search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூர் அருகே கார்பெண்டர் குத்திக் கொலை
    X

    திருப்பத்தூர் அருகே கார்பெண்டர் குத்திக் கொலை

    திருப்பத்தூர் அருகே கார்பெண்டர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த ஆதி சக்தி நகரை சேர்ந்தவர் சக்தி (வயது 45). கார்பெண்டர். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். சக்தியின் எதிர் வீட்டில் வசிப்பவர் ஜெயக்குமார் (35). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி கனிமொழி.

    சக்தி, ஜெயக்குமார் இடையே வழித்தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இதனால் அடிக்கடி இருவரும் மோதிக் கொண்டனர். இந்நிலையில், நேற்று காலை பொதுக் குழாயில் சக்தி மனைவியும், ஜெயக்குமாரின் மனைவியும் தண்ணீர் பிடித்தனர்.

    அப்போது, யார் முதலில் தண்ணீர் பிடிக்க வேண்டும் என்பதில் இருவரின் மனைவிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் செய்தனர். மாறிமாறி திட்டி கொண்டனர். அக்கம், பக்கம் வசிப்போர் சமரசம் செய்தனர்.

    இதையடுத்து நேற்றிரவு ஜெயக்குமார் மனைவி கனிமொழி, சக்தியிடம் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த ஜெயக்குமார் மதுபோதையில் இருந்தார். எதிரியிடம் தனது மனைவி பேசுவதை பார்த்து கோபமடைந்தார்.

    ஆத்திரமடைந்த ஜெயக்குமார், சக்தியிடம் சென்று தன்னுடைய மனைவியிடம் ‘‘உனக்கு என்ன பேச்சு’’ என கேட்டு தகராறில் ஈடுபட்டார். மனைவி கனிமொழியையும் அடித்து வீட்டிற்கு விரட்டினார்.

    மோதல் முற்றிய நிலையில், பகையை இன்றோடு தீர்த்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு ஜெயக்குமார் சென்றார். ஆத்திரம் அவரது கண்ணை மறைத்தது. உடனடியாக ஜெயக்குமார் தனது வீட்டிற்கு வேக, வேகமாக ஓடிச் சென்று கத்தியை எடுத்து வந்தார்.

    சக்தியை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில், சக்தியின் வயிறு, மார்பு பகுதிகளில் பலத்த கத்திக் குத்து விழுந்தது. குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் அவர் சுருண்டு விழுந்தார். பழி தீர்த்த ஜெயக்குமார் கொலை செய்த கத்தியுடன் அங்கிருந்து தப்பினார்.

    சுய நினைவின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சக்தியை, அவரது உறவினர்கள் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் சக்தியை பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பிறகு, சக்தியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆத்திரமடைந்த சக்தியின் உறவினர்கள், கொலையாளி ஜெயக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை அடித்து, நொறுக்கினர்.

    வீடு முழுவதுமாக சூறையாடப்பட்டது. இதனால் அங்கு பதட்டம் நிலவியது. தகவலறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம், தாலுகா இன்ஸ்பெக்டர் செந்தில் குமார், போலீசார் சம்பவ பகுதியில் குவிந்தனர்.

    கொலையுண்ட சக்தியின் உறவினர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து, சம்பவ இடத்தில் பதட்டம் நிலவுவதால் போலீசார் அசாம்பாவிதம் தொடராமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே, தப்பி ஓடிய கொலையாளி ஜெயக்குமார் போலீசில் சிக்கியுள்ளார். அவரிடம், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×