என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கத்தியால் குத்திவிட்டு இருவரும் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.
    • இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட பதறவைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

    நேற்று பிப்ரவரி பிப்ரவரி 16 (ஞாயிற்றுக்கிழமை) ஐதராபாத்தின் மேட்சல் (medchal) பகுதியில் உள்ள பரபரப்பான NH 44 தேசிய நெடுஞ்சாலையில் வைத்து இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. அவ்வழியாக பல வானங்கள் அவ்வேளையில் சென்றும் யாரும் கொலையை தடுக்க முன்வரவில்லை. கத்தியால் குத்திவிட்டு இருவரும் கத்தியுடன் சாவகாசமாக சாலையை கடந்து செல்வதை மக்கள் வேடிக்கை பார்த்து நின்றனர்.

    போலீசார் கூற்றுப்படி உயிரிழந்தவர் 25 வயதான உமேஷ். கத்தியால் குத்தியவர்கள் உமேஷின் சொந்த தம்பி ராகேஷ், மற்றும் உறவினர் லக்ஷ்மணன் என்று தெரியவந்துள்ளது. உமேஷ் குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டை பிடிப்பார் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து தம்பி ராகேஷ் அண்ணனிடம் கேட்டுள்ளார். இதனால் சம்பவம் நடந்த நேற்று, உமேஷ் குடித்துவிட்டு தம்பியுடன் வாக்குவாதம் செய்துள்ளார். கட்டை ஒன்றை எடுத்து தம்பியை உமேஷ் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராகேஷ், உறவினர் லக்ஷ்மணன் உடன் சேர்ந்து அண்ணனை தாக்க முயன்றார்.

    அச்சமடைந்த உமேஷ் அவர்களிடம் இருந்து தப்பி வீட்டை விட்டு ஓடியுள்ளார். உமேஷை துரத்திச் சென்ற இருவரும் வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள சாலையில் வைத்து அவரை கத்தியால் குத்தி கொன்றுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய தம்பியையும் உறவினரையும் தேடி வருகின்றனர்.

    • அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • அமைச்சர் துரைமுருகன் உடல்நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னை:

    தமிழக அமைச்சர்களில் வயதிலும், அரசியல் அனுபவத்திலும் மூத்தவரான அமைச்சர் துரைமுருகனுக்கு நேற்று இரவு வீட்டில் இருந்த போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    காய்ச்சல் மற்றும் சளித்தொல்லை காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    அமைச்சர் துரைமுருகனை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

    • தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்காக முயற்சிகளையும் ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
    • தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம்.

    சென்னை:

    `சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2,158 கோடியை மத்திய அரசு விடுவிக்காமல் தாமதம் செய்கிறது.

    இதுதொடர்பாக வாரணாசியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், "தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கையை இதுவரை ஏற்காமல் உள்ளனர். மும்மொழி கொள்கையை ஏற்காத வரை தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்க இயலாது" என்று கூறினார்.

    மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்தார். மொழி கொள்கை விசயத்தில் மத்திய மந்திரி திமிராக பேசினால் தமிழர்கள் தனி குணத்தை காட்டுவார்கள் என்றும் எச்சரித்தார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் மும்மொழி கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு தமிழக திட்டங்களுக்கு நிதி தராமல் பாரபட்சம் காட்டுவதாக அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழக பள்ளி கல்வி வளர்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய கல்வி மந்திரி பேசி இருப்பது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    'சமக்ரசிக்ஷா' திட்டத்தின் கீழ் தமிழக கல்வித் துறைக்கு நிதி பெற சட்ட நடவடிக் கைகளில் ஈடுபடலாமா? அல்லது அரசியல் ரீதியான போராட்டத்தை மேற்கொள்ளலாமா? என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

    அதன் அடிப்படையில் மத்திய அரசை கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் உரிமைகளை சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் ஒன்றிய மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என ஒன்றிய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார்.

    நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கான நிதியை தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களைப் புறக்கணிக்கிறார்.

    பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட-தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.

    தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநீதி, வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது.

    அது, அரசியல் ரீதியாகப் பா.ஜ.க.,வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.

    வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்! எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்!

    அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நாளை 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன் என உரக்க குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என் பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம்! உரக்கக் குரல் எழுப்புவோம்!! உரிமைகளை மீட்போம்!!

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.

    • வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
    • மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க மின்சார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கோடைகால மின்தேவையை சமாளிக்க வெளி சந்தைகளில் மின்சாரம் வாங்க மின்வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    கோடை கால மின் தேவையை சமாளிக்க 8,525 மெகாவாட் மின்சாரத்தை வெளி சந்தையில் வாங்க மின்சார அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரையிலான மின்சார தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு மின்சாரத்துறைக்கு கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக மின் தேவையை சமாளிக்கும் வகையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • 1703 ஏக்கர் நிலப்பரப்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம்.

