search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவிலில் கஞ்சா விற்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது
    X

    நாகர்கோவிலில் கஞ்சா விற்ற சப்-இன்ஸ்பெக்டர் மகன் கைது

    • புத்தேரி பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை போலீசார் பிடித்தனர்.
    • பணகுடியை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததாக கூறினர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குளச்சல் சப்-டிவிசன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் வடசேரி போலீசார் நேற்று மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை சோதனை செய்தபோது அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்த கவுதம் (வயது 19) என்பது தெரியவந்தது. ஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு முடித்துவிட்டு தற்பொழுது நாகர்கோவிலில் உள்ள ஓட்டல் ஒன்றில் கவுதம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார் .

    மேலும் அவரது தந்தை தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளதும் தெரிய வந்தது. கைதான கவுதம், தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜா என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து போலீசார், ராஜா மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதே போல் புத்தேரி பகுதியில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் 400 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்களிடம் விசாரணை நடத்திய போது கீழப்புத்தேரியை சேர்ந்த மதுசூதனன் (19) மற்றும் பணகுடியை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் பணகுடியை சேர்ந்த தினேஷ் என்பவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கி வந்ததாக கூறினர். போலீசார் தினேஷ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×