என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
    • 2011-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.

    10-வது ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2011-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடந்தது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து 2-வது முறையாக மகுடம் சூடியது.

    கவுதம் கம்பீர் (97 ரன்), கேப்டன் டோனி (91 ரன்) ஆகியோரின் அற்புதமான பேட்டிங் வெற்றிக்கு வித்திட்டது. நேற்றுடன் (ஏப்ரல் 2) இந்தியா உலகக் கோப்பையை ருசித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை அந்த உலகக் கோப்பையில் ஆடிய இந்திய வீரர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் மேலும் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால், இறுதிப்போட்டியில் இரண்டு முறை டாஸ் போடப்பட்டது. எம்.எஸ். தோனி மற்றும் குமார் சங்கக்காரா இருவரும் முதல் முயற்சியிலேயே டாஸை வென்றதாக நினைத்தனர்.

    சங்கக்காராவின் அழைப்பை கேட்கவில்லை என்று நடுவர் ஜெஃப் குரோவ் கூறினார். இதனால் டாஸ் மீண்டும் போடப்பட்டது. ஐசிசி இறுதிப்போட்டியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இந்த போட்டியில் மட்டும் தான் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

    • கொல்கத்தா அணியின் முக்கிய ஆயுதமாக சுழற்பந்து வீச்சு பார்க்கப்படுகிறது.
    • இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 15-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்சை எதிர்கொள்கிறது.

    ரஹானே தலைமையிலான கொல்கத்தா அணி தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடம் வீழ்ந்தது. அடுத்த ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை தோற்கடித்தது. முந்தைய ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண் அடைந்தது.

    மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 116 ரன்னில் சுருண்டது. ஒட்டுமொத்த பேட்டிங்கும் சொதப்பியது. அதிரடி ஆட்டக்காரரான வெங்கடேஷ் அய்யர், சுனில் நரின், ஆந்த்ரே ரஸ்செல், ரிங்கு சிங் ஆகியோரின் தடுமாற்றமான பேட்டிங் பின்னடைவாக அமைந்துள்ளது. இதேபோல் பந்து வீச்சில் ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணாவின் வேகப்பந்து வீச்சு நிலையற்றதாக இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா முதுகு வலி பிரச்சினையில் இருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

    கொல்கத்தா அணியின் முக்கிய ஆயுதமாக சுழற்பந்து வீச்சு பார்க்கப்படுகிறது. சுழலுக்கு சாதகமான ஈடன் கார்டனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி சுழற்பந்து வீச்சு பெரிதாக எடுபடவில்லை. உள்ளூர் அணிக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிக்கப்படாததே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இனிவரும் ஆட்டங்களுக்கு சுழலுக்கு சாதகமான ஆடுகளம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்ளூர் சூழ்நிலையை பயன்படுத்தி கொல்கத்தா அணி எழுச்சி பெற முயற்சிக்கும்.

    ஐதராபாத் அணி தனது முதலாவது ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக 286 ரன் குவித்து மலைக்க வைத்ததுடன் 44 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அடுத்த 2 ஆட்டங்களில் முறையே 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவிடமும், 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடமும் தோல்வியை தழுவியது. அந்த இரு ஆட்டங்களிலும் 190, 163 ரன்களே எடுத்தது. அந்த அணியின் பலமான அதிரடி பேட்டிங் சரியாக 'கிளிக்' ஆகாதது கடந்த 2 ஆட்டங்களிலும் தோல்விக்கு வழிவகுத்தது. இதனால் அவர்கள் தங்களது வியூகத்தை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

    ஐதராபாத் அணியில் பேட்டிங்கில் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, ஹென்ரிக் கிளாசென் என்று பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. பந்து வீச்சில் கம்மின்ஸ், முகமது ஷமி, ஹர்ஷல் பட்டேல், ஜீஷன் அன்சாரி வலுசேர்க்கிறார்கள்.

    கடந்த ஆண்டு இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணி கொல்கத்தாவிடம் தோற்று கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க இது நல்ல வாய்ப்பாகும். இரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப தீவிரம் காட்டுவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 19-ல் கொல்கத்தாவும், 9-ல் ஐதராபாத்தும் வெற்றி பெற்றுள்ளன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    கொல்கத்தா: குயின்டான் டி காக், சுனில் நரின், அஜிங்யா ரஹானே (கேப்டன்), அங்கிரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ஆந்த்ரே ரஸ்செல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், வருண் சக்ரவர்த்தி.

    ஐதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, அனிகெட் வர்மா, ஹென்ரிச் கிளாசென், அபினவ் மனோகர், கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் பட்டேல், முகமது ஷமி, ஜீஷன் அன்சாரி.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்.
    • 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    பெங்களூரு:

    பெங்களூருவில் நேற்று நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ். 3 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற முகமது சிராஜ் கூறியதாவது:

    நான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டேன். நான் 7 வருடங்கள் இங்கு இருந்தேன். ஜெர்சியை சிவப்பு நிறத்தில் இருந்து நீலமாக மாற்றினேன். உணர்ச்சிவசப்பட்டேன், ஆனால் பந்து கிடைத்ததும் எனக்கு நன்றாக இருந்தது. நான் ரொனால்டோவின் ரசிகன், அதனால் கொண்டாட்டம்.

    நான் தொடர்ந்து விளையாடி வருகிறேன். இடைவேளையின் போது என் தவறுகளை சரிசெய்து, என் உடற்தகுதியை மேம்படுத்த முயற்சித்தேன்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி என்னை அழைத்துச் சென்றதும் நான் ஆஷிஷ் பாயிடம் பேசினேன். நெஹ்ரா எனது பந்துவீச்சை அனுபவிக்கச் சொல்கிறார். இஷாந்த் பாய் என்ன லைன் அண்ட் லென்த் பந்து வீசவேண்டும் என்று சொல்கிறார். எனக்கு நம்பிக்கை இருக்கவேண்டும். பிட்ச் எனக்கு ஒரு பொருட்டல்ல என தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 169 ரன்களை எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய குஜராத் 170 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

    பெங்களூரு:

    ஐ.பி.எல். தொடரின் 14-வது லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆர்சிபி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணி 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின் லிவிங்ஸ்டன்-சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடியது.

    லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்து 54 ரன்னில் அவுட்டானார். சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. சுப்மன் கில் 14 ரன்னில் அவுட்டானார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் சாய் சுதர்சன் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதிரடியாக ஆடிய ஜாஸ் பட்லர் 31 பந்தில் அரை சதம் கடந்தார். அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவர் 73 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், குஜராத் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் குஜராத் பெறும் 2-வது வெற்றி இதுவாகும். இது ஆர்சிபி அணி பெற்ற முதல் தோல்வி ஆகும்.

    • ஆர்சிபி 35 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
    • லிவிங்ஸ்டன் 54 ரன்களும், ஜித்தேஷ் சர்மா 33 ரன்களும் அடித்தனர்.

    ஐபிஎல் தொடரின் 14ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்ரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சு தேர்வு செய்தார்.

    அதன்படி ஆர்சிபி அணியின் பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர் இரண்டாவது ஓவரில் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அர்ஷத் கான் வீசிய பந்து லெக் சைடு தூக்கி அடிக்க முயன்ற விராட் கோலி பிரசித் கிருஷ்ணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 6 பந்துகளில் ஏழு ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 4 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனால் ஆர்சிபி 13 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது

    அடுத்து பில் சால்ட் உடன் ரஜத் பட்டிதார் களம் ஜோடி சேர்ந்தார். ஆர்சிபி அணி பேட்ஸ்மேன்கள் குஜராத் பந்துவீச்சை எதிர்கொள்ள மிகவும் திணறினார்.

    பில் சால்ட் ஓரளவு தாக்கு பிடித்து விளையாடிய நிலையிலும் 14 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்தில் ஆட்டம் இழந்தார். இதனால் 35 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

    ரஜத் படிதார் 12 ரன் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் லிவிங்ஸ்டன்- சித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவுக்கு தாக்குப் பிடித்து விளையாடியது. இதனால் 420க்கு 4 என இருந்த ஆர்சிபி 94-க்கு 5 என ஆகியது. சித்தேஷ் சர்மா 33 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த குருணால் பாண்ட்யா 5 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார்.

    7-ஆவது விக்கெட்டுக்கு லிவிங்ஸ்டன் உடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ரன்கள் குவிக்க முயற்சித்த போதிலும் குஜராத் பந்து வீச்சாளர்கள் அதற்கு இடம் கொடுக்கவில்லை.

