என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • திடீரென்று மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது.
    • மினி பஸ் கவிழ்ந்து பலியான நால்வரில் 2 பேர் பள்ளி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மம்சாபுரம் கிராமம். ஆரம்பம், நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் இருந்தபோதிலும், கல்லூரி படிப்பிற்கு மாணவ, மாணவிகள் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகருக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.

    அதிலும் குறிப்பாக குறைந்த அளவிலான அரசு பேருந்துகள் மம்சாபுரத்திற்கு இயக்கப்பட்ட போதிலும் ஷேர் ஆட்டோக்கள், மினி பஸ்கள் இயக்கப்படுவதால் அதனை நம்பியே மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் இருந்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் மம்சாபுரத்தில் இருந்து இன்று காலை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் ஆண், பெண் தொழிலாளர்கள் ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி மினி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.

    மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் வந்தபோது திடீரென்று அந்த மினி பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இருபுறமும் தாறுமாறாக ஓடியது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சல் போட்டார்கள். டிரைவர் பஸ்சை நிறுத்த போராடியும் முடியாமல் போனது. கடைசியில் அந்த பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

    விபத்து நடந்ததும், பஸ்சில் பயணம் செய்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு உயிரை கையில் பிடித்துக்கொண்டு பஸ்சை விட்டு வெளியே வர முயற்சி செய்தனர். பஸ் கவிழ்ந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தில் இருந்தோர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததோடு, விபத்து பகுதிக்கு திரண்டு வந்தனர்.

    உடனடியாக மம்சாபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, ராஜபாளையம், வத்திராயிருப்பு ஆகிய ஊர்களில் இருந்தும் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு வந்தன. அக்கம்பக்கத்தினர் பஸ்சுக்குள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    இருந்தபோதிலும் இந்த கோர விபத்தில் கல்லூரி மாணவர்களான சதீஷ்குமார், வாசுராஜ், ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவர் நிதிஷ்குமார் ஆகிய 4 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உடல் நசுங்கி பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.

    மேலும் காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் உயிருக்கு ஆபத்தான நிலையிலர் 20-க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    விபத்து குறித்து அறிந்த மம்சாபுரம் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் கண்ணீருடன் கதறியவாறு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மேலும் அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், மினி பஸ் அதிவேகத்தில் சென்று அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதாகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருதி காலை நேரங்களில் மம்சாபுரம் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கும், அரசு மருத்துவமனைக்கும் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே விபத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி மம்சாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக சுமார் 500-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்தது.
    • தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அழகாபுரி சாலையில் உள்ள சிட்கோ தொழிற் பேட்டையில் சிவ காசியைச் சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான பாலித்தீன் கவர் பிரிண்டிங் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இங்கு 15-க்கும் மேற்பட்ட எந்திரங்கள் உள்ளன. சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்நிலையில் செயல்பாட்டில் இருந்த ஒரு எந்திரத்தில் மின்கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டு பற்றி எரிந்தது. அந்த எந்திரத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பேரும், மற்ற தொழிலாளர்களும் தீயை அணைக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து அவர்கள் அனைவரும் தப்பி வெளியேறினர். பின்னர் விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இருப்பினும் அருகில் உள்ள ஆயத்த ஆடை தயாரிக்கும் தொழிற் சாலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் நிறுவனத்தில் இருந்து பெரிய குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த விபத்தில் பிரிண்டிங் எந்திரம், பாலித்தீன் கவர் ரோல்கள் மற்றும் பிரிண்டிங் மை கேன்கள், உபகரணங்கள் உள்ளிட்ட பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.

