என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    • தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா?
    • இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    மகாராஷ்டிராவில் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீட்டை நீக்கிய பா.ஜ.க! இதைத்தான் இந்தியா முழுவதும் செய்யத் துடிக்கிறார்கள்.

    அண்மையில் மறைந்த மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவார் 2014-இல் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு 5% இடஒதுக்கீடு அளிக்கும் முடிவை எடுத்தார்.

    அவர் மறைந்த துயரம் அனைவரின் மனதில் இருந்தும் அகல்வதற்குள் அவர் எடுத்த முடிவை நீக்கியுள்ளது சிறுபான்மையினர் வெறுப்பில் ஊறிப்போன பா.ஜ.க.!

    இதுதான் இஸ்லாமிய மக்களுக்கு #AntiMinorityBJP அறிவித்திருக்கும் ரம்ஜான் பரிசா?

    தப்பித் தவறிக் கூட தமிழ்நாட்டுக்குள் NDA வரவே கூடாதென ஏன் சொல்கிறேன் புரிகிறதா? வந்தால் நம் அனைவரின் இடஒதுக்கீடும் காலி!

    இவர்களுக்கு ஒருநாளும் வளர்ச்சி அரசியல் தெரியாது; தெரிந்ததெல்லாம் மதவெறி சூழ்ச்சி அரசியல் மட்டும்தான்.

    இத்தகைய வெறுப்பு எஞ்சின்கள் தமிழ்நாட்டில் ஓட அனுமதிக்க மாட்டோம்! "தமிழ்நாடா NDA-வா?" எனும் 2026 ஜனநாயகப் போரில் தமிழ்நாடே வெல்லும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது.
    • ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும்.

    மதுரையில் ம.தி.மு.க. பிரமுகரின் இல்ல திருமண விழாவில் கட்சி பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

    தேர்தல் வேகமாக நெருங்கி வருகிறது. வரும் தேர்தல் கடுமையாக இருக்கும் என சில ஏடுகள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். நாங்கள் தி.மு.க.வோடு பேசும் போதுதான், எத்தனை தொகுதிகள் கேட்கிறோம் என தெரியவரும்.

    அதுபற்றி முன்கூட்டியே சொல்ல முடியவில்லை. தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்டதால் 234 தொகுதிகளில் நிற்பேன் என கூறினேன். மைக்கேல்பட்டி மாணவி இறப்பை மத மாற்றம் என பா.ஜ.க. அபாண்டமான குற்றச்சாட்டை வைத்தது.

    தற்போது சி.பி.ஐ. விசாரித்தது. மத மாற்றம் காரணம் இல்லை என கூறி உள்ளது. பா.ஜ.க. பழி சொன்னதற்காக அப்போது யாரெல்லாம் பழித்து பேசினார்களோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி, தித்திப்பான செய்தி. மகிழ்ச்சியோடு தே.மு.தி.க.வை வரவேற்கிறோம். தி.மு.க. அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது. தி.மு.க. கோட்டை மேலும் பலம் பெற்றுள்ளது. இதனால் எதிர்தரப்பு கலகலத்து கொண்டிருக்கிறது.

    ம.தி.மு.க. இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும். அ.தி.மு.க. குறித்து நான் பேசியதை முழுமையாக வெளியிடவில்லை. முழுமையாக பேசியதை பார்த்தால் உண்மையான அர்த்தம் தெரிந்திருக்கும்.

    ம.தி.மு.க.வுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படுமா? என்ற கேள்விக்கு, மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு கிடையாது. தொண்டர்களுக்கு எதிர்ப்பார்ப்பு இருக்கலாம், அது இயற்கை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அனைவரும் தோழமை கட்சிகள் தான்.
    • 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.

    தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அனைவரும் தோழமை கட்சிகள் தான்.

    * பலரின் கற்பனைகளுக்கும் தே.மு.தி.க. இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

    * சட்டசபை தேர்தலில் நானும் போட்டியிடுவேன்.

    * 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன்.
    • மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது.

    தமிழக பாஜக வெளியிட்டுள்ள பதிவில்,

    தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். அதனால், கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது என பதிவிட்டுள்ளது.

    • ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!
    • போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.

    திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில் திமுக அரசை விமர்ச்சி "தோல்வி அடைய வாழ்த்துகள்" என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    என்ன தான் ஆச்சு இந்த பொம்மை முதல்வருக்கு?

