search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிரியாவை சேர்ந்த 7 வயது சிறுமி டிரம்புக்கு உருக்கமான கடிதம்
    X

    சிரியாவை சேர்ந்த 7 வயது சிறுமி டிரம்புக்கு உருக்கமான கடிதம்

    சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்டு டிரம்புக்கு உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறாள்.

    அலெப்போ:

    கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபெத். அலெப்போவை மீட்க ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

    அதனால் கடந்த டிசம்பர் மாதம் இவள் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினாள். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி இருக்கிறாள்.

    இவள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்டு டிரம்புக்கு உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறாள். அதில் கூறியிருப்பதாவது:-

    டியர் டொனால்டு டிரம்ப், எனது பெயர் பானா அலாபெத். சிரியாவின் அலெப்போவை சேர்ந்த 7 வயது சிறுமி. நான் பிறந்ததில் இருந்து சிரியாவில் வாழ்ந்தேன். அங்கு நடைபெறும் போரினால் கடந்த ஆண்டு டிசம்பரில் அலெப்போவில் இருந்து வெளியேறி துருக்கியில் குடும்பத்துடன் தங்கியிருக்கிறேன்.

    தற்போது துருக்கியில் அமைதியாக வாழ்கிறேன். அலெப்போவில் பள்ளியில் படித்தேன். தற்போது குண்டு வீச்சில் அது அழிந்து விட்டது. எனது பல நண்பர்கள் மரணம் அடைந்து விட்டனர். அவர்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனெனில் அவர்களுடன் நான் விளையாடி மகிழ்ந்து இருக்கிறேன்.

    தற்போது என்னால் அலெப்போவில் விளையாட முடியாது. அந்த நகரம் அழிக்கப்பட்டு விட்டது. துருக்கியில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னால் பள்ளிக்கு செல்ல முடியும். இருந்தாலும் நான் சேர வில்லை. சிரியாவில் லட்சக் கணக்கான குழந்தைகள் என்னைப் போன்று மகிழ்ச்சியாக இல்லை. நாட்டின் பல பகுதிகளில் கஷ்டப்படுகின்றனர். நீங்கள் அமெரிக்கா அதிபராக இருக்கிறீர்கள். எனவே நீங்கள் சிரியா மக்களையும், குழந்தைகளையும் காப்பாற்ற முடியும்.

    சிரியா குழந்தைகளுக்காக ஏதாவது செய்யுங்கள். ஏனெனில் அவர்களும் உங்கள் குழந்தைகளை போன்றவர்கள்தான். உங்களைப் போன்று அவர்களும் அமைதியை விரும்புகின்றனர். சிரியா குழந்தைகளுக்கு ஏதாவது செய்வேன் என எனக்கு நீங்கள் உறுதி அளிப்பீர்களா?

    நான் உங்களின் புதிய நண்பராகி இருக்கிறேன். ஆகவே சிரியா குழந்தைகளுக்கு உதவுவீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிறுமி பானா அலாபெத் எழுதிய இக்கடிதத்தை அவளது தாயார் பாத்திமா டுவிட்டரில் பதிவு செய்ய உதவினார். பி.பி.சி. நிறுவனத்துக்கும் அனுப்பி வைத்தார்.

    Next Story
    ×