என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உள்பட 133 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    • இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.
    • பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. கடந்த வருடம் டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்ட் மெகா ஏலத்தை தொடர்ந்து லக்னோ அணிக்கு மாறியிருக்கிறார். இந்த தருணத்தில் தான் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் லக்னோ அணி 209 ரன்களை எடுத்தது. இதையடுத்து பந்துவீச்சிலும் விரைவாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும் டெல்லி அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களுடன் உரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. நான் அதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நாம் ஒரு இளம் அணி. எனவே நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராகுவோம்.

    அந்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் இன்று ஏமாற்றமான முடிவு தான். எனினும் நல்ல போட்டியாக அமைந்தது.

    என்று கோயங்கா கூறினார்.

    • லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
    • இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது.

    நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு ' L2 எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது.

    ஆண்டனி பெரும்பாவூருடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி வெளியாகிறது. இந்தப் படம் மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடா என்று மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

    எம்புரான் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் முன்பதிவு மட்டும் உலகமெங்கும் 58 கோடி ரூபாய்க்கு மேல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    திரைப்படத்தின் முதல் பாடலான ஃபிர் ஸிந்தா பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலி தீபக் தேவ் இசையில் தனிஷ் நபர் வரிகளில் ஆனந்த் பாஸ்கர் பாடியுள்ளார்.

    • ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.
    • இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கேரளாவில் மத்திய உளவுத்துறை துறை (IB) இளம் பெண் அதிகாரி ரெயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நேற்று (திங்கள்கிழமை) காலை, திருவனந்தபுரத்தில் உள்ள பெட்டா ரெயில் நிலையம் அருகே ரெயில் தண்டவாளத்தில் 24 வயது உளவுத்துறை (ஐபி) அதிகாரி மேகா இறந்து கிடந்தார்.

    பெட்டா காவல்துறையினரின் கூற்றுப்படி, மேகா, பத்தனம்திட்டாவில் உள்ள கூடல் பகுதியை சேர்ந்தவர். பெட்டா அருகே பேயிங் கெஸ்ட்டாக வசித்து வந்தார். அவரது மரணம் தற்கொலை என சந்தேகிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

    ஒரு பெண் ரெயில் தண்டவாளத்தில் குதிப்பதைக் கண்டதாக ரெயில் லோகோ பைலட் போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் அவரது மரணத்துக்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேகாவின் பெற்றோர் மகளின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே பிரேத பரிசோதனைக்குப் பிறகு மேகாவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பெட்டா காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • சவுக்கு சங்கரின் வீடுசூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடி கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.

    இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    தனது வீடு சூறையாடப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், போலீஸ் கமிஷ்னர் அருணும் தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சவுக்கு சனகர் குற்றசாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "சவுக்கு சனகர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தி அவர் பேசியதை ஏற்கமுடியாது. சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். சவுக்கு சங்கருக்கு வேண்டியவரை காங்கிரஸ் தலைவராக்க இதனை அவர் செய்கிறார். அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கட்டும்" என்று தெரிவித்தார்.

    • புதிய வருமான வரி மசோதா 2025 பாராளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
    • வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.

    புதுடெல்லி:

    புதிய வருமான வரி மசோதா 2025 பாராளுமன்ற மக்களவையில் கடந்த 13-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதனை தாக்கல் செய்து பேசிய நிர்மலா சீதாராமன், வரி செலுத்துவோருக்கு எளிதில் புரியும் வகையில் எளிமைப்படுத்தப்பட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்

    இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பேசியதாவது:

    புதிய வருமான வரி மசோதா பாராளுமன்றத்தின் அடுத்த மழைக்காலக் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    நிதி மசோதா 2025, வரி செலுத்துவோரை கவுரவிப்பதற்காக முன்னெப்போதும் இல்லாத வரி நிவாரணத்தை வழங்குகிறது.

    சர்வதேச பொருளாதார நிலையில் உள்ள நிச்சயமற்ற தன்மையை நிவர்த்தி செய்ய ஆன்லைன் விளம்பரங்கள் மீதான சமன்படுத்தல் வரி ரத்து செய்யப்படும் என தெரிவித்தார்.

    • துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர்.
    • பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

    ஏமன் மீதான அமெரிக்காவின் ரகசிய போர் திட்டகங்கள் பொதுவெளியில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் தவறுதலாக அட்லாண்டிக் பத்திரிகை தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க்க்கு சென்று சேர்ந்துள்ளது.

