயரம் பல மீட்டர்களை எட்டியுள்ளது.

    தலைநகர் மாஸ்கோ மற்றும் பல்வேறு நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக ரஷியாவின் கம்சட்கா தீபகற்பம் பனிப்பொழிவால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பனிக் குவியல்கள் 10 முதல் 40 அடி உயரம் வரை சேர்ந்துள்ளன.

    உயரமான கட்டிடங்களில் 4-வது மாடி வரை பனியால் சூழப்பட்டுள்ளது. சாலைகளில் மலை போல் பனி குவிந்துள்ளதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் முற்றிலுமாகப் புதைந்துள்ளன. இதனால் பொதுப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

    மோசமான வானிலை காரணமாகச் சகாலின் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது மற்றும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கடும் பனிப்பொழிவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பனியை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. 

    • ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது
    • காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது இதன் நோக்கம்.

    போர் நிறுத்தத்தின் பின் காசாவின் நிர்வாகம் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைக் கண்காணிக்க காசா அமைதிக் குழுவை அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ளார்.

    இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

    அந்த வகையில் காசா அமைதிக் குழுவில் உறுப்பினராக இணையுமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    ரஷியா கடந்த நான்கு ஆண்டுகளாக உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், அமைதி ஒப்பந்தம் இன்னும் எட்டப்படாமல் உள்ளது.

    இத்தகைய சூழலில், ரஷிய அதிபர் புதினை காசா அமைதிக் குழுவில் இணையுமாறு டிரம்ப் அழைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தக் குழுவின் முக்கிய நோக்கம் காசா பகுதியில் போருக்குப் பிந்தைய நிர்வாகத்தைச் சீரமைப்பது மற்றும் அங்கு அமைதியை நிலைநாட்டுவது என்று கூறப்படுகிறது. 

    இதற்கிடையே காசா அமைதிக் குழுவில் சேர மறுத்தால் பிரான்ஸ் மதுபானங்கள் மீது 200 சதவீதம் வரி விதிப்பேன் என அந்நாட்டு அதிபர் மாக்ரோனை டிரம்ப் மிரட்டியுள்ளார். 

    • விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 500 பயணிகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
    • ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார்.

    ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் அருகே ஏற்பட்ட ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

    ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை மாலை, மலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்று கொண்டிருந்த அதிவேக ரெயில, தெற்கு அண்டலூசியாவில் உள்ள அடமுஸ் அருகே திடீரென தடம் புரண்டது.

    தடம் புரண்ட அந்த ரெயில் பக்கத்து தண்டவாளத்தில் வந்த மற்றொரு ரெயிலின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரண்டு ரெயில்களுமே பலத்த சேதமடைந்தன.

    விபத்தில் சிக்கிய இரண்டு ரயில்களிலும் சேர்த்து மொத்தம் சுமார் 500 பயணிகள் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.

    ராணுவம் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டன.

    இந்த விபத்தில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 72 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

    இதற்கிடையே ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டார். இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    இந்தத் துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் மூன்று நாட்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படும் என்று ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது. 

    • இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.
    • ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ ஒளிபரப்பானது.

    ஈரான் நாட்டில் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரான் அரசின் அதிகாரப்பூர்வத் தேசியத் தொலைக்காட்சி சேனல் ஹேக் செய்யப்பட்டது.

    1979-ஆம் ஆண்டு ஈரானியப் புரட்சிக்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஷா வம்சத்தின் தற்போதைய இளவரசர் ரெசா பஹ்லவிக்கு வீடியோ காட்சிகள் சேனலில் திடீரெனத் தோன்றின.

    இளவரசர் ரெசா பஹ்லவி, "நீங்கள் ஈரானின் தேசிய ராணுவம், இந்த இஸ்லாமியக் குடியரசின் ராணுவம் அல்ல. போராட்டக்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள், அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்" என்று ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ தேசிய தொலைக்காட்சியில் ஹேக்கர்களால் ஒளிபரப்பப்பட்டது.

    ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு கொண்ட தேசியத் தொலைக்காட்சியே ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

    • உலகப் புகழ்பெற்ற 'வாலண்டினோ' பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
    • இது பேஷன் உலகில் 'வாலண்டினோ ரெட்' என்றே அழைக்கப்படுகிறது.

    உலகின் தலைசிறந்த பேஷன் ஆடை வடிவமைப்பாளர்களில் ஒருவரான வாலண்டினோ கரவானி வயது முதிர்வு காரணமாக நேற்று தனது 93-வது வயதில் காலமானார்.

    இத்தாலியைச் சேர்ந்த இவர், உலகப் புகழ்பெற்ற 'வாலண்டினோ' பேஷன் நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.

    ஹாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அரச குடும்பத்தினர் வரை பலரும் வாலண்டினோவின் வாடிக்கையளர்கள் ஆவர்.

    ஆடைகளில் தனித்துவமான சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவதில் இவர் உலகப் புகழ் பெற்றவர். இது பேஷன் உலகில் 'வாலண்டினோ ரெட்' என்றே அழைக்கப்படுகிறது.

    1960-களில் இருந்து பேஷன் துறையில் கொடிகட்டிப் பறந்த இவர் 2008-ஆம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார்.

    வாலன்டினோவின் வடிவமைப்புகள் இன்றும் பேஷன் உலகில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.  

    • இந்தியாவில் தற்போது 164 விமான நிலையங்கள் உள்ளன.
    • அடுத்த 5 ஆண்டில் 50 விமான நிலையம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    டாவோஸ்:

    சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்று வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரியான ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    விக்சித் பாரத் என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக வரும் 2047-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 350 விமான நிலையங்களைக் கட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால், இந்தியாவில் தற்போது 164 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 50 விமான நிலையங்கள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    2047-ம் ஆண்டுக்குள் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு. கடந்த 11 ஆண்டுகளில், பெரிய நகரங்களில் மட்டுமின்றி நாட்டின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் 88 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

    2047 விக்சித் பாரத இலக்கை அடைய விமானப் போக்குவரத்து மிக முக்கியமான துறையாகும். நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சித் துறை சிவில் விமானப் போக்குவரத்து என்பதை நாங்கள் காண்கிறோம்.

    சிவில் விமானப் போக்குவரத்தில் மாநிலங்களை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். வரும் நாட்களில் மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்குவோம் என தெரிவித்தார்.

    • உலகப் பொருளாதார மன்ற கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றது.
    • இதில் ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    டாவோஸ்:

    சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஆணைய தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் பேசியதாவது:

    இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இன்னும் சில பணிகள் உள்ளன. ஆனால், நாங்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில் உள்ளோம்.

    சிலர் இதை அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் என அழைக்கிறார்கள். இது 200 கோடி மக்களைக் கொண்ட ஒரு சந்தையை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால் பங்குக்குச் சமம்.

    இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத்தைப் பல்வகைப்படுத்தும்.

    உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்தும் என தெரிவித்தார்.

    இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய ஆணைய தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையாளர் உர்சுலா வான்டர் லெயன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அப்போது, இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×