என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 'அஜித்குமார் ரேஸிங்' என்ற பந்தய நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார்.
    • நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, ஒரு தீவிர கார்பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு கார் ரேசில் கவனம் செலுத்தி வருகிறார் .

    கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிரம் காட்டி வரும் அஜித்குமார், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த பந்தய நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். இந்தக் கார் பந்தய நிறுவனம் துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற கார் பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளது.

    இந்நிலையில், நடிகர் அஜித்குமார் ஸ்பெயினில் நடைபெற உள்ள கார் பந்தயங்களில் கலந்துகொள்ள உள்ளார். அவ்வகையில் இன்றும் நாளையும் க்ரெவென்டிக் 24H பந்தயத்தில் அஜித்குமார் கலந்து கொள்ளவுள்ளார்.

    இந்நிலையில், இந்த கார் பந்தயத்திற்கு அஜித்குமார் தயாரான புகைப்படங்களை அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    .

    • கடந்த 4 ஆண்டுகளில் மொத்தமாக 52 லட்சத்திற்கும் அதிகமானோர் EPFOல் பதிவு செய்துள்ளனர்.
    • இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும்.

    தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு சராசரியாக 12.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக EPFO வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முன்னோடி கொள்கைகள் மற்றும் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு சான்றாக மத்திய அரசின் EPFO தரவுகள் வெளியாகியுள்ளது.

    கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாடு சராசரியாக 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

    2021–22 முதல் 2024–25 வரை, மாநிலம் 52 லட்சத்திற்கும் அதிகமான நிகர ஊதிய உறுப்பினர்கள் EPFOல் பதிவு செய்துள்ளனர். இது நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் சுமார் 10% ஆகும்.

    இதற்கு முந்தைய ஆட்சியில் 2018-19 ஆம் ஆண்டில் வெறும் 5 லட்சம் EPFO பதிவுகள் மட்டுமே நடந்தன. அப்போது தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத்தை விட பின்தங்கியிருந்தது -

    2022-23 ஆம் ஆண்டில் 14 லட்சத்திற்கும் அதிகமான EPFO பதிவுகள் மட்டுமே நடந்தன. கடந்த 4 ஆண்டுகளில் நாங்கள் தொடர்ந்து ஆண்டுக்கு 12.5 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம்.

    2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்பது உருவாக்குவதாக வாக்குறுதி அளித்தார். அவர் கூறியதை விட 20% அதிகமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார். 

    • ரசியல் தலைவர்களையும், பல்கலைகழக மாணவர்களையும், தொழில்த்துறை தலைவர்களையும் சந்திக்கிறார்.
    • அமெரிக்காவின் வரிவிதிப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்களிடம் அவர் விவாதிப்பார்

    மக்களவை எதிரிகட்சித் தலைவர் ராகுல் காந்தி தென் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    இதுதொடர்பாக தகவல் வெளியிட்ட காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர் பவன் கேரா, ராகுல் காந்தி தென்னமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

    4 நாடுகளை உள்ளடக்கிய இந்த பயணத்தில் அரசியல் தலைவர்களையும், பல்கலைகழக மாணவர்களையும், தொழில்த்துறை தலைவர்களையும் சந்தித்து உரையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

    ராகுல் பயணிக்கும் 4 நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. எனினும் அவரின் அவற்றுள் பிரேசில், கொலம்பியா நாடுகள் இடம்பெறும் என்று தெரிகிறது.

    அமெரிக்காவின் வரிவிதிப்புகள் குறித்து தொழில்துறை தலைவர்களிடம் அவர் விவாதிப்பார் என்றும் மாணவர்கள் மத்தியில் இந்தியாவின் வளர்ச்சி, பிரச்சனைகள் குறித்து பேசுவார் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசி இருந்தார்.
    • கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார்.

    நடிகர் தனுஷ் நடித்து இயக்கி உள்ள 'இட்லி கடை' திரைப்படம் வருகிற 1-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் தனுசுடன், நித்யாமேனன், ராஜ்கிரண், அருண் விஜயகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் தனது வாழ்நாளில் சந்தித்த பிரச்சனைகளை வைத்து எடுத்ததாக ஆடியோ வெளியீட்டு விழாவில் தனுஷ் தெரிவித்திருந்தார். மேலும் அப்போது ஒவ்வொருவரும் குலதெய்வ வழிபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பேசி இருந்தார்.

    விரைவில் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இன்று காலை பிரத்தியேகமான கேரவன் மூலம் நடிகர் தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா, மகன்கள் லிங்கா, யாத்ரா மற்றும் உறவினர்களுடன் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரத்தில் தனது குலதெய்வ கோவிலான கருப்பசாமியை வழிபட வந்தார்.