    இந்த தீ விபத்து குறித்து விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
    • விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    விருதுநகர்:

    விருதுநகர் கச்சேரி ரோட்டில் செய்யது அகமது என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன மெக்கானிக் ஒர்க்ஷாப் அமைந்துள்ளது. இந்த ஒர்க்ஷாப் முன்பு பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட 14 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் அங்கு 5 ஜெனரேட்டர்கள், 5 பேவர் பிளாக்கல் பதிக்கும் மெஷின்கள், 4 வாட்டர் பம்புகள், 3 கரும்புச் சாறு எடுக்கும் எந்திரங்கள், ஒரு களை வெட்டும் கருவி உள்ளிட்டவைகளும் வைக்கப்பட்டு இருந்தன.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென அங்கு நின்று கொண்டிருந்த ஒரு வாகனத்தில் தீப்பிடித்தது. அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதால் அடுத்தடுத்த வாகனங்களிலும் தீயானது பரவி பற்றி எரியத்தொடங்கியது.

    உடனே சாலையில் சென்றவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் விருதுநகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அனைத்து இரு சக்கர வாகனங்கள், பழுது நீக்க வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள் முழுவதும் தீயில் எரிந்தது.

    இதுகுறித்து விருதுநகர் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மின்கசிவின் காரணமாக தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் பட்டாசு ஆலைகளில் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி பட்டாசு தயாரிப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இந்த பட்டாசு தயாரிப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குகன்பாறை செவல்பட்டி கிராமத்தில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இன்று காலை பணிக்கு வந்த அவர்களில் சிலர் மட்டும் பட்டாசு தயாரிப்புக்கான மருந்து கலவைகளை தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட உராய்வால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அடுத்த வினாடி அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளிலும் பரவி வெடித்துச்சிதறியது. இதில் அந்த கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. மருந்து கலவை பணியில் ஈடுபட்டிருந்த கோவிந்தராஜ் (வயது25) என்பவர் உடல் சிதறி பலியானார். மேலும் குருமூர்த்தி (19) என்பவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதுகுறித்து சக தொழிலாளர்கள் வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தியை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பலியான கோவிந்தராஜின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது. விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சிவகாசி அருகே உள்ள சிறு குளம் காலனியை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தாயில்பட்டி அருகே உள்ள சேது ராமலிங்கபுரம் கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 80-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். இங்கு பட்டாசுக்கு பவுடர் செலுத்தும் பணி செய்து கொண்டிருந்த மேலாண் மறைநாடு அருகே உள்ள துரை சாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் (50) பணி முடிந்ததும் ஆலை வளாகத்தில் உள்ள குளியல் அறைக்கு குளிக்க சென்றார். புகை பிடிக்கும் பழக்கம் காரணமாக குளிப்பதற்கு முன்பாக புகை பிடித்தபோது உடலில் இருந்த பவுடர் கலவை காரணமாக தீப்பிடித்து அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இதுகுறித்து விஜயரங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம்.
    • அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். நேற்று இவர்கள் விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

    தொடர்ந்து கலெக்டர் ஜெயசீலனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    சிவகாசியில் உள்ள அரசு ஆதி திராவிடர் மாணவிகள் விடுதியில் 50 பேர் தங்கி உள்ளோம். ஒரு அறை 2 கழிவறை உள்ளது. இது போதுமானதாக இல்லை. இதனால் கடும் சிரமம் அடைந்து வருகின்றோம். இதனால் கல்லூரிக்கு உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. பல நேரங்களில் தண்ணீர் மோட்டார் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. இதையும் சரி செய்வதில்லை.

    இந்த நிலையில் விடுதியை காலி செய்யுமாறு கட்டிட உரிமையாளர் கூறி வருகிறார். இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

    கடந்த 13-ந்தேதி மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் விடுதியில் ஆய்வு செய்தார். அப்போது அவர் எங்களையும், பெற்றோரையும் தரக்குறைவாக பேசி தகாத வார்த்தைகளால் திட்டினார். விசாரணை என்ற பேரில் குற்றவாளிகளை போல் நடத்தினார்.