    தமிழ்நாடு அறிவுநகரம் திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் அளவைக் குறைத்தால் மட்டும் போதாது திட்டத்தை மொத்தமாக வேறு நகருக்கு மாற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னையை அடுத்த திருவள்ளூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் 1703 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவு நகரம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு நிலங்களை கையகப்படுத்த கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, இப்போது அறிவுநகரம் அமைக்கப்படும் நிலப்பரப்பு 870 ஏக்கராக குறைக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது திருவள்ளூர் மாவட்ட உழவர்களுக்கு சற்று நிம்மதியளிக்கும் விஷயம் தான் என்றாலும் முழுமையான வெற்றி அல்ல.

    மொத்தம் 1703 ஏக்கர் நிலப்பரப்பில் அறிவுசார் நகரம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதற்காக ஊத்துகோட்டை வட்டத்திலுள்ள கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல் மாளிகைப்பட்டு, செங்கத்தாக்குளம், எர்ணாங்குப்பம், திருவள்ளூர் வட்டத்திலுள்ள வெங்கல் ஆகிய கிராமங்களில் நில எடுப்பு செய்யப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது. அப்பகுதியில் 556 ஏக்கர் அரசு புறப்போக்கு நிலங்கள் இருக்கும் நிலையில், அதையும், உழவர்களுக்கு சொந்தமான 1146 ஏக்கர் நன்செய் மற்றும் புன்செய் நிலங்களையும் கையகப்படுத்த அரசு தீர்மானித்தது.

    தமிழக அரசின் முடிவுக்கு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதமே நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். இந்தத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அந்தப் பகுதியில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அறிவு நகரம் அமைப்பதற்கான நிலப்பரப்பை 1703 ஏக்கரில் இருந்து 1424 ஏக்கராக தமிழக அரசு குறைத்தது. இப்போது அப்பரப்பை 870 ஏக்கராகக் குறைத்திருக்கிறது. இது மண்ணைக் காப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    அறிவுநகரம் 870 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு சொந்தமான 556 புறம்போக்கு நிலங்களுடன் உழவர்களுக்கு சொந்தமான 314 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படுமா? அல்லது மொத்தமாகவே உழவர்களின் நிலங்கள் மட்டும் தான் கையகப்படுத்தப்படுமா? என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. எப்படியாக இருந்தாலும் உழவர்களின் விளைநிலங்களில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணைக் கூட எடுக்க பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. நிலம் எடுக்கும் முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டால் அதைக் கண்டித்து பா.ம.க. பெரும் போராட்டத்தை நடத்தும்.

    தமிழ்நாடு அறிவு நகரம் அமைப்பதையும், அங்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் வளாகங்களை ஏற்படுத்துவதையும் பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் ஆதரிக்கிறது. அதற்காக ஆரணி ஆற்றங்கரையில் மூன்று போகங்களும் சிறப்பாக விளையக்கூடிய, ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்டித்தரக்கூடிய நிலங்களை ஏக்கருக்கு ரூ.15 லட்சம் என்ற அடிமாட்டு விலைக்கு அரசு பிடுங்க நினைப்பதை பா.ம.க அனுமதிக்காது. எந்த ஒரு திட்டத்திற்காகவும் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும்.

    தமிழக அரசு விரும்பினால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 556 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அறிவு நகரத்தை அமைக்கலாம். அது சாத்தியமில்லை என்றால், திருவள்ளூர் மாவட்டத்தில் அறிவுநகரம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். அதற்கு மாற்றாக சேலம் நகரத்திற்குட்பட்ட பகுதிகளில் சேலம் இரும்பாலைக்கு சொந்தமான 4000 ஏக்கர் நிலத்திலோ, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள், கோவை உள்ளிட்ட கொங்குபகுதிகளில் அரசுக்கு சொந்தமாக உள்ள நிலங்களிலோ இந்தத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார்.

    ஒரு நாயை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் 'கூரன்'. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகரன் ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி இயக்கியுள்ளார். மார்டின் தன்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசை அமைத்துள்ளார். பீ. லெனின் மேற்பார்வையில் மாருதி எடிட்டிங் செய்துள்ளார்.

    கனா புரொடக்சன்ஸ் சார்பில் விபி கம்பைன்ஸ் உடன் இணைந்து இயக்குநர் விக்கி தயாரித்துள்ளார்.

    'கூரன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில மாதங்களுக்கு முன் நடைப்பெற்றது. திரைப்படம் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரயில்வே போலீஸ் ரீனா பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.
    • பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா செல்ல புறப்பட்ட மக்கள் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) இரவு டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்டநெரிசலில் சிக்கினர்.

    இதில் 3 குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து டெல்லி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கூட்டநெரிசலுக்கு பின்னர், மகா கும்பமேளா செல்லும் வழித்தடத்தில் கூடுதலாக 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது.

    இந்நிலையில் டெல்லி ரெயில் நிலையத்தில் தனது 1 வயது குழந்தையை சுமந்தவாறு ரீனா என்ற ரெயில்வே போலீஸ் (RPF) கான்டபிள் தனது கடமையை செய்யும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

    18 பேர் உயிரிழந்த ரெயில் நிலையத்தின் 16 ஆவது நடைமேடையில் ரீனா தனது குழந்தையை சுமந்தவாறு பயணிகளை ஒழுங்குபடுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.

    பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது அர்ப்பணிப்பைக் கண்டு, பல பயணிகள் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணக்கம் செலுத்தி செல்கின்றனர்.  

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.
    • செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா?

    விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சி.வி.சண்முகம் பேசியதாவது:

    * பிறந்த பெண் குழந்தை முதல் மூதாட்டி வரை எல்லோரையுமே அம்மா என்று கூப்பிடுவோம்.

    * இன்னொருவரை அப்பா என்று அழைத்தால் அதன் அர்த்தமே வேறு.

    * சூடு, சுரணை, மானம் உள்ள யாரும் பிறரை அப்பா என்று அழைக்க மாட்டார்கள்.

    * சொன்னால் என் மீது வழக்கு போடுவார்கள். போட்டுக்கொள்ளுங்கள்.

    * செல்போனில் படம் பார்ப்பதும், செல்பி எடுப்பதும் தான் முதலமைச்சரின் வேலையா? என்று அவர் பேசினார்.

    • இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
    • பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.

    கராச்சி:

    8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.

    இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்றும் 2 நாட்களே உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற 7 அணிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஐசிசி தொடர் மற்றும் இரு தரப்பு தொடர் என்றால் அந்த மைதானங்களில் அணிகள் பங்கேற்கும் நாட்டின் கொடி பறக்கவிடுவது வழக்கமான ஒன்று. ஆனால் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணியின் கொடி இடம் பெறாதது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

    • மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.
    • இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.

    தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆளும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் வரை மும்மொழி கொள்கையை எதிர்ப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    அந்த வரிசையில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்ய வலியுறுத்தி உள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, 23-01-1968 அன்று "மும்மொழிக் கொள்கை நீக்கப்பட வேண்டும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பள்ளிகளிலும் உள்ள பாடத்திட்டத்திலிருந்து இந்தி மொழி முழுமையாக அகற்றப்பட வேண்டும்" என்ற தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இந்தி மொழி பாடத்திட்டத்திலிருந்து அகற்றப்பட்டது.

    பேரறிஞர் அண்ணா அவர்களின் இருமொழிக் கொள்கையை மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களும் கடைபிடித்தார்கள்.

    தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டுமென்றும், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவிக்க வேண்டுமென்றும் குரல் கொடுத்தவர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்.

    இருமொழிக் கொள்கை என்பது தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று என்ற சூழ்நிலையில், புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தால் தான் 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (SSA) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்க முடியும் என்று மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. இது மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டில் திணிப்பதற்குச் சமம்.

    எனவே, மும்மொழிக் கொள்கையை பின்பற்றினால்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசிலனை செய்து தமிழ்நாட்டிற்கான நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.
    • அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் நீலாங்கரை வீட்டிற்கு ஈரோட்டிலிருந்து போலீசார் வந்ததாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பெரியாரை பற்றி நான் பேசுகிறேன். பெரியாரை இகழ்ந்து பேசி விட்டதாக கூறுகிறார்கள். பெரியார் பேசியதை எடுத்து பேசுகிறேன்.

    * பெரியாரை கொண்டாட நினைப்பவர்கள் புகழ்ந்து பேச வேண்டியது தானே.

    * பெரியார் இதெல்லாம் பேசி இருக்கிறார் என்று நான் சொன்னால் இதெல்லாம் பேசவில்லை என்று மறுக்க வேண்டும். இல்லையென்றால் ஏன் பேசினார் என்று விளக்கம் அளிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவதூறாக பேசக்கூடாது. படம் பொய். பார்த்தது பொய் என்று பேசக்கூடாது.

    * தன்னால் அவர்களுக்கு நெருக்கடி இருப்பதால் தான் இவ்வாறு செய்கிறார்கள்.

    * அனைத்து இடங்களுக்கும் என்னை அலைய வைப்பதற்காக சம்மன் வழங்கப்படுகிறது.

    * எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க தயார்.

    * தகைசால் தமிழர் விருதுக்கு மாற்றாக தகைசால் திராவிடர் விருது கொடுக்க வேண்டியதுதானே என்று அவர் கூறினார்.

    • இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 27-ந் தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து, காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.

    இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் மீனவர் செந்தமிழ் காலில் பயங்கர அடிபட்டு காலை அகற்றும் நிலைக்கும், மணிகண்டன் கண் பறிபோகும் நிலைக்கும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    4-வது நாள் போரட்டமாக, கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7-வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரெயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரெயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் காரைக்கால் மாவட்ட போலீசார் மீனவர்களிடம் சமாதானம் பேசி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தண்டவாளத்தை விட்டு அகற்றி ரெயில் செல்ல அனுமதித்தனர்.

    இதனால் ரெயில் 30 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் ரெயில் நிலையத்தை ஒட்டிய தோமாஸ் அருள் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

     

    ×