    கோவில் வளாகத்தில் கண்களை மூடி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு தனது பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்றார். அதிகாலை நேரத்தில் பாதுகாவலர்களுடன் கேரவனில் வந்து வழிபாடு செய்த தனுஷ் பின்னர் அங்கிருந்து புறப்பட்டார். அவரது வருகை குறித்து அறிந்ததும் உள்ளூர் மக்கள் மற்றும் ரசிகர்கள் ஏராளமானோர் குவியத்தொடங்கினர். அவர்களுக்கு கையசைத்தபடியே தனுஷ் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். 

    • வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம்.
    • போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம்.

    சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தியா ஒருபோதும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை மறக்க முடியாது.

    * வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம்.

    * வேளாண் துறையில் நவீன கண்டுபிடிப்புகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் நிதி அறிவித்து ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளேன்.

    * மண்ணுயிர் காத்து பல்லுயிர் காக்கும் எங்களின் முயற்சிக்கு நீங்கள் துணை நிற்பீர்கள் என நம்புகிறேன்.

    * மத்திய அரசு 2070-க்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில் 2050-க்குள் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    * வேளாண் பல்கலை. மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்குவதாக அறிவித்துள்ளோம்.

    * போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம்.

    * வேளாண்மையையும் உழவர்களையும் எந்நாளும் பாதுகாப்போம் என உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.
    • வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன.

    பெட்ரோல், டீசல் கார்கள் பழைய டிரெண்ட் ஆகி விட்டன. ஆட்டோமொபைல் துறையில் இப்போதைக்கு, எலெக்ட்ரிக் கார்களும், சிஎன்ஜி கார்களும் தான் அதிகமாக விற்பனையாகின்றன. இந்நிலையில், ஜிஎஸ்டி விலை குறைப்பு நடவடிக்கைகளில், கார் வாங்க திட்டமிடுபவர்கள், பெட்ரோல்-டீசல் மாடல்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி கார்களை தேர்வு செய்யலாம். ஏனெனில் அதில் நிறைய நன்மைகளும் இருக்கின்றன.

    கார்களில் எலெக்ட்ரிக் சிறந்ததா, இல்லை சிஎன்ஜி சிறந்ததா? என்பதை பற்றி தொடர்ந்து பார்ப்போம்...

    சிஎன்ஜி

    'கம்பிரஸ்ட் நேச்சுரல் கேஸ்' என்பதன் சுருக்கம்தான் சிஎன்ஜி இயல்பான கார்களில், கூடுதலாக கியாஸ் சிலிண்டர்களை பொருத்தி, சிஎன்ஜி கியாஸ் நிரப்பி காரை இயக்குவார்கள்.

    எலெக்ட்ரிக்

    மின்சாரத்தில் இயங்கும் கார் இது. வழக்கமான கார்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் கார்கள் பிரத்யேகமாக தயாரிக்கப்படும்.

    இயக்கத்திறன்

    எலெக்ட்ரிக்-சிஎன்ஜி-யை விட பெட்ரோல், டீசல் என்ஜின் கார்களை விடவும் எலெக்ட்ரிக் கார்களின் இயக்கத்திறன் அசாத்தியமானது. பெட்ரோல் கார்களை விடவும் மின்னல் வேக இயக்கத்திறனை எலெக்ட்ரிக் கார்கள் பெற்றிருக்கின்றன.

    சிஎன்ஜி - எலெக்ட்ரிக் கார்களை விட, கொஞ்சம் குறைவான இயக்கத்திறனே சிஎன்ஜி கார்களுக்கு உண்டு. இருப்பினும், நெடுஞ்சாலை, மலைப்பாதைகளில் சூப்பராக இயங்கும்.

    எரிபொருள்

    எலெக்ட்ரிக்:

    எலெக்ட்ரிக் கார்களுக்கு தேவையான மின்சக்தியை வழங்கும் இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள் தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர பயன்பாட்டில் ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களில் இ-சார்ஜிங் வசதி இருப்பதால், தைரியமாக வாங்கலாம். ஆனால் நெடுஞ்சாலை பயணங்களை மட்டும், கவனமாக திட்டுமிட்டு பயணிக்க வேண்டும்.

    (சார்ஜ் நிரப்ப 30 நிமிடம் தொடங்கி, சில மணி நேரங்கள் ஆகலாம்)

    சிஎன்ஜி:

    சிஎன்ஜி நிரப்பும் ஸ்டேஷன்கள் சென்னையில் நிறைய காணப்படுகிறது. சென்னையை தாண்டினால் நெடுஞ்சாலைகளிலும் நிறைந்திருக்கிறது. அப்படியே, சிஎன்ஜி கியாஸ் தீர்ந்து விட்டாலும் கவலையில்லை, பெட்ரோல் வசதியை தேர்ந்தெடுத்து, பெட்ரோலில் பயணிக்கலாம். இருவிதமான வாய்ப்புகளை, சிஎன்ஜி கார் வழங்குகிறது.

