என் மலர்
கன்னியாகுமரி
- தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
- கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் ஏ.ஆர்.கேம்ப் ரோட்டில் கார் சர்வீஸ் ஸ்டேஷன் ஒன்று உள்ளது. இங்கு தினமும் ஏராளமான கார்கள் சர்வீஸ் செய்வதற்கும் பழுது நீக்குவதற்கும் கொண்டு வரப்படும். நேற்று 50-க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. மாலை வேலை முடிந்து ஊழியர்கள் வீட்டிற்கு சென்றனர். காவலாளிகள் 2 பேர் பணியில் இருந்தனர்.
இன்று அதிகாலை 2 மணி அளவில் கார் ஷோரூமில் இருந்து திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதை பார்த்த காவலாளிகள் அங்கிருந்த தீயணைப்பு கருவி மூலமாக தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தீ மளமளவென்று பரவியது. காரில் இருந்த பெட்ரோல் டீசல் டேங்கில் வெடித்து சிதறியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. உடனே காவலாளிகள் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது தீ வேகமாக எரிந்து கொண்டு இருந்தது. தீயை கட்டுப்படுத்த அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். 2 தீயணைப்பு வண்டிகளில் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர். 4 வண்டிகளில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீ அணைக்க முயன்றனர். சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் சர்வீஸ் ஸ்டேஷன் நிறுத்தப்பட்ட 16 கார்கள் எரிந்து சேதமடைந்தது.

காரின் இருக்கைகள் உள்பட அனைத்து பகுதிகளும் எரிந்து சேதம் ஏற்பட்டது. தீயில் எரிந்து சாம்பலான கார்கள் எலும்புக்கூடுகள் போல உள்ளது. 25-க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் இன்றி தப்பியது. இது பற்றி தகவல் அறிந்ததும் நேசமணிநகர் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
கார் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டது பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.
- மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தூத்தூர் சின்னதுறை புனித ஜூட் விளையாட்டு குழு சார்பில் நடைபெற்ற மாநில மின்னொளி கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்ற அணிகளை வாழ்த்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கினேன்.

திருவட்டார் கிழக்கு வட்டார ஆற்றூர் பஞ்சாயத்து காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினேன்.

குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து கொண்டு புது நிர்வாகிகளின் பணி சிறக்க வாழ்த்தினேன்.
முன்னதாக ஊர்வலமாக சென்று காங்கிரஸ் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.

நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்ற பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று காலை என்னை மரியாதை நிமித்தம் சந்தித்தனர். அவர்களுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.

ஈரான் இஸ்ரேல் போர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஈரானில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குமரி மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை மீட்டு பத்திரமாக தாயகம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளேன்.
மார்த்தாண்டம் JCI சார்பில் இன்று ஆற்றூரில் நடைபெற்ற ரத்த தான முகாமினை தொடங்கி வைத்தேன்.

சமீபத்தில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வெற்றி பெற்ற குமரி கிழக்கு மற்றும் நாகர்கோவில் மாநகர நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டினை தெரிவித்து கொண்டேன்.

நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் பெருமையை விளக்கியும், பாஜக வின் மக்கள் விரோத ஆட்சியை கண்டித்தும் நடக்க இருக்கும் தொடர் பரப்புரை பிரச்சார கூட்டத்தை தொடங்கி வைத்தேன்.

மாநகர மாவட்ட தலைவர் திரு.நவீன் குமார் அவர்கள் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
நாகர்கோவில்:
தமிழக மீனவர்கள் உலகின் பல்வேறு பகுதி களுக்கும் சென்று ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடு பட்டு வருகின்றனர். குறிப் பாக வளைகுடா நாடுகளில் இவர்கள் அதிக அளவு மீன்பிடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து தனியார் ஏஜண்டுகள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்கேயே தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அதன்படி ஈரான் நாட்டுக்குச் சென்ற மீனவர்கள், அங்குள்ள தீவுகளில் தங்கி ஆழ்கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இதில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களான தூத்தூர், இனயம், குறும்பனை, குளச்சல், முட்டம் மற்றும் நெல்லை மாவட்டம் உவரி, கூட்டப்புளி, இடிந்த கரை, கூத்தன்குழி பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் அதிக அளவு வெளிநாடுகளில் தங்கி மீன் பிடித்து வருகின்றனர்.
ஈரான், இஸ்ரேல் நாடுகளிலும் அவர்கள் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். ஈரானின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளான ஜீரோ, கிஷ் தீவு, அசலுயே, லாவா தீவு, கம்கு, ஸ்டாரக் ஆகிய இடங்களில் உள்ள துறை முகங்களை மையமாக கொண்டு தமிழக மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது அங்கு போர் நடந்து வருவதால் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தங்கி உள்ள மீனவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர். குறிப்பாக ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவும் இறங்கி உள்ளதால் மீனவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் இஸ்ரேல் நாட்டிலும் குமரி உள்ளிட்ட தமிழக மீனவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர்.
எனவே அவர்களை பாதுகாப்பாக மீட்டு அழைத்து வர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய வெளியுறவு அமைச்சகம், ஈரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மீனவர்களை மீட்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் பட்டியல் தயாரித்து, அவர்களை மீட்க மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும் என்று அவர்களும், மீனவர் சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்வசந்த் எம்.பி., தமிழக சபாநாயகர் அப்பாவு மற்றும் எம்.எல்.ஏ.க்களும் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே ஈரானில் இருந்து தமிழக மீனவர்களை மீட்டது போல் மீனவர்களையும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற இந்திய தூதரகம், மாணவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட வாழை இனங்கள் அழிந்து வந்தன.
- விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் கவலைப்படுகிறோம். அதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது.
ஈஷா காவேரி கூக்குரல் சார்பில் "மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்" கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தில் உள்ள சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் காவேரி கூக்கூரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் திட்ட விளக்கவுரையாற்றி பேசுகையில் "ஈஷா காவேரி கூக்குரலின் மரம் சார்ந்த விவசாய கருத்தரங்குகள், தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகளின் அறிவியலையும், முன்னோடி விவசாயிகளின் அனுபவ அறிவையும் இணைத்து எளிய விவசாயிகளுக்கு தரும் வகையில் நடத்தப்படுகின்றன. இதற்கு விவசாயிகள் மத்தியில் பெருமளவில் ஆதரவு கிடைத்து வருகிறது.
மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மர விற்பனையை ஒழுங்குபடுத்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய 'டிம்பர் வளர்ச்சி வாரியம்', தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 'மிளகு கொடி விநியோகம்' மற்றும் தடையில்லா 'சந்தன மர விற்பனை' ஆகிய 3 கோரிக்கைகளை அமைச்சர் மூலம் அரசுக்கு முன்வைக்கிறோம்." எனக் கூறினார்

