என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.
    • வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.

    நெல்லை:

    அறிமுகம் இல்லாத எண்களிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லும் செயலிக்கான ஆப் லிங்க் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

    இது தொடர்பாக திருநெல்வேலி சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், இணையதளத்தில் தற்போது செயல்பட்டு வரும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு இருக்கிறது.

    மோசடி நடைபெறும் விதம் எப்படி என்றால், உங்களது வாட்ஸ்-அப் எண்ணுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஒரு apk file அல்லது link செய்தி வரும் அந்த செய்தியில் உங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பலாம் என அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

    நீங்கள் அந்த apk file-ஐ ஓபன் செய்துவிட்டால் உங்களது போனில் உள்ள தரவுகள் திருடப்பட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்கள் எடுக்கப்படும். மேலும் உங்களது வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களை தெரிந்துகொண்டு பண மோசடி செய்து விடுவார்கள்.

    எனவே வாட்ஸ்-அப்பில் வரும் இதுபோன்று அறிமுகமில்லாத எண்ணிலிருந்து புத்தாண்டு வாழ்த்துகளை தவிர்க்க வேண்டும். அந்த எண்ணிற்க்கு மொபைல் போன் மூலமாக அழைத்து விசாரித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஒருவேளை, எதிர்பாராதவிதமாக நீங்கள் பாதிக்கப்பட்டால், சைபர் கிரைம் இணையதளமான cybercrime.gov.in அல்லது 1930 எண்ணை தொடர்பு கொண்டு உடனடியாக புகார் அளிக்கவும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
    • கே.டி.சி. நகர், சமாதானபுரம் உள்பட மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நெல்லை:

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

    இதற்கிடையே மாணவி பலாத்கார வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சார் என குறிப்பிட்டு ஒருவரிடம் போனில் பேசியதாகவும், அவரை மறைப்பதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.

    இந்நிலையில் மாணவி பலாத்கார வழக்கில் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

    பாளையங்கோட்டை, டவுன், கே.டி.சி. நகர், சமாதானபுரம் உள்பட மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேலப்பாளையத்தில் முகாமிட்டு திடீர் விசாரணையில் ஈடுபட்டனர்.
    • மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை மேலப்பாளையம் ரவுண்டானா அருகே பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்' படம் கடந்த மாதம் திரையிடப்பட்டது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.

    இந்நிலையில், கடந்த மாதம் 16-ந்தேதி அதிகாலையில் திரையரங்க வாயிலில் 2 வாலிபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். தென்மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாரும் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பாக மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின்(வயது 30), ஆசூரான் மேலத்தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி (29) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கு தொடர்பாக தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மேலப்பாளையத்தில் முகாமிட்டு திடீர் விசாரணையில் ஈடுபட்டனர்.

    தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் சுமார் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், யூசுப் ரசின், முகமது புகாரி ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.

    சுமார் 2 மணிநேரமாக பஷீரப்பா தெரு, ஆசூரான் தெருவில் சோதனை நடத்தியதையொட்டி மாநகர ஆயுதப்படை போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • திருமூலர் சொன்ன தத்துவத்தின் படி திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது.
    • திராவிட மாடல் ஆட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சி.

    நெல்லை:

    இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் முகைதீன் நெல்லை சந்திப்பு கைலாசபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருமூலர் சொன்ன தத்துவத்தின் படி திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. தி.மு.க. கூட்டணி தேர்தல் சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி. என்றும் தி.மு.க.வுடன் கூட்டணியில் இருப்போம்.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனை தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. அது கலியுகத்தின் கோலம். கடைசி யுகத்தின் கோலம் என்பதை நாங்கள் நம்புகிறோம்.

    இது போன்ற கொலை சம்பவங்களை தடுக்க ஆன்மீக நெறியை மக்கள் மத்தியில் வளர்க்க வேண்டியது அரசின் பொறுப்பு. கொலை சம்பவம் தொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. குற்றம் நடந்த பின்னர் தான் தடுக்க முடியும். குற்றம் நடப்பதற்கு முன் அதனை தடுக்க வேண்டும் என்பது ஆண்டவனாலும் முடியாத காரியம்.

    அண்ணாமலை சாட்டையால் தன்னை அடித்து கொள்வது அவர் செய்த பாவத்தை தடுப்பதற்கு. தி.மு.க. அரசை அகற்றினால் தான் காலணி அணிவேன் என்று கூறினால் அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் செருப்பு போட்டு நடக்க முடியாது.