    (பெட்ரோல் நிரப்புவதுபோல சில நிமிடங்களில், சுலபமாக கியாஸ் நிரப்பலாம்)

    சிக்கனம்

    வருடாந்திர கணக்கில், சிஎன்ஜி கார்களை விட, எலெக்ட்ரிக் கார்களே சிக்கனம் நிறைந்தவையாக தோன்றுகின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் சிஎன்ஜி-யை விட குறைவான செலவிலேயே இயங்குகிறது. எலெக்ட்ரிக் காரின் முழு சார்ஜிற்கும் சுமார் 200 ரூபாய் செலவாகலாம். ஆனால் அதன் மூலம் 100 கிலோமீட்டர்கள் பயணம் செய்யலாம். அதுவே, சிஎன்ஜி-யில் 200 ரூபாயில் 60 கிலோமீட்டர்கள் தூரம் மட்டுமே பயணிக்க முடியும்.

    விலை

    கார்களின் விலை நிலவரப்படி, எலெக்ட்ரிக் கார்களை விட சிஎன்ஜி கார்கள் மிக மிக குறைவு. பட்ஜெட் விலையில் கூட சிஎன்ஜி கார்களை வாங்கலாம். உதாரணத்திற்கு, ரூ.10 லட்சத்திலேயே சிஎன்ஜி சாதனத்துடன் அசத்தலான செடான் காரை வாங்கிவிட முடியும். அதுவே எலெக்ட்ரிக் ரகமாக இருந்தால், செடான் மாடலை வாங்க குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் தேவைப்படும். அதனால் விலை நிலவரப்படி, பட்ஜெட் பிரியர்களின் தேர்வாக இருப்பது, சிஎன்ஜி தான்.

    • மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
    • 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * வரலாற்றில் ஒரு சிலர் தான் பலகோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வகையில் வாழ்ந்துள்ளனர், எம்.எஸ்.சுவாமிநாதன் அத்தகையவர்.

    * மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

    * நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * இந்திய பசுமை புரட்சியின் தந்தை என உலகமே அவரை அழைத்தாலும் நமக்கு அவர் உணவுத்துறையை பாதுகாத்தவர்.

    * தான் பெற்ற அறிவை மக்களின் பசி போக்க பயன்படுத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.

    * எம்.எஸ்.சுவாமிநாதனின் கடமைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வேளாண் மாணவர்கள், விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
    • இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர்.

    நடிகர் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமான இவரது நடிப்பில் தாரை தப்பட்டை, சர்கார், விக்ரம் வேதா, சத்யா, சண்டக்கோழி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றவை.

    தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். இவர் தற்போது விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே, தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.

    இதனிடையே, மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலஸ் சச்தேவ் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதன்பின் சினிமாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில், நடிகை வரலட்சுமி, தன் சகோதரி பூஜாவுடன் இணைந்து 'தோசா டைரீஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார்.

    இந்நிறுவனத்தின் முதற்படமான 'சரஸ்வதி' மூலம் இயக்குநராகவும் வரலட்சுமி அறிமுகமாகிறார். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா உள்பட பலர் நடிக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் படம் குறித்தான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

    தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக பணியாற்ற வரலட்சுமிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    • "உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்." - செயிண்ட் அகஸ்டின்
    • "பயணம் உங்கள் வாழ்க்கையில் சக்தியையும் அன்பையும் மீண்டும் கொண்டுவருகிறது." - ரூமி

    தினம் பின் தூங்கி முன் எழுந்து வாரம் முழுவதும் அலுவலகத்துக்கு வீட்டுக்கும் இடையில் பலரின் பயணம் முடிந்துவிடுகிறது.

    வார விடுமுறை, பண்டிகை விடுமுறை, தொடர் விடுமுறை எப்போதும் வரும் என காத்திருப்பவர்களே அதிகம்.

    இந்த சூழலில் வருடத்திற்கு ஒரு முறை வரும் உலக சுற்றுலா தினம், அதாவது செப்டம்பர் 27 முக்கியத்துவம் வாய்ந்ததாகி உள்ளது.

    ஏனெனில் நாம் விரும்பியபடி பயணம் செய்ய வாய்ப்பு கிடைகப்பெற்ற சுதந்திரமான மனிதர்கள் என்று நமக்கு நினைவூட்டிக்கொள்ள இப்படி ஒரு தினம் தேவையாக உள்ளது.

    கூண்டுக்குள் வாழ்ந்து பழகிய கிளிக்கு சுதந்திரம் என்பது தண்டனையாகவும் இருக்கலாம். ஆனால் மனித இனத்திற்கு பயணம் என்பது இன்றியமையாதது.

