என் மலர்
மதுரை
- ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
- தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு இருப்பதாக சர்ச்சை எழுந்தது.
ஏ.ஆர். டெய்ரி நிறுவன உரிமத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
உணவு பாதுகாப்புத்துறை உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி புட்ஸ் நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தது.
உரிமம் நிறுத்தி வைப்பு மூலம் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மதுரை அமர்வில் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், ஏர்.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறு பரிசீலனை செய்யும்படி உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உரிமம் வழங்கும் அதிகாரிக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவிட்டுள்ளார்.
- தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது.
- அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவராக மாறி கிறிஸ்தவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
மதுரை:
கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் பேரூராட்சி கவுன்சிலர் அய்யப்பன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் 2022-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் தேரூர் பேரூராட்சி பகுதியில் வார்டு எண் 8-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதே பேரூராட்சி வார்டு எண் 2-ல் பெண்கள் பொது வார்டில் அ.தி.மு.க. சார்பில் அமுதா ராணி என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்த தேரூர் பேரூராட்சி தலைவர் பதவியானது பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது. ஆனால் அமுதாராணி 2005-ல் கிறிஸ்தவராக மாறி கிறிஸ்தவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனை மறைத்து தன்னுடைய பிறப்புச் சான்றிதழை ஊராட்சி மன்ற தேர்தலில் கொடுத்து தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இது சட்டவிரோதம். எனவே தேரூர் பேரூராட்சி மன்ற தலைவராக உள்ள அமுதாராணி பட்டியல் இன சாதி சான்றிதழை ரத்து செய்து அவரை தலைவர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
இந்து பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவ சட்டங்களை பின்பற்றி கிறிஸ்தவரை திருமணம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் உள்ள நிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு மனுதாரர் வேட்பு மனு தாக்கல் செய்தபோதே தேர்தல் அதிகாரிகள் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செயல்படாமல் ஒருதலைபட்சமாக தேர்தல் அதிகாரிகள் செயல்பட்டு உள்ளனர்.
இந்தியா போன்ற ஒரு ஜனநாயக வலிமை மிக்க நாட்டின் பொதுமக்கள் பாராளுமன்றம், சட்டமன்றம் அல்லது உள்ளாட்சி அமைப்புகளுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது தான் ஜனநாயகத்தின் உயிர்நாடியே இந்த நடைமுறை அரசியல் அமைப்புச் சட்டத்தால் வழிநடத்தப்படுகிறது. ஆனால் ஆளும் கட்சியின் பகடை காய்களாக தேர்தல் அதிகாரிகள் மாறுகின்றனர். இது போன்று தேர்தல் அதிகாரிகள் செயல்படுவது பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை கேலிக்கூத்தாக்குவது போன்று உள்ளது.
இந்த வழக்கில் ஊராட்சி மன்ற தலைவர் வெற்றியை உறுதி செய்யும் வகையில் நெல்லை மாவட்ட ஆதிதிராவிட நலத்துறையின் உறுப்பினர் செயலர் அமுதாராணிக்கு ஆதரவாக செயல்பட்டு அறிக்கை அளித்துள்ளார். அவரது அறிக்கை ரத்து செய்யப்படுகிறது.
அமுதா ராணி திருமண சான்றிதழ் மூலம் அவர் கிறிஸ்தவ மதத்தை தழுவியது தெரியவந்துள்ளது. மனுதாரர் ஒரே நேரத்தில் இரு வேறு சலுகைகளை அனுபவிக்க இயலாது. இந்திய கிறிஸ்தவ திருமண சட்டத்தின் படி கிறிஸ்தவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு, பொது வேலைக்காக தன்னை இந்து என் அடையாளப்படுத்துவதே ஏற்கத்தக்கதல்ல.
ஆகவே தேரூர் பேரூராட்சி மன்ற தலைவராக அமுதாராணி தேர்வு செய்யப்பட்டதை தகுதி நீக்கம் செய்து அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
- தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
மதுரை:
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது. இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரனை கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவக்கல்லூரி விடுதியில் பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்தபின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் பாதுகாப்பிற்காக போராடிய ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும் பிரதமரை பாராட்டும் விதமாகவும் மூவர்ணக் கொடி யாத்திரை தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.