    இதனால் எங்களுக்கு மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது. எனவே விடுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் எங்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    அரசு மாணவியர் விடுதியில் ஆய்வு செய்த அதிகாரி மீது மாணவிகள் புகார் கூறி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெண் அதிகாரிகளை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • இருவருக்கும் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராஜபாளையம்:

    சேலம் மாவட்டம் செல்வ நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது54). இவர் அதே பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது நண்பரான சேலம் மாவட்டம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த அங்குஸ் (39) என்பவருடன் காரில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கோவிலுக்கு புறப்பட்டனர். பின்னர் அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று காரில் ஊர் திரும்பினர். காரை சேலம் மாவட்டம் சின்னநாயக்கர்பட்டி பகுதியைச் சேர்ந்த சான்பாட்சா (36) ஓட்டிவந்தார்.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வழியாக வந்து கொண்டிருந்தபோது சேத்தூரை அடுத்த கொல்லம் தேசிய நெடுஞ்சாலை அசையாமணி விலக்கு அருகே கார் திடீரென எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் பயணித்த செல்வம், அங்குஸ், டிரைவர் சான்பாட்சா ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்சில் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரித்தனர். மற்ற இருவருக்கும் முதலுதவிஅளித்து மேல் சிகிச்சைக்கு பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
    • நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விருதுநகர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள வில்லூரில் தி.மு.க. பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கூட்டம் முடிந்த பின் நிர்வாகிகளுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி உணவு வழங்கப்பட்டது. சிலர் கூட்டம் நடந்த இடத்தில் சாப்பிட்டனர். பலர் வீட்டிற்கு கொண்டு சென்று குடும்பத்துடன் சாப்பிட்டனர்.


    பிரியாணி சாப்பிட்ட சிறிது நேரத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    17 பெண்கள், குழந்தைகள் உள்பட 39 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பாதிக்கப்பட்ட 39 பேரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் அதிகாரிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    தி.மு.க. பொதுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்ட கட்சியினரும், அவர்களது குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    பொதுக்கூட்டத்தில் விநியோகம் செய்யப்பட்ட பிரியாணி தரம் குறைந்து இருந்ததால் கெட்டுபோன இறைச்சி சேர்க்கப்பட்டதா? என தெரியவில்லை. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க.வினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
    • விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    வத்திராயிருப்பு:

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை மீட்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி மாவட்டம்தோறும் கோவில் நிலங்களை மீட்க தனி வட்டாட்சியர் உள்பட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டது. அதிகாரிகள் கோவில்களில் ஆய்வு செய்து நிலங்களை அடையாளம் காணும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாவூத்து உதயகிரி நாதர் கோவில் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது கோவிலுக்கு சொந்தமாக 349 ஏக்கர் புஞ்சை நிலங்கள், 39 ஏக்கர் நஞ்சை நிலங்கள் கோவில் பரம்பரை அறங்காவலர் காசிகிரி பெயரில் இருந்தது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு கோவில் பெயரில் நிலங்களை மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதற்கு தற்போதைய கோவில் அறங்காவலர் ரூபாபாய் சம்மதம் தெரிவித்தார்.

    இதையடுத்து 43 பட்டா எண்களில் உள்ள 388 ஏக்கர் நிலங்கள் கோவில் பெயரில் மாற்ற வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து தனி வட்டாட்சியர் மாரிமுத்து, நில அளவையர், இந்து சமய அறநிலை யத்துறை ஆய்வாளர் முத்து மணிகண்டன் ஆகியோர் நிலங்களை ஆய்வு செய்து வேறு ஏதேனும் ஆக்கிரமிப்பு உள்ளதா? என விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த நிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கும், வேலி அமைத்து பாதுகாப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வட்டாட்சியர் மாரிமுத்து கூறுகையில், உதயகிரிநாதர் கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டு அளவீடு செய்யும் பணி முடிவடைந்து உள்ளது. விரைவில் கோவில் பெயரில் பட்டா பெற்று நிலங்களை பாது காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது.

    தாயில்பட்டி:

    வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சூதுபவளம், சங்கு வளையல், அச்சு பதிக்கும் எந்திரம், சுடுமண் முத்திரை, பெண்கள் அணியக்கூடிய தொங்கட்டான், செப்பு காசுகள், மண்பாண்ட பொருட்கள் உள்பட 1,700-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் அகழாய்வு பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சேதமடையாத நிலையில் பெரிய அளவிலான மண்பாண்ட பாத்திரம் முதல் முறையாக கிடைத்துள்ளது. முன்னோர்கள் சமையல் பாத்திரமாக இதனை பயன்படுத்தி உள்ளனர்.