    ஆட்சிக்கு வந்து எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் நிறைவேற்றவில்லை, திறந்ததெல்லாம் அதிமுக திட்டங்கள் மீதான ஸ்டிக்கர்கள் மட்டுமே!

    இது போதாது என்று, தேர்தல் நெருங்குவதும் ஸ்டிக்கர் பித்து அதிகரித்ததோ என்னவோ, அஇஅதிமுக-வின் வரலாற்றுச் சாதனைகள் மீது ஏறி சவாரி செய்ய ஆசைப்படுகிறார் திரு. மு.க.ஸ்டாலின்.

    ஏற்கனவே 7.5% திட்டம் குறித்து ஒரு வரலாற்றுப் பொய்யை நாக் கூசாமல் மருத்துவத்துறை அமைச்சர் வாயிலாக பேசியதை, நேற்று சட்டமன்றத்திலேயே தோலுரித்தேன்.

    நேற்று மாலை, தனது தொடர் "ஆடியோ லாஞ்ச் மேடை அரசியலின்" அங்கமாக விளையாட்டு துறை சார்ந்த விழா ஒன்றில் மேடையேறிய பொம்மை முதல்வர், "விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீடு" திட்டத்தின் பலன்கள் மீது தனது பெயரை எழுதிக் கொள்ள முனைந்தது வேடிக்கையாக இருந்தது.

    விளையாட்டு வீரர்களுக்கான அரசுப்பணிகளில் இட ஒதுக்கீடு என்பது, 2018-ல் எனது தலைமையிலான

    அதிமுக அரசு 2%-ஆக அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவித்து விளையாட்டு வீரர்கள் அளித்த விழாவில், இந்த இட ஒதுக்கீட்டை 3%-ஆக உயர்த்தி நான் அறிவித்தேன்.

    அதன் பிறகு, 2020-ல் கொரோனா பெருந்தொற்றுக் காலம், 2021-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது.

    இதில் ஸ்டாலின் செய்தது என என்ன இருக்கிறது? பணி ஆணைகள் கொடுப்பது போல் போட்டோ எடுத்துக் கொண்டது மட்டுமே இந்த பொம்மை முதல்வரின் ஒரே பங்களிப்பு.

    7.5% மருத்துவ உள் இடஒதுக்கீடு ஆகட்டும், 3% விளையாட்டு வீரர்களுக்கான ஆகட்டும்- நான் அரசுப்பள்ளியில் படித்தவன், விளையாட்டு வீரர்களின் உணர்வுகளைப் புரிந்தவன் என்ற முறையில், அவர்களுக்காக பார்த்துப் பார்த்துச் செய்த சாதனைத் திட்டங்கள். இதெல்லாம் ஸ்டாலின் போன்றோருக்கு எப்படி புரியும்? இப்படி ஏதாவது ஒரு புதிய சாதனைத் திட்டத்தை ஸ்டாலின் கொடுத்தாரா? இல்லை!

    அதனால், இப்படி வெட்கமின்றி எங்கள் திட்டத்தின் மீது சவாரி செய்யும் எண்ணத்தை எல்லாம் கைவிட்டு, உங்கள் ஆட்சியின் சாதனைகளைக் கூறிப் பிரச்சாரம் செய்யப் பாருங்கள்.... மு.க.ஸ்டாலின்

    (ஓஹ்ஹ்.. அப்படி எதுவுமே இல்லையோ..??!! சரி, தோல்வி அடைய வாழ்த்துகள்!)

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வீடியோ வைரலான நிலையில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
    • வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் என தெரிய வந்தது.

    கொடைக்கானல்:

    சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் ஆர்வ மிகுதியில் பல்வேறு வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளில் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் செல்வது, தடை செய்யப்பட்ட அருவிகள், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு சென்று அதன் அனுபவங்களை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    இது போல கடந்த சில நாட்களாக கையில் மிகப்பெரிய வாளுடன் திரைப்பட பாடல் பின்னணியில் வாகனங்களில் அமர்ந்தவாறு வீடியோ எடுத்து வாலிபர் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டு இருந்தார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இது குறித்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அபினேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் வீடியோவை பதிவிட்டவர் மேல்மலை கிராமம் பூம்பாறையைச் சேர்ந்த செல்வக்குமார் (25) என தெரிய வந்தது.

    இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். வீடியோவில் பதிவு செய்த வாள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றினர். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் இது போன்று வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

    • கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
    • உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    மதுரை:

    தி.மு.கவின் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. தலைவரும், அவரது தந்தையுமான மு.கருணாநிதியால் நீக்கப்பட்டார்.

    இதையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கவுஷ்பாட்சா, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான், முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, உதயகுமார், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 12 பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து மதுரை தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தி.மு.க. தலைமை கட்சியில் சேர்க்க தொடர்ந்து மவுனம் சாதித்தது.

    இந்த நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதமும் அனுப்பினர். மேலும் தலைமை கழக நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். ஆனாலும் இவர்களை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க முட்டுக்கட்டை நீடித்து வந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுத்தி வைத்தனர். எந்த கட்சிக்கும் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.

    இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் அவர்களது ஆசை நிராசையாகவே இருந்து வந்தது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இனியும் பொறுமை காப்பது தங்களது அரசியல் வாழ்வுக்கு பாதகமாக அமைந்து விடும் என கருதிய அவர்கள் மு.க.அழகிரியிடம் இதுதொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

    நானும் உங்களை தி.மு.க. தலைமை கட்சியில் சேர்த்து கொள்ளும் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. எனவே உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 17-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.

    அப்போது பேசிய பி.எம்.மன்னன், மதுரையில் அதிருப்தியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் விரைவில் அ.தி.மு.க.வில் சேருவார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும் வகையில் தேர்தல் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தி தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரை அ.தி.மு.கவில் சேர்க்க கட்சி தலைமை புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    பி.எம்.மன்னனை தொடர்ந்து முன்னாள் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட துணை செயலாளருமான எஸ்.ஆர்.கோபி இன்று அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தெரியவந்து உள்ளது. அவருடன் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேருகிறார்கள்.

    மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தி.மு.க. அதிருப்தி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஆகியோரையும் திரட்டி அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மு.க.அழகிரி ஆதரவாளர்களில் சிலர் மட்டுமே அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள நிலையில் மீதமுள்ள நபர்களையும் தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க. தலைமை வலை விரித்துள்ளது.

    ஆனால் அவர்களில் சிலர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் மட்டுமின்றி தி.மு.க. தலைமை மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ஆனாலும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து தி.மு.க. தலைமை விரைவில் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், அண்ணன் அழகிரி என்ன சொன்னாலும் நாங்கள் அவரது கண் அசைவுக்கு கட்டுப்படுவோம். அவர் யாரையும் மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று சொல்லவில்லை. ஆனாலும் சிலர் தங்களது சுயதேவைகளுக்காக வேறு கட்சிகளில் சேருகிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும்.

    அண்ணன் அழகிரி மீது முழுமையான நம்பிக்கை கொண்ட எங்களை போன்றோர் எந்த நிலையிலும் வேறு கட்சிக்கு செல்லமாட்டோம் என்று தெரிவித்தார்.

    மு.க.அழகிரி ஆதரவாளர்களின் இருவேறு நிலைபாடுகள் காரணமாக மதுரை அரசியல் களத்தில் விறுவிறுப்பான அரங்கேற்றங்கள் நடந்து வருகின்றன.

    • 2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது.
    • 2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தல் இதுவரை நடைபெற்று முடிந்த தேர்தல்களை விட முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் அதிமுக, திமுக-வை எதிர்த்து முதல்முறையாக களம் இறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் தான்.

    அரசியல் எதிரி, கொள்கை எதிரி என தி.மு.க., பா.ஜ.க. வை எதிர்த்து விஜய் களமிறங்கியுள்ளார். இதனால் விஜய் அரசியலில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று அனைவராலும் உற்று நோக்கப்படுகிறது.

    இதனிடையே, மறைந்த விஜயகாந்தின் தே.மு.தி.க. எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற கேள்வியும் எழுந்து இருந்தது. இதனை சுற்றி பல தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இன்று இதற்கு பதலளிக்கும் விதமாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது.

    கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே கடந்த 2005-ம் ஆண்டு விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கினார்.

    2006-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது. இதன் பின்னர் 2011-ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க. எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எட்டி பிடித்தது.

