என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்கலைக்கழக மாணவி பலாத்கார வழக்கு: யார் அந்த சார்? அ.தி.மு.க. சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் நெல்லையில் பரபரப்பு
- மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
- கே.டி.சி. நகர், சமாதானபுரம் உள்பட மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநிலம் முழுவதும் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதற்கிடையே மாணவி பலாத்கார வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சார் என குறிப்பிட்டு ஒருவரிடம் போனில் பேசியதாகவும், அவரை மறைப்பதாகவும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்தார். மேலும் இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் மாணவி பலாத்கார வழக்கில் யார் அந்த சார்? என்ற கேள்வியுடன் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பாளையங்கோட்டை, டவுன், கே.டி.சி. நகர், சமாதானபுரம் உள்பட மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






