search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதவரத்தில் மெட்ரோ ரெயிலுக்காக 90 வீடுகள் இடிக்கப்படுகிறது
    X

    மாதவரத்தில் மெட்ரோ ரெயிலுக்காக 90 வீடுகள் இடிக்கப்படுகிறது

    மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக மாதவரம் அசிசி நகரில் 90 வீடுகள் இடிக்கப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்காக நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. #Metrotrain

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காகவும், விரைவு பயணத்துக்காகவும் மெட்ரோ ரெயில் திட்டம் உருவாக்கப்பட்டது. கோயம்பேடு- ஆலந்தூர், சின்னமலை-விமான நிலையம் இடையே உயர்மட்ட பாதையிலும், திருமங்கலம்- சென்டிரல், சைதாப்பேட்டை டி.எம்.எஸ். வரை சுரங்க பாதையிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

    பயணிகள்- பொது மக்களிடையே பெரிதும் வரவேற்பு ஏற்பட்டதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் மெட்ரோ ரெயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

    2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரி இடையே ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 105 கி.மீட்டர் தூர வழித்தட பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    மாதவரம் அசிசிநகரில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த மெட்ரோ ரெயில் நிர்வாகத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அசிசி நகரில் 40 வருடமாக குடியிருந்து வரும் 90 ஏழை குடும்பத்தினரின் வீடுகள் இடிக்கப்பட உள்ளது.

    இதற்காக அந்த குடும்பத்தை சேர்ந்தவர்களை காலி செய்யுமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டு உள்ளது.

    அப்பகுதியில் நிலம் கையகப்படுத்துவதால் 151 குடும்பத்தினர் வீடுகளை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ தலைமை அலுவலகம் முன் கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

    வீடுகளை காலி செய்யமாட்டோம், எங்கள் வீடுகளை இடிக்க கூடாது என மெட்ரோ ரெயில் நிர்வாகத்திடம் வலியுறுத்தினார்கள்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

    மாதவரம் அசிசி நகரில் 40 வருடமாக குடியிருந்து வருகிறோம். திடீரென மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக வீடுகளை காலி செய்யுமாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் கூறுகிறது.

    குறைந்த வருவாய் மூலம் வாழ்க்கை நடத்தி வருகிறோம். திடீரென எங்கள் வீடுகளை காலி செய்யுமாறு கூறுவதால் நாங்கள் எங்கே செல்வது என்று தெரிய வில்லை. குழந்தை குட்டிகளுடன் நாங்கள் தவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Metrotrain

    Next Story
    ×