search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடவள்ளி அருகே பூ வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை-ரூ.7 லட்சம் கொள்ளை
    X

    வடவள்ளி அருகே பூ வியாபாரி வீட்டில் 25 பவுன் நகை-ரூ.7 லட்சம் கொள்ளை

    • கொள்ளையர்கள் எதற்காக தந்தையையும், மகனையும் கொல்ல வந்ததாக தெரிவித்தனர் என்பது மர்மமாக உள்ளது.
    • பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடவள்ளி:

    கோவை வடவள்ளி அடுத்த மருதம் நகரை சேர்ந்தவர் பெரியசாமி(வயது45).

    இவருக்கு மகேஸ்வரி(39) என்ற மனைவியும், அன்புச்செல்வன், மோகன்குமார் என 2 மகன்கள் உள்ளனர். இதில் அன்புச்செல்வன் இறந்து விட்டார். மோகன்குமார் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    பெரியசாமி கோவை பூமார்க்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பெரியசாமி வீட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டு சென்று விட்டார். அவரது 2-வது மகன் மோகன்குமாரும் பள்ளிக்கு சென்று விட்டார்.

    வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். காலை 10.30 மணிக்கு அவரது வீட்டிற்குள் மர்மநபர்கள் 2 பேர் அத்துமீறி நுழைந்தனர்.

    பின்னர் மகேஸ்வரியின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம், நகை எங்கிருக்கிறது என கேட்டனர். அவர் அறையில் இருப்பதாக தெரிவிக்கவே அங்கு அழைத்து சென்றனர்.

    அப்போது மகேஸ்வரின் தன் கழுத்தி கிடந்த செயினை கழற்றி கொடுக்க முயன்றார். ஆனால் மர்மநபர்கள் இதெல்லாம் வேண்டாம் என அவரை கீழே தள்ளினர்.

    அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் இவர் சத்தம் வெளியே கேட்காத அளவிற்கு பீரோவில் இருந்து துணிகளை எடுத்து மகேஸ்வரி மீது போட்டு அவரை மூடினர். இதனால் அவரால் வெளியே வரமுடியவில்லை.

    இதையடுத்து மர்மநபர்கள் பீரோவில் இருந்த ரூ.7 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் 25 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு வீட்டில் நிறுத்தி வைத்திருந்த ஆல்டோ காரையும் எடுத்து கொண்டு தப்பி சென்றனர்.

    சிறிது நேரத்தில் மகேஸ்வரியை துணிகளை எடுத்து போட்டு எழுந்து பார்த்த போது 2 பேரும் தப்பியோடி விட்டனர்.

    உடனடியாக அவர் சம்பவம் குறித்து தனது கணவர் பெரியசாமிக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து பார்வையிட்டு, வடவள்ளி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்ததும் பேரூர் டி.எஸ்.பி. ராஜபாண்டி, வடவள்ளி இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது மகேஸ்வரி கூறுகையில் எங்கள் வீட்டுக்கு 2 பேர் நபர்கள் வந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்தனர். அவர்கள் தப்பி சென்றபோது, நாங்கள் இங்கு கொள்ளையடிக்க வரவில்லை. உனது கணவரையும், 2-வது மகனையும் கொலை செய்ய தான் வந்தோம். ஆனால் அவர்கள் மாலை போட்டிருந்ததால் பணத்தை கொள்ளையடித்து செல்கிறோம் என கூறி சென்றதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் வீடு முழுவதும் ஆய்வு செய்து, ஏதாவது தடயங்கள் கிடைக்கிறதா என தேடி பார்த்தனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகி உள்ள காட்சிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் எதற்காக தந்தையையும், மகனையும் கொல்ல வந்ததாக தெரிவித்தனர் என்பது மர்மமாக உள்ளது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மகேஸ்வரியின் மூத்த மகன் மரணம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு ஒன்று நடந்து வருகிறது. இந்த வழக்கிற்கும், தற்போது நடந்துள்ள கொள்ளை சம்பவத்துக்கும் தொடர்பு உண்டா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×