என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கடந்த 9.11.2019 அன்று புதுவை கம்பன் கலை அரங்கத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் இந்து தெய்வங்களைப்பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். இது, இந்து கோவில்களையும், தெய்வங்களையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும் கூறி இந்து முன்னணி பொதுச்செயலாளர் டி.என். கண்ணன் பெரம்பலூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    திருமாவளவன் பேசிய இடம் புதுவை என்பதால் பெரம்பலூர் போலீசார் பின்னர் அந்த வழக்கை தமிழக டி.ஜி.பி. மூலமாக புதுவை போலீசுக்கு மாற்றினார்கள்.

    அதன் அடிப்படையில் புதுவை ஒதியஞ்சாலை போலீசார் திருமாவளவன் மீது மத அவமதிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதியதில் தச்சு தொழிலாளி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    சேதராப்பட்டு:

    புதுவை ஆலங்குப்பத்தை அடுத்த சஞ்சீவிநகர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணி என்கிற உலகநாதன் (வயது 38). தச்சு தொழிலாளி. இவரது மனைவி மாதா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்த நிலையில் மணி தனது மோட்டார் சைக்கிளில் மகன் மற்றும் மகளை தவளக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டில் கொண்டு விட்டு விட்டு சொந்த ஊர் நோக்கி திரும்பிக் கொண்டு இருந்தார்.

    மொரட்டாண்டி டோல்கேட் திண்டிவனம் பைபாஸ் சாலையில் மணி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆரோவில்லில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டு இருந்தது.

    அப்போது மணி சாலையை கடக்க முயன்றார். திடீரென எதிர்பாராதவிதமாக அங்கு வந்த டிப்பர் லாரி மணி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் லாரியின் பின்பக்க டயர் மணியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மணி தலை நசுங்கி பலியானார். இதனை அறிந்த லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய்தங்கம் மற்றும் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த எச்சரிக்கை விளக்கை பொருட்படுத்தாமல் சாலையை கடந்ததே இந்த விபத்துக்கான காரணம் என அப்பகுதியை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினர்.

    புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்று கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    புதுச்சேரி:

    கொரோனா வைரஸ் தாக்குதலை தடுப்பதற்கு இதுவரை எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கலெக்டர் அருண் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்கள் சக்திவேல், தமிழ்ச்செல்வம், சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், துணை இயக்குனர் ரகுநாத் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவை அரசு துறைகள் சார்பில் பேரிடர் மேலாண்மை அமைப்பை உருவாக்கி மக்கள் அதிகம் கூடும் இடமான பஸ் நிலையம், ரெயில் நிலையம், கடற்கரை ஆகிய இடங்களில் கொரோனா வைரஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவை தொடர்ந்து இருந்தால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுவையில் முக கவசம் (மாஸ்க்) தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுவையில் கொரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சுகாதாரம், பள்ளி கல்வி, சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் துணை இயக்குனர்கள் கலந்து கொண்டனர்.
    கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் ஓட்டல்களில் அறைகள் பல காலியாக உள்ளன.
    புதுச்சேரி:

    சீனாவில் பலரது உயிரை பறித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.

    குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் விமான நிலையத்தில் பலத்த சோதனைக்கு பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

    புதுவையை பொறுத்தவரை சுற்றுலா பயணிகள் வருகைதான் நகரத்தை சிறப்பாக வைத்திருக்கும். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவைக்கு சுற்றுலா வருவதை தவிர்த்துள்ளனர்.

    இதேபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் ஓட்டல்களில் அறைகள் பல காலியாக உள்ளன. கடற்கரை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. வெளிமாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தே புதுவையை சுற்றிப்பார்த்தனர். 
    பூமியான்பேட்டையில் தாய்-மகளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவன்- மனைவியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை பூமியான்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி துர்காதேவி (வயது36). நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த முருகையனின் குடும்பத்தினர் தங்கள் வீட்டில் பூஜை செய்த எலுமிச்சை பழத்தை துர்காதேவி வீட்டு முன்பு வீசினார்கள்.

    இதனை துர்காதேவி கேட்டபோது ஆத்திரம் அடைந்த முருகையன், அவரது மனைவி எலிசபெத் ஆகியோர் துர்காதேவியை தகாத வாரத்தைகளால் திட்டினர். இதனை துர்காதேவியின் மகள் ஹரிணி தட்டி கேட்டார். அப்போது முருகையனும், அவரது மனைவி எலிசபெத்தும் சேர்ந்து துர்காதேவியையும் அவரது மகள் ஹரிணியையும் தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். 

