search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டுக்கு அமெரிக்க தூதர் நியமனம்
    X

    50 ஆண்டுகளுக்கு பிறகு கியூபா நாட்டுக்கு அமெரிக்க தூதர் நியமனம்

    அரை நூற்றாண்டு காலத்துக்கு பிறகு சீரடைந்துவரும் உறவுகளை பலப்படுத்தும் வகையில் கியூபா நாட்டுக்கான அமெரிக்காவின் புதிய தூதரை அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று நியமித்துள்ளார்.
    ஹவானா:

    அரை நூற்றாண்டு காலத்துக்கு பிறகு சீரடைந்துவரும் உறவுகளை பலப்படுத்தும் வகையில் கியூபா நாட்டுக்கான அமெரிக்காவின் புதிய தூதரை அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று நியமித்துள்ளார்.

    அமெரிக்காவும், அதன் அண்டை நாடான கியூபாவும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக பரம எதிரிகளாக இருந்தன. 1959-ம் ஆண்டு அமெரிக்காவின் ஆதரவுடன் அங்கு நடைபெற்றுவந்த ஆட்சியை பிடெல் காஸ்ட்ரோ தலைமையிலான கம்யூனிஸ்ட் புரட்சிப்படை தூக்கியெறிந்த பின்னர் இருநாடுகளுக்கும் இடையில் தீராப்பகை நிலவிவந்தது.

    கியூபாவுடன் நட்பு பாராட்டுவது என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்து அதற்கான முயற்சிகளையும் செய்தார். 54 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் கியூபா நாட்டு தூதரகம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்டது. அதேபோன்று கியூபாவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் கியூபாவுக்கு சென்றார்.

    கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் தம்பியான தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ட்ரோவை, ஒபாமா சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    உடல்நலம் குன்றிய நிலையில் சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத நிலையில் இருக்கும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ - ஒபாமாவை சந்தித்துப் பேச மறுத்து விட்டார்.

    எனினும், கியூபாவுடன் உள்ள தீராப்பகையை தனது பதவிக்காலத்தில் முடிவுக்கு கொண்டுவந்தே தீரவேண்டும் என்று திட்டமிட்டுள்ள அமெரிக்க அதிபர் கியூபாவில் அமெரிக்க தூதரகத்தை திறக்க ஏற்பாடு செய்துள்ளார்.

    இந்த நிலையில், வெளியுறவுத்துறை ராஜதந்திர உறவுகளை மீள்கட்டமைப்பு செய்வதில் தேர்ச்சி பெற்றவரான ஜெப்ரி டிலாரென்ட்டிஸ் என்பவரை அமெரிக்காவின் கியூபாவுக்கான புதிய தூதராக ஒபாமா இன்று நியமித்துள்ளார். கியூபா தலைநகரான ஹவானாவில் திறக்கப்பட்டுள்ள அமெரிக்க தூதரகத்தில் ஜெப்ரி டிலாரென்ட்டிஸ் தற்போது மூன்றாம்நிலை உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நியமனத்துக்கு அமெரிக்க பாராளுமன்றத்தின் ஒப்புதலை பெறவேண்டியுள்ள நிலையில் ஒபாமாவின் இந்த அறிவிப்பை எதிர்த்து குடியரசு கட்சி எம்.பி.க்கள் வாக்களிக்கக்கூடும் என தெரிகிறது.

    Next Story
    ×