    கடந்த மார்ச் 13 ஆம் தேதி இந்த உயர்மட்ட அதிகாரிகள், சிக்னல் செயலி குரூப் சாட்டிங் -இல் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வரவிருக்கும் ராணுவத் தாக்குதல்கள் குறித்து விவாதித்துள்ளனர். இந்த சாட்டிங் இல் அட்லாண்டிக் இதழ் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் தவறுதலாக இன்வைட் செய்யப்பட்டு இணைந்துள்ளார்.

    ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூற்றுப்படி, இந்தக் குழுவில் மொத்தம் 18 உறுப்பினர்கள் இருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர். இந்தக் குழுவில் சேருமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸிடமிருந்து தனக்கு இன்வைட் வந்ததாக ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூறுகிறார்.

    ஏமனில் தாக்குதலுக்கான இலக்கு இடங்கள், தாக்குதல் வரிசைமுறை மற்றும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் போன்ற முக்கியமான விவரங்கள் இந்த குழுவில் பகிரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

    மேலும் கோல்ட்பர்க் தகவலைப் பெற்ற இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. மிகவும் ரகசியமான செயல்பாடுகள் வெளியே கசிந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் தவறுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

    அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் இது உண்மைதான் எனத் தெரிவித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. பத்திரிகையாளரை தவறுதலாக இன்வைட் செய்த பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

     

    டொனால்டு டிரம்ப் இந்த விவகாரத்தில் மவுனத்தை கடைபிடித்து வருகிறார். அமெரிக்காவின் வழிகாட்டுதலில் பாலஸ்தீனம், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அமெரிக்கா தீட்டி வரும் போர் திட்டங்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை கூட்டியுள்ளது.

    • 2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
    • பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா?

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்!

    2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?

    பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா? அப்படியானால் அதன் விவரங்கள்?

    ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.

    அதற்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.

    " தேசிய தேர்வு முகமை (NTA) என்னும் சிறப்பு அமைப்பானது உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவு தேர்வை நடத்துகிறது. பிப்ரவரி 9 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போலவே மே 5 2024 அன்று நீட் தேர்வு நடைபெற்றது.

    2019ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய கல்வி முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நடந்த பின்னர் தேர்வில் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள்/ ஏமாற்றும் நடவடிக்கைகள் ஆகியவை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், சதித்திட்டம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை கண்டறிந்திடும் வகையில் விரிவான விசாரணையை நடத்திட சிபிஐ யை ஒன்றிய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.

    ஆகத்து 2, 2024 மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பு wp (civil) 335/2024 பத்தி 84ல் " முறையான முறைகேடுகள் நடந்ததை குறிக்கும் போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இப்போதைக்கு இல்லை. இத்தேர்வின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு முறைகேடுகள் பரவலாக நடந்தது என்னும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இல்லை." இதே வழக்கில் 23 ஜூலை 2024 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி 26 ஜூலை 2024ல் சரிபார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.

    22.11.2024 அன்று 2024 நீட் தேர்வில் கேள்வித்தாள் திருட்டு குறித்த வழக்கில் மொத்தம் 45 குற்றவாளிகளுக்கு எதிராக 5 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இந்த நீட் தேர்வு தாள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பயனாளிகள் பெயர்களையும், கேள்வித்தாளுக்கு விடையளித்த மருத்துவ மாணவர்களின் பெயர்களையும், தேர்வில் ஆள்மாறட்டம் செய்தவர்களின் பெயர்களையும் கண்டறிந்து உரிய அமைப்பிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கொடுத்துள்ளோம்." என மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குணால் கம்ரா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. .
    • குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்

    மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை கிண்டல் செய்யும் வகையில் அவதூறாக பேசிய நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க மறுத்த சம்பவம் அம்மாநில அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

    முன்னதாக குணால் கம்ரா தனது நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என குறிப்பிட்டு இருந்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில், சிவசேனா கட்சியினர் குணால் கம்ரா சர்ச்சை கருத்து கூறிய ஸ்டூடியோவை அடித்து நொறுக்கினர். மேலும், குணால் கம்ரா தான் பேசியதற்கு கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சிவசேனா கட்சியினர் மிரட்டல் விடுத்தனர்.

    பிறகு, அந்த ஸ்டூடியோ விதிகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் அதனை இடித்துத் தள்ளினர். சிவசேனா கட்சியினர் கொதிப்படைந்துள்ள நிலையில், குணால் கம்ரா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இந்த நிலையில், மகாராஷ்டிரா அரசு அதிகாரிகள் தொடங்கி மாநில அமைச்சர்கள் வரை குணால் கம்ராவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சிவசேனா சிவசேனா ஆதரவாளர் ஒருவர் குணால் கம்ராவிடம் செல்போனில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த ஆடியோவில் பேசப்பட்டவை:

    குணால் கம்ரா: வணக்கம்

    சிவசேனா சிவசேனா: குணால் கம்ராவா?

    குணால் கம்ரா: ஆமா, சொல்லுங்க.

    சிவசேனா சிவசேனா: ஜெகதீஷ் சர்மா பேசுகிறேன். உங்கள் வீடியோவில் சாஹேப் பற்றி என்ன சொன்னீர்கள்?

    குணால் கம்ரா: எந்த சாஹிப்?

    சிவசேனா சிவசேனா: ஷிண்டே சாஹேப், எங்கள் (துணை) முதல்வர். உங்கள் வீடியோவில் அவரைப் பற்றி என்ன பேசினீர்கள்?

    குணால் கம்ரா: அவர் இப்போது எங்கே முதலமைச்சராக இருக்கிறார்? அவர் துணை முதலமைச்சராக இருக்கிறார்.

    சிவசேனா சிவசேனா: அவர் துணை முதல்வர். அவரைப் பற்றி என்ன வீடியோவை வெளியிட்டிருக்கிறீர்கள்?

    குணால் கம்ரா: நீங்க வீடியோவை பார்த்தீர்களா?

    சிவசேனா சிவசேனா: பார்த்தேன். நீங்கள் நிகழ்ச்சி நடத்திய ஓட்டலை நாங்கள் என்ன செய்தோம் என்று பாருங்கள். நாங்கள் உங்களை எங்கு கண்டாலும் இதே நிலைதான். புரிகிறதா?

    குணால் கம்ரா: தமிழ்நாட்டுக்கு வந்தால் என்னை பார்க்கலாம்.

    சிவசேனா சிவசேனா: நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?

    குணால் கம்ரா - தமிழ்நாட்டில் தான்.

    சிவசேனா சிவசேனா: தமிழ்நாட்டிற்கு வந்து உங்களை அடிப்பேன்.

    குணால் கம்ரா: வாருங்கள், தமிழ்நாட்டிற்கு வாருங்கள்.

    சிவசேனா சிவசேனா: இப்போ தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? தமிழ்நாட்டுக்கு எப்படிப் போறது? நம்ம ஐயாகிட்ட ஒரு நிமிஷம் பேசுங்க.

    காங்கிரஸ் தலைவர் சுப்ரியா ஷ்ரினேட் இந்த ஆடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இதனை நகைசுவை என்று குறிப்பிட்டார்.

    • தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன.
    • ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது.

    அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

    • ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன.
    • போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள்.

    சென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் தப்பி சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.

    இதில் நகை பறித்து தப்பியவர்கள் விமான நிலையம் நோக்கி சென்று இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் பற்றிய விபரங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

    இதில் ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த விமானங்கள் புறப்படுவதை நிறுத்தினர்.

    மேலும் விரைந்து சென்று ஐதராபாத் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். இதேபோல் மும்பை செல்ல தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த மற்றொரு வாலிபரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

    குறிப்பிட்ட நேரத்திற்குள் நகை பறிப்பில் ஈடுபட்டு விட்டு விமானத்தில் தப்பி செல்ல முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இதுபோல் பலமுறை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

    மேலும் அவர்களுடன் மேலும் சிலரும் சேர்ந்து இந்த நகைபறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களது கூட்டாளிகள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, இன்று நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 வடமாநில வாலிபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    விசாரணைக்கு பின்னரே அவர்களுடன் தொடர்பில் உள்ள கொள்ளைகும்பல் மற்றும் இது போல் அவர்கள் ஏற்கனவே நகைபறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது தெரிய வரும் என்றனர். சென்னையில் நகை பறித்து விட்டு விமானத்தில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
    • குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழகத்தில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

    தமிழகத்தில் 27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2-3° செல்சியஸ் உயரக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    தமிழகத்தில் இன்று முதல் 29-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும்/ ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

    27-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    ×