இதனைத் தொடர்ந்து பேசிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், "இன்றைக்கு நிலைத்த நீடித்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது. அதனை விவசாயத்தில் இருந்துதான் துவங்க வேண்டும். அந்த வகையில் பல்வேறு வல்லுனர்கள், வெற்றி விவசாயிகள் கலந்து கொள்ளும் இக்கருத்தரங்கு காலத்தின் தேவை என்றே கூற வேண்டும். இதில் பெருமளவில் திரண்டு இருக்கும் விவசாயிகளுடன் கலந்து கொள்வது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.
சமூக காடுகள் பெருமளவில் அழிந்து வருவது, நெகிழி குப்பைகளை அலட்சியமாக ஆறுகளில் கொட்டுவது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது ஆகியன கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டு இருக்கின்றன. இவை நம் முன் இருக்கும் சவால்கள். இவற்றை சமாளிக்க நாம் இயற்கை சார்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்த 35-க்கும் மேற்பட்ட வாழை இனங்கள் அழிந்து வந்தன. நான் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் துறை அதிகாரிகளுக்கு அவற்றை மீட்க வேண்டுமென கூறினேன். தற்போது அரசு பழத் தோட்டத்தில் 35 ரக வாழை இனங்கள் நிற்கின்றன. காவேரி கூக்குரல் சார்பில் முன்வைக்கப்பட்டு இருக்கும் 3 கோரிக்கைகளை துறை சார்ந்த அமைச்சரிடம் எடுத்துச் செல்ல உறுதுணையாக இருப்பேன்" என்றார்.
தென்னைக்குள் பல அடுக்கு, பல பயிர் விவசாயம் மூலம் சாதனை படைத்த முன்னோடி விவசாயி வள்ளுவன் பேசுகையில், "விளைச்சல் குறைவால் தென்னை விவசாயிகள் கவலைப்படுகிறோம். அதற்கு பருவநிலை மாற்றம் முக்கிய காரணமாக உள்ளது. வறட்சி, மழைப்பொழிவு என மாறி மாறி வரும் போது, தென்னை போன்ற ஒரு பயிர் சாகுபடி, விவசாயிக்கு நஷ்டமாக உள்ளது. ஈஷா மண் காப்போம் இயக்கம் பலபயிர் சாகுபடியால் தென்னைக்கு பாதிப்பில்லை என்பதை புரிய வைத்தனர். தற்போது, தென்னைக்குள் ஊடுபயிராக ஜாதிக்காய், வாழை, மரப்பயிர்கள், பாக்கு போன்றவற்றை சாகுபடி செய்து வருமானம் பெற முடிகிறது. இதனால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வருமானம் எளிதாகக் கிடைக்கிறது" என்றார்.
முன்னோடி ஜாதிக்காய் விவசாயி சொப்னா சிபி கள்ளிங்கள் பேசுகையில், "தென்னை, பாக்கு, ஜாதிக்காய், மிளகு, வாழை மற்றும் காய்கள், பழங்கள் என 25 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்கிறோம். ஜாதிக்காய் விளைச்சலுக்கு தாமதமானாலும், அது தரும் வருமானம் அதிகமானதாக இருக்கும். மலைப்பிரதேசம், சமவெளிகளிலும் நன்றாக விளையக் கூடியது ஜாதிக்காய். விவசாயிகள் நலனுக்காக ஈஷா செயல்படுகிறது. விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நட்டு பசுமையை ஏற்படுத்தும் ஈஷாவுக்கு பாராட்டுகள்." என்றார்.
சமவெளியில் ஜாதிக்காய் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விஞ்ஞானி ஆர்த்தி பேசுகையில், "ஜாதிக்காய் பசுமையான பகுதிகளில் வளரக்கூடியது. அதற்கான தேவையான சூழலை உருவாக்கி விட்டால் எங்கும் அதனை வளர்க்க முடியும். நல்ல விளைச்சல் தரக்கூடிய பல ரகங்கள் தற்போது கிடைக்கின்றன." என்றார்.
தொடர்ந்து, ஜாதிக்காய் சாகுபடி குறித்து இந்திய நறுமணப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் கண்டியண்ணன், முகமது பைசல் மீரான் மற்றும் அவகோடா சாகுபடி குறித்து இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி செந்தில்குமார், பூச்சிகள் குறித்து பூச்சி செல்வம், தேனீ வளர்ப்பு மூலமாக வருமானம் அதிகரிப்பு குறித்து மதுரையைச் சேர்ந்த ஜோஸ்பின் மேரி ஆகியோர் விளக்கி பேசினர்.
- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
- 2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது.
ராகுல் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் குமரி கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. இந்த முகாமை விஜய்வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தார்.
பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
நம் நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேக் கின் இந்தியா என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. அதை வேகப்படுத்த வேண்டும்.
கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து பணி வேகமாக நடக்கிறது. மழை காரணமாக வேலை தாமதம் ஏற்பட்டது. வேகப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் தி.மு.க. கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது. வெற்றி கூட்டணியாக உள்ளது. தேர்தல் தொடர்பாக தலைவர்களை சந்தித்து அதற்கான நல்ல முடிவை தருவார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்கள் கேட்டு கோரிக்கை வைப்போம்.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
தக் லைப் படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கூறியுள்ளார்கள். அங்கு வெளியிடவில்லை. சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது.
அந்த தீர்ப்பை அரசியலாக்க கூடாது. அரசியலாக்காமல் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும். ஒரு சில கருத்துக்களுக்காக ஒரு திரைப்படத்தை தடை செய்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமாவளவனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார்.
- தமிழகத்தில் எப்போதுமே பா.ஜ.க கால் ஊன்ற முடியாது.
கன்னியாகுமரி:
தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கன்னியாகுமரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வெகு காலமாக ஒன்றிணைந்து பயணிக்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நல்ல நட்பில் இருக்கிறார். பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இப்போது முருகனை கையில் எடுத்து உள்ளோம். அடுத்து தமிழகத்தை கையில் எடுப்போம் என்று கூறி உள்ளார்.
தமிழகத்தில் எப்போதுமே பா.ஜ.க கால் ஊன்ற முடியாது. அது எக்காரணத்தைக் கொண்டும் நடக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கன்னியாகுமரி வந்த கனிமொழி எம்.பி.யை, அமைச்சர் மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சரும் தமிழக உணவு ஆணைய தலைவருமான சுரேஷ் ராஜன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைபாரதி, முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உள்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
- உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது.
- தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த 10 நாட்களாக பரவலாக மழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழை பெய்தது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதிகளிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பரவலாக சாரல் மழை நீடித்தது. சுருளோட்டில் அதிகபட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மழை சற்று குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து உள்ளது. நீர்வரத்து குறைந்ததையடுத்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டு உள்ளது.
526 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது 394 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. உபரி நீர் அளவு குறைக்கப்பட்டதால் குழித்துறை கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருவதால் இன்று 2-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.44 அடி யாக இருந்தது. அணைக்கு 861 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 503 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 394 கன அடி தண்ணீர் உபரியாகவும் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 66.25 அடியாக உள்ளது. அணைக்கு 761 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட பாசன குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
- மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதியிலும், மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 20.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
தக்கலை, குளச்சல், களியல், சுருளோடு, முள்ளங்கினாவிளை, கன்னிமார் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.22 அடியாக இருந்தது. அணைக்கு 279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 699 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 60.45 அடியாக உள்ளது. அணைக்கு 279 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.77 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 9.87 அடியாகவும் உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 15.40 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 38.06 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 2.5 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதுடன் பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சுசீந்திரம், தேரூர் பகுதிகளில் ஏற்கனவே வயல்களில் நடவு பணி நிறைவு பெற்ற நிலையில் உரமிடுதல் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
அணைகளில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரால் சானல்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பாசன குளங்கள் வேகமாக நிரம்ப தொடங்கியுள்ளன.
மாவட்டம் முழுவதும் மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி உட்பட 8 மாவட்டங்களில் நாளை முதல் வருகிற 16-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.
- தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.
- படகு கட்டண உயர்வினால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலமும் தற்போது அமைக்கப்பட்டு உள்ளது.
இவற்றை பார்வையிட தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதற்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.75 வீதமும், கியூவில் காத்து நிற்காமல் நேரடியாக சென்று படகில் பயணம் செய்வதற்கான சிறப்பு கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.300 வீதமும், மாணவர்களுக்கு சலுகை கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.30 வீதமும் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் படகு கட்டணத்தை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் திடீரென்று உயர்த்தியது. இந்த படகு கட்டண உயர்வு இன்று (5-ந்தேதி) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ..75-ல் இருந்து ரூ.100 ஆகவும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம் அதே ரூ. 300 ஆக நீடிக்கிறது.
இந்த படகு கட்டண உயர்வினால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கட்டணம் உயர்வுக்கு சுற்றுலா பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
- தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.
- சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.
கன்னியாகுமரி:
சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரி விளங்கி வருகிறது. இங்கு கடலின் நடுவே அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.
இதற்காக தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் விவேகானந்தர் மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு கட்டணம் நாளை முதல் உயர்த்தப்படுகிறது. அதன்படி சாதாரண கட்டணம் ரூ.75-ல் இருந்து ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு சலுகை கட்டணம் ரூ.30-ல் இருந்து ரூ.40ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணத்தில் எந்த மாற்றமும் இன்றி அதே ரூ.300 ஆக நீடிக்கிறது.
இந்த தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
- ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.
- இளம் பெண்களும் இந்த செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இன்றைய இளம் வயதினர் கைகளில் பெரும்பாலும் வைத்திருப்பது செல்போன் மட்டுமே. கையில் பணம் இருக்கிறதோ இல்லையோ. செல்போன் நிச்சயம் இருக்கும். அதனை வைத்து தாங்கள் செல்லும் இடங்கள், செய்யும் சாகசங்கள் போன்றவற்றை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து தங்களுக்கு பிடித்தவர்களிடம் காட்டி மகிழ்ந்து வந்தனர்.
நாளடைவில் இந்த மோகம் சமூக வலைதளத்தில் வெளியிட வைக்கும் அளவிற்கு சென்றது. இதில் கிடைத்த வரவேற்பு இன்று ஆபத்தான வீடியோக்களை எடுத்து பலரும் சமூக வலைதளத்தில் அரங்கேற்றி வருகின்றனர். இதில் சில உயிருக்கு ஆபத்தாக முடிகிறது.
கடல் நடுவே உள்ள பாறையில் ஏறி நின்று சீறி வரும் அலைகளுடன் வீடியோ எடுப்பது. ரெயில் மற்றும் பஸ்களில் தொங்கியபடி படம் எடுப்பது, மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்வது என அவர்களின் செயல்கள் சில நேரங்களில் உயிருக்கே உலை வைத்து விடுகிறது.
இது போன்று ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், ரீல்ஸ் எடுப்பது தொடர்ந்தே வருகிறது.
இளைஞர்கள் மட்டுமின்றி, இளம் பெண்களும் இந்த செயலில் ஈடுபடுவது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இளம்பெண் ஒருவர் ஓடும் ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி ஆடிச்செல்லும் ரீல்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவிலை சேர்ந்த அந்த பெண் நாகர்கோவில் இருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணித்தபோது தான் ரீல்ஸ் மோகம் தலைதூக்கி உள்ளது.
அவர், ஓடும் ரெயிலின் படிக்கட்டில் முதலில் இறங்கி நிற்கிறார். பின்னர் படியில் நின்று கொண்டே சினிமா பாடலுக்கு நடனமாடுகிறார். பின்னர் திரும்பி நின்றபடி தொங்கிய நிலையில் செல்கிறார்.
கைகளை அசைத்த படியும், தலையை ஆட்டியபடியும் செல்லும் பெண், பல்வேறு முக பாவனைகளையும் காட்டிச் செல்கிறார். அதனை ரீல்ஸ் வீடியோ எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அவரை பின் தொடர்வோர் கூட கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வீடியோவை அகற்ற வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தங்களை அதிகமானோர் பின் தொடர வேண்டும் என்ற ஆசையில் உயிருக்கு ஆபத்தான முறையில் நூதன புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து ரிலீஸ் அடிப்படையில் பதிவிட்டு வரும் சம்பவங்களில் பலர் உயிரிழந்து வருவதால், இது போன்ற சம்பவங்களை ஊக்குவிக்க கூடாது என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- சூறைகாற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
- தக்கலை, குழித்துறை, இரணியில் பகுதிகளிலும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை கிராமங்களிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதியை செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்று ராட்சத அலைகள் எழும்பியது. மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். மழை பெய்து கொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியது. சூறை காற்றிற்கு கடற்கரை கிராமங்களில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
நாகர்கோவில் நகர பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்கம்பங்கள் சேதமடைந்தது. மீனாட்சிபுரம் பகுதிகளில் நேற்று இரவு முதலே மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
இறச்சகுளம், நாவல்காடு, ஆசாரிப்பள்ளம், ஈத்தாமொழி பகுதிகளிலும் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்ததில் மின்வயர்கள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் இருளில் மூழ்கியது.