    திராவிட மாடல் ஆட்சி மக்களால் ஏற்று கொள்ளப்பட்ட ஆட்சி. திராவிட மாடல் ஆட்சி நாடு முழுவதும் பரவ வேண்டும். அனைத்து மாநிலத்திலும் பரவ வேண்டும்.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் 6 தொகுதிகள் கேட்போம். அதில் நெல்லை மாவட்டத்தில் ஒரு தொகுதி இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
    • ஆசிரியர் தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு சுமார் 3 அங்குலம் உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார்.

    நெல்லை:

    உலகப் பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவருக்கு தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி கடலில் 133 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலை வடிவமைத்து 25 ஆண்டுகள் ஆகின்றது. இதனை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர் சரவணன் என்பவர் திருவள்ளுவருக்கு அரிசியில் சிலை செய்து அசத்தியுள்ளார். அதாவது, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு அவரை பெருமைப்படுத்தும் விதமாகவும், தனது ஓவிய திறமை மூலமாகவும் அரிசிகளை கொண்டு சுமார் 3 அங்குலம் உயரத்தில் திருவள்ளுவர் சிலையை உருவாக்கியுள்ளார்.

    • ஒரு மதுபாட்டில் எரிந்த நிலையிலும், மற்றொரு பெட்ரோல் குண்டு எரியாத நிலையிலும் கிடந்தது.
    • இரவோடு இரவாக சண்முகராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் மாதா பூங்கொடி தெருவில் சுடலை கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நேற்று இரவு மர்ம நபர்கள் 2 பேர் வந்துள்ளனர்.

    அவர்கள் 2 பேரும் மதுபோதையில் இருந்த நிலையில், அதில் ஒருவர் திடீரென தனது கையில் வைத்திருந்த மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கோவில் காம்பவுண்டு சுவர் மீது வீசினர். இதனால் பயங்கரமான சத்தம் கேட்டது.

    உடனே அக்கம்பக்கத்தில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வேகமாக வந்து பார்த்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். உடனே அப்பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர்கள் அன்னலெட்சுமி, கோபால கிருஷ்ணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    தகவல் அறிந்து மாநகர துணை போலீஸ் கமிஷனர் கீதாவும் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் கோவில் காம்பவுண்டு சுவரில் தீப்பிழம்பு ஏற்பட்டு கரி பிடித்திருந்தது. மேலும் அங்கு ஒரு மதுபாட்டில் எரிந்த நிலையிலும், மற்றொரு பெட்ரோல் குண்டு எரியாத நிலையிலும் கிடந்தது.

    உடனே போலீசார் அவற்றை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். அப்பகுதி மக்களிடம் நடத்திய விசாரணையில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு ஓடியது தெரியவந்தது. இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சம்பவம் நடந்த தெருவில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசியது டவுன் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த ராமையா என்பவரது மகன் சண்முகராஜா(வயது 25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து இரவோடு இரவாக சண்முகராஜாவை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்ததில் சண்முகராஜாவுடன் வந்த வாலிபர், டவுன் முகமது அலி தெருவை சேர்ந்த நிகாஷ்(24) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆவர்.

    சமீபத்தில் டவுன் பழனி தெருவில் மதுபோதையில் இருந்த வாலிபர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் அந்த தெருவும், அந்த தெரு வாலிபர்களும் பெரிய அளவில் பெயர் வாங்கி விட்டனர். அதேபோல் எங்கள் தெருவிலும் நாங்கள் பெரிய ஆளாக பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக மதுபோதையில் மது பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீப்பற்றவைத்து வீசினோம் என்று சண்முகராஜா கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    எனினும் பெட்ரோல் குண்டு வீச குறிப்பாக அந்த இடத்தை தேர்வு செய்தது எதற்காக என்று போலீசார் விசாரித்தனர். அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வசிக்கும் வாலிபர்களிடமும் விசாரித்தனர். அப்போது அதில் செல்போன் கடையில் வேலை பார்க்கும் மாதா பூங்கொடி தெருவை சேர்ந்த ஹரிஷ் என்ற வாலிபர், கடந்த ஓராண்டுக்கு முன்பு 'ப்ரி பயர்' விளையாட்டு விளையாடியதில் தனக்கும், சண்முகராஜாவுக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. நாங்கள் நண்பராக இருந்தாலும் இந்த பிரச்சனையில் அவர் என்னை சக நண்பர்களுடன் சேர்ந்த தாக்கினார். இதனால் நான் அவர்களிடம் பேசாமல் இருந்து வருகிறேன் என்று தெரிவித்தார்.

