என் மலர்
கன்னியாகுமரி
- எம்.பி. விஜய் வசந்த் CSR நிதி மூலம் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான நிதி சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார்.
- ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி தர முன் வந்ததையடுத்து பணிகள் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை உண்டு உறைவிட அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் தேவை என்ற பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.
எம்.பி. விஜய் வசந்த் இதற்காக CSR நிதி மூலம் வகுப்பறைகள் கட்ட முடிவு செய்து, அதற்கான நிதி சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டார்.
கோவையை சேர்ந்த ரவுண்ட் டேபிள் இந்தியா என்ற அமைப்பு ரூ.25 லட்சம் செலவில் கட்டிடம் கட்டி தர முன் வந்ததையடுத்து பணிகள் நடைபெற்றது.

இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட வகுப்பறைகள் இன்று திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா குத்துவிளக்கு ஏற்ற, விஜய் வசந்த் எம்.பி. வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
மாணவர்கள் பயில இந்த சேவையை செய்ய முன்வந்த ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பிற்கு விஜய் வசந்த் எம்.பி. விழாவில் நன்றி தெரிவித்தார்.
- ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
- ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
நாகர்கோவில்:
செண்பகராமன்தூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (19-ந்தேதி) நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை செண்பகராமன்புதூர், தோவாளை, வெள்ளமடம், லாயம், தாழக்குடி, சந்தைவிளை, ஈசாந்திமங்கலம், காரியாங்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளபகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது.
தக்கலை உபமின்நிலையத்துக்கு உட்பட்ட உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மணலி, தக்கலை, பத்மநாபபுரம், புலியூர் குறிச்சி, குமாரகோவில், வில்லுக்குறி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூர், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூர், சேவியர்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், முளகுமூடு, கோழிப்போர்விளை, வெள்ளிக்கோடு, காட்டாத்துறை, சாமியார்மடம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை, மருந்துக்கோட்டை ஆகிய இடங்களிலும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது.
ஆரல்வாய்மொழி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. எனவே, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆரல்வாய்மொழி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும், காற்றாலைகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செண்பகராமன்புதூர், தக்கலை, பழவூர் காற்றாலை பண்ணை மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பரிணாம வளர்ச்சி காண செய்த கர்மவீரரே...
- பெருந்தலைவர் காமராஜர் பிறந்த தினத்தில் அவர் புகழ் போற்றி வணங்குவோம்.
பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
கல்வி கண் திறந்து
ஆலைகள் பல தந்து
அணைகள் பல உயர்த்தி
தமிழகத்தை வளர்த்தி
தலைவர்களில் தலைவனாய்
பார் போற்றும் முதல்வனாய்
அனைத்து துறைகளிலும் தமிழகத்தை பரிணாம வளர்ச்சி காண செய்த கர்மவீரரே..
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினத்தில் அவர் புகழ் போற்றி வணங்குவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்ததினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் உள்ள அவதமணிமண்டபத்தில் கர்மவீரருக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மலர் மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து பள்ளி குழந்தைகளுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் பரிசுகள் வழங்கினார்.
- அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
- அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசினார்கள்.
கன்னியாகுமரி:
அ.தி.மு.க. கொள்கை பரப்பு மாநில துணை செயலாளரும், நடிகையுமான கவுதமி கன்னியாகுமரி வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 4½ ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் சந்திக்கும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, விலைவாசி உயர்வு, பாதுகாப்பின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வருகிற சட்டமன்றத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனால் தான் தீர்வு கிடைக்கும்.
திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றியடைந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் அதிசய பிறவிகள். நடிகர் விஜய்யின் எதிர்கால நடவடிக்கையை பொறுத்து தான் அவர் அரசியலில் வெற்றி பெறுவாரா? என்பது தெரியும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப்பயணம் மக்களின் பிரச்சனைகளை பிரதிபலிக்கும் வகையில் உள்ளதால் மக்களை தேடி சென்று மக்கள் பிரச்சனைகளை பேசும் பயணமாக மாறி உள்ளது.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி வரும் சட்டமன்றத்தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கண்டிப்பாக பெரும்பான்மை இடங்களை அ.தி.மு.க. கூட்டணி கைப்பற்றும். அ.தி.மு.க. ஆட்சியின்போது நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பெரிதாக்கி பேசினார்கள். ஆனால் இப்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை எதிர்க்கட்சியினர் பேசவே இல்லை. வருகிற சட்டமன்றத்தேர்தலில் அ.தி.மு.க. அடையும் வெற்றி தமிழ் மக்களின் வெற்றியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.
