search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது செய்யப்பட்ட மணிகண்டன், மருதாசலம், சுபாஷ்.
    X
    கைது செய்யப்பட்ட மணிகண்டன், மருதாசலம், சுபாஷ்.

    பெண் ஊழியர்கள் உடை மாற்றும் ஆபாச வீடியோவை வெளியிட்ட 3 பேர் சிறையில் அடைப்பு

    கோவையில் பெண் ஊழியர்கள் உடை மாற்றும் ஆபாச வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் கைதான 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    கோவை:

    கோவை கண்ணப்பநகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் கே.கே. புதூரை சேர்ந்த இளம்பெண் உள்பட பல பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

    இங்கு வேலை பார்க்கும் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை அங்கு பணியாற்றிய சுபாஷ் என்ற ஊழியர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்தார்.

    இதனை தெரிந்து கொண்ட ரத்தினபுரியை சேர்ந்த ஒரு பெண் ஊழியர் தனது கணவர் மணிகண்டனிடம் இது குறித்து தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சுபாஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் செல்போனை பறித்து அதில் பதிவாகி இருந்த பெண்களின் வீடியோவை அழித்தார்.

    இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் புகார் அளிக்க முன்வராத நிலையில், வழக்குப்பதிவு செய்யாமல், பெண் ஊழியர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த சுபாஷை பெட்ரோல் பங்க் நிர்வாகத்தினர் வேலையை வீட்டு நீக்கி எச்சரித்து அனுப்பினர். இந்தநிலையில் சுபாஷ் செல்போனில் பதிவான வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் ஊழியர்கள் இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரன் உத்தரவின் பேரில், துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன் மேற்பார்வையில் உதவி கமி‌ஷனர் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சந்திரலேகா ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து திருச்சி ரோட்டை சேர்ந்த சுபாஷ் (30), ரத்தினபுரியை சேர்ந்த மணிகண்டன், இருகூர் மாணிக்கம் வீதியை சேர்ந்த மருதாச்சலம் (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் பெண்கள் உடை மாற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்வதற்கு உடந்தையாக இருந்துள்ளார். தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் மருதாச்சலம் வீடியோவில் உள்ள பெண்களின் முகத்தை மறைக்காமல் அப்படியே சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தது தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் ஆபாச படத்தை வெளியிட்டு பெண்களை மானபங்கம் படுத்துதல், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் ஜே.எம்.8 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 3 பேரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் 3 பேரையும் சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×