என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது
- கல்விக்கடனை அரசே திருப்பி செலுத்தும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது
கல்விக்கடன் தள்ளுபடியில் திமுகவின் நிலைப்பாடு - அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்று உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக்கடன் பெற்ற தமிழக மாணவர்கள் ஓராண்டு காலத்திற்குள் கடனை செலுத்த இயலாவிட்டால் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் கல்விக்கடனை அரசே திருப்பி செலுத்தும்" என திமுக 159-வது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.
தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் தரவுகளின்படி, முன்னுரிமைத் துறை கடனின் கீழ் வங்கிகளின் நிலுவையில் உள்ள கல்விக் கடன் இலாகா டிசம்பர் 31, 2023 நிலவரப்படி ரூ.11,122.65 கோடியாக இருந்தது, இது செப்டம்பர் 2023 நிலவரப்படி ரூ.11,589.93 கோடியிலிருந்து ரூ.467 கோடி குறைந்துள்ளது. முன்னுரிமைத் துறை கடனின் கீழ் கல்விக் கடன் வாராக்கடன் டிசம்பர் 2023 நிலவரப்படி ரூ.4,123.91 கோடியாக இருந்தது. மாநிலத்தில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரை ரூ.2,857.75 கோடி கல்விக் கடன்களை அனுமதித்துள்ளன. மேலும் கடன்கள் (முந்தைய ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்டவை உட்பட) ரூ.2,064.06 கோடி வரை வழங்கப்பட்டுள்ளன என்று தரவுகள் காட்டுகிறது.
2017 ஜூன் மாதம் அப்போதைய திமுக பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 2013 –ம் ஆண்டில், தமிழகத்தை சேர்ந்த 8,86,752 மாணவர்களின் கல்விக்கடன் ரூ.13,343.65 கோடி நிலுவையில் இருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டில் அந்த கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.16,313.06 கோடியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை 9,60,202 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரப்படி, மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் 2013 -லிருந்து 2015-ம் ஆண்டு 22.3 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 8 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
அதேபோல் 2013-ம் ஆண்டு மாணவர்கள் பெற்ற சராசரி கல்விக்கடன் 2013-ல் ரூ.1,50,478 யாக இருந்தது. அது 2015-ல் ரூ.1,69,892 யாக மட்டுமே உயர்ந்துள்ளது. இது சதவீத அடிப்படையில் வெறும் 13 சதவீதம் தான் உயர்வு பெற்றுள்ளது. இவை அனைத்தும், கல்விக்கடன் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதித்துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ''வங்கிகளில் கல்விக்கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்கடனை அரசே திருப்பிச் செலுத்தும்'' என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடனை முதல்வர் ஜெயலலிதா அறவே மறந்து விட்டார். அந்த முதல் கையெழுத்தில் கல்விக்கடன் தள்ளுபடி அறிவித்திருந்தால் மதுரை லெனின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
இன்றைக்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கி 84 லட்சம் பேர் வேலையில்லாமல் காத்திருக்கும் நிலையை அறவே நீக்கிட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் வேலை வாய்ப்பு இல்லாத மாணவர்களின் கல்விக் கடனை அரசே திருப்பிச் செலுத்துவதுடன், கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் கருதி, மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழக அரசு கடந்த 3.2.2025-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து மாணவ-மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும் என வலியிறுத்திய முதல்வர் கடந்த ஆண்டு பட்டியலின மாணவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது வரவேற்கதக்கது. ஆனால் திமுக தன் தேர்தல் அறிக்கையில் தமிழக மாணவர்கள் என குறிப்பிட்டுவிட்டு பட்டியலின மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 15 ஆண்டுகாலமாக கல்விக்கடன் நிலுவையில் உள்ளதால் வங்கிகள் வாராக்கடன்கள் முடிவு செய்துள்ளதை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. வருங்காலங்களில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போது நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- 3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.
- நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் தி.மு.க. உள்ளிட்ட மாற்று கட்சியினர் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் சி.சீனிவாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொடுத்த அனைத்து திட்டங்களும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது தேர்தல் வருவதால் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.
