என் மலர்
புதுச்சேரி
- புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது.
- கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.
புதுச்சேரி:
அகில இந்திய அளவில் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து போட்டியிட்டாலும், மாநில அளவிலான தேர்தல்களில் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
டெல்லி மாநில தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரசும் எதிர் எதிரில் போட்டியிட்டது. அடுத்த ஆண்டில் பீகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, புதுச்சேரி என அடுத்தடுத்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ள வியூகத்தை தொடங்கியுள்ளனர். காங்கிரஸ் கோட்டை என கருதப்பட்ட புதுச்சேரி கடந்த சட்டமன்ற தேர்தலில் கைநழுவி போனதோடு, 30 தொகுதிகளில் காங்கிரசுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே கிடைத்து பலகீனமாகியுள்ளது.
இதனால் புதுச்சேரியை மீண்டும் காங்கிரசின் கோட்டை என உறுதிப்படுத்த காங்கிரஸ் முயற்சிகள் எடுத்து வருகிறது. சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளரை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி கண்டது.
ஆனாலும் இந்த வெற்றியை காங்கிரசாரால் முழுமையாக தனதாக்கிக்கொள்ள முடியவில்லை. ஏனெனில் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற தி.மு.க. சரிபாதி தொகுதிகளை பிரித்து தேர்தல் பணிகளை மேற்கொண்டது.
அதோடு, தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், புதுச்சேரிக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்தார்.
இதுதான் காங்கிரசின் வெற்றிக்கு காரணம் என தி.மு.க. உரக்க குரல் கொடுத்து வருகிறது. அதோடு, சுமார் கால் நுாற்றாண்டாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., வருகிற சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என நினைக்கிறது.
இதனால் அவ்வப்போது இந்தியா கூட்டணிக்கு தாங்கள்தான் தலைமை என்ற ரீதியில் தி.மு.க. பேசியும், செயல்பட்டும் வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு தி.மு.க. தலைமை தாங்குவதுபோல, புதுச்சேரிக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்கும் என காங்கிரசார் அடித்து கூறி வருகின்றனர்.
இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிரதான கட்சிகளான தி.மு.க.வும், காங்கிரசும் இப்படி மோதி கொள்ளும் சூழ்நிலையில், மற்ற கட்சிகளான இந்தியகம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு ஆகிய கட்சிகள் தனி ஆவர்த்தனம் செய்து வருகின்றன. ஆளும் என். ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசை எதிர்த்து தனித்தனி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சமீபத்தில் புதுச்சேரிக்கு வந்த புதிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர், கூட்டணியை பற்றி காங்கிரசார் கவலைப்பட வேண்டாம். அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடும் என்ற நிலையில் தேர்தல் பணிகளை தொடங்குங்கள், பூத்களை வலுப்படுத்துங்கள் என கூறினார்.
இதேபோல மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோரும் கூட்டணி பற்றி தேர்தலின்போது முடிவு செய்யலாம், அனைத்து தொகுதியிலும் காங்கிரஸ் தேர்தல் பணிகளை மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தினர்.
எந்த தொகுதியில் யாருக்கு செல்வாக்கு உள்ளதோ? அவர்களுக்குத்தான் போட்டியிட வாய்ப்பு தரப்படும். கூட்டணி கட்சிகளின் தொகுதியாக இருந்தாலும், அந்த தொகுதியை காங்கிரசுக்கு கேட்டு பெறுவோம் என தெரிவித்துள்ளனர். அதோடு காங்கிரஸ் சார்பில் தொகுதிவாரியாக செயல்வீரர்கள் கூட்டமும் நடத்தி, கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட அகில இந்திய தலைமை தனியார் நிறுவனம் மூலம் ரகசிய சர்வே நடத்தியுள்ளது. இதில், புதுவை, காரைக்காலில் 12 தொகுதிகள் காங்கிரசுக்கு சாதகமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது புதுச்சேரி காங்கிரசாருக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ஒரு சில தொகுதிகள் தி.மு.க. போட்டியிட்டு, வெற்றி பெற்ற தொகுதிகள். இருப்பினும் இந்த தொகுதிகளில் பணிகளை தீவிரப்படுத்த கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெரும்பான்மை பெரும் வகையில் இன்னும் சில தொகுதிகளை சுட்டிக்காட்டி, அந்த தொகுதிகளிலும் கடுமையாக பணியாற்றும்படி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதனால் கூட்டணியை பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னேறி செல்கிறது.
- விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது.
புதுச்சேரி:
புதுச்சேரி காலாப்பட்டு சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் சபாபதி (வயது45). இவர் கம்பி கட்டும் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 5-ந் தேதி தனது பைக்கில் வீட்டில் இருந்து கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு சிறுவன் ஓட்டி வந்த பைக் சபாபதி பைக் மீது மோதியது. இதில் சபாபதிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.
விபத்து குறித்து சபாபதி மனைவி ஆனந்தி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார்.
இதில் பைக்கை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது கீழ்ப்புத்துப்பட்டு பகுதியை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்தது. எனவே புதிய மோட்டார் வாகன தடைச் சட்டத்தின் படி சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த அவரது தந்தை கூலித் தொழிலாளி விஜயகாந்த் (43) என்பவரை குற்றவாளியாக சேர்த்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர். சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது எனவும் 12 மாதங்களுக்கு பைக்கின் பதிவு சான்றிதழை இடை நீக்கம் செய்யவும் வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
- கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுச்சேரி முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.
- புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் புதுச்சேரியில் சாலை விபத்து 8 முதல் 12 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதில் உயிரிழப்புகள் 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனை நாடு முழுவதும் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
பைக் விபத்தில் கடந்த 2023-ம் ஆண்டு 140 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ம் ஆண்டு 123 பேர் உயிரிழந் துள்ளனர். இதனால் இந்தாண்டு சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்த புதுச்சேரி போக்குவரத்து போலீசார் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த ஜனவரி மாதம் 12-ந் தேதி புதுச்சேரி முழுவதும் ஹெல்மெட் கட்டாயம் சட்டம் அமலுக்கு வந்தது.
இதையடுத்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களை பிடித்து அபராதம் விதித்தனர். இதனால் அடுத்து சில நாட்கள் மட்டுமே மக்கள் குறைந்த அளவில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றனர். அதன்பிறகு போக்குவரத்து போலீசார் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும், மக்கள் ஹெல்மெட் அணியாமல் சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 3 மாதத்தில் 385 சாலை விபத்துகள் நடந்து இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜீரோ உயிரிழப்பு என்ற திட்டத்தை அமல்படுத்தியும், 3 மாதத்தில் 24 பேர் விபத்தில் உயிரிந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மேட்டுப்பாளையம் பகுதியில் கியாஸ் பகிர்வு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது.
- இந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் வீடு, வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் வினியோகிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வழிகாட்டி நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு உள்ளது
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்கு முறை வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் குழாய் மூலம் சமையல் கியாஸ் வழங்குவதற்கு தேவையான பணிகளை செய்து வருகின்றன.
தமிழகம், புதுச்சேரியில் சுமார் 1,400 கி.மீ. நீளத்துக்கு சமையல் கியாஸ் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 7 பெட்ரோலிய எண்ணெய் முனையங்கள், 13 சமையல் கியாஸ் இணைப்பு மையங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, மண்டகப்பட்டு, வழுதாவூர், பிள்ளையார்குப்பம், ஊசுடு, பூத்துறை வழியாக புதுச்சேரி மேட்டுப்பாளையம் வரை குழாய் அமைக்கப்படுகிறது.
இதில் புதுச்சேரி மாநிலத்தில் 6கி.மீ.தூரத்துக்கு குழாய்கள் பதிக்கப்படுகிறது. இந்த பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேட்டுப்பாளையம் பகுதியில் கியாஸ் பகிர்வு முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து புதுச்சேரியின் பிற பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் கியாஸ் வினியோகம் செய்யப்படும். இந்தநிலையில் இயற்கை எரிவாயு மீதான மதிப்புக் கூட்டு வரியை குறைக்கும் வகையில் புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து புதுச்சேரி அரசின் வணிக வரித்துறை கூடுதல் செயலாளர் முகமது மன்சூர்வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மதிப்புக்கூட்டு வரிச்சட்டம் -2007 (சட்டம் எண்.9, 2007) பிரிவு 31 மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தியும், புதுச்சேரி கவர்னர் பொது மக்கள் நலன் கருதி, வரியை குறைக்க முடிவு செய்து ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி வீட்டு பயன்பாட்டுக்கான குழாய் மூலம் வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் மீதான வரி 14.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்படும். வணிகம் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்கு 14.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக வரி குறைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உணவை சாப்பிட்ட குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.
- பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் பர்மான். இவர் டெலிவரி ஆப் மூலம் புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள தனியார் மாலில் இயங்கி வரும் சர்வதேச உணவகத்தில் 4 கோழி இறைச்சி பர்கர் மற்றும் கோழி நகட்ஸ் ஆர்டர் செய்தார். அந்த உணவை சாப்பிட்ட அவரது குழந்தைக்கு திடீரென வாந்தி ஏற்பட்டது.
பின்னர் மீதமுள்ள பர்கரை எடுத்து பார்த்தபோது, அதில், வேகாத கோழி இறைச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, பர்மான், உணவகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் வேகாத கோழி இறைச்சி பர்கரை காண்பித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, உணவகத்தின் நிர்வாக அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியதுடன், அங்கிருந்த பர்கர் மற்றும் பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சி உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
அதோடு 2 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை எனில் உணவகத்திற்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
- வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது.
இன்று காலை வழக்கம் போல் 8.45 மணி அளவில ஊழியர்கள் அலுவலகத்திற்கு வந்து பணிகளை தொடங்கினர். இந்த நிலையில் கலெக்டரின் அதிகாரபூர்வ மெயிலில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார்.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர். கோரிமேடு போலீசார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் விரைந்து வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் அறை அறையாக சோதனை நடைபெற்றது. பொதுமக்கள் அலுவலகத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டது. சுமார் 1 ½ மணி நேர சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
தமிழகத்தில் சவுக்கு சங்கர் வீட்டில் சமீபத்தில் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சூறையாடிய விவகாரத்தில் முறையான நடவடிக்கை இல்லாததை கண்டித்து மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது.
- விசாரணையில் ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
- சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் தனியார் தொழிற்சாலை உள்ளது.
அங்கு சுவிகியா என்பவர் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது செல்போனுக்கு அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. அதில் அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலை உரிமையாளரின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதில் அரசு அதிகாரிகளிடம் ஒரு புதிய திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறேன். நமது அலுவலக வங்கி கணக்கில் உள்ள தொகையை மற்றொரு வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனை உண்மை என்று நம்பிய சுவிகியா ரூ.5 கோடியே 10 லட்சத்தை அந்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து அவர் இது தொடர்பாக தனது உரிமையாளரிடம் பேசினார். அப்போது மர்ம ஆசாமிகள் உரிமையாளர் பெயரில் மோசடி செய்தது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் ரூ.5 கோடியே 10 லட்சம் தொகையில், ரூ. 3 கோடி மேற்கு வங்காளத்தில் உள்ள முர்ஷிதாபாத் கிளையில் உள்ள மொபிகுல் ஆலம் முலா என்பவரது வங்கி கணக்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் மேற்கு வங்கம் சென்று மொபிகுல் ஆலம் முலாவை கைது செய்தனர்.
பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ. 2 கோடி பணத்தை போலீசார் மீட்டனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடியில் மேலும் 5 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் இவர்கள் வெளிநாட்டை சேர்ந்த கும்பலுடன் தொடர்பு வைத்துக் கொண்டு இதுபோன்று பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கைது செய்யப்பட்ட மொபிகுல் ஆலம் முலாவை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும்.
- இந்த புத்தகங்கள் இன்னும் 2 வாரங்களுக்குள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் பொதுத்தேர்வும் எழுதியுள்ளனர். திடீரென சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாற்றப்பட்டதால் மாணவர்கள் பாடம் கற்பிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. குறிப்பாக ஆங்கிலப் புலமை இல்லாமல் மாணவர்கள் திணறி வருகின்றனர்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பொறுத்தமட்டில், பாடத்தை புரிந்து படித்தால் மட்டுமே தேர்வை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதனால் மாணவர்களுக்கு ஆங்கில புலமையை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் 'மிஷன் இங்கிலிஷ்' என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் படத்துடன் கூடிய பாட புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகங்கள் ரூ.22 லட்சம் செலவில் பெங்களூருவில் அச்சிடப்பட்டு வருகிறது. இந்த புத்தகங்கள் இன்னும் 2 வாரங்களுக்குள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
புத்தகம் வழங்குவதோடு மட்டுமன்றி தினசரி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பாடவேளை இந்த 'மிஷன் இங்கிலிஷ்' புத்தகத்தை நடத்தவும் ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இதற்காக ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
- அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்து அனுமதி வழங்கப்படும்.
- 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக ‘சீல்’ வைத்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் 202 ரெஸ்டோ பார்கள் உட்பட மொத்தம் 396 சில்லரை மதுபான கடைகள் இயங்கி வருகிறது.
இந்த மதுபான கடைகள் இயங்குவதற்கு கலால் துறை சார்பில் ஒவ்வொரு நிதி ஆண்டும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந்தேதி வரை உரிமம் வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு மதுக்கடையும் ரூ.6 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும். அடுத்த நிதி ஆண்டிற்கு முதல் நிதி ஆண்டான மார்ச் 31-ந் தேதிக்குள் ரூ.6 லட்சத்தை செலுத்தி உரிமத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் மொத்த முள்ள 396 சில்லரை மதுபானக் கடைகளில் 381 கடைகள் உரிமத்தை புதுப்பித்தன. உரிமம் புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 மதுபான கடைகளுக்கு கலால் துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. 15 கடைகளும் உரிமத்தை புதுப்பிக்க வில்லை.