    இதனால் 'ப்ரீ பயர்' விளையாட்டில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர்கள் மதுபோதையில் இவ்வாறு பெட்ரோல் குண்டு வீசினார்களா? அல்லது ஹீரோயிசம் செய்வதற்காக இந்த சம்பவத்தை நிகழ்த்தினார்களா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான நிகாசை தேடி வருகின்றனர்.

    கைதான சண்முகராஜா மார்க்கெட்டில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். அவர் மீது கஞ்சா வழக்கு, திருட்டு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். சமீப காலமாக நெல்லை மாநகர பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் சாதாரணமாகிவிட்டதாகவும், போலீசார் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்தனர்.

    • தமிழக அரசுக்கு ரூ.8.33 லட்சம் கோடி கடன் இருக்கிறது.
    • 15-வது நிதிக்குழு ஒரு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

    "தி.மு.க. 2021-ல் ஆட்சி பொறுப்பை ஏற்கும்போது தமிழக அரசுக்கு ரூ.4.56 லட்சம் கோடி கடன் இருந்தது. தற்போதைய அரசு அந்த கடன் தொகைக்கு வட்டியும் கட்டுகிறது, கடன் தொகையை திருப்பியும் செலுத்துகிறது. கடந்த ஆண்டு ரூ.49,000 கோடி கடன் திருப்பி செலுத்தப்பட்டது. இப்போது தமிழக அரசுக்கு ரூ.8.33 லட்சம் கோடி கடன் இருக்கிறது.

    15-வது நிதிக்குழு ஒரு இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. அந்த இலக்கிற்கு உட்பட்டுதான் இந்த கடன் இருக்கிறது. தமிழக அரசு திவாலாகும் என்பது சிலரின் ஆசையாக இருக்கலாம். ஆனால் கடன் சுமையால் திவாலாகும் நிலை தமிழக அரசுக்கு ஒருபோதும் வராது."

    இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

    • தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.
    • உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது.

    பணகுடி:

    தமிழகத்தில் தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

    இதில் தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் வகையில் இளவட்டக்கல் தூக்கும் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் விளையாட்டு போட்டி வழக்கம்போல் இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மிகவும் கோலாகலமாக நடைபெற இருக்கிறது.

    இளவட்டக்கல் விளையாட்டு போட்டியில் பங்குபெற ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதேபோன்று நடைபெற இருக்கும் உரல் தூக்கும் போட்டியிலும் பங்குபெற இளைஞர்களுக்கு இணையாக இளம்பெண்களும் தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

    இப்போட்டியில் உரலை ஒருகையால் ஏந்தி தலைக்கு மேல் நீண்டநேரம் தூக்கி நிறுத்திவைக்கும் சாதனையும் நடைபெற இருக்கிறது. ஒரு வார கால இடைவெளியில் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் தற்போது இளம்பெண்கள், வாலிபர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மாயாண்டி தடுமாறி கீழே விழுந்தார்.
    • கூட்டாளிகள் மேலும் 3 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி கீழ நடுத்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகன் மணிகண்டன் (வயது 22). இவர் சென்னையில் உள்ள தனியார் சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் வயலுக்கு சென்று விட்டு திரும்பிய போது சேரன்மகாதேவி லால் பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த மாயாண்டி(46) மற்றும் அவரது கூட்டாளிகளான அம்பை அருகே உள்ள கோடாரங்குளத்தை சேர்நத 3 பேர் சேர்ந்து மணிகண்டனை கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தியதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வி.கே.புரம் அருகே உள்ள கோட்டாரங்குளத்தில் சிவராமன்(25) என்பவர் கொலை செய்யப்பட்டார். அதில் மணிகண்டனின் நெருங்கிய உறவினருக்கு தொடர்பு இருந்ததாக நினைத்து, அதற்கு பழி தீர்க்கும் விதமாக சிவராமனின் தாய்மாமாவான மாயாண்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தியிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். நேற்று நெல்லையில் காட்டுப்பகுதியில் மாயாண்டி பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தனிப்படையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை கண்ட மாயாண்டி தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து போலீசார் சென்ற நிலையில், மாயாண்டி தடுமாறி கீழே விழுந்தார்.

    உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில் மாயாண்டிக்கு வலது கையில் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாயாண்டியின் கூட்டாளிகள் மேலும் 3 பேரை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி ரெத்னம். இவர்களுக்கு ஜெனிபர் (வயது 14) என்ற மகளும், சிவராஜ்(12) என்ற மகளும் உள்ளனர்.

    ஜேக்கப் சென்னையில் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். ரெத்னம் திசையன்விளையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகன் சிவராஜ் சண்முகபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். ஜெனிபரும் அதே பள்ளியில் படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம்போல் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு ரெத்னம் வீட்டு வேலைக்கு சென்று விட்டார். மதியம் பள்ளி முடிந்து சிவராஜ் வீட்டுக்கு வந்துள்ளார். தொடர்ந்து அவர் புத்தகப்பையை வைத்து விட்டு சைக்கிளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

    அவர் மாலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் வீட்டு வேலை முடிந்து வந்த ரெத்னம் தனது மகனை காணாதது குறித்து அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார்.

    தொடர்ந்து திசையன்விளை போலீசில் புகார் அளிக்கவே, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஊருக்கு அருகே உள்ள நந்தன் குளத்தில் சிவராஜின் சைக்கிளும், அதன்மீது அவரது சட்டையும் இருந்தது.

    இதனால் அவர் குளத்தில் குளிக்க சென்ற இடத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக திசையன்விளை தீயணைப்பு நிலைய அலுவலர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று குளத்தில் தேடிய நிலையில், நள்ளிரவில் சிவராஜ் பிணமாக மீட்கப்பட்டார்.

    இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று தொடங்கியது.
    • கேரளாவில் இருந்து 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

    நெல்லை:

    கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு புளியரை சோதனை சாவடி வழியாக நெல்லை மாவட்டத்தில் சுத்தமல்லி அருகே உள்ள கோடக நல்லூர், கொண்டாநகரம், சீதபற்பநல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள காட்டுப்பகுதிகளில் மூட்டை மூட்டைகளாக மருத்துவக் கழிவுகளான ஊசிகள், கையுறைகள், ரத்தம் படிந்த பொருட்கள், மருந்து பாட்டில்கள் என மலைபோல் கொட்டப்பட்டு இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    இந்த கழிவுகளால் பொது சுகாதாரத்திற்கு கேடும், நோய் தொற்று பரவும் அபாயமும், நீர் நிலைகள் மாசுபடும் அபாயமும் இருந்ததால் இது சம்பந்தமாக முக்கூடல், சீதபற்பநல்லூர் ஆகிய போலீஸ் நிலையங்களில் தலா ஒரு வழக்கும், சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது.


    அதில் திருவனந்தபுரத்தில் உள்ள சில நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு அங்குள்ள கழிவுகளை ஏற்றி வாகனத்தில் கொண்டு வந்து அரசு வழிமுறைகளை பின்பற்றாமல் சுத்தமல்லி பகுதிகளில் கொட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக சுத்தமல்லியை சேர்ந்த மாயாண்டி, மனோகர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்பது குறித்து அதிரடி விசாரணையில் போலீசார் இறங்கினர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில் கழிவுகளை லாரியில் கொண்டு வந்து கொட்டிய சேலம் மாவட்டம், நடுபட்டி, இலத்தூர், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லதுரை (37) என்பவரை போலீசார் நேற்று கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கேரளாவில் செயல்பட்டுவரும் தனியார் நிறுவனத்தின் மேற்பார்வையாளரான கேரள மாநிலம், கன்னூர், இடாவேலியை சேர்ந்த ஜித்தன் ஜேர்ச் (40) என்பவரை கைது செய்தனர்.

    இதனிடையே பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த கழிவுகள் தொடர்பாக விசாரணை நடத்தி, அவை அனைத்தையும் 3 நாட்களுக்குள் கேரள அரசே அப்புறப்படுத்த வேண்டும். அதற்கான முழு செலவையும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்து வசூலித்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.

    அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் கேரளா வில் இருந்து அந்த கழிவுகளை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்த பின்னர் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுடன் ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி கழிவுகளை மீண்டும் கேரளாவிற்கு எடுத்துச் செல்லும் நடைமுறைகள் இன்று காலை தொடங்கியது.