நான்கரை ஆண்டுகளாக தாலிக்கு தங்கம் போன்ற பல்வேறு திட்டங்கள் சென்றடையவில்லை. இதனை பெண்கள் புரிந்து கொண்டு உள்ளனர். மகளிருக்கு ரூபாய் 1000 கொடுத்துவிட்டு டாஸ்மாக், மின் கட்டணத்தை உயர்த்தி விட்டனர். அத்தியாவசிய பொருள்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது. ரூ. 5 ஆயிரம் செலவு செய்யக்கூடிய குடும்பம் தற்போது ரூ.10 ஆயிரம் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
3 மடங்கு விலைவாசி உயர்த்திவிட்டு அதில் ஆயிரம் கொடுத்துவிட்டு பெண்களுக்கு கொடுக்கிறோம் என நாடகம் நடத்துகின்றனர்.
தி.மு.க. அளிக்கும் ரூ.1000 சென்று சேரும்பொழுது நாங்கள் கொடுக்கும் ரூ.2000 சென்று சேராதா? சென்ற தேர்தலில் ரூ.1500 அறிவித்து அது மக்களிடம் சென்று சேரவில்லை அதனால் தற்போது அறிவித்துள்ளார். கட்டாயம் இல்லங்களுக்கு சென்று சேரும்.
ஆளும் கட்சியாக தி.மு.க. உள்ளது. யாரை உருட்டுவது, மிரட்டுவது. எங்களுக்கு எவ்வித அழுத்தமும் இல்லை. பா.ஜ.க.வுடன் ஏற்கனவே இருந்த கூட்டணி தான், டி.டி.வி. அவருடன் தான் இருந்தார். தற்போது வந்துள்ளார். பொய்யான தகவலை தி.மு.க.வினர் பரப்பி வருகின்றனர்.
நாங்கள் அறிவித்துள்ள 5 புதிய திட்டங்கள் மூலம் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. மக்களிடம் வரவேற்பும் உள்ளது. ஆளுங்கட்சியிடம் பணம் உள்ளது. பல தவறான வழிகளில் இருந்து பணம் வந்து கொண்டிருக்கிறது.
ஓய்வூதியம் என்று அறிவித்திருப்பது ஊதியத்தின் 10 சதவீதம் பிடித்தம் செய்து பின்பு கொடுப்பது. அவர்கள் கேட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கவில்லை. தி.மு.க.வில் உள்ள சிலர் இனிப்பு வழங்கி வெற்றி பெற்றதாக தெரிவித்து வருகின்றனர். இன்று வரை இடைநிலை ஆசிரியர் போராடி வருகின்றனர். இப்படி இருக்க எப்படி வெற்றியடையும்.
கஞ்சா விற்பவர்களை காவல்துறை பிடித்தால் உடனடியாக அமைச்சர் பேசுகிறார். அனைவருக்கும் பங்கு செல்வதால் யாரும் கண்டு கொள்வதில்லை.
காவல்துறையினரே கஞ்சா விற்பனை செய்தார் என செய்தி வருகிறது. அரசாங்கமும் காவல்துறையும் கூட்டாக செயல்படுகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு மாநிலம் என சான்றிதழ் பெற்றுள்ளது. தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு எங்கு உள்ளது. கனிமொழி பங்கேற்ற கூட்டத்திலேயே பாதுகாப்பு இல்லை.
தே.மு.தி.க.வுடன் கூட்டணி தொடர்பாக பேசி வருகிறோம். அதிகாரப்பூர்வமாக விரைவில் செய்தி வெளிவரும். லாட்டரி வியாபாரி மார்ட்டின் மருமகனை அருகில் வைத்துக் கொண்டு விஜய் ஊழலை ஒழிப்பதாக பேசி வருகிறார். லஞ்சம் வாங்க மாட்டேன் என அவர் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறேன். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொள்ளையடித்த பணம் தினகரன், சசிகலாவிடம் இருப்பதாக பேசிய பேச்சுகள் உண்மை. அவர்கள் பேசியதும் உண்மை. தற்போது இணைந்து விட்டதால் எல்லாம் முடிந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி. தினகரன் இணைந்துள்ள நிலையில் திண்டுக்கல் சி.சீனிவாசனின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளே சென்று பார்த்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
- போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கல்லூரி சாலை அணைப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பின்னலாடை மற்றும் உப நிறுவனங்கள் என அடுத்தடுத்து 4 நிறுவனங்களின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது.