- சுற்றுப்பயணத்தின் போது மக்களின் வரவேற்பை ஏற்று அவர்களின் குறைகளை கேட்டிருந்தோம்.
- மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் நேற்றும், இன்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-
குறும்பனை முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கண்டறியவும், தேவைகளை கண்டறியவும் மற்றும் அளித்த வெற்றிக்கு நன்றி கூறவும் பிரச்சார பயணம் இன்று நடைபெற்றது.

இன்றைய சுற்றுப்பயணத்தின் போது மக்களின் வரவேற்பை ஏற்று அவர்களின் குறைகளை கேட்டிருந்தோம். மக்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டோம்.

மயிலாடி அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.

புதூர் அருள்மிகு தேவி ஸ்ரீ ஈஸ்வரி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக மற்றும் கொடை விழா நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்டேன்.

நேற்று கடற்கையோர கிராமங்களின் சுற்று பயணத்தின் போது ஊர் ஆலயங்களில் உள்ள பங்கு தந்தையரை சந்தித்து ஊர் மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று கொண்டோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நிதின் ராஜ் சரிவர வேலையில்லாமல் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
- திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர்.
நாகர்கோவில்:
கருங்கல் அருகே திக்கணங்கோடு கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின்சன். இவரது மகள் ஜெமலா (வயது 26). இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்துள்ளார். இவரும் இனயம்புத்தன்துறையை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரியான நிதின் ராஜ் (26) என்பவரும் காதலித்து வந்தனர்.
இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் இருவீட்டு சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. பின்னர் ஜெமலாவும், நிதின் ராஜும் மேல்மிடாலம் அருகே கூண்டுவாஞ்சேரி பகுதியில் வசித்து வந்தனர். நிதின் ராஜ் சரிவர வேலையில்லாமல் இருந்து வந்ததால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று வீட்டில் ஜெமலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து இருப்பதாக அவரது பெற்றோருக்கு நிதின் ராஜ் உறவினர்கள் போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதுகுறித்து கருங்கல் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஜெமலாவின் உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ஜெமலாவின் தாயார் புஷ்பலதா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், எனது மகளுக்கும் நிதின் ராஜிக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது ரூ.7 லட்சம் பணமும், 50 பவுன் நகையும், வீட்டுக்கு தேவையான பொருட்களும் கொடுத்தோம். திருமணம் முடிந்த 2 மாதத்திலேயே கூடுதலாக ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர்.
எனது மகளை கணவர், மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் என்னிடம் எப்படியாவது பணத்தை ரெடி செய்து தருமாறு கூறினார். நான் எனது செயினை அடகு வைத்து ரூ.5 லட்சம் கொடுத்தேன். இனி எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது என்று சமாதானம் செய்தேன். மேல்மிடாலம் பகுதியில் வீடு ஒன்றும் வாங்கி கொடுத்தோம்.
எனது மகளை அடித்தும் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் கழுத்தில் கயிற்றால் இறுக்கியது போன்ற தடம் உள்ளது. எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே எனது மகள் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜெமலாவின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் இன்று காலை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு அமர்ந்து பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெமலா சாவு குறித்து பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார். அவரது கணவர் மற்றும் உறவினரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. திருமணமான 6 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த 28-ந்தேதி திருப்பூரை சேர்ந்த புதுப்பெண் ரிதன்யா என்பவர் காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு அதிர்ச்சியாக இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது.
- ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
- தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.
தமிழகத்தின் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் ஈரானில் தங்கி மீன் பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.
தற்போது ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம் நிலவி வருவதால் ஈரானில் உள்ள இந்தியர்களை பத்திரமாக இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் ஈரான் கிஷ் தீவில் வசித்து வரும் 600-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இதுவரை இந்திய தூதரக அதிகாரிகள் நேரில் வந்து சந்திக்கவில்லை என மீனவர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஈரானில் தமிழக மீனவர்கள் வசிக்கும் தீவு பகுதியில் இன்டர்நெட் வசதி இல்லாததால் குடும்பத்தினருடன் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதுவரை எந்த தூதரக அதிகாரிகளும் நேரில் வந்து தமிழக மீனவர்களை சந்திக்கவில்லை என அங்கிருக்கும் மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

உடனடியாக தங்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரானில் உள்ள தமிழக மீனவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளனர்.
