search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்- ஜாமீனில் வந்த ஆசிரியைகள் சேலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டனர்
    X

    செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆசிரியைகள் கையெழுத்து போட வந்த காட்சி.

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம்- ஜாமீனில் வந்த ஆசிரியைகள் சேலம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட்டனர்

    • போலீஸ் அதிகாரிகள், ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கொண்டு வந்த நீதிமன்ற உத்தரவு நகலை படித்து பார்த்தனர்.
    • போலீஸ் நிலையத்தில் கையெழுத்து பதிவேட்டில் ஆசிரியைகள் இருவரும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்து போட்டனர்.

    சேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை மாதம் 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. குறிப்பாக பள்ளி மாணவிகளின் டி.சி., மதிப்பெண் சான்றிதழ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பள்ளி வாகனங்கள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கல்வீச்சு தாக்குதலில் போலீசார் காயம் அடைந்தனர்.

    இந்தநிலையில், இறந்த மாணவி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.

    இதில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், தலைமை ஆசிரியர் சிவசங்கரன் ஆகியோர் சேலம் மத்திய சிறையிலும் செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 3 பேரும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 5 பேருக்கும் சென்னை ஐகோர்ட்டு கடந்த 26-ந்தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

    இதையடுத்து 5 பேரும் நேற்று காலை ஜெயிலில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தனர்.

    இதில் ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இருவரும் சேலத்தில் தங்கியிருந்து 4 வாரம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து இருவரும் இன்று காலை செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்தனர்.

    இதையடுத்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள், ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகியோர் கொண்டு வந்த நீதிமன்ற உத்தரவு நகலை படித்து பார்த்தனர். இதையடுத்து போலீஸ் நிலையத்தில் கையெழுத்து பதிவேட்டில் ஆசிரியைகள் இருவரும் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்து போட்டனர்.


    Next Story
    ×