வழக்கம் போல நிறுவனத்தில் பணிக்கு வந்த ஊழியர்கள் பனியன் நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
மேலும் இதே போல அடுத்தடுத்த 3 நிறுவனங்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு உள்ளே பொருட்கள் சிதறி கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது ஒவ்வொரு நிறுவனத்திலும் வைக்கப்பட்டிருந்த பணம் மட்டும் திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அதில் முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கையில் இரும்பு ராடு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் சுற்றித்திரிவதும் பின்னர் பூட்டுகளை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் 15 வேலம்பாளையம் போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் கையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரியும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு முன்பு முகமூடி கொள்ளை யர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வங்கியில் பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் கஷ்டப்பட்டனர்.
- அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை:
வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை விடப்பட வேண்டும் என்ற பிரதான கோரிக்கையை வலியுறுத்தி 8 லட்சம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தை இன்று ஒரு நாள் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் வங்கிகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. ஒரு சில வங்கிகள் மட்டுமே திறந்திருந்தன. அதில் அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். பெரும்பாலான வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்ததால் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 16,000 வங்கிக் கிளைகள் இன்று செயல்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஏற்கனவே சனி, ஞாயிற்றுக்கிழமையோடு குடியரசு தினம் விடுமுறையும் சேர்ந்து 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இன்று வங்கி ஊழியர்கள் போராட்டம் நடைபெற்றதால் 4 நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை. இதனால் வங்கியில் பணத்தை செலுத்தவோ, எடுக்கவோ முடியாமல் வாடிக்கையாளர்கள் கஷ்டப்பட்டனர்.
வர்த்தக பிரமுகர்கள், தொழில் நிறுவனங்கள் காசோலைகள், பண பரிவர்த்தனை செய்ய முடியாமல் முடங்கின. தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள காசோலை இன்று ஒரு நாளில் முடங்கியதாக கூறப்படுகிறது. 4 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருப்பதால் அந்நிய செலாவணி பரிமாற்றம் பாதிக்கப்பட்டது.
வங்கி ஏ.டி.எம்.மில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பணமும் தீர்ந்து போனதால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் இன்று செயல்படவில்லை.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கங்களின் சார்பாக இந்த வேலைநிறுத்தம் நடக்கிறது. அங்கே அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றாமல் இழுத்து அடித்து வருகிறது. மத்திய, மாநில அரசின் நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி, பொது காப்பீடு மற்ற அனைத்து துறைகளிலும் வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறை அமலில் உள்ளது.
ஆனால் வங்கிகளுக்கு 2 சனிக்கிழமை மட்டுமே விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு தொழிற்சங்கங்கள் பேசி திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை கூடுதலாக 40 நிமிடங்கள் வேலை நேரத்தை அதிகரித்து ஒப்பு தல் அளிக்கப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் பரிந்துரை செய்யப்பட்ட கோரிக்கை ஏற்கப்படாமல் நிலுவையில் உள்ளது.