    இது குறித்து துர்காதேவி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து முருகையன் மற்றும் அவரது மனைவி எலிசபெத் ஆகிய 2 பேரையும் தேடி வருகிறார்கள். 
    புதுவையில் 10 ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்க மறுத்து வருவதால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
    புதுச்சேரி:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி பரவியது. இதனால் 10 ரூபாய் நாணயங்களை பெற வியாபாரிகள் மறுத்தனர். இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்தது.

    இருப்பினும் தமிழகம் மற்றும் புதுவையில் 10 ரூபாய் நாணயத்தை பெற வியாபாரிகள் மறுத்தனர். அதோடு வங்கிகளும் 10 ரூபாய் நாணயத்தை பெறவில்லை. இதுதொடர்பாக வங்கிகள் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து வங்கிகள் 10 ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொண்டனர்.

    ஆனால் புதுவையில் இதுவரை 10 ரூபாய் நாணயத்தை வியாபாரிகள் பெற மறுத்து வருகிறார்கள். இதனால் 10 ரூபாய் நாணயம் அடியோடு புழக்கத்திலேயே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வீட்டுக்கு வீடு 10 ரூபாய் நாணயங்கள் தேங்கி உள்ளது. இது தொடர்பாக வங்கிகள்தான் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    புதுவையை பொறுத்த மட்டில் பெரும்பாலான மக்கள் இந்தியன் வங்கியில்தான் கணக்கு வைத்துள்ளனர். ஆனால், இந்த வங்கியும் 10 ரூபாய் நாணயம் குறித்து இந்த ஒரு விளக்கத்தையும் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறது.
    சேதராப்பட்டில் சிக்கன்- 65 செய்து தராததால் ஆத்திரம் அடைந்த அண்ணன்-தம்பிகள் ஓட்டலில் சமையல் மாஸ்டரை சல்லி கரண்டியால் தாக்கினர்.
    சேதராப்பட்டு:

    வானூர் அருகே ஓட்டை கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது44). இவர் சேதராப்பட்டில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலைசெய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சமையல் வேலை முடிந்ததும் சுரேஷ் வீட்டுக்கு செல்ல தயாரானார். அப்போது கொண்டிமேடு கிராமத்தை சேர்ந்த அய்யனார் என்பவரின் தம்பி பன்னீர் குடிபோதையில் சிக்கன்-65 தயாரித்து தருமாறு சுரேசிடம் கேட்டார். அதற்கு சுரேஷ் வியாபாரம் முடிந்து விட்டதால் ஓட்டலை மூடபோகிறேன் என்று தெரிவித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பன்னீர் தகாத வார்த்தைகளால் திட்டி சுரேசை தாக்கினார். மேலும் போன் செய்து தனது சகோதரர்களான அய்யனார் மற்றும் ரமேஷ் ஆகியோரை வரவழைத்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து ஓட்டலில் இருந்த சல்லி கரண்டியை எடுத்து சுரேசை சரமாரியாக தாக்கினார். இதில் சுரேஷ் படுகாயம் அடைந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஓட்டல் உரிமையாளர் குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயம் அடைந்த சுரேசை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் சுரேஷ் இதுகுறித்து சேதராப்பட்டு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பன்னீர் மற்றும் அய்யப்பன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். ரமேசை தேடி வருகிறார்கள். 
    புதுவை புதிய பஸ் நிலையத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை தடுக்க கோரி கவர்னர் கிரண்பேடிக்கு பொதுமக்கள் புகார் அனுப்பி உள்ளனர்.
    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையத்தில் உள்ள புதுவை நகராட்சிக்கு சொந்தமாக வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு வெளியூர்களுக்கு செல்வோர் மற்றும் வெளியூர்களில் வேலைக்கு செல்வோர் தங்களது இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வர். தினமும் இங்கு குறைந்தது 1500 வாகனங்கள் முதல் 2 ஆயிரம் வாகனங்கள் வரை நிறுத்தப்படுகின்றன.

    இங்கு சைக்கிள் மற்றும் இருசக்கர வாகங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் உரிமையானது 1.7.2019 முதல் 31.3.2020 வரை கடந்த ஆண்டு 20.6.2019 புதுவை நகராட்சியின் ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விடப்பட்டது. அதன்படி புதுவை நகராட்சியானது சைக்கிள் நாள் ஒன்றுக்கு ரூ.5 எனவும், இரு சக்கர வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 எனவும் நிர்ணயம் செய்துள்ளது.