நேற்று திருச்சியிலும், நாளை மதுரையிலும், இன்று திருப்பூர் ஆகிய பகுதிகளில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து டாஸ்மாக் அலுவலர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடக்கிறது. அது ஒரு தனிப்பட்ட அமைப்பு. தேவை இல்லாமல் ரெய்டுகள் நடைபெறாது. புகார்கள் இருப்பதால் சோதனை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை குறித்து எனக்கு முழுமையாக தெரியாது.
த.வெ.க. தலைவர் விஜய் பா.ஜ.க. கூட்டணியில் பங்கு பெற விருப்பமில்லை எனக்கூறியது அவருடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் மக்களுக்கு எதிரான ஆட்சியை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
2026-ல் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கும் என முதலமைச்சர் கூறி உள்ளார். கருத்து சொல்வதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உள்ளது. ஆனால் அதை தீர்மானிக்கக் கூடிய சக்தி மக்களிடம் உள்ளது.
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளனர். அதில் எதுவும் சந்தேகம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
- திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது.
இத்திருவிழாவில் பங்கேற்க பல்வேறு இடங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்தனர்.
அப்போது, இஸ்லாமியர்கள் பலர் பக்தர்களுக்கு சாதி, மத பாகுபாடு இன்றி நீர், மோர், உணவு வழங்கினர்.
இந்நிலையில், மதுரை சித்திரை திருவிழாவை பாராட்டி நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரூரில் பட்டியலின மக்கள் வழிபட பாகுபாடு காட்டியதாக எழுந்த புகார் மீதான வழக்கதில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.
அதன்படி" வைகையில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வில், எங்கும், எதிலும் சாதி பாகுபாடு கிடையாது.
மதுரை சித்திரை திருவிழாவை போல, எந்த சாதிய பாகுபாடும் இல்லாமல், அனைத்து பகுதிகளிலும் விழா நடத்தலாமே.
மாவட்ட ஆட்சியர் மாறு வேடத்தில் சென்று ஆய்வு செய்திருந்தாலே உண்மையான பிரச்சனை தெரிந்திருக்கும்.
திருவிழாவில் அனைவருக்கும் ஒரே முறை தான் கடைபிடிக்கப்பட வேண்டும்.
திருவிழா கொண்டாடுவதே அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று குறிப்பிட்டனர்.
- நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
- இன்று அதிகாலை கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.
மதுரை:
மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12-ந்தேதி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். நேற்று முன்தினம் அங்கிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார். ராமராயர் மண்டபத்துக்கு இரவு 12.30 மணிக்கு வந்தார். அப்போது அங்கு ஏராளமான பக்தர்கள் கூடி கள்ளழகரை வரவேற்றனர்.
நள்ளிரவு 2 மணிக்கு மேல் தசாவதார திருக்கோலங்களில் காட்சி தொடங்கியது. முதலில் முத்தங்கி சேவையும் அதை தொடர்ந்து மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம், ராம அவதாரம், கிருஷ்ண அவதாரங்களில் காட்சி தந்தார். இறுதியாக நேற்று காலை 8.30 மணிக்குமேல் மோகினி அவதாரத்தில் கள்ளழகர் காட்சி தந்தார். விடிய, விடிய தசாவதார திருக்காட்சி நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர்.
நேற்று காலையில் மோகினி அவதாரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பிற்பகலில் ராமராயர் மண்டபத்தில் அனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் எழுந்தருளி அங்கிருந்து புறப்பட்டார்.
தொடர்ந்து கோரிப்பாளையம் வழியாக இரவு 11 மணிக்குமேல் தல்லாகுளத்தில் உள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தை அடைந்தார். அங்கு திருமஞ்சனமாகி இன்று அதிகாலை 3 மணிக்கு கள்ளர் திருக்கோலத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்புரிந்தார்.
இதையடுத்து அதே திருக்கோலத்துடன் கருப்பணசாமி கோவில் சன்னதியில் இருந்து பூப்பல்லக்கில் அழகர் மலைக்கு புறப்பட்டார்.