ஈத்தாமொழி அருகே சுண்டபற்றிவிளை பிலா விளை பகுதியில் 2 மரங்கள் வீட்டின் மீது முறிந்து விழுந்தது. இதனால் வீட்டுக்குள் இருந்த கணவன்-மனைவி இருவரும் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இது குறித்து நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதை தொடர்ந்து வீட்டுக்குள் தவித்த கணவன்-மனைவி இருவரும் மீட்கப்பட்டனர். நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் ஒரே நாளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.
குலசேகரம், குழித்துறை, குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி தீயணைப்பு வீரர்களும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சரிந்து விழுந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். கொட்டாரம் அருகே சந்தையடி பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதனால் அதை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கியது. மின்வாரிய அதிகாரிகள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கு மரக்கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
சாமிதோப்பு பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்தன. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இன்று காலையில் தொடர்ந்து சூறைக்காற்று வீசியதால் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தது.

தக்கலை, குழித்துறை, இரணியில் பகுதிகளிலும் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளது. குழித்துறை அருகே சென்னித்தோட்டம் பகுதியில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. பத்து காணி, ஆறு காணி உள்பட மலையோர பகுதியிலும் விரிகோடு, சரல் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மரம் முறிந்து விழுந்ததில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மின்சாரம் இன்றி மக்கள் பாதிக்கப்பட்டனர். மின் கம்பங்களை சீர் செய்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை வழங்க துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். மழைக்கு ஏற்கனவே 100-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் நேற்று மேலும் 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது.
திருவட்டார் அருகே ஆற்றூர் பேரூராட்சி 13-வது வார்டுக்குட்பட்ட ஆக்கவிளை பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் நின்ற 2 அயனிமரம், 1 பனைமரம் முறிந்து விழுந்தது. அந்த பகுதியில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக குலசேகரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து மரத்தை வெட்டி அகற்றினார்கள். அந்த பகுதியில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும் இரவு பெய்த மழையில் மின்கம்பம் முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. உடனே அந்த பகுதியினர் மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து உடனே புதிய மின்கம்பம் அமைத்தனர். தொடர்ந்து இரவே மின்சாரம் வினியோக்கப்பட்டது. இதேபோல் திருவட்டார், குலசேகரம், திருவரம்பு போன்ற பகுதிகளில் வீசிய காற்றால் மரங்கள் முறிந்து சாய்ந்தன. தொடர் மழை பெய்து வருவதால் ஆறு, குளங்களில் தண்ணீர் நிரம்பி வருகிறது.