    ஆனால், ஏலம் எடுத்த நபர், நகராட்சியின் நிர்ணய கட்டணத்தை காட்டிலும் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதுபற்றி நகராட்சிக்கு பலமுறை தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி பொதுமக்கள் கவர்னர் கிரண்பேடிக்கு புகார் அனுப்பி உள்ளனர்.
    தென்பெண்ணையாற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    பாகூர்:

    பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி மற்றும் போலீசார் நேற்று மாலை குருவிநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள சாராயக்கடை அருகே ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையில் பாரம் ஏற்றிக்கொண்டு வந்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரை தடுத்து நிறுத்தி அவர் கொண்டு வந்த சாக்கு மூட்டையை பிரித்து பார்த்தனர். அப்போது அந்த சாக்குமூட்டையில் மணல் நிரப்பப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாகூர் அன்பரசன் நகர் பங்களா தெருவை சேர்ந்த ராஜ்குமார் (வயது18) என்பதும் இவர் தென்பெண்ணையாற்றில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. 

    இதனைதொடர்ந்து ராஜ்குமாரை கைது செய்த போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். 
    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க கொடுக்காபுளி சாப்பிட்டால் வைரஸ் தாக்காது என்று புதுவை எம்எல்ஏ ஜான்குமார் பேசியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மகளிர் தினவிழா ஜெயராம் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவில் ஜான்குமார் எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார். அவர் பேசும்போது, 

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க எளிய வழிமுறைகள் உள்ளது. கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது. 
    ஜான்குமார் எம்எல்ஏ
    பழையசோறும், பழவகைகளும் தினமும் சாப்பிட்டால் கொரோனா மட்டுமில்லை, மரணம் கூட வராது. இது தவிர நாள்தோறும் காலையில் அரை மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும் என்று கூறினார்.
    கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    சீனாவில் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பலிகொண்ட கொரோனா வைரஸ் இந்தியாவிலும் புகுந்துள்ளது. இதனால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து குறிப்பிட்ட சில வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவுக்கு வரும்போது விமான நிலையத்திலேயே பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

    சந்தேகப்படும்படியானவர்கள் தனியாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். புதுவையிலும் மார்பக நோய் மருத்துவமனை, ஜிப்மர் ஆஸ்பத்திரி போன்றவற்றில் தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது.

    மேலும் சுகாதாரத்துறை அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனை 104 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

    இதற்கிடையே புதுவை வைத்திக்குப்பத்தில் நேற்று நடந்த மாசிமக விழாவில் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், சளித்தொல்லை, உடல்வலி, மயக்கம், சோர்வு, தலைவலி, வயிற்றுப்போக்கு, தொண்டைவலி, இருமல், மூச்சு திணறல் ஆகியன இருந்தால் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுக அறிவுறுத்தப்பட்டது.

    இருமும்போதோ, தும்மும்போதோ கைக்குட்டையை உபயோகிக்கவேண்டும், கைகளை அடிக்கடி சோப்பின் மூலம் கழுவவேண்டும், முகக்கவசம் அணியவேண்டும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தவிர்க்கவேண்டும், அதிக தண்ணீர், சுத்தமான நன்கு வேகவைத்த உணவை உட்கொள்ள வேண்டும், போதுமான ஓய்வு எடுக்கவேண்டும், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல், கைகுலுக்குதல், எச்சில் துப்புதல், புகைப்பிடித்தல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும் டாக்டரை ஆலோசிக்காமல் சுயமாக மருந்து உட்கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டன.
    மேட்டுப்பாளையத்தில் டயர் வெடித்ததால் மோட்டார் சைக்கிள் தாறு மாறாக ஓடி கவிழ்ந்ததில் வாலிபர் பலியானார்.
    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான வாழப்பட்டாம் பாளையம்  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் பன்னீர்செல்வம் (வயது31). டைல்ஸ் தொழிலாளி. நேற்று இவர் திருக்காஞ்சியில் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியை காண மோட்டார் சைக்கிளில் வந்தார். 

    பின்னர் திருக்காஞ்சி நிகழ்ச்சியை கண்டுகளித்து விட்டு புதுவை வந்த பன்னீர் செல்வம் அதன் பிறகு வீட்டுக்கு புறப்பட்டு  சென்றார். மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபம் அருகே வந்த போது திடீரென மோட்டார் சைக்கிளின் முன்பக்க டயர் வெடித்தது.  

    இதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது. இதில் பன்னீர்செல்வத்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் பன்னீர்செல்வத்தை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு  கொண்டு செல்லப்பட்டார். ஆனால் போகும் வழியிலேயே பன்னீர் செல்வம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் மதியழகன் கொடுத்த புகாரின்பேரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×