    அதிலும் சுற்றுலா என்பது வெறும் பயணம் மட்டுமல்ல. அது புதிய கலாச்சாரங்களை கண்டறிவதும் புதிய மக்களைச் சந்திப்பதும் என்றென்றும் நிலைத்திருக்கும் நினைவுகளை உருவாக்குவதும் ஆகும். அது ஆன்மீக தேடலாகவும் உள்நோக்கிய பயணமாகவும் இருக்கலாம்.

    இருப்பது ஒரு வாழ்க்கை, இதில் நாம் வாழும் இந்த அழகான உலகத்தின், இயற்கையின் பிரமிப்புகளை கண்ணுற்று காணும் வாய்ப்பு ஒவ்வொரு மனிதனுக்குமான உரிமை.

    சுற்றுலாவின் மகத்துவத்தை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உருவான இந்த தினத்தில் மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்தும் தாக்கமும் அதன் இன்றியமையாமையும் உற்று நோக்கத்தக்கது.

    இந்த வருட உலக சுற்றுலா தினத்திற்கான கருப்பொருள் 'சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம்' ஆகும்.

    "உலகம் ஒரு புத்தகம், பயணம் செய்யாதவர்கள் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே படிக்கிறார்கள்." - செயிண்ட் அகஸ்டின்

    "பயணம் உங்கள் வாழ்க்கையில் சக்தியையும் அன்பையும் மீண்டும் கொண்டுவருகிறது." - ரூமி 

    "ஆயிரம் மைல்கள் பயணம் ஒரு அடியுடன் தொடங்குகிறது." - லாவோ சூ

    • விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.
    • சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13-ந்தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசார சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.

    முதல் நாளில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால் திருச்சியில் மக்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதால் விஜய் பிரசாரம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அன்று திருச்சி மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் பிரசாரம் செய்தார். பெரம்பலூர் பிரசாரத்தை ரத்து செய்த அவர் மற்றொரு நாள் வருவதாக தெரிவித்தார்.

    அதன்படி பெரம்பலூரில் நவம்பர் 1-ந்தேதி விஜய் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொள்ளும் விஜய் கடந்த 20-ந்தேதி நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் 3-வது கட்டமாக விஜய் இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். இதற்காக இன்று காலையில் அவர் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார். காலை 9.30 மணியளவில் அவர் திருச்சியை அடைந்தார்.

    இதனை தொடர்ந்து விஜய், பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக முசிறி, தொட்டியம் வழியாக நாமக்கலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அவர் வரும் வழி முழுவதும் சாலையின் இருபுறமும் ஏராளமான தொண்டர்கள் திரண்டு நின்று விஜய்யை வரவேற்கின்றனர். அவர்களை பார்த்தப்படி விஜய் கையசைத்தப்படியும், வணக்கம் தெரிவித்தப்படியும் வந்தார். 



    • சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார்.
    • ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார்.

    ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் குவித்தது. அபிஷேக் சர்மா 61 ரன்னும், திலக் வர்மா 49 ரன்னும், சஞ்சு சாம்சன் 39 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 202 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, சூப்பர் ஒவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 5 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 3 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் சிறப்பாக ஆடிய பதும் நிசங்கா சதம் அடித்து அசத்தினார். போட்டியின் 5 ஆவது ஓவரை ஹர்ஷித் ராணா வீசினார். அந்த ஓவரின் 4 ஆவது பந்தை பதும் நிசங்கா, ஹர்ஷித் ராணாவை நோக்கி அடிக்க அந்த பந்தை பிடித்து பதும் நிசங்காவை நோக்கி ராணா வீசி வம்பிழுத்தார்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹர்ஷித் ராணா வீசிய அடுத்த பந்தை பதும் நிசங்கா சிக்சர் விளாசினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் கடற்காற்று வீசும். எனவே தென் கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல அரசு தடை விதித்தது.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்திலும் இன்று மீனவர்கள் கடலுக்குள் செல்ல அனுமதி டோக்கன் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தது. ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, தொண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    ராமேசுவரம், பாம்பனில் வழக்கத்தை விட கடற்காற்று அதிகமாக இருந்ததால் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

    இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் நாட்டு படகுகள் பாதுகாப்பாக கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. வழக்கமாக வார இறுதி நாட்களில் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரத்தில் கடைக்கோடியில் உள்ள தனுஷ்கோடி பகுதியில் நேற்று முதல் கடல் கொந்தளிப்புடன் உள்ளது. பனைமர உயரத்திற்கு அலைகள் எழுப்புகின்றன. இந்த பகுதியில் வீசும் சூறாவளி காற்று காரணமாக கடற்கரை மணல்கள் சாலைகளை மூடியுள்ளன.

    இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    ×