search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறை அருகே கார் மோதி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 5 பேர் பலி
    X

    மணப்பாறை அருகே கார் மோதி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 5 பேர் பலி

    மணப்பாறை அருகே நடந்த கோர விபத்தில் கார் மோதி பழனிக்கு பாதயாத்திரை சென்ற 5 பக்தர்கள் பலியானார்கள்.

    மணப்பாறை:

    திருச்சி மலைக்கோட்டை சமஸ்பிரான் தெருவை சேர்ந்தவர் சலீம் (வயது 40). இவர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருச்சியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர்.

    அவர்கள் நேற்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மணப்பாறையை அடுத்த பாலப்பட்டி அருகே ரோட்டரமாக சென்றனர். அப்போது பின்னால் சென்னையில் இருந்து தேனி மாவட்டம் சின்னமனூர் நோக்கி சென்ற சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நடந்து சென்ற பக்தர்கள் மீது ஒருவர்பின் ஒருவராக மோதி தூக்கி வீசியது.

    இந்த கோர விபத்தில் சலீம், திருச்சி உறையூரை சேர்ந்த ஹரி (32), ஜீவா நகரை சேர்ந்த சீனிவாசன் (30), உறையூர் முதலியார் தெருவை சேர்ந்த டெய்லர் துவாரகன் (30), சின்ன கம்மாள தெருவை சேர்ந்த குணா (37) ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் அவர்களுடன் சென்ற ஆட்டோ டிரைவர் குமார், காரில் பயணம் செய்த சின்னமனூரை சேர்ந்த நகைக்கடை அதிபர் சம்பாசி, அவரது மனைவி ஜெயஸ்ரீ, மகள் ஐஸ்வர்யா, கார் டிரைவர் மணப்பாறையை சேர்ந்த செபாஸ்டின் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு வனிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காயம் அடைந்தவர்களை மீட்டு மணப்பாறை தனியார் ஆஸ்பத்திரி மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல் கட்ட விசாரணையில் கார் டிரைவர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் நாளில் இந்த கோர விபத்து நடந்துள்ளது இறந்தவர்களின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×