search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: மாணவர் கைது
    X

    காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: மாணவர் கைது

    தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை, ‘சுவாதிக்கு ஏற்பட்ட நிலை தான் உனக்கும் ஏற்படும்’ என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சக மாணவரை போலீசார் கைது செய்தனர்.
    விக்கிரவாண்டி:

    சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி மென்பொருள் என்ஜினீயர் சுவாதி அரிவாளால் வெட்டி சாய்க்கப்பட்டார். இது தொடர்பாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஒருதலைக்காதல் விவகாரத்தினால் சுவாதியை கொலை செய்தது தெரியவந்தது.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், விழுப்புரத்தில் தன்னை காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    பரபரப்பான இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுதாவது:-

    விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய மாணவி விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு கல்லூரியில் லேப் டெக்னீஷியன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் தஞ்சாவூர் மாவட்டம் புங்கனூரை சேர்ந்த மாணவர் ஒருவரும் லேப் டெக்னீஷியன் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி இருந்து படித்து வந்தார்.

    இந்நிலையில் மாணவர், தன்னுடன் படிக்கும் அந்த மாணவியை பார்த்த நாள் முதல் அவர் மீது காதல் கொண்டதாக தெரிகிறது. இதையடுத்து அவர் மீது இருந்த அளவு கடந்த காதலை அவரிடம் தெரிவிக்கும் விதமாக கடந்த 3 மாதங்களாக மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மாணவியிடம் தனது காதலை தெரிவித்து வந்துள்ளார்.

    அதற்கு அந்த மாணவி தான் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர், நான் நன்றாக படிக்க வேண்டும் என்னை இதுபோன்று பின் தொடர்ந்து வந்து தொந்தரவு செய்யாதே என்று கூறி அந்த மாணவனின் காதலை நிராகரித்து விட்டார். இருப்பினும் அந்த மாணவர், தன்னை காதலிக்குமாறு அந்த மாணவியை தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல், அந்த மாணவி கல்லூரிக்கு வந்தார். தொடர்ந்து வகுப்பு இடைவேளை நேரத்தில் மாணவி அங்குள்ள வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர், மாணவியிடம் தன்னுடைய காதலை வெளிபடுத்தினார். அப்போதும் அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவர், அந்த மாணவியிடம் தன்னை காதலிக்க மறுத்தால் ‘நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதிக்கு ஏற்பட்ட நிலைதான் உனக்கும் ஏற்படும்’ என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் பயத்தில் இருந்த மாணவி, தனது பெற்றோரிடம் சென்று இதுகுறித்து கூறி கண்ணீர் விட்டு அழுதார்.

    இதையடுத்து மாணவியின் பெற்றோர் உடனடியாக இந்த சம்பவம் பற்றி விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து, மாணவிக்கு மிரட்டல் விடுத்த மாணவரை தேடி வந்தனர்.

    இந்நிலையில் கல்லூரி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×