எனவே 5 நாட்கள் வேலை நடைமுறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நாடு முழுவதும் இன்று நடக்கிறது. வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் வங்கி சேவை இன்று கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்ய முடியாமலும், எடுக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதர வங்கி சேவைகளும் முடங்கியுள்ளது. இதற்கு மத்திய அரசுதான் பொறுப்பு ஏற்க வேண்டும். 2 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கையை நிறைவேற்றாமல் இருப்பதனால் அதற்கான முழு பொறுப்பையும் மத்திய அரசு ஏற்க வேண்டும். இதனால் ஏற்படுகின்ற சிரமங்களுக்காக வருந்துகிறோம். மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்று பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது
- மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
நடப்பு ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 5 பத்ம விபூஷண், 13 பத்ம பூஷண் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் என மொத்தம் 131 பத்ம விருதுகளை வழங்க ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பத்ம விருதாளர்களுக்கு நாம் தமிழர் ஒருங்குணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைத்துறையில் சாதித்த திருத்தணி ஓதுவார் ஐயா சுவாமிநாதன், அழிந்து வரும் குரும்பா பழங்குடியின ஓவியக்கலையை மீட்டெடுத்த ஓவியக் கலைஞர் ஐயா நீலகிரி கிருஷ்ணன், வெண்கல சிலை வடிப்பதில் சாதித்த சிற்பக் கலைஞர் ஐயா சேலம் காளியப்ப கவுண்டர், இசைத்துறையில் சாதித்த மிருதங்கக் கலைஞர் ஐயா திருவாரூர் பக்தவத்சலம், சிலம்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்துள்ள புதுச்சேரி சிலம்ப கலைஞர் ஐயா கே.பழனிவேலு, பொறியாளர் ஐயா காமகோடி, கலைத்துறையில் சாதித்த சகோதரிகள் காயத்ரி பாலசுப்ரமணியன், ரஞ்சனி பாலசுப்ரமணியன் அவர்களோடு, பத்மபூஷண் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐயா களியப்பட்டி ராமசாமி, ஐயா பழனிசாமி, ஐயா மயிலானந்தன் மற்றும் மலையாள நடிகர் அன்புச்சகோதரர் மம்மூட்டி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த அன்பும், நல்வாழ்த்துகளும்!
கால்நடை மருத்துவ ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கால்நடை மருத்துவர் மதிப்பிற்குரிய ஐயா தஞ்சை புண்ணியமூர்த்தி நடேசன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
திரைத்துறையில் சாதனை புரிந்தமைக்காக இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அன்புத்தம்பி நடிகர் மாதவன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!
தொடர்ந்து பல ஆகச்சிறந்த கலைப்படைப்புகள் தந்து மென்மேலும் சாதனை படைக்க என்னுடைய அன்பும், வாழ்த்துகளும்!" என்று தெரிவித்துள்ளார்.
- 2,500 பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள், 20,000 க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன.
- கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.45 ஆயிரம் கோடி ஏற்றுமதி வருவாயை எட்டியுள்ளது.
திருப்பூர்:
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது. இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம். சுப்பிரமணியன் கூறியதாவது:-
இந்திய ஆயத்த ஆடைத் தொழில் என்பது 10 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 70 சதவீதம் பெண்கள். திருப்பூர் இந்தியாவின் வேலைவாய்ப்பு சார்ந்த ஏற்றுமதி வளர்ச்சியின் முதுகெலும்பாக உருவெடுத்துள்ளது. இங்கு 2,500 பதிவு செய்யப்பட்ட ஏற்றுமதியாளர்கள், 20,000 க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்கள் உள்ளன.
கடந்த 2024-25 நிதியாண்டில் ரூ.45 ஆயிரம் கோடி ஏற்றுமதி வருவாயை எட்டியுள்ளது. சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாக நடைமுறைகளின் மிக உயர்ந்த தரநிலைகளை தொழில்கள் கடைபிடிப்பதன் மூலம், இது உலகளவில் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான தொழிலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள தொடர்ச்சியான கட்டணத் தடைகள் போட்டியிடும் நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் போட்டித்தன்மையை தொடர்ந்து பாதிக்கின்றன. இந்த சவாலை உணர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் அமைய வலியுறுத்தி வந்தது.
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அனைத்து ஆடை தயாரிப்புகளுக்கும் வரியில்லாமல் வர்த்தகம் செய்ய முடியும்.
