search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கைது
    X
    கைது

    திருப்பதியில் 10 நாட்களாக சாலையோரம் தங்கி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

    சென்னை கோயம்பேட்டில் இருந்து கடத்திச்சென்று திருப்பதியில் 10 நாட்களாக சாலையோரம் தங்கி 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    அண்ணாநகர்:

    சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி கடந்த மாதம் 27-ந்தேதி திடீரென காணாமல் போனார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர் கோயம்பேடு பஸ் நிலைய போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் விசாரணையில் சிறுமியை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து வந்த ஏழுமலை என்ற 24 வயது வாலிபர் கடத்திச் சென்றிருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் வாலிபர் ஏழுமலை காஞ்சிபுரம் மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து ஏழுமலை, சிறுமியை எங்கு கடத்திச் சென்றார் என்பது தெரியாமல் இருந்தது. சிறுமியிடமும், ஏழுமலையிடமும் செல்போன் எதுவும் இல்லாத நிலையில் ஏழுமலை வீட்டாரின் செல்போன்களை போலீசார் கண்காணித்தனர்.

    அப்போது ஏழுமலை தனது வீட்டில் இருப்பவர்களிடம் தினமும் பேசி வருவது தெரிய வந்தது. அவர் எங்கிருந்து பேசுகிறார் என்பதை ஆய்வு செய்தபோது திருப்பதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் ஏழுமலையை கைது செய்தனர். சிறுமியையும் மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர்.

    வாலிபர் ஏழுமலை, சிறுமியை ஏமாற்றி காதலிப்பதாக கூறி திருப்பதிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். பின்னர் 10 நாட்களாக அங்கு சாலையோரம் தங்கி இருந்து சிறுமியிடம் இரவு நேரங்களில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே அவர் மீது வழிப்பறி வழக்கில் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரிந்தது.

    இதனைத் தொடர்ந்து ஏழுமலை மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. குழந்தை திருமண தடை சட்டப் பிரிவிலும் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான ஏழுமலையை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

    மீட்கப்பட்ட சிறுமியிடம் திருமங்கலம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஏழுமலை கொடுத்த பாலியல் தொல்லைகளை விவரித்துள்ளார். இதனை வாக்குமூலமாக பதிவு செய்துள்ள போலீசார் சிறுமியை காப்பகத்தில் தங்க வைத்தனர்.

    சிறுமியின் தந்தை நடத்தி வந்த அப்பள கம்பெனியில் ஏழுமலை வேலை பார்த்துள்ளார். அப்போதுதான் சிறுமியை அவர் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். பின்னர் 6 மாதத்துக்கு முன்பு கோயம்பேடு மார்க்கெட்டில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இதன் பிறகும் தொடர்ந்து மாணவியுடன் தொடர்பில் இருந்த ஏழுமலை அவரை கடத்தி திருமணம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    Next Story
    ×