என் மலர்
கிரிக்கெட் (Cricket)

வீடியோ: சாம்பியன்ஸ் டிராபி: கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய கொடி மிஸ்ஸிங்- புது சர்ச்சை
- இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
- பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
கராச்சி:
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடங்க இன்றும் 2 நாட்களே உள்ள நிலையில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அந்த வகையில் பாகிஸ்தானில் உள்ள கராச்சி ஸ்டேடியத்தில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற 7 அணிகளின் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஐசிசி தொடர் மற்றும் இரு தரப்பு தொடர் என்றால் அந்த மைதானங்களில் அணிகள் பங்கேற்கும் நாட்டின் கொடி பறக்கவிடுவது வழக்கமான ஒன்று. ஆனால் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் இந்திய அணியின் கொடி இடம் பெறாதது ரசிகர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு எதிராக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.