இதையடுத்து கலால் உதவி ஆணையர் மேத்யூஸ் பிராங்ளின் உத்தரவின் பேரில் தாசில்தார் ராஜேஸ்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் உரிமத்தை புதுப்பிக்காத 14 ரெஸ்டோ பார்கள் உள்ளிட்ட 15 சில்லரை மதுபான கடைகளுக்கு அதிரடியாக 'சீல்' வைத்தனர்.
இந்த கடைகள் உரிமம் புதுப்பிப்பு கட்டணம் ரூ.6 லட்சத்துடன் 10 சதவீதம் அபராத கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்த பின் திறக்க அனுமதி வழங்கப்படும்.
- புதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.
- உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
கடலில் மீன் வளத்தை பெருக்க புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசை படகில் ஆழ் கடலில் மீன் பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.
இந்த தடைக்காலத்தில் மீன்வர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு மீனவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகிறது.
அதன்படிபுதுவையில் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக மீனவர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 500 வழங்கப்பட்டு வந்தது.
அதேபோல் மழைக்கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இந்த தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று அரசிடம் மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணமாக ரூ.4 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கான அரசாணை வெளியிடப்படாமல் இருந்தது.
இந்தநிலையில் தற்போது தடைக்கால நிவாரணம் ரூ.8 ஆயிரமும், மழைக்கால நிவாரணம் ரூ.4 ஆயிரமும் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.
- புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நியமிப்பதில் விழிப்புடன் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
புதுச்சேரி:
தமிழகம் மற்றும் அசாம் போலீசார் கடந்த 15-ந் தேதி தமிழகத்தில் சென்னை செம்மஞ்சேரியில் பயங்கர சதித்திட்டத்துடன் தங்கி இருந்த பயங்கரவாதி அபுசலாம் அலியை கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை, பொள்ளாச்சி உள் ளிட்ட ஊர்களில் வங்க தேசத்தினர் 45 பேர் போலி ஆதார் கார்டு பெற்று தமிழகத்தில் தங்கி இருப்பது தெரியவந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டு ஜாமின் விடுதலை பெற்று சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் தொடர்புடைய 45 பேரை காணவில்லை என்பதால் தமிழக போலீசார் அவர்களை பல இடங்களில் தேடி வருகின்றனர். அவர்களில் பலர் ஜமாத்உல் முஜாஹி தீன் மற்றும் அன்சூர்ல்லா பங்களா டீம் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அதன்படி பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட நபர்களை தமிழகம் முழுவதும் தேடி வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் தங்கி தொழிற்சாலைகளில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களிடம் அதிரடி சோதனை நடத்தி பதிவேடுகள், ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையே புதுச்சேரியில் வட மாநில தொழிலாளர் என்ற போர்வையில் சதித்திட்டத்துடன் வங்கதேச பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலி ஆதார் கார்டு மூலம் ஊடுருவி இருக்கலாம் என புகார் வந்தது.
இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை தொழிற்சாலை மற்றும் கொதிகலன் கண்காணிப்பு பிரிவின் கண்காணிப்பாளர் முரளி அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் போலி ஆதார் அட்டைகளை பெற்று தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கி இருப்பதாகவும், அது குறித்து தமிழக போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது போன்ற சூழலில் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நியமிப்பதில் விழிப்புடன் கண்டிப்புடன் இருக்க வேண்டும்.
உங்கள் தொழிற்சாலைகளில் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவுகளை சரி பார்க்கவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. அப்படி ஏதேனும் வட மாநில தொழிலாளர்கள் என்ற போர்வையில் உரிய பதிவேடுகள் ஆவணங்கள் இன்றி யாரேனும் சட்ட விரோதமாக தங்கி இருப்பது கண்டறிந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- டாக்டர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
- மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பிள்ளையார் குப்பத்தை சேர்ந்தவர் பண்டாரு மகந்த். தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்வது தொடர்பாக விவரங்களை கூகுள் மூலம் தேடியுள்ளார்.
இந்தநிலையில் அவரை மர்ம நபர் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய அவர் ரூ.32 லட்சத்து 92 ஆயிரத்தை முதலீடு செய் தார். இதன்மூலம் கிடைத்த லாபம் மற்றும் முதலீடு செய்த பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயன்றார்.
ஆனால் அது முடியவில்லை. அதன்பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
மேலும் அவரை மீண்டும் தொடர்பு கொண்ட மர்மநபர் டெல்லி போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறியுள்ளார்.
சிறுமிகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பார்த்ததாகவும், இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் தருமாறு மிரட்டியுள்ளார்.
அதை நம்பி அவரும் ரூ.15 லட்சத்து 90 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். அதன்பின்னரே அவர் ஒட்டுமொத்தமாக ரூ.48 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தது தெரிய வந்தது.
இதுதொடர்பாக அவர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