    ஆர்சிபி 17 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்திருந்தது. 18-ஆவது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் ரஷித் கான் 3 சிக்ஸ் கொடுக்க ஆர்சிபி அணிக்கு 20 ரன்கள் கிடைத்தது. 3 சிக்சரையும் அடித்த லிவிங்ஸ்டன் 39 பந்தில் 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆர்சிபி 18 ஓவர் முடிவில் 149 ரன்கள் எடுத்தது.

    19-ஆவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தார். அவர் 40 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் முகமது சிராஜ் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    கடைசி ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் ஐந்து பந்துகளில் 16 ரன்கள் விளாசிய டிம் டேவிட் கடைசி பந்தில் க்ளீன் போல்டானார். இதனால் ஆர்சிபி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் சேர்த்துள்ளது. டிம் டேவிட் 18 பந்தில் 32 ரன்கள் எடுத்தார்.

    குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டும், சாய் சுதர்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ரஷித் கான் 4 ஓவரில் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பின்னர் 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
    • தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று வடிவிலான தொடரிலும் விளையாடுகிறது.

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடும் கிரிக்கெட் தொடர்பான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    முதலில் வெஸ்ட் இண்டீஸ் அக்டோபர் மாதம் இந்தியா வருகிறது. அக்டோபர் 2ஆம் தேதியில் இருந்து அக்டோபர் 15ஆம் தேதி வரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

    அதன்பின் நவம்பர் மாதம் தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வருகிறது. தென்ஆப்பிரிக்கா அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

    டெஸ்ட் தொடர் நவம்பர் 14ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஒருநாள் தொடர் நவம்பர் 30ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி வரை நடக்கிறது. டி20 தொடர் 9ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி வரை நடக்கிறது.

    • ஆர்சிபி முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • சொந்த மைதானமான சின்னசாமியில் முதன்முறையாக விளையாடுகிறது.

    ஐபிஎல் 2025 சீசனின் 14-வது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணி விவரம்:-

    பில் சால்ட், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஸ்வர் குமார், ஹேசில்வுட், யாஷ் தயால்.

    குஜராத் டைட்டன்ஸ்:-

    சுப்மன் கில், சாய் சுதர்சன், பட்லர், ஷாருக்கான், ராகுல் டெவாட்டியா, அர்ஷத் கான், ரஷித் கான், சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா.

    • மும்பை அணிக்காக நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை.
    • நாங்கள் கோப்பையை வென்ற சீசன்களில் எனது அணி வீரர்களாக இருந்தவர்கள் இப்போது பயிற்சியாளராக உள்ளனர்.

    ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

    3 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை 2 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டியில் வெற்றியும் பெற்று புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, இந்த சீசனில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கி விளையாடுகிறார்.

    இந்நிலையில் எனது பதவி மாறியிருக்கலாம். ஆனால் அணிக்காக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நான் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்தேன். இப்போது, நான் தொடக்க வீரராக இருக்கிறேன். நான் கேப்டனாக இருந்தேன். இப்போது, கேப்டனாக இல்லை. நாங்கள் கோப்பையை வென்ற சீசன்களில் எனது அணி வீரர்களாக இருந்தவர்கள் இப்போது பயிற்சியாளராக உள்ளனர்.

    எனவே, பாத்திரங்கள் (Role) மாறிவிட்டன. நிறைய மாறிவிட்டன. ஆனால் மனநிலை அப்படியே உள்ளது. இந்த அணிக்காக நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பது மாறவில்லை. அதுதான் வெளியே சென்று ஆட்டங்களையும் கோப்பைகளையும் வெல்வது. அதற்காகவே மும்பை இந்தியன்ஸ் பெயர் பெற்றது. பல ஆண்டுகளாக, நாங்கள் கோப்பைகளை வென்றுள்ளோம். யாரும் நம்பாத சூழ்நிலைகளில் இருந்து ஆட்டங்களை மாற்றியமைத்துள்ளோம்.

    எங்களிடம் பல இளம் இந்திய வீரர்களும் சிறந்த திறமைகளை கொண்டுள்ளனர். அவர்களுடன் விளையாட நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். டாடா ஐபிஎல் கோப்பையை வென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் பெருமையைக் கொண்டு வருவதே எனது இலக்கு.

    என்று ரோகித் சர்மா கூறினார்.

    • முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக மட்டுமே சஞ்சு விளையாடினார்.
    • முதல் மூன்று போட்டிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. அந்த தொடரின் போது சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது.

    இதனால் ஐபிஎல் தொடரின் முதல் சில ஆட்டங்களை அவர் தவறவிடுவார் என்று கூறப்பட்டிருந்த நிலையில், அவர் தனது பேட்டிங் உடற்தகுதிய நிரூபித்த காரணத்தால் இத்தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இம்பேக்ட் பிளேயாராக விளையாடினார். இதனால் இந்த மூன்று போட்டிகளுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரியான் பராக் நியமிக்கப்பட்டிருந்தார்.

    சென்னைக்கு எதிரான போட்டி முடிந்த கையோடு தனது விக்கெட் கீப்பிங் தகுதியை நிரூபிக்க வேண்டி சஞ்சு சாம்சன் பெங்களூருவில் உள்ள என்சிஏவிற்கு சென்றுள்ளார்.

    அங்கு நடந்த பரிசோதனையில் தேர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அடுத்த போட்டிகளில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுவதுடன் அணியின் விக்கெட் கீப்பராகவும் சஞ்சு சாம்சன் விளையாடுவார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • பும்ராவின் காயம் சற்று கடுமையானது.
    • பும்ராவுக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அவரது முதுகில் மீண்டும் ஒரு எழும்பு முறிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் அவர் அணிக்கு திரும்புவது தாமதமாகிறது.

    அவர் காயம் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், பும்ராவின் காயம் சற்று கடுமையானது. அவருக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை. பும்ரா கூட இதில் கவனமாக இருக்கிறார்.

    காயம் குணமடைந்து பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் முழு வீச்சில் இன்னும் பந்து வீசவில்லை. அதற்கு சில காலம் ஆகலாம்.

    அவர் அணிக்கு திரும்புவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவர் ஏப்ரல் 2-வது வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார். குறிப்பாக இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என கூறப்படுகிறது.

    இதனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிகிறது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடினார்.
    • தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியிலிருந்து விலகுகிறார்.

    இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் விளையாடி வந்தவர். ரஞ்சி தொடரில் மும்பை அணியின் தொடக்க வீரராக ஜெய்ஸ்வால் களமிறங்கினார்.

    இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக மும்பை அணியில் இருந்து கோவா அணிக்கு மாற்றுவதற்கு மும்பை கிரிக்கெட் வாரியத்திடம் NOC (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) சான்றிதலை ஜெய்ஸ்வால் கோரியுள்ளார்.

    அடுத்த ரஞ்சி சீசனில் இருந்து கோவா அணிக்கு விளையாட ஜெய்ஸ்வால் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடையே பேசும் பொருளாக மாறியுள்ளது.

    • பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்தது.
    • பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது என ஜாகீர் கான் கூறினார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய 13-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி லக்னோ அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, அதிரடியாக விளையாடி 16.2 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்விக்கு பிட்ச் பராமரிப்பாளரே காரணம் என லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஜாகிர் கான் குற்றம் சுமத்தி இருக்கிறார். இந்த விவகாரம் ஐபிஎல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இது எங்களது சொந்த மைதானத்தில் நடந்த போட்டி போலவே இல்லை. இது சொந்த மைதானம் என்று சொல்லும் நிலையில் எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மற்ற அணிகள் சொந்த மைதானத்தில் சில சாதகங்களைப் பெறுகின்றன. ஆனால், இங்கு பிட்சை உருவாக்கிய ஊழியர் இது எங்களின் சொந்த மைதானம் என்பதைச் சிந்திக்காமல் செயல்பட்டது போல உள்ளது.

    பஞ்சாப் அணியின் பிட்ச் ஊழியர் இந்த பிட்சை தயாரித்தது போல உள்ளது. இது குறித்து நாங்கள் சீக்கிரம் ஒரு முடிவை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் நடக்கும் முதல் மற்றும் கடைசி போட்டியாக இது இருக்கும் என நம்புகிறேன்.

    ஏனெனில், லக்னோ அணியின் ரசிகர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். அவர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இங்கே வந்தார்கள். முதல் சொந்த மைதானப் போட்டி என்ற ஆர்வத்துடன் இருந்தார்கள். அவர்களும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள்.

    என ஜாகீர் கான் கூறியுள்ளார்.

    ×