பெரிய அளவிலான வேலைவாய்ப்பை நிலைநிறுத்துவதற்கும், சிறு, குறு நடுத்தர நிறுவனங்களின் அடிப்படையிலான உற்பத்திக் குழுக்களை வலுப்படுத்துவதற்கும், 27 ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள ஐரோப்பிய யூனியன் சந்தையில் இந்தியாவின் தடத்தை கணிசமாக விரிவுபடுத்துவதற்கும் இத்தகைய முடிவு இன்றியமையாததாக இருக்கும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் ஆடை ஏற்றுமதியில் திருப்பூர் ஏற்கனவே 30 சதவீதம் பங்கைக் கொண்டுள்ளது, இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது திருப்பூர் ஜவுளி மற்றும் ஆடைத் துறைக்கு முன்னேற்றமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாளை முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையின் வடக்கு மாவட்டங்களிலும் (கோயம்புத்தூர் & நீலகிரி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் லேசான மழை (drizzle) பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை முதல் 2-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மற்றும் நாளை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
- கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார்.
சட்டசபை தேர்தலை சந்திக்க விஜயின் த.வெ.க. ஆயத்தமாகி வருகிறது. களத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் கட்சி நிர்வாகிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, பிரசார அணி ஆகியவை நியமிக்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
இந்த கூட்டங்களில் தேர்தலில் வெற்றிக்காக எப்படி பணியாற்றுவது? பூத் கமிட்டிகளை எவ்வாறு அமைப்பது? தொண்டர்களை அரவணைத்து கட்சியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வது என்பது குறித்து ஆலோசனை வழங்குகின்றனர்.
முதல்கட்டமாக சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நாளை (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.சந்திரா அரங்கில் நடைபெறுகிறது.
கூட்டத்துக்கு த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் தலைமை தாங்குகிறார். இதில் நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்குகின்றனர்.
அடுத்தடுத்து பிற மாவட்டங்களிலும் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
- இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள்.
- இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் கட்டணமில்லா பயணம் செய்யும் 'பிங்க்' பஸ்கள் இயக்கத்தினையும், பிங்க் ஆட்டோ மற்றும் அனைத்து பெண்கள் காவல் நிலையத்திற்கு 50 பொலீரோ வாகனங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மகளிர் விடியல் பயணம் திட்டம் (கட்டணமில்லா பஸ்) கடந்த மே 2021-ல் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் இன்று, 5 வழித்தடங்களில் ஒவ்வொரு வழித்தடத்திலும் 2 பஸ்கள் என மொத்தம் 10 பஸ்கள் பிரத்யேகமாக பெண்கள் மட்டும் பயணம் செய்யும் பிங்க் பஸ்களின் இயக்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மேலும், இந்த பஸ்களின் கண்டக்டர் பெண்கள் ஆவார்கள். இவர்களுக்கு என சிறப்பு சீருடை இளஞ்சிவப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
இப்பஸ்கள், பிராட்வே முதல் எண்ணூர், செம்மஞ்சேரி, கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் முதல் விவேகானந்தர் இல்லம், செங்குன்றம் முதல் வள்ளலார் நகர் பகுதிகளுக்கும் இயக்கப்பட உள்ளது.
அதேபோல், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு பிரத்யேகமாக 50 பொலீரோ 4 சக்கர வாகனங்கள் மற்றும் 5 பிங்க் ஆட்டோ சேவையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சிவசங்கர், தா.மோ.அன்பரசன் மற்றும் போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
- இந்த புதிய அதிநவீன ஆஸ்பத்திரி கட்டுமானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார்.
- நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
சென்னை:
தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் குழந்தைகளுக்கான உயர்சிகிச்சை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி பிரிவு கட்டப்படுகிறது.
6.5 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த அதிநவீன ஆஸ்பத்திரியில் 750 படுக்கை வசதிகள் இருக்கும்.
குழந்தை மருத்துவ முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அவசர சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு, கதிரியக்க நோயறிதல் மற்றும் உள்நோயாளிகள் வார்டுகள் கட்டிடம் போன்றவற்றின் கட்டுமானம் ஏ.பிளாக்கில் இடம்பெறும். இது ரூ.125 கோடியில் கட்டப்படுகிறது.
பி.பிளாக்கில் வெளி நோயாளிகள் பிரிவு, தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சிறப்பு வார்டுகள் கட்டிடம், காத்திருப்பு கொட்டகை, பம்ப் அறை, உயர் மின்னழுத்த அறை போன்றவை ரூ.119 கோடியில் கட்டப்படுகிறது.