    2011-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தோல்வியை தழுவியது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தினகரனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அந்த தேர்தலிலும் தோல்வியை தழுவியது.

    கடந்த 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று தேர்தலை சந்தித்த தே.மு.தி.க. அப்போதும் வெற்றி பெறவில்லை. இப்படி தொடர் தோல்வியை சந்தித்து வந்த தே.மு.தி.க. வருகிற சட்டசபை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

    இதனால் தே.மு.தி.க. வெற்றி கூட்டணியில் இடம் பெறும் என்று பிரேமலதா தொடர்ந்து கூறி வந்தார். தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடனும் தே.மு.தி.க. சார்பில் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

    தங்களது கூட்டணியில் தே.மு.தி.க.வை தக்க வைப்பதற்கு அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சிகள் தொடர்ந்து முயற்சி செய்து வந்தன.

    இந்த நிலையில் அதிரடி திருப்பமாக தே.மு.தி.க. இன்று தி.மு.க. கூட்டணியில் இணைந்தது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு வாசலில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கோவி.செழியன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

    அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பூங்கொத்து கொடுத்து தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. 2006-ம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் தே.மு.தி.க. முதல் முறையாக தி.மு.க. உடன் கூட்டணி அமைத்துள்ளது.

    இம்முடிவு தே.மு.தி.க.விற்கு எந்த அளவிற்கு கை கொடுக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

    • ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
    • ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் பறக்கும் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தை தினமும் ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரெயில் நிலையத்தில் லிப்ட் வசதி உள்ளது.

    மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் இந்த லிப்டை பயன்படுத்தி வந்தனர். குறிப்பாக பெண்கள் மற்றும் வயதானவர்கள் இதை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரெயில் நிலையத்துக்கு வந்த பெண் பயணிகள் லிப்டில் ஏறி சென்றனர். அப்போது லிப்டில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் லிப்ட் பாதி வழியிலேயே நின்றது. அதில் இருந்த 10 பெண் பயணிகளும் லிப்டில் சிக்கி தவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் மயிலாப்பூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் ரெயில் நிலையத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் லிப்டின் கதவை கழற்றி அதில் இருந்த 10 பெண்களையும் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுமார் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு அனைத்து பெண்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    இந்த சம்பவத்தால் மயிலாப்பூர் பறக்கும் ரெயில் நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பாக காணப்பட்டது.

    • தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
    • கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!

    சென்னை :

    தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்துள்ளது. தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு வாசலில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகர் பாபு, கோவி.செழியன் ஆகியோர் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். அங்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பிரேமலதா சந்தித்து பூங்கொத்து கொடுத்து தி.மு.க. கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார். இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன், பூச்சி முருகன், தே.மு.தி.க. பொருளாளர் சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான 'கேப்டன்' விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

    சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

    கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!

    திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! என்று கூறியுள்ளார். 



    • திமுக-தேமுதிக கூட்டணி 2016ம் ஆண்டிலேயே அமைவதாக இருந்தது.
    • 10 ஆண்டுகள் கழித்து திமுகவில் தேமுதிக கூட்டணி நடந்திருக்கிறது.

    திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளதை பிரேமலதா விஜயகாந்த் உறுதிப்படுத்தியுள்ளார். தமிழக அரசியலில் புதிய திருப்பமாக முதல் முறையாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறீர்கள் என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தீர்கள். அதற்கு தற்போது விடை கிடைத்துவிட்டது.

    வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதை இன்று உறுதிப்படுத்தியுள்ளோம்.

    கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

    இந்த கூட்டணி 2016ம் ஆண்டிலேயே அமைவதாக இருந்தது. 10 ஆண்டுகள் கழிந்து அது நடந்திருக்கிறது.

    திமுக-தேமுதிக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வரவேற்கும் வகையில் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
    • சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என். நேரு, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இதனிடையே, தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி குறித்து ஜனவரி மாதமே அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்து இருந்த நிலையில், கூட்டணி குறித்து அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, தே.மு.தி.க. கூட்டணி தொடர்பாக தி.மு.க., அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

    இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகம் இணைந்துள்ளது. இதற்காக அண்ணா அறிவாலயம் வந்த பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார். இந்த சந்திப்பின்போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்பி, அமைச்சர் கே.என். நேரு, எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    ×