search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரீஸ் புற நகரில் போலீஸ் அதிகாரி, மனைவி குத்திக்கொலை: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு
    X

    பாரீஸ் புற நகரில் போலீஸ் அதிகாரி, மனைவி குத்திக்கொலை: ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு

    பாரீஸ் புற நகரில் ஒரு போலீஸ் அதிகாரியும், அவரது மனைவியும் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர செயலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
    பாரீஸ் :

    பாரீஸ் புற நகரில் ஒரு போலீஸ் அதிகாரியும், அவரது மனைவியும் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இந்த கொடூர செயலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீஸ் நகர், தொடர்ந்து ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 13-ந் தேதி மும்பை தாக்குதல் பாணியில் அங்கு விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் அவர்கள் தாக்குதல்களை நடத்தி 130 பேரை கொன்று குவித்தது, உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில், பாரீஸ் புறநகரில் ஒரு போலீஸ் அதிகாரியையும், அவரது மனைவியையும் அந்த இயக்கத்தினர் குத்திக்கொன்று விட்டனர்.

    பாரீஸ் புறநகரான மேக்னன் வில்லேயில் லெஸ் முரியுக்ஸ் நகர போலீஸ் அதிகாரி, தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். 42 வயதான அவர் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) மாலையில் தனது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த போது, கையில் கூர்மையான கத்தியுடன் மர்மநபர் ஒருவர் அங்கே வந்தார்.

    அவர் அந்த போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் நுழைய முற்பட்டார். போலீஸ் அதிகாரி அவரை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் கையில் வைத்திருந்த கத்தியால் அவரது வயிற்றில் சரமாரியாக குத்தினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணம் ஆனார்.

    அதன்பின்னர் அந்த நபர், போலீஸ் அதிகாரியின் வீட்டுக்குள் நுழைந்து அங்கிருந்த அவரது மனைவியையும், அவர்களது 3 வயது ஆண் குழந்தையையும் பணய கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் அதிரடி போலீஸ் படையினர் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர். அவர்கள் அந்த நபரை தங்களிடம் சரண் அடையுமாறு எச்சரிக்கை செய்தனர்.

    ஆனால் போலீசார் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் அந்த நபர் அவர்களுக்கு செவி சாய்க்கவில்லை. அதனை தொடர்ந்து போலீசார் அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து அவரை சுட்டுக்கொன்றனர். அப்போது அந்த வீட்டில் போலீஸ் அதிகாரியின் மனைவி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ஆவார். அதிரடி போலீஸ் படையினர் அங்கு நுழைவதற்கு முன்னதாக, அந்த நபர் போலீஸ் அதிகாரியின் மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து வீட்டில் இருந்த 3 வயது ஆண் குழந்தையை போலீசார் பத்திரமாக மீட்டனர்.

    போலீஸ் அதிகாரியும், அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு, ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்துடன் தொடர்புடைய ‘அமாக் செய்தி நிறுவனம்’ வெளியிட்ட செய்தியில், “லெஸ் முரியுக்ஸ் நகர போலீஸ் துணை அதிகாரியையும், அவரது மனைவியையும் ஐ.எஸ். போராளி கொன்று விட்டார்” என கூறப்பட்டுள்ளது.

    இந்த படுகொலைகளை செய்த ஐ.எஸ். போராளி லாரோசி அப்பல்லா (வயது 25), மாண்டிஸ் லா ஜோலி நகரில் வசித்து வந்தவர்; ஏற்கனவே ஒரு தாக்குதல் வழக்கில் 3 ஆண்டுகள் தண்டிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

    பிரான்சில் ‘யூரோ-2016’ கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில், ஐ.எஸ். இயக்கத்தினர் நடத்தியுள்ள இந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே உயர் மட்டக்குழு கூட்டம் கூட்டி நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தினார். 
    Next Story
    ×