என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "srilankan navy"

    • முகாமை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.
    • இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    மண்டபம்:

    இலங்கையில் 1983-ம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரம் காரணமாக அங்கிருந்த தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வர தொடங்கினர். அவர்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

    அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் 450 குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் தங்கியுள்ளனர். அவர்களின் குடும்ப தேவைக்காகவும், வாழ்வாதாரம் காக்கவும் முகாமை சுற்றிலும் உள்ள பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வருகிறார்கள்.

    சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்திற்கு இலங்கை தமிழர்கள் ஏராளமானோர் அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர். இதுவரை தமிழகத்திற்கு அவ்வாறு வந்த சுமார் 290 பேர் கைது செய்யப்படாமல், மனிதாபிமான அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்தநிலையில் இலங்கையில் பொருளாதார தடை காலத்திற்கு பிறகு கடந்த 10.4.2022 அன்று தமிழகம் வந்து மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கி இருந்த இலங்கை திரிகோணமலையை சேர்ந்த நிரோஷன் என்ற தீபன் (வயது 25), சுதா என்ற கீதா (38), விதுஸ்திகா (13), அஜய் (12), அபிநயா (2), ஞான ஜோதி (46), ஜித்து (12), மகேந்திரன் (50), பூபேந்திரன் (54)ஆகியோர் இலங்கை செல்ல திட்டமிட்டனர்.

    இதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து சொந்தமாக படகு ஒன்றை விலைக்கு வாங்கி நேற்று பிற்பகல் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கை நோக்கி சென்றனர். அப்போது இலங்கை கடற்படை இரவு 9 மணியளவில் நெடுந்தீவு அருகே அவர்களை கைது செய்தது. அதைத்தொடர்ந்து இலங்கை கடற்படை முகாமில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    • சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர்.

    புதுச்சேரி:

    ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரு வாரமாக தொழிலுக்குச் செல்லாமல் இருந்த புதுச்சேரி மாநில காரைக்கால் மாவட்ட மீனவர்கள், டிசம்பர் 1-ந்தேதி மீண்டும் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர்.

    அதுபோல் காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த பால்மணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், பால்மணியின் சகோதரர் கலைமணி மற்றும் அதே கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், சுதின், பொன்னையன், ராமன், பூவரசன், மாணிக்கவேலு, ஆகாஷ், சக்திவேல், வினித் குமார், கமலேஷ், சிவக்குமார், ஜெயமணி, மோகன்குமார், ஆறுமுகம் (காரைக்கால்மேடு), நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்மணி, ரத்தினவேலு, மயிலாடுதுறை செல்வநாதன் ஆகிய 18 மீனவர்கள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றனர்.

    கோடியக்கரைக்கு அருகே மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 18 மீனவர்கள் சிறைபிடித்து விசைபடகை பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் காரைக்கால் மீனவர்களை மீட்க கோரி முதல்-அமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    புதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் இருந்து எந்திரப்படகில் 15 காரைக்கால் மீனவர்கள் மற்றும் 3 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் படகை கைப்பற்றி மீனவர்களை சிறைபிடித்து காவலில் வைத்துள்ளனர்.

    சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க முன்னுரிமை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல் டெல்லியில் மத்திய மந்திரி ஜெய்சங்கரை நேரில் சந்தித்து வைத்திலிங்கம் எம்.பி. அளித்த மனுவில், காரைக்கால் மற்றும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதால் மிகுந்த துயரத்திலும் மனவேதனையிலும் உள்ளனர். மீனவர்களுடன் மீன்பிடி படகை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

    • ராமேசுவரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
    • ஒவ்வொரு மீனவரும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் 5-ந் தேதி 338 விசைப் படகுகளில் 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளை சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடிக்கும், தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியான நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிக்க வந்ததாக கூறி, ராமேசுவரத்தைச் சேர்ந்த ரிபாக்சன் (வயது 26), ராஜபிரபு சீனிபாண்டி (27), அரவிந்த் பாண்டி சீனிபாண்டி (24), ராபின்ஸ்டன் (41), பிரசாந்த் (56), ஆரோக்கியம் (58), யோபு (15), பெட்ரிக் நாதன் (37), ஜான் இம்மரசன் (38), அருள் பிரிட்சன் (29), நிஷாந்த் (25), பரலோக மேட்டன் வினித் (24), அந்தோணி லிஸ்பன் (24) ஆகிய 14 மீனவர்களையும் சிறைபிடித்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்த மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தியதோடு, மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து வீசினர். தொடர்ந்து 14 மீனவர்களும் இலங்கையில் உள்ள மன்னார் மீன்வளத்துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி, ராமேசுவரம் தங்கச்சி மடம் பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலை நிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில், கைது செய்ய மீனவர்கள் 14 பேரும் இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 14 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி, ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில், கடந்த ஜனவரி 27-ந் தேதி, காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து, காரைக்கால் கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, மீனவர்கள் மீது இலங்கை கடற்படை அராஜக முறையில் துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர்.

    இதில் 3 மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டு இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் மீனவர் செந்தமிழ் காலில் பயங்கர அடிபட்டு காலை அகற்றும் நிலைக்கும், மணிகண்டன் கண் பறிபோகும் நிலைக்கும், மற்றொருவர் லேசான காயத்துடனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்தும், காயப்பட்டு இலங்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 3 மீனவர்களை மேல் சிகிச்சை செய்ய விடுவிக்க வலியுறுத்தியும், இலங்கையில் உள்ள தங்களது படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தியும், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், கடந்த 11-ந் தேதி முதல் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    4-வது நாள் போரட்டமாக, கடற்கரை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து, காரைக்கால் மாவட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள், இன்று 7-வது நாள் போராட்டமாக, காரைக்கால் ரெயில் நிலையத்தில், வேளாங்கண்ணி ரெயில் முன்பு மீனவர்கள் குடும்பத்தோடு தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

     

    இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் மற்றும் காரைக்கால் மாவட்ட போலீசார் மீனவர்களிடம் சமாதானம் பேசி ஒவ்வொருவரையும் தனித்தனியாக தண்டவாளத்தை விட்டு அகற்றி ரெயில் செல்ல அனுமதித்தனர்.

    இதனால் ரெயில் 30 நிமிடம் தாமதமாக சென்றது. மேலும் ரெயில் நிலையத்தை ஒட்டிய தோமாஸ் அருள் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    தங்களது கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில மற்றும் இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாளை காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மீனவர்களின் தொடர் போராட்டம் காரணமாக காரைக்காலில் 400-க்கு மேற்பட்ட விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீன் விற்பனை இல்லாததால் மீன்பிடி துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது.

     

    ×