    இதற்காக கேரளாவில் இருந்து சப்-கலெக்டர் ஆல்பர்ட் தலைமையில் 25 பேர் கொண்ட குழுவினர் நெல்லை வந்தடைந்தனர்.

    பின்னர் கேரள அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் இருந்து கழிவுகளை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. மேலும் கழிவுகளை ஏற்றி செல்வதற்காக கேரள பதிவெண் கொண்ட 16 லாரிகள் நெல்லை மாவட்டத்திற்கு புறப்பட்டன.

    இதில் முதல் கட்டமாக திருவனந்தபுரம், நாகர்கோவில் நாங்குநேரி வழியாக 8 கேரளா லாரிகளும், கோட்டயம், புளியரை, செங்கோட்டை, தென்காசி வழியாக 3 கேரளா லாரிகளும் என மொத்தம் 11 லாரிகள் மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தது.

    அதனைத்தொடர்ந்து சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின் முன்னிலையில் நடுக்கல்லூர் அரசு பள்ளியில் வைத்து கேரள அதிகாரிகள் குழுவினர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் நெல்லை மாவட்ட உதவி கலெக்டர் அம்பிகா ஜெயின், திருவனந்தபுரம் மாவட்ட உதவி கலெக்டர் சாக்ஷி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அதன் பின்னர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அந்த லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவை கேரளாவுக்கு செல்வதை உறுதி செய்ய தமிழக-கேரள எல்லைகள் வரை தமிழக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. 

    • கொலை சம்பவத்தால் கீழநத்தம் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது.
    • வடக்கூர், தெற்கூர் ஆகிய 3 இடங்களிலும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாளையங்கோட்டை கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன்கள் மாரிசெல்வம்(வயது 25), மாயாண்டி என்ற பல்ல மாயாண்டி(23).

    மாயாண்டி நேற்று கொலை முயற்சி வழக்கு தொடர்பாக மாயாண்டி கோர்ட்டில் ஆஜராவதற்காக தனது சகோதரர் மாரி செல்வத்துடன் நேற்று நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் முன்பு வைத்து அவரை ஒரு கும்பல் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு காரில் தப்பிச்சென்றது.

    அப்போது அதில் ஒருவரை போலீசாரும், வக்கீல்களும் சேர்ந்து பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கீழநத்தம் இந்திரா காலனியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(25) என்பதும், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 13-ந்தேதி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த கீழநத்தம் 2-வது வார்டு உறுப்பினர் ராஜாமணி கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டியை, ராஜாமணியன், மனோராஜ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 7 பேர் கும்பல் தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி கீழநத்தம் வடக்கூரை சேர்ந்த தங்கமகேஷ்(21), மனோராஜ்(27), சிவா(19), முத்துக்கிருஷ்ணன்(26), கண்ணன்(22), அனவரத நல்லூரை சேர்ந்த மற்றொரு கண்ணன்(20) ஆகிய 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மனோராஜ் வாக்குமூலமாக கூறியதாவது:-


    எனது சகோதரன் ராஜாமணியை எவ்வித காரணமும் இன்றி மாயாண்டி வெட்டிக் கொலை செய்தார். இதனால் எனது குடும்பத்தினர் மிகுந்த துயரம் அடைந்தனர். இதனை பார்த்து எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. எப்படியாவது மாயாண்டியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று முடிவு செய்தேன். தொடர்ந்து அவரது நடமாட்டத்தை கண்காணித்து வந்த நிலையில், அவர் கோவையில் இருந்து வழக்கு விசாரணைக்காக நேற்று கோர்ட்டுக்கு வருவதை அறிந்தேன்.

    இதனால் எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து காரில் கோர்ட்டு எதிரே காத்திருந்தேன். அப்போது அவர் ஓட்டலுக்கு சென்றுவிட்டு நீதிமன்ற நுழைவு வாயிலை நோக்கி சென்றார். உடனே அவரை சுற்றி வளைத்து கொலை செய்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே இந்த கொலை சம்பவத்தில் உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், மாயாண்டி குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி மாயாண்டி உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கொலை சம்பவத்தால் கீழநத்தம் பகுதி முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இதனால் கீழநத்தம் மேலூர், வடக்கூர், தெற்கூர் ஆகிய 3 இடங்களிலும் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×