search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.25 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி
    X

    ரூ.25 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் காந்தி

    நவம்பர் 8-ந்தேதிக்கு முன்பு ரூ.25 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் 132-வது ஆண்டு விழா டெல்லியில் இன்று நடந்தது.

    இதில் பங்கேற்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு செல்லாத விவகாரம் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. பண மதிப்பு இழப்பால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இந்த அறிவிப்புக்கு பிறகு எத்தனை பேர் இறந்தனர் என்பதை அரசு கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும். எத்தனை பேருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. நஷ்ட ஈடு வழங்கவில்லை என்றால் ஏன் வழங்கப்படவில்லை என்பதற்கு பிரதமர் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும்.

    மிக உயர்ந்த 1 சதவீத பணக்காரர்களுக்காக ரூபாய் நோட்டை பிரதமர் மோடி மதிப்பு இழக்க செய்துள்ளார். நாட்டில் உள்ள 50 குடும்பத்தினர் மட்டுமே இந்த அறிவிப்பால் பலன் அடைந்து உள்ளனர். மக்கள் பிரதமரிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் பிரதமர் அவர்களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.

    ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு முன்பு ரூ.25 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் பற்றிய பட்டியலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

    ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் ஏராளமானவர்களுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்ட பல்வேறு கட்டுப்பாட்டுகளை அரசு உடனடியாக நீக்க வேண்டும். மக்களின் நிதி சுதந்திரத்துக்கு விடுதலை அளிக்க வேண்டும்.

    வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்த ரூ.25 ஆயிரம் டெபாசிட் செய்துள்ள ஒவ்வொரு பெண்ணும் ரூபாய் நோட்டு விவகாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    மோடியின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க பிரதமர் என்ன திட்டம் வைத்து இருக்கிறார் என்பதை கண்டிப்பாக விளக்க வேண்டும். விவசாயிகளுக்கான கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

    ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவை அறிவிக்கும் முன்பு பிரதமர் எந்த நிபுணர்களிடம் கருத்துக்களை கேட்டார். அவர்களது பெயர் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.

    பணமதிப்பை இழக்க செய்த முடிவு 50 நாட்களை நெருங்கி விட்டது. இதனால் முக்கிய கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளிப்பது அவசியமானது.

    சுவிஸ் வங்கி கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்து இருப்பவர்கள் விவரத்தை பிரதமர் மோடியும் அந்த நாட்டு கொடுத்து விட்டது. இந்த பட்டியலை பிரதமர் இன்னும் வெளியிடாமல் இருக்கிறார். பொது மக்களுக்கு தெரியும் வரையில் சுவிஸ் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்.

    இவ்வாறு ராகுல்காந்தி கூறியுள்ளார்.
    Next Story
    ×