சி.பிளாக்கில் பேராசிரியர்களுக்கான குடியிருப்பு வளாகம், முதுகலை மாணவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான தங்குமிட வளாகம் மற்றும் பிற வசதிகள் கொண்ட கட்டிடங்கள் ரூ.94 கோடியில் கட்டப்படுகிறது.
இதன் மொத்த மதிப்பு ரூ.338.70 கோடி ஆகும். தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் இந்த ஆஸ்பத்திரி அமைகிறது.
இந்த புதிய அதிநவீன ஆஸ்பத்திரி கட்டுமானத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடந்த நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமை செயலாளர் முருகானந்தம், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் நாராயணசாமி, சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசாரம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
- ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 20-ந் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற பிரசாரம் பிப்ரவரி மாதம் தொடங்கப்பட உள்ளது.
இந்த பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நட்சத்திர பேச்சாளர்கள் தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பிப்ரவரி மாதம் முழுவதும் தீவிர பிரசார பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் இதற்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்திட வேண்டும். இவ்வாறு தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் பேசுபவர்கள் பட்டியலையும் தி.மு.க. பொதுச் செயலாளர் துரை முருகன் வெளியிட்டுள்ளார்.
- நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு தொடர்ந்து போராடி வருகிறது.
- மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மேலும் மதுக்கடைகள் மூடப்படும்.
தஞ்சாவூா்:
தஞ்சையில் இன்று தஞ்சை மத்திய, வடக்கு ,தெற்கு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்ட தி.மு.க சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி அனைத்து தரப்பினரிடம் கருத்துகளை கேட்டு அறிந்து மனு வாங்கினார் .
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வருகிற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்காக, தேர்தல் அறிக்கை குழுவை தலைவர் முதலமைச்சர் அனுப்பியிருக்கிறார். அதை ஒட்டி, முதலிலே ஓசூரிலே இந்த தேர்தல் அறிக்கை குழு சென்று அங்கு இருக்கக்கூடிய தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்து அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.
இன்று தஞ்சை, திருவாரூர் ,நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம் தஞ்சையில் நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் விவசாயிகள், வியாபாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அவர்களது கருத்துக்களை கேட்டு அறிந்து மனு வாங்கி உள்ளோம். இன்று மாலை திருச்சியில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இப்படி ஒவ்வொரு பகுதியாகச் சென்று அங்கிருக்கக்கூடிய மக்களைச் சந்தித்து, இது மக்களுடைய தேர்தல் அறிக்கையாக உருவாக்குவதற்கு உண்டான வேலைகளைச் செய்து வருகிறோம்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கலாம். ஆனால் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படாது என்று. நிச்சயமாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை நிறைவேற்றுவோம் என்று மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதுமட்டுமில்லாமல், அடுத்த ஆட்சிக்கு வரப்போவதும் நாங்கள் தான். அதனால் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றப்போவதும் நாங்கள் தான்.
கடந்த 2006-ல் தேர்தல் அறிக்கை தான் தேர்தலின் கதாநாயகன் என்று அழைக்கப்பட்டது. இந்த முறை தேர்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க அரசு தொடர்ந்து போராடி வருகிறது. நிச்சயமாக ஒன்றியத்திலே ஆட்சி மாற்றம் வரும் பொழுது, அதிலே நாங்கள் சொல்லக்கூடிய நிலையில் நிச்சயமாக மாற்றத்தை எங்களால் பண்ண முடியும். அதுவரை நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும்.
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்பட்டு வருகிறது. மேலும் மதுக்கடைகள் மூடப்படும்.
நேற்று தஞ்சை செங்கிப்பட்டியில் நடந்த மகளிர் அணி மாநாட்டில் சுமார் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். கூட்டம் அதிகமானதால் மாநாட்டுப் பந்தலுக்குள் கூட வர முடியாத அளவில் பெண்கள் அந்த மாநாட்டிலே கலந்து கொண்டார்கள். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பெண்களுக்கான ஆட்சியாக, அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஒரு ஆட்சியாக இருக்கிறது. அதனால் பெண்கள் எங்களுடைய பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.