இந்தநிலையில், ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி உள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும் என்று புதுடெல்லியில் வெளியுறவு துறை இணை செயலாளரை காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.
- ராமரின் வாழ்க்கை குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள வைகுண்டபுரத்தில் பழமையான ஸ்ரீராமர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி சமய மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
அந்த மாநாட்டில் அண்ணாமலை பேசியதாவது:
உலகத்தில் கடவுள் வந்து ராஜாவாக இருந்து ஆட்சி செய்து ஆட்சி இருக்க வேண்டும் எனக் காட்டியவர் கடவுள் ராமர். இதனால் ராமராஜ்ஜியம் என சொல்கிறோம். ராமர் மனிதனாக இருந்து ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுள்ளார்.
மக்களாட்சியில் இருக்கும்போது மன்னர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமர் ஒரு இலக்கணம். அநியாயம் நடந்தபோது எப்படி நடந்து கொண்டார். சட்ட திட்டத்தை எப்படி காப்பாற்றினார். அவருடைய தந்தை கொடுக்கிறேன் என சொன்ன பதவியை கொடுக்காதபோது எப்படி நடந்து கொண்டார்? என்பதை பார்க்க வேண்டும்.
பகலில் போனால் மக்கள் தடுப்பார்கள் என்பதற்காக இரவில் காட்டுக்கு சென்றார். ராமர் வாழ்க்கையில் ஒரு ஒரு விஷயமும் ஒரு குணத்தை சொல்லி கொடுக்கிறது. தம்பியிடம், பெற்றோரிடம், மன்னராக எப்படி நடந்து கொண்டார். எதிரியாக இருந்தாலும் எப்படி சண்டை போட்டார்? யுத்தத்தை எப்படி நடத்தினார்? என்பதையும் பார்க்க வேண்டும்.
ராமரின் வாழ்க்கை குணாதிசயங்களை குழந்தைகளிடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஸ்ரீராமரை போல் இருக்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கு அவரது பெயரை வைக்கிறோம். கடவுளின் குணாதிசயங்கள் வர வேண்டும் என்பதற்காக.. இதனை செய்கிறோம்.
தமிழகத்தில் இருக்கும் ஆட்சி ஊறுகாய் அளவுக்கு கூட ராமராஜ்ஜியமாக இல்லை. குடும்பத்தில் எப்படி ராமர் இருந்தார் என்பதற்கும், இன்று ஆட்சியாளர்கள் குடும்பம் இன்று அவர்களே ஆட்சியாக இருக்கிறார்கள் என்பதற்கும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். எங்கேயோ ஒரு இடத்தில் யாருக்கோ ஒரு பிரச்சனை வந்தால் மன்னர் துடிப்பார்.
ஆனால், தற்போது மக்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால் ஆட்சியாளர்கள் துடிக்கிறார்களா? என்றால் கிடையாது. ஆட்சியாளர்கள், மக்களிடம் எப்படி பேச வேண்டும். என்ன பேசினால் கேட்பார்கள் என்பதில் 100 மார்க் வாங்கிவிட்டார்கள்.தேர்தலின் போதும், ஓட்டு வாங்கும்போது, தேர்தல் முடிந்து ஓராண்டுக்கு பிறகும் எப்படி பேச வேண்டும் என அரசியல்வாதிகளுக்கு தெரியும்.
அரசியல்வாதி 5 ஆண்டுகளில் பேசுவதை பார்க்க வேண்டும். ஓட்டு வாங்கிய பிறகு ஏளனமாக இருப்பார்கள். 3-வது வருடத்தில் இருந்து பக்கத்தில் வந்து விடுவார்கள். 5-வது ஆண்டில் ஊர்விழா, தெரு விழாவுக்கு வந்து விடுவார்கள். எப்படி நயமாக பேசி ஓட்டை வாங்க வேண்டும் என்பதில் தமிழகத்தில் சில அரசியல்வாதிகள் பி.எச்.டி. பட்டம் பெறும் அளவுக்கு தெளிவாகி விட்டார்கள்.
அவர்களால், அவர்களுக்கும், மக்களுக்கும், சமூகத்திற்கும் ஒரு பைசா பிரயோஜனம் கிடையாது. அனைவரும் சிந்தித்து ஓட்டு போட வேண்டும். எந்த கட்சி எப்படிப்பட்ட தலைவன் என்ன மாற்றத்தை கொடுக்க போகிறார் என சிந்திக்க வேண்டும்.
நீங்கள் போடும் ஓட்டு நமக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது. உங்களுக்கான ஓட்டை உங்கள் பெற்றோர்கள் ஓட்டு போட்டு விட்டனர். நீங்கள் எப்படி, ஒரு மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதை உங்களின் தந்தையும், தாயும் ஓட்டுப்போட்டு விட்டனர். இன்றைக்கு நீங்கள் ஓட்டுப்போடுவது உங்கள் குழந்தைகளுக்கானது. எப்படிப்பட்ட மாநிலத்தில் வாழ வேண்டும் என்பதற்காக ஓட்டுப்போட உள்ளீர்கள்.
எந்த மாற்றமும் 5 ஆண்டுகளில் நடக்காது. சனாதன தர்மத்தை பேணி காக்க வேண்டும் என நினைத்தால், ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.
சனாதன தர்மத்தை பேணிக்காக்க வேண்டும் என்று நினைத்தால், வாக்களிக்கக்கூடியவர்களாகிய சனாதன தர்மத்தை கடைபிடிக்கும் நீங்கள், யார் சனாதன தர்மத்தை முன்னெடுத்து செல்வார்கள் என்று வாக்களிக்கும் முன் ஒரு முறை நீங்கள் யோசித்து பார்க்க வேண்டும்.
தமிழக முதலமைச்சர் சமீபத்தில் பேசும்போது, கடவுளின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு அரசியல் கட்சி அரசியல் செய்கிறது என்று கூறினார். விநாயகர் சிலையை உடைத்தது யார்? ராமர்பாலத்துக்கு சேதம் ஏற்படுத்தக்கூடாது என்று கூறியபோது ராமர் என்ன என்ஜினீயரா என்று கேட்டது யார்?
கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி பேசியபோது கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது யார்? சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட மாநாட்டு மேடையில் நம்முடைய கட்சியை சேர்ந்தவர்கள் ஏறினார்களா?
முதலமைச்சரின் மகன் ஏறினாரா? டெங்கு கொசுவை ஒழிப்பது போன்று சனாதன தர்த்தை ஒழிப்போம் என்று கூறியது நாமா அல்லது முதலமைச்சரும் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த அவரது மகனா?
குழந்தைகளுக்கு சனாதன தர்மத்தை முழுமையாக சொல்லிக் கொடுக்க வேண்டும். கம்பராமாயணத்தை நமது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். சஷ்டி தினத்தில் கந்த சஷ்டி கவசத்தை பாட வைக்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு மகா பாரதத்தை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நமது குழந்தைகளுக்கு இன்று 8-ம் வகுப்பில் நீட் பயிற்சி, 6-ம் வகுப்பில் சிவில் சர்வீஸ் பயிற்சி கொடுக்கிறோம். இந்த வயதில் அந்த குழந்தைகளுக்கு அவற்றை பற்றியெல்லாம் தெரியுமா? இவற்றையெல்லாம் சொல்லிக்கொடுத்தபிறகு அந்த குழந்தை, எவ்வளவு படித்தாலும் தந்தை, தாயை சரியாக பராமரிப்பது கிடையாது.
வியர்வை, ரத்தத்தை கொடுத்து சனாதனத்தை காப்பாற்றியவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ளனர். மதமாற்றத்தை பற்றிய விவரத்தை முழுமையாக அறிந்தவர்கள் இங்கு உள்ளனர். எந்த மதமும் நமக்கு போட்டி கிடையாது. அவரவர் மதம் அவரவர்களுக்கு பெரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
- மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது.
- தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. மயிலாடி, நாகர்கோவில், தக்கலை, கோழிப்போர் விளை, மாம்பழத்துறையாறு, ஆணைக்கிடங்கு ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 105.8 மில்லி மீட்டர் மழை பெய்தது.
கொட்டாரம், பூதப்பாண்டி, குளச்சல், இரணியல், குருந்தன்கோடு, களியல், குழித்துறை, சுருளோடு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆறு, கோதையாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். சானல்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டியது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வரும் நிலையில் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதி யிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டி வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணைகளின் நீர்மட்டத்தை பொது பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.பெருஞ்சாணி அணை இன்று காலை 70 அடியை எட்டியது. அணைக்கு 762 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.45 அடியாக உள்ளது.
அணைக்கு 1319 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 753 கன அடி தண்ணீர் மதகுகள் வழியாகவும், 131 கன அடி தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 13.02 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறை அணை நீர்மட்டம் 45.93 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 15.40 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 9.2 அடியாக உள்ளது. மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
கோழிப்போர்விளை 105.8, மயிலாடி 92.4, ஆணைக்கிடங்கு 84.2, மாம்பழத்துறையாறு 78, நாகர்கோவில் 74.4, தக்கலை 72, அடையாமடை 52, குருந்தன்கோடு 26, கொட்டாரம் 62.8, கன்னிமார் 18.6, ஆரல்வாய்மொழி 6, பூதப்பாண்டி 26.2, முக்கடல் 24, பாலமோர் 33.6, இரணியல் 16, களியல் 16, குழித்துறை 63.4, பேச்சிப்பாறை 19.6, பெருஞ்சாணி 29.6, புத்தன்அணை 29, சுருளோடு 36.2, திற்பரப்பு 34.6, முள்ளங்கினாவிளை 38.2.
தொடர் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரண்கோணம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ரப்பர் மரங்களில் உள்ள சிரட்டைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள்.
தோவாளை, செண்பகராமன்புதூர் பகுதிகளில் செங்கல் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையின் காரணமாக செங்கல்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்து வருகிறது.
- ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சார்பாக 'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
- இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் உள்ள ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) சார்பாக 'இளம் இந்திய பாராளுமன்றம்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இளைஞர்களிடையே தலைமைத்துவத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் தெரிவித்தார்.
- காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர்.
- பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்ட முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இன்றும் பல இடங்களில் கனமழை கொட்டியது.
நாகர்கோவிலில் இன்று காலை வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. காலை 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கியது. பின்பு அவ்வப்போது கனமழை கொட்டியபடி இருந்தது. இதனால் மீனாட்சிபுரம் சாலை, கோட்டார் சாலை, அசம்பு ரோடுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.
காலையில் கனமழை விடாமல் பெய்ததால் பள்ளி மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு பள்ளிக்கு சென்றனர். சுசீந்திரம், அஞ்சுகிராமம், மயிலாடி, கொட்டாரம் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இன்று மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை பகுதியில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப்பகுதியிலும் மழை பெய்தது.
சிற்றாறு 1-ல் அதிகபட்சமாக 60.4 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
ஏற்கனவே அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது. எனவே குழித்துறை ஆறு, கோதை ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.21 அடியாக இருந்தது. அணைக்கு 1,285 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 753 கன அடி தண்ணீரும், உபரிநீராக 131 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 69.45 அடியாக இருந்தது. அணைக்கு 900 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தொடர் மழையின் காரணமாக சானல்களில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் வேகமாக நிரம்பி வருக்கின்றன.
மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவு எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மலையின் காரணமாக காளிகேசம், கீரிப்பாறை, தடிக்காரங்கோணம் பகுதியில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்தமழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 40.6, பெருச்சாணி 19.8, சிற்றாறு1-60.4, சிற்றார்2-24.2, மயிலாடி 3.6, நாகர்கோவில் 3.4, கன்னிமார் 33.6, ஆரல்வாய்மொழி 10.4, பூதப்பாண்டி 16.4, முக்கடல் 20.2, பாலமோர் 31.6, தக்கலை 2.4, குளச்சல் 4, இரணியல் 6, அடையாமடை 22.2, மாம்பழத் துறையாறு 12, ஆணைக்கிடங்கு 11.6, களியல் 18, குழித்துறை 2.4, புத்தன்அணை 19.6, சுருளோடு 22.6, திற்பரப்பு மற்றும் முள்ளங்கினாவிளை 10.8.
- காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
- யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பூதப்பாண்டி:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான மோதிரமலை, குற்றியார் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.
கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்தநிலையில் இன்று காலையில் யானை ஒன்று அந்த பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.
அதில் பங்குதந்தை வசித்து வருகிறார். இன்று காலை அங்கு வந்த யானை அவர் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பங்குத்தந்தை தொலைபேசி மூலமாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் யானையை விரட்டினார்கள். ஆனால் யானை செல்லவில்லை. இதையடுத்து பட்டாசுகளை வெடித்து யானை அங்கிருந்து விரட்டினார்கள். அங்கிருந்து சென்ற யானை சிறிது தூரம் சென்று நின்று கொண்டிருந்தது. காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் யானை திடல், தெள்ளந்தி பகுதிகளில் விளை நிலங்களை சேதப்படுத்திருந்த நிலையில் தற்போது கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் புகுந்து சேதப்படுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று புகுந்து பொது மக்களை அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.






