search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் மாயம்
    X

    தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் மாயம்

    பெரம்பலூர் அருகே பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதி வைத்து விட்டு பள்ளி மாணவன் மாயமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தழுதாழை கிராமம் காந்திநகரை சேர்ந்தவர் ஜாஹீர்பாஷா. இவரது மகன் பாவேஜ் பாஷா (வயது 17). இவர் பெரம்பலூர் அரசு மாணவர் விடுதியில் தங்கி பெரம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் உள்ள சூப்பர் 30 என்ற சிறப்பு பிரிவில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 11-ந்தேதி பாவேஜ்பாஷா திடீரென காணாமல் போனார். அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் அவரது பெற்றோரிடம் போனில் தகவல் தெரிவித்து விட்டு அவரின் அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு பாவேஜ் பாஷா எழுதி வைத்துவிட்டு சென்ற கடிதம் ஒன்று இருந்தது.

    அந்த கடிதத்தில் மருத்துவர் ஆக வேண்டுமென்ற எனது பெற்றோரின் ஆசை நிறைவேறாமல் போகும். தன்னால் அந்த அளவிற்கு படிக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என எழுதப்பட்டிருந்தது.

    இது குறித்து விடுதி காப்பாளர் ராஜேந்திரன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடிதத்தை கைப்பற்றினர். மேலும் இது குறித்து ஜாஹீர்பாஷா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து பாவேஜ் பாஷாவை தேடிவருகிறார்.
    Next Story
    ×