search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்... நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு
    X

    ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்... நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு

    • ஊட்டியில் தற்போது பனியின் தாக்கம் காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது.
    • ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிரை சமாளிக்க வேண்டி அங்குள்ள கடைகளில் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பிகள் போன்ற வெப்பம் சார்ந்த ஆடைகளை வாங்கி வருகின்றனர்.

    ஊட்டி:

    சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். அதிலும் தொடர்விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும்.

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே வாரவிடுமுறை மற்றும் பொங்கல் விடுமுறை தொடர் விடுப்பை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக, ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கடந்த சில நாட்களாகவே அதிகரிக்க தொடங்கி விட்டது. எனவே சுற்றுலா பயணிகளின் வருகையால் ஊட்டியில் உள்ள அனைத்து ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் காட்டேஜ்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் அனைத்து சாலைகளிலும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    ஊட்டியில் தற்போது பனியின் தாக்கம் காரணமாக காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக உள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஊட்டியில் குவிந்து அங்குள்ள பகுதிகளை உற்சாகமாக சுற்றிப்பார்த்து வருகின்றனர்.

    மேலும் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குளிரை சமாளிக்க வேண்டி அங்குள்ள கடைகளில் ஸ்வெட்டர், சால்வை மற்றும் தொப்பிகள் போன்ற வெப்பம் சார்ந்த ஆடைகளை வாங்கி வருகின்றனர். எனவே அங்கு தற்போது வியாபார கடைகளில் விற்பனை சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. மேலும் அங்குள்ள சாக்லெட் கடைகளிலும் இனிப்பு பண்டங்களின் விற்பனை களைகட்டி வருகிறது.

    தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்களில் ஊட்டிக்கு அணிவகுத்து வந்து செல்கின்றனர். எனவே நீலகிரி மாவட்ட எல்லையின் நுழைவு பகுதியான கக்கநல்லா சோதனைச்சாவடியில் இருந்து ஊட்டி வரை தெப்பகாடு மற்றும் மசினகுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போலீசார் அந்தந்த பகுதிகளில் வாகனங்களை தடுத்து நிறுத்தி போக்குவரத்தை சீரமைத்து வருகின்றனர்.

    Next Story
    ×