search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயருகிறது
    X

    மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயருகிறது

    மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட அணைக்கு நீர்வரத்து பல மடங்கு கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
    மேட்டூர்:

    கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாதுகாப்பு கருதி கூடுதல் தண்ணீர் மேட்டூர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6028 கன அடியாகவும், நீர் மட்டம் 65.48 அடியாகவும் இருந்தது.

    இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 7628 கன அடியாகவும், நீர் மட்டம் 66.28 அடியாகவும் உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்பட்டுள்ளது.

    அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரை விட அணைக்கு நீர்வரத்து பல மடங்கு கூடுதலாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கலிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள நீர் வீழ்ச்சிகளில் குளித்து மகிழ்ந்ததுடன் பரிசல் சவாரியும் சென்று மகிழ்ந்தனர்.

    ஓகேனக்கலுக்கு நீர் வரத்து நேற்று 8100 கன அடியாக இருந்தது. இன்று நீர் வரத்து மேலும் அதிகரித்து 9500 கன அடியாக அதிகரித்தது. மேலும் கர்நாடகாவில் தொடர் மழை பெய்த வருவதால் வரும் நாட்களிலும் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் துறையில் இருந்து மாமரத்து பட்டி வரை இன்று பரிசல்கள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் பரிசல் இயக்கப்படுவதை தடுக்க போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    Next Story
    ×