search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணப்பாறை அருகே தடுப்பு சுவரில் கார் மோதி ஜோதிடர் பலி
    X

    மணப்பாறை அருகே தடுப்பு சுவரில் கார் மோதி ஜோதிடர் பலி

    மணப்பாறை அருகே பிறந்த நாளன்று ஜோதிடர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் காஜா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 34). எம்.ஏ. பட்டதாரியான இவர் ஜோதிட தொழில் பார்த்து வந்தார்.

    நேற்றிரவு இவர் சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒட்டன்சத்திரத்தில் இருந்து காரில் புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார்.

    மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே சவேரியார்புரம் திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது, திடீரென நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராஜேஷ் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினார்.

    இது குறித்த தகவல் அறிந்ததும் வையம்பட்டி போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ராஜேசை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் இறந்தார்.

    சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான ராஜேசுக்கு இன்று பிறந்த நாள் ஆகும். அதனை கொண்டாட இருந்த நிலையில் அவர் விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×