அங்கு திரண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் கள்ளழகரை தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகர் மூன்றுமாவடி, அப்பன் திருப்பதி, கள்ளந்திரி வழியாக நாளை காலை அழகர் மலைக்கு போய் சேருகிறார்.
- மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
- மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை:
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருந்து வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வந்த விஜய், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டு வருவதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுவதாக கூறி வந்தார்.
தற்போதைய சூழலில் நிர்வாக சீர்கேடுகள், ஊழலை ஒழிக்கவும், சாதி, மத பேதங்களால் மக்களை பிளவுபடுத்த துடிக்கும் கலாச்சாரத்தை தடுக்கவும் அடிப்படை அரசியல் மாற்றத்தை நோக்கி தனது அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறிவந்த விஜய் மீதான அரசியல் பிரவேச எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதற்கேற்ப தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளும் இருந்து வருகிறது.
தனது களப்பணியின் முதல்கட்டமாக விக்கிரவாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்களுடன் மாநாட்டை நடத்திய விஜய், சமீபத்தில் பொதுக்குழுவையும் கூட்டினார். வரலாற்று சிறப்புமிக்க தீர்மானங்களை முன்மொழிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.
அதிலும் குறிப்பாக முதல் தேர்தலை சந்திக்க உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி என்பது கட்சி தொடங்கிய உடனேயே எழுதப்பட்டு விட்டதாக அதன் தொண்டர்கள் நம்பிக்கையுடன் கூறிவருகிறார்கள். அதனை முன்னெடுத்து செல்லும் வகையில், முதன் முதலாக பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினரை விஜய் சந்தித்தார். பின்னர் இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளார். இதற்காக மண்டல வாரியாக பூத் கமிட்டி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த மாதம் கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு 2 நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் விஜய், தனது தொண்டர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை கூறினார். தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க வியூகம் வகுத்து வரும் விஜய், அடுத்த கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறார்.
இதற்கிடையே கடந்த மாத இறுதியில் கொடைக்கானலில் நடைபெற்ற தனது கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு விஜய் வந்தார். விமான நிலையத்தின் வெளியே திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்களின் வரவேற்பில் நெகிழ்ந்த விஜய், விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று கூறிச் சென்றார்.
இந்தநிலையில் மதுரையில் அடுத்த மாதம் (ஜூன்) பூத் கமிட்டி மாநாடு நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கொடைக்கானல் வருகை தந்த அவர், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் இந்த பூத் கமிட்டி மாநாடு நடத்த இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அதற்கான முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை மாநகர் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்று சக்தியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக த.வெ.க. மக்கள் மத்தியில் வெற்றி கொடி நாட்டி உள்ளது. எங்கள் தலைவர் விஜய் மேற்கொண்டுள்ள அரசியல் வியூகங்கள் மற்ற அரசியல் இயக்கங்களுக்கு மாற்றாக மக்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது.
கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வரலாற்று சிறப்புமிக்க அளவில் நடத்தப்பட்டது. இப்போது பூத் கமிட்டி கூட்டங்கள் கூட மாநாடு போல நடத் தப்பட்டு வருகிறது. தி.மு.க., அ.தி.மு.க.வை விட சிறந்த முறையில் பூத் கமிட்டி அமைத்துள்ளோம். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 250 பேர் பூத் கமிட்டியில் இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இளைஞர்கள். இளைஞர்கள் மத்தியில் தலைவர் விஜய் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
த.வெ.க. வருகிற 2026 சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இதற்கான அரசியல் வியூக மாநாடு மதுரையில் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்படுகிறது. முன்னதாக பூத் கமிட்டி மாநாடும் நடைபெறுகிறது. இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களையும் கட்சி தலைமை ரகசியமாக தயார் செய்து வருகிறது.
மதுரையில் நடக்கும் அரசியல் மாநாட்டில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலையும் விஜய் அறிவிக்க திட்டமிட்டுள்ளார். எனவே நிர்வாகிகளும், தொண்டர்களும் இப்போதே சட்டசபை தேர்தல் பணியில் இறங்கி விட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள தி.மு.க.வை வீழ்த்துவதில் உறுதியாக இருக்கும் விஜய் அதற்கான வியூகங்களை வகுத்து களப்பணியாற்றி வருகிறார். முன்னதாக தமிழகம் முழுவதும் கட்சி ரீதியாக 120 மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ள விஜய், 66 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளுக்கு கட்சி சார்பில் ஏஜெண்டுகளையும் நியமித்து வருகிறார். மதுரையை தொடர்ந்து சென்னை மண்டல பூத் கமிட்டி மாநாட்டை காஞ்சிபுரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ள விஜய், நாளை முதல்கட்டமாக டெல்டா மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதாவது திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் நாளை சென்னையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பணிகள், நிர்வாகிகள் நியமனம், கட்சியின் வளர்ச்சி மற்றும் பொதுமக்களிடம் எடுத்து செல்லப்பட வேண்டிய விஷயங்கள், அதிக அளவில் இளைஞர்களை த.வெ.க.வில் இணைத்தல், பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அறிவுரைகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்களை வழங்க இருக்கிறார். அதே போல் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விஜய் முக்கிய ஆலோசனைகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
- கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
- காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றதாகும். மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 8-ந்தேதியும், தேரோட்டம் 9-ந்தேதியும் நடைபெற்றது.
திருமாலிருஞ்சோலை, தென் திருப்பதி என்று போற்றி அழைக்கப்படுவதும், 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றானதுமான மதுரை மாவட்டம் அழகர் கோவில் மலையடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் வைபவத்திற்காக சுந்தரராஜ பெருமாள் தங்கப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் 18-ம் படி கருப்பண சுவாமி உத்தரவு பெற்று அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்த கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். தண்ணீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர். இதனைத்தொடர்ந்து காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவத்தை தொடர்ந்து ராமராயர் மண்டகபடியில் கள்ளழகரை குளிர்விக்கும் தீர்த்தவாரி நடக்கிறது. 13-ந்தேதி காலையில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் அழகர் காட்சி தருகிறார். தொடர்ந்து அன்று மாலையில் கருட வாகனத் தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
அதனைத் தொடர்ந்து இரவு முதல் மறுநாள் காலை வரை விடிய, விடிய தசாவதார காட்சி நடைபெறும். 14-ந்தேதி மதியம் ராஜாங்க திருக்கோலத்தில் அழகர் எழுந்தருளி பக்தர்களுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்று இரவு பூப்பல்லக்கு விழா நடைபெறும். 15-ந் தேதி மதுரையில் இருந்து கள்ளழகர் மலைக்கு திரும்புகிறார். 17-ந்தேதி உற்சவ சாற்று முறையுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
அழகர்கோவில் புறப்பாடு முதல் மீண்டும் கோவிலுக்கு திரும்பும் வரை சுமார் 494 மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளுகிறார். 100-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், சி.சி.டி.வி. கேமராக்கள் அமைத்தும் பாதுகாப்பு பணிகளை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர்.
- சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
மதுரை:
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்காலங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை-சுந்தரேசுவரர் மதுரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக்கு விஜயம் போன்ற வைபவங்களை தொடர்ந்து 10-ம் திருநாளான நேற்று திருக்கல்யாணம் விமரிசையாக நடைபெற்றது. மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவை காண ஏராளமானோர் திரண்டனர்.
தொடர்ந்து அன்னதானம், திருக்கல்யாண விருந்து, மொய் செலுத்துதல் போன்றவையும் நடைபெற்றன. சித்திரை திருவிழாவின் மற்றொரு முத்தாய்ப்பு நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக 2 தேர்களும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தன.
இன்று அதிகாலை 4 முதல் 4.30 மணிக்கு மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் ஆகியோர் முத்தம்பல முதலியார் கட்டளை மண்டகப்படி, ராமநாதபுரம் சேதுபதி மகாராஜா மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து ஒரே பல்லக்கில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
அதன்பிறகு பிரியாவிடை -சுந்தரேசுவரர் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளினர். அப்போது திரண்டிருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர். தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பு அங்குள்ள கருப்பண சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
காலை 5.05 மணிக்கு மேல் 5.29 மணிக்குள் மேஷ லக்கனத்தில் ரதாரோஹணம் நடைபெற்று காலை 6.30 மணிக்கு முதலில் சுவாமி தேரையும், தொடர்ந்து அம்மன் தேரையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
மாசி வீதிகளிள் ஆடி அசைந்து வந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரின் முன்பாக ஏராளமான சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேசுவரர் பதிகம் பாடியபடியும், ஹர ஹர சிவா என பக்தி முழக்கம் விண்ணைப்பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துசென்று சாமி தரிசனம் செய்தனர்.
4 மாசி வீதிகளிலும் தேர்கள் அசைந்தாடி சென்றதை பொதுமக்கள் சாலையின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களில் நின்றும் தரிசனம் செய்தனர். சுவாமி-அம்மன் தேருக்கு முன்பு அலங்கரிக்கப்பட்ட யானை அழைத்துச் செல்லப்பட்டது.
அதன் பிறகு விநாயகர், முருகன், நாயன்மார்கள் தனித்தனி சிறிய சப்பரங்களில் சென்றனர். மாசி வீதிகளை வலம் வந்த தேர்கள் மதியம் நிலையை வந்தடைந்தன. அதன் பிறகு சண்டிகேஸ்வரர் வீதி உலா நடைபெற்றது.
தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவிழாவை காணவந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது. மக்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வசதியாக போக்குவரத்தில் போலீசார் மாற்றங்கள் செய்து அதனை செயல்படுத்தினர்.
தேரோட்டத்தை தொடர்ந்து இன்று மாலையில் மீனாட்சி அம்மன், பிரியாவிடை- சுந்தரேசுவரர் சப்தாவர்ண சப்பரத்தில் மாசி வீதிகளை வலம் வருகின்றனர். நாளை (10-ந் தேதி) உச்சிக் காலத்தில் பொற்றாமரை குளத்தில் தீர்த்த திருவிழா நடக்கிறது. இரவு 10.15 மணிக்கு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், பவளக்கனிவாய் பெருமாளும் 16 கால் மண்டபத்தில் இருந்து விடை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிகழ்ச்சியோடு மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது.
சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் வேடத்தில் சுந்தரராஜபெருமாள் கண்டாங்கி பட்டுடுத்தி நாளை தங்கப் பல்லக்கில் புறப்படுகிறார்.
நாளை மறுநாள் (11-ந் தேதி) மதுரை நோக்கி வரும் அழகரை வழியெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் பக்தர்கள் திரண்டு வரவேற்கிறார்கள். மதுரையில் மூன்றுமாவடியில் நாளை மறுநாள் காலை 6 மணிக்கு எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூன்று மாவடியில் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றியும் சிறப்பு தீபாராதனை காட்டியும் அழகரை மதுரை மக்கள் வரவேற்க உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் அழகர் தங்குகிறார். அங்கு அவர் திருமஞ்சனம் கொள்கிறார். அங்கு அவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன.
12-ந்தேதி காலை தங்க குதிரை வாகனத்தில் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து மக்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்பின் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி ஆயிரம் பொன் சப்பரத்தில் அதிகாலை 3.30 மணி அளவில் எழுந்தருள்கிறார். பின்னர் சித்ரா பவுர்ணமி தினத்தன்று முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
- மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு முடிசூட்டப்பட்டது. தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, கடைசியாக சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்குவிஜயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
சுந்தரேசுவரராக பிரகாஷ் பட்டர் மகன் கவுதம், மீனாட்சி அம்மனாக சிவசேகரன் பட்டர் மகன் சத்தியன் வேடம் தரித்து போர் புரிவது போன்று நடித்து காண்பித்தனர். இதனை காண மாசி வீதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இதை முன்னிட்டு மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி கோவிலுக்குள் நடந்தது. அப்போது பல்வேறு சீர்வரிசைகள் பெண் வீட்டின் சார்பில் வழங்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் இன்று காலை நடைபெற்றது. இதற்காக திருமண மண்டபம் மற்றும் பழைய கல்யாண மண்டபம் ரூ.35 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 10 டன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
மீனாட்சி அம்மனுக்கு பூண் பூட்டும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
முன்னதாக இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி மாப்பிள்ளை அழைப்பாக சித்திரை வீதிகளை வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி ஊர்வலமாக வடக்கு-மேற்கு ஆடி வீதியில் திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினர்.
இன்று காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணி அளவில் ரிஷப லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியம்மன் கழுத்தில் வைரக்கல் பதித்த தங்க திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அம்மனும், சுவாமியும் மணக்கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர்.
இரவு 7.30 மணிக்கு சுந்தரேசுவரர் தங்கஅம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளை வலம் வருவார்கள்.
- கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கும் சமீபத்தில் மதுரை மாவட்ட கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.
- தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், 2023-ம் ஆண்டு வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணை, மதுரை மாவட்ட கனிமவள முறைகேடு வழக்குகளுக்கான சிறப்பு கோர்ட்டு மற்றும் மேலூர் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகளில் பல்வேறு முக்கிய பிரமுகர்களும் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்குகள் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கிரானைட் முறைகேடு சம்பந்தமாக விசாரணை அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் விசாரணை நடத்தி, அறிக்கையையும் அரசிடம் தாக்கல் செய்திருந்தார்.
கிரானைட் முறைகேடு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கும் சமீபத்தில் மதுரை மாவட்ட கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. இந்த நிலையில் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், 2023-ம் ஆண்டு வரை தனக்கு போலீஸ் பாதுகாப்பு இருந்தது. அதன் பின்பு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதனால் வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் நேரில் ஆஜராவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
எனவே கோர்ட்டில் ஆஜராகும் போது போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் அல்லது வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராக அனுமதிக்க வேண்டும். இவ்வாறு ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசு வக்கீல் மூலமாக மதுரை மாவட்ட கோர்ட்டுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் தலைமை நீதிபதி லோகேஸ்வரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐ.ஏ.எஸ். அதி காரி சகாயம் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கவில்லை என கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி, அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுமா? இல்லை என்றால் மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வழங்க உத்தரவிட நேரிடும் என நீதிபதி தெரிவித்து, இந்த வழக்கு விசாரணையை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
- விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
- நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை:
கொடைக்கானலில் நடந்த ஜனநாயகன் படப்பிடிப்பில் கலந்து கொள்ள த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 1-ந்தேதி மதுரைக்கு வந்தார். அவரை விமான நிலையத்தில் த.வெ.க. தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு வரவேற்றனர்.
இதனால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்தில் அனுமதியின்றி கூடுதல், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் த.வெ.க. மதுரை மாவட்ட செயலாளர் தங்கபாண்டி (தெற்கு), கல்லணை(வடக்கு) மற்றும் நிர்வாகிகள் மீது பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- காவலர் கதிரவன் மார்க்ஸூக்கு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
- த.வெ.க. கட்சி துண்டை அணிந்துகொண்டு விஜயின் வரவேற்பு கொண்டாட்டத்தில் காவலர் கலந்து கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை பார்க்க சென்ற காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலரான கதிரவன் மார்க்ஸ், விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மாற்றுப்பணியில் இருந்தார்.
காவலர் கதிரவன் மார்க்ஸூக்கு மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா பாதுகாப்பு பணி ஒதுக்கப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் நடிக்கும் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்ல சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து இருந்தார்.
த.வெ.க. தலைவர் விஜயை பார்ப்பதற்காக காவலர் கதிரவன் மார்க்ஸ் வேறு காரணம் கூறி, முன் அனுமதி (Permission) கேட்டு மதுரை விமான நிலையம் வந்துள்ளார்.
சீருடை இல்லாமல், த.வெ.க. கட்சி துண்டை அணிந்துகொண்டு விஜயின் வரவேற்பு கொண்டாட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பான வீடியோ மாநகர காவல் ஆணையாளர் லோகநாதனுடைய பார்வைக்கு சென்ற நிலையில், காவலர் கதிரவன் மார்க்ஸை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளர்.