    சமையல் பாத்திரத்தை உடையாத வகையில் சுடு மண்ணால் நுணுக்கமாக செய்யப்பட்டுள்ளது. அகழாய்வு பணியை தீவிரப்படுத்துவதற்காக கூடுதலாக குழிகள் தோண்ட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் தெரிவித்தார்.

    • ஒரு சில விநாடிகளில் கைகலப்பாக மாறியது.
    • போலீஸ்காரர் ஒருவரும் தாக்கப்பட்டார்.

    அருப்புக்கோட்டை:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டி பகுதியை சேர்ந்த சரக்கு வாகன டிரைவர் காளிக்குமார் (வயது 33), ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத்தில் சென்றபோது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 2 பேரை கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமாரின் உறவினர்கள் அருப்புக்கோட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்ரி மற்றும் போலீஸார் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று அவர்கள் உறுதி அளித்தனர்.

    ஆனாலும் அதனை ஏற்காத போராட்டக்காரர்கள் தொடர்ந்து சாலை மறியல் செய்தனர். அப்போது அவர்களுக்கும், போலீஸ் டி.எஸ்.பி. காயத்ரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது ஒரு சில விநாடிகளில் கைகலப்பாக மாறியது.

    ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் போலீஸ் டி.எஸ்.பி. காயத்ரியின் தலைமுடியை கூட்டத்தில் இருந்த போராட்டக்காரர் ஒருவர் பிடித்து இழுத்தார். இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. அதேபோல் போலீஸ்காரர் ஒருவரும் இதில் தாக்கப்பட்டார்.

    சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி. கண்ணன் ஆய்வு செய்தார். பெண் டி.எஸ்.பி.யை தாக்கியதாக 4 பேரை பிடித்து போலீசார் விசாராணை நடத்தி வந்தனர். மேலும் மோதலில் ஈடுபட்டதாக மேலும் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்.
    • போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.

    கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்தவர் காளிகுமார். இவர் சரக்கு வாகனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் காளிகுமார் நேற்று அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் காளிகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    காளிகுமாரின் உடல் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    அப்போது டிரைவர் காளிகுமாரின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. காயத்ரி தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்றனர்.

    அப்போது கடும் கோபத்தில் இருந்த போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போராட்டக்குழுவில் இருந்த ஒரு சிலர் டி.எஸ்.பி. காயத்ரியின் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கினர். இதில் இருவருக்கும் இடையே அடிதடி ஏற்பட்டது.

    அதன்பிறகு போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர்.
    • 10 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 3-ந் தேதி வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. முதல்நாளான இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு அதிகாலை முதல் மதுரை, விருதுநகர், திருச்சி, சிவகங்கை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையடி வாரத்தில் குவிந்தனர்.

    இன்று காலை 6.20 மணிக்கு வனத்துறையினர் நுழைவுவாயில் திறந்து விட்டனர். அதனை தொடர்ந்து உடைமைகள் சோதனை செய்யப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

     

    மலை பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் குளித்தனர்.

    மலை பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் பக்தர்கள் குளித்தனர்.

    மலைப்பாதையில் உள்ள வழுக்குப்பாறையில் சிறிதளவு தண்ணீர் சென்றது. அதில் சில பக்தர்கள் குளித்துவிட்டு மலையேறி சென்றனர். நடக்க முடியாத வயதான வர்கள் டோலி மூலம் சுமை தூக்கும் தொழிலாளிகள் சுமந்து சென்று சாமி தரிசனம் செய்ய வைத்தனர்.

    இன்று சனி பிரதோஷத்தை முன்னிட்டு மாலையில் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    10 வயதுக்கு குறைவானவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டிருந்தது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இரவில் மலை கோவிலில் தங்க அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருந்தனர்.

    சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை பெய்தால் பக்தர்களுக்கான அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ×