என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MK Alagiri"

    • கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
    • உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    மதுரை:

    தி.மு.கவின் தென்மண்டல அமைப்பு செயலாளராகவும், மத்திய மந்திரியாகவும் இருந்தவர் மு.க.அழகிரி. இவர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய தி.மு.க. தலைவரும், அவரது தந்தையுமான மு.கருணாநிதியால் நீக்கப்பட்டார்.

    இதையடுத்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ. கவுஷ்பாட்சா, முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன், முன்னாள் மண்டல தலைவர் சின்னான், முன்னாள் மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன் மற்றும் நிர்வாகிகள் எம்.எல்ராஜ், முபாரக் மந்திரி, உதயகுமார், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்ட 12 பேர் நீக்கப்பட்டனர். இதையடுத்து மதுரை தி.மு.க.வில் மு.க.அழகிரியின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தல், 2019 பாராளுமன்ற தேர்தல்களில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க.வுக்கு எதிராக தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ஆனாலும் இவர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் தி.மு.க. தலைமை கட்சியில் சேர்க்க தொடர்ந்து மவுனம் சாதித்தது.

    இந்த நிலையில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கட்சி தலைமைக்கு மன்னிப்பு கடிதமும் அனுப்பினர். மேலும் தலைமை கழக நிர்வாகிகளை அடிக்கடி சந்தித்தும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். ஆனாலும் இவர்களை மீண்டும் தி.மு.க.வில் சேர்க்க முட்டுக்கட்டை நீடித்து வந்தது. கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் தி.மு.க. வுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுத்தி வைத்தனர். எந்த கட்சிக்கும் அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவில்லை.

    இதையடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனாலும் அவர்களது ஆசை நிராசையாகவே இருந்து வந்தது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இனியும் பொறுமை காப்பது தங்களது அரசியல் வாழ்வுக்கு பாதகமாக அமைந்து விடும் என கருதிய அவர்கள் மு.க.அழகிரியிடம் இதுதொடர்பாக விவாதித்ததாக கூறப்படுகிறது.

    நானும் உங்களை தி.மு.க. தலைமை கட்சியில் சேர்த்து கொள்ளும் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை. எனவே உங்கள் விருப்பப்படி எந்த கட்சியிலும் இணைந்து அரசியல் செய்யுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடந்த 17-ந்தேதி சென்னையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க. வில் இணைந்தனர்.

    அப்போது பேசிய பி.எம்.மன்னன், மதுரையில் அதிருப்தியில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் விரைவில் அ.தி.மு.க.வில் சேருவார்கள். மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளையும் அ.தி.மு.க. கைப்பற்றும் வகையில் தேர்தல் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார்.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மற்றும் அதிருப்தி தி.மு.க. நிர்வாகிகள் ஆகியோரை அ.தி.மு.கவில் சேர்க்க கட்சி தலைமை புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறது.

    பி.எம்.மன்னனை தொடர்ந்து முன்னாள் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட துணை செயலாளருமான எஸ்.ஆர்.கோபி இன்று அ.தி.மு.க.வில் இணைய இருப்பதாக தெரியவந்து உள்ளது. அவருடன் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேருகிறார்கள்.

    மேலும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள தி.மு.க. அதிருப்தி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஆகியோரையும் திரட்டி அ.தி.மு.க.வில் சேர்க்க திட்டம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மு.க.அழகிரி ஆதரவாளர்களில் சிலர் மட்டுமே அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள நிலையில் மீதமுள்ள நபர்களையும் தங்கள் பக்கம் இழுக்க அ.தி.மு.க. தலைமை வலை விரித்துள்ளது.

    ஆனால் அவர்களில் சிலர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர்கள் மட்டுமின்றி தி.மு.க. தலைமை மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் அ.தி.மு.க.வின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை. ஆனாலும் அவர்களது அரசியல் எதிர்காலம் குறித்து தி.மு.க. தலைமை விரைவில் பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.

    இதுதொடர்பாக மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், அண்ணன் அழகிரி என்ன சொன்னாலும் நாங்கள் அவரது கண் அசைவுக்கு கட்டுப்படுவோம். அவர் யாரையும் மாற்றுக்கட்சியில் சேருங்கள் என்று சொல்லவில்லை. ஆனாலும் சிலர் தங்களது சுயதேவைகளுக்காக வேறு கட்சிகளில் சேருகிறார்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று மதுரை மக்களுக்கு நன்றாக தெரியும்.

    அண்ணன் அழகிரி மீது முழுமையான நம்பிக்கை கொண்ட எங்களை போன்றோர் எந்த நிலையிலும் வேறு கட்சிக்கு செல்லமாட்டோம் என்று தெரிவித்தார்.

    மு.க.அழகிரி ஆதரவாளர்களின் இருவேறு நிலைபாடுகள் காரணமாக மதுரை அரசியல் களத்தில் விறுவிறுப்பான அரங்கேற்றங்கள் நடந்து வருகின்றன.

    • குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்திருந்தார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதன்பின்னர் வெளியே வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமாக உள்ளார். நாளைமறுநாள் அவர் வீடு திரும்புகிறார் என்று தெரிவித்தார். 

    • இன்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.
    • முதலமைச்சர் நலமுடன் உள்ளார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் சில மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

    மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்ததும் மு.க.அழகிரி மருத்துவமனைக்கு வந்து சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில், இன்று 2-வது நாளாக மருத்துவமனைக்கு வந்த மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் மு.க.அழகிரி கூறுகையில், முதலமைச்சர் நலமுடன் உள்ளார். இன்னும் 2, 3 நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றார். 

    • மு.க.முத்துவின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
    • மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

    மு.க.முத்துவின் உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு கோபாலபுரம் இல்லத்தில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து இறுதி ஊர்வலம் இன்று மாலை நடைபெற உள்ளது. சென்னை, பெசன்ட் நகர், மின் மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மூத்த சகோதரர் மு.க.முத்துவின் உடலுக்கு மு.க.அழகிரி மாலை அணிவித்து, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். 

    • மதுரை விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

    மதுரை:

    தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்தார். விமான நிலையத்தில் தி.மு.க. சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். ரோடு ஷோவில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் தொடர்ந்து 4 மணி நேரம் சுமார் 17 கி.மீ. ரோடு ஷோ சென்றார்.

    மதுரை மெஜியரா கோட்ஸ் ஆலை முன்பு, மதுரையின் முதல் மேயர் எஸ்.முத்துவின் முழு உருவ வெண்கலச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்நிலையில், மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள தனது சகோதரர் மு.க.அழகிரி வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று சந்தித்தார்.

    முதல்வராக பதவியேற்ற பின் முதல்முறையாக மு.க.அழகிரி இல்லத்திற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
    • அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை சந்தித்துள்ளார்

    மதுரை:

    உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்து சேர்ந்தார்.

    இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரியை மதுரையில் உள்ள வீட்டில் சந்தித்தார். மு.க.அழகிரி தனது வீட்டு வாசலில் காத்திருந்து உதயநிதியை வரவேற்று அழைத்துச் சென்றார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின்போது மு.க.அழகிரிக்கு உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அமைச்சரான பிறகு முதல் முறையாக மு.க. அழகிரியை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

    • மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    • அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    மதுரை:

    தி.மு.க.வின் தென்மண்டல அமைப்பு செயலாளராக இருந்த முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி 2014-ம் ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் அரசியலில் இருந்து விலகியிருந்தார்.

    இந்தநிலையில் கடந்த மாதம் மதுரை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்றார். அவரை மு.க.அழகிரியும், அவரது மனைவி காந்தி அழகிரியும் உச்சி முகர்ந்து வரவேற்றனர்.

    இந்த சந்திப்பு குறித்து கேட்டதற்கு தனது பெரியப்பா வீட்டிற்கு வந்திருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அதேபோல் தம்பி முதலமைச்சராகவும், தம்பி மகன் அமைச்சராகவும் இருப்பது பெருமையாக இருப்பதாக மு.க.அழகிரி தெரிவித்திருந்தார்.

    மு.க.அழகிரி வீட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் சென்றது அழகிரியின் ஆதரவாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பு மாற்றத்தை ஏற்படுத்தும் என அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

    உதயநிதி ஸ்டாலினை போன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மதுரை வரும்போது மு.க.அழகிரியை சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தி.மு.க.வினர் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5 மற்றும் 6-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் ஆய்வுப்பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் மு.க.அழகிரியின் வீட்டிற்கு சென்று அவரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக மு.க.அழகிரி வீடு உள்ள பகுதியில் ரோடு பராமரிப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் மு.க.அழகிரியின் வீட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லவில்லை.

    மதுரையில் 2 நாட்கள் ஆய்வு மேற்கொண்டிருந்த அவர், நேற்று மாலை நாகர்கோவிலுக்கு புறப்பட தயாரானார். அரசு விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுத்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

    அப்போது அவர் மு.க.அழகிரியின் நலம் குறித்து விசாரித்துள்ளார். மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார். அவர்கள் இருவரும் 5 நிமிடங்கள் பேசியதாக கூறப்படுகிறது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் மு.க.அழகிரியின் வீட்டிற்கு நேரில் சென்று வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரியுடன் போனில் பேசி நலம் விசாரித்திருப்பது மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    சென்னை:

    மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் (வயது 90) கோபாலபுரம் வீட்டில் வசித்து வருகிறார்.

    வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவரை அவ்வப்போது அவரது மகன்களான மு.க.அழகிரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகியோர் தனித்தனியாக நேரம் கிடைக்கும்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.

    இந்தநிலையில் இன்று தயாளு அம்மாளுக்கு 90-வது பிறந்தநாள் என்பதால் கோபாலபுரம் வீட்டில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார்கள்.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அண்ணன் மு.க.அழகிரி, தம்பி மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன், அமிர்தம் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    இவர்களுடன் அமைச்சர் உதயநிதி, நடிகர் அருள்நிதி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி இருவரும் கோபாலபுரம் வீட்டில் சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

    • மதுரையில் நடைபெற்று வரும் குற்ற வழக்கில் அரசு தரப்புக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் மனுதாரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
    • விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல.

    புதுடெல்லி:

    மதுரையை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் பாஸ்கரன் என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அந்த மனுவில், 'கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி தரப்பினர் தாக்கியதாக மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மு.க.அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2020-ம் ஆண்டு மதுரை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி இந்த வழக்கை முடித்து வைக்க முயற்சி செய்கின்றனர்.

    எனவே இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.

    இந்த மனுவை நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள், 'மதுரையில் நடைபெற்று வரும் குற்ற வழக்கில் அரசு தரப்புக்கோ அல்லது குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கும் மனுதாரருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. விசாரணையை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரும் இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையதல்ல. சாகசமிக்கதாகவும் தோன்றுகிறது.

    இதன்படி இந்த மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.

    • வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
    • மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.

    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.கஅழகிரி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இதனையடுத்து மு.க.அழகிரி, அப்போதைய மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

    • கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது.
    • மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள்.

    மதுரை:

    கடந்த 2011-ம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. பல்வேறு கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவிலில் மேலூர் தேர்தல் அதிகாரியும், தாசில்தாருமான காளிமுத்து என்பவரை அங்கிருந்தவர்கள் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் கீழவளவு போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணைமேயர் மன்னன், ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது தேர்தல் நடத்தை விதிகள் மீறல் உள்பட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவானது.

    இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. பல்வேறு கட்ட விசாரணைகளுக்கும் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகி வந்தனர். விசாரணை முடிவில் கடந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிபதி முத்துலட்சுமி பிறப்பித்தார். இதையடுத்து இன்று மு.க.அழகிரி உள்பட 17 பேர் கோர்ட்டில் நேரில் ஆஜரானார்கள். அப்போது மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் மீதமுள்ள மற்றொரு திருஞானம், கருப்பணன், சோலை, ராமலிங்கம் ஆகிய 4 பேரும் இறந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலையானதால் தி.மு.க.வினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • துரை தயாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ×