என் மலர்
திண்டுக்கல்
- பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
- போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆத்திக்கண்ணன் (வயது32). இவர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 12 பேர் கடந்த ஆண்டு அ.தி.மு.க. தொண்டர் உரிமை மீட்பு குழு மாவட்ட பொருளாளரான மாதவத்துரை (39) மற்றும் கோவையை சேர்ந்த மாநில அமைப்பு செயலாளர் கலில்ரகுமான் ஆகியோரை அனுகினர். அவர்கள் பழனி கோவிலில் வேலை வாங்கி தருவதாகவும், வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் வேலை வாங்கி தருவதாகவும் ரூ.34 லட்சம் பெற்றனர்.
ஆனால் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டனர். ஆனால் அவர்கள் பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட 12 பேரும் திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.
மாதவத்துரை தலைமறைவான நிலையில் கலில்ரகுமான் இதேபோன்று பல்வேறு நபரிடம் மோசடி செய்து கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து போலீசார் அவரை காவலில் எடுத்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு.
- குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தற்போது சபரிமலை சீசனாக இருப்பதால் வழக்கத்தை விட ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் அதிக அளவு பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தினமும் அதிகாலை 4.30 மணி முதல் படிப்பாதை, யானைப்பாதை வழியாக பக்தர்கள் மலைக்கோ விலுக்கு சென்றவண்ணம் உள்ளனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு களைப்பு தெரியாமல் இருக்க பழனி தேவஸ்தானம் சார்பில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மோர் கொடுக்கப்பட்டு வந்தது.
தற்போது மழை மற்றும் கடும் குளிர் நிலவுவதால் மோருக்கு பதிலாக சுடச்சுட சுக்கு காப்பி இலவசமாக வழங்கப்படுகிறது. மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில் இடும்பன் கோவில் அருகே தினமும் காலை 5 மணி முதல் பகல் 1 மணி வரை சுக்கு காப்பி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அதே இடத்தில் அடுப்பு வைத்து வெல்லம், மல்லி, சுக்கு உள்ளிட்டவை சேர்த்து தயார் செய்து தொடர்ந்து வழங்கப்படுகிறது. தினந்தோறும் 5 ஆயிரம் பக்தர்களுக்கும், தேவைக்கேற்ப கூடுதலாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதேபோல் மலைக்கோவிலில் தினமும் காலை முதல் இரவு வரை 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக பால் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
- ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
திண்டுக்கல்:
குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்படாத நிலையிலும் நேற்று மாலை முதலே இடைவிடாமல் சாரல் மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல் மட்டுமின்றி கொடைக்கானல், நத்தம், நிலக்கோட்டை, வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நேற்று மாலையில் தொடங்கிய மழை இன்று வரை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய மாணவர்கள் நனைந்தபடியே சென்றனர்.
அதேபோல் இன்று காலையிலும் குடைபிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் சிரமத்துடன் மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர். இதேபோல் அன்றாட பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் அனைத்து சுற்றுலா தலங்களும் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் நீடித்து வந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையும் சேர்ந்து மக்களை வாட்டி எடுத்து வருகிறது.
சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் மலைச்சாலைகளில் செல்லும் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலை பகுதியான பெரும்பாறை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, பண்ணைக்காடு, குப்பமாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே மண்சரிவு மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணத்தால் பெரும்பாறை அருகே உள்ள மூலக்கடை-புல்லாவெளி இடையே இஞ்சோடை என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மின் கம்பம் அதிகாலை சுமார் 4 மணி அளவில் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மின் கம்பத்தை அகற்றினர். சுமார் 3 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. ஆனால் மீண்டும் மின்சாரம் வராததால் மக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க வருவாய் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திண்டுக்கல் 7.40, காமாட்சிபுரம் 13.80, நத்தம் 6, நிலக்கோட்டை 6.20, சத்திரப்பட்டி 12.40, வேடசந்தூர் 11.20, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 11, பழனி 6, கொடைக்கானல் ரோஸ் கார்டன் 28.50, பிரையண்ட் பூங்கா 28 என மாவட்டத்தில் இன்று காலை வரை 130.50 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- நெய் வினியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழு அமைத்தது.
- பால் பொருட்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
திண்டுக்கல்:
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். திருமலையில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுவதுடன் கூடுதலாக பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் சேர்க்கப்படும் நெய்யில் கலப்படம் செய்யப்பட்டதாகவும், அதில் விலங்குகள், மீன்களின் கொழுப்புகள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
லட்டு பிரசாதத்திற்கான நெய் திண்டுக்கல்லை சேர்ந்த தனியார் பால் நிறுவனமான ஏ.ஆர்.டெய்ரி சார்பில் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெய் வினியோகம் தொடர்பாக விசாரணை நடத்த ஆந்திர அரசு சிறப்பு குழு அமைத்தது. திருப்பதி தேவஸ்தானத்துடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை திண்டுக்கல் தனியார் பால் நிறுவனம் மீறி செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில் மத்திய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதனிடையே நெய் தொடர்பாக உறுதியான ஆதாரம் இல்லாத நிலையில் அதனை பொதுவெளியில் கூறியதற்காக ஆந்திர அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் மக்களின் மத நம்பிக்கை சார்ந்த இந்த விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குனரின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது.
மத்திய உணவு பாதுகாப்பு அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் திண்டுக்கல் தனியார் பால் நிறுவனத்தில் 14 மணிநேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர். மேலும் நெய் தயாரிப்பின் ஒவ்வொரு நிலையிலும் உணவு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். பால் பொருட்கள் அனைத்திலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. 3 கார்களில் 11 பேர் வந்து தொடங்கிய சோதனை இரவுவரை நீடித்தது. மேலும் நெய்களின் பகுப்பாய்வு மாதிரிகளை எடுத்துச் சென்று ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.
அதன் பின்னர் இதுகுறித்து இதன் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
- பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.
- மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் என வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை சீசன் தொடங்கிய நிலையில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர்.
தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் சபரிமலைக்கு வர தொடங்கியதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் பழனி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்பட பல்வேறு கோவில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்கின்றனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் பழனியில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது. பஸ் நிலையம், அடிவாரம், கிரிவீதி, ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில் நிலையம், யானைப்பாதை, படிப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் வெகுநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இனிவரும் காலங்களிலும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரிக்கும் என்பதால் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
- நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
கடந்த அக்டோபர் மாதம் ஆப் சீசன் தொடங்கிய நிலையில் வடமாநிலங்களில் இருந்து தேனிலவு கொண்டாட ஏராளமான இளம்ஜோடிகள் வந்தனர்.
தற்போது பனி காலத்தின் தொடக்கமாக பல்வேறு பகுதிகளில் மலை முகடுகளை பனி மூட்டங்கள் சூழ்ந்துள்ளது.
அதிகாலை நேரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் இந்த காட்சிகளை கண்டு ரசிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக கேரளாவில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
நகரில் நுழைவு வாயில் பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கு நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும் கோக்கர்ஸ்வாக், தூண்பாறை, குணாகுகை, பைன் பாரஸ்ட், மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, ரோஜாபூங்கா, செட்டியார் பூங்கா, பிரைண்ட் பூங்காவிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி பகுதிகளுக்கும் படையெடுத்தனர். அங்கு எலும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை ஆகியவற்றையும் கண்டு ரசித்தனர்.
அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட பட உள்ள நிலையில் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், தனியார் விடுதிகளில் பல்வேறு வண்ண அலங்காரங்கள் செய்யும் பணி தொடங்கி உள்ளது. மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பல்வேறு வகையான கேக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு.
- மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம், பிள்ளையார்நத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
பொதுமக்களால் கொடுக்கப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. வீடு இல்லாத அனைவருக்கும் வீடு வழங்கப்படும். விடுபட்ட மகளிர்களுக்கு விரைவில் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும். திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியாவிலே முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். அனைத்து கிராமத்திற்கும் சாலை வசதி, பஸ் வசதி, குடிதண்ணீர் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
தி.மு.க.வில் கூட்டணி தொகுதி பங்கீடு உண்டு. ஆனால் ஆட்சியில் பங்கீடு கிடையாது. தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது. கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தில் வீடுகள் சிறப்பாக கட்டப்பட்டு வருகிறது. மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பூங்கொடி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆத்தூர் நடராஜன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாஸ்கரன், ஆத்தூர் ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஆத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், மாவட்ட ஊராட்சி குழு பத்மாவதி ராஜகணேஷ், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் மணலூர் மணிகண்டன், ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தட்சிணாமூர்த்தி, அருள் கலாவதி, ஆத்தூர் தாசில்தார் முத்துமுருகன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன், தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் காணிக்கைசாமி, பாப்பாத்தி, செல்வி காங்கேயன், தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார்.
- அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி, காஞ்சி பெரியவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு கண்ணன், மகேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் முருகேஸ்வரி கடந்த ஆண்டு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து இருந்தார். தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு உங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீங்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதற்கிடையே முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார். ஆனால் முருகேஸ்வரி வங்கிக் கணக்கின் கடைசி எண்ணை தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 14 மாதங்களாக அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள காணப்பாடியைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது.
பின்னர் அந்த முதியவர் முதல் 3 மாதங்கள் மட்டும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து முருகேஸ்வரியிடம் கொடுத்தார். அதன்பின்னர் அவர் பணத்தை தரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி மகளிர் உரிமை தொகை பணத்தை மீட்டு தருமாறு முருகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
- பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர்.
- தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் சி.பி.எம். மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,
அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களிடம் அதானி ரூ.2,200 கோடி லஞ்சம் கொடுத்து தான் முதலீட்டை ஏற்றுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றம் அதானி, அவரது மருமகன் உட்பட 7 பேர் மீது பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இவ்வளவு பெரிய முறைகேடு நடந்ததை அங்குள்ள பங்கு சந்தை நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. ஆனால் இந்தியாவில் உள்ள சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை இதனை கண்டு கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு பெரிய முறைகேட்டை இவர்கள் கண்டுபிடிக்கவில்லை. அமெரிக்க நிறுவனம் சொன்ன பின்பாவது மத்திய அரசு ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கும், எங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அந்த நிறுவனம் சார்பில் பதில் கூறப்பட்டுள்ளது. இதனை மோடி அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
அதானி என்பது முகம் தான், பின்னால் இருப்பது நரேந்திர மோடி தான். அவரது பினாமியாக இருப்பதால்தான் அதானி மீது எவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் மோடி அரசாங்கம் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. அவர்கள் மீது சம்மன் அனுப்புவதில்லை. விசாரணைக்கு கூட அழைப்பது இல்லை. எனவே மத்திய அரசு உடனடியாக அதானியை கைது செய்ய வேண்டியும், முறையான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்.
இந்த முறைகேடு பட்டியலில் தமிழ்நாடு அரசு இடம் பெற்றுள்ளது. தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, நாங்கள் அதானியுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை எனக் கூறியுள்ளார்.
தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தை மத்திய அரசு வாங்கி, மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். நான் தமிழக முதலமைச்சரை கேட்டுக் கொள்வது, தமிழ்நாடு பெயர் அந்தப் பட்டியலில் வந்துள்ளதால் இது சம்பந்தமாக தமிழக அரசு விசாரணையை தெளிவுபடுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் என்னவென்று தெரிவிக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் பலவிதமான மோசமான திட்டங்களை கொண்டு வருவதாக அறிவித்துள்ளனர். அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அறுதி பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் கூட ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற சட்டத்தை முன்மொழிவதாக கூறுகின்றனர்.
ஏதோ ஒரு முறைகேடு மூலமாக பாராளுமன்றத்தில் இந்த சட்ட திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு சதி திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற துடிக்கிறது.
தமிழக சட்டமன்றம் விரைவில் கூட உள்ளது. தமிழக சட்டமன்றத்தை 3 அல்லது 4 நாட்கள் நடத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சிகள் தோழமைக் கட்சிகள் கருத்துக்களை பேசுவதற்கும், நாட்டில் உள்ள பல முக்கியமான பிரச்சனைகளை விவாதிப்பதற்கும் உரிய அவகாசத்துடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டும். முதலமைச்சரும் சபாநாயகரும் சட்டமன்றத்தை போதுமான அவகாசம் கொடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காலி பணி இடங்களை நிரப்ப வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் உள்ள தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பினை சட்டமன்றத்தில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பள்ளியில் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வக்கீல்கள், மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படுவதும், கொலை செய்யப்படுவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. இது தனிமனித விரோதம் காரணமாக நடைபெறுகிறது. தனிநபர் பிரச்சனைக்கு எல்லாம் தமிழக அரசு பொறுப்பு ஏற்க முடியாது. போதைப்பொருள் ஒழிப்பதில் அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் இந்த விஷயத்தில் மெத்தனமாக உள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிக்கட்டான்பட்டியில் மத்திய அரசு 2000க்கும் மேற்பட்ட இடங்களில் கனிம வளங்களை எடுப்பதற்கு ஏலம் விட்டுள்ளது. அந்த இடத்தை பல்லுயிர் பாதுகாப்பு மையம் என்கின்ற முறையில் தமிழக அரசு 6 மாதத்திற்கு முன்பே அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.
2026 தேர்தலில் கூட்டணிகள் மாறும் என பலர் அவர்கள் யூகத்தின் அடிப்படையில் கூறி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. கூட்டணி மாறுவதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரியவில்லை .
அ.தி.மு.க.வில் உள்ள தலைவர்களுக்கிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் உள்ளது. அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலில் தோற்றத்துக்கு சரியான கூட்டணி இல்லாதது தான் காரணம் என கூறுகின்றனர்.
மீண்டும் அ.தி.மு.க. பா.ஜ.க.வுடன் கூட்டணிக்கு சென்றால் அ.தி.மு.க. என்ற ஒரு கட்சியே இருக்காது.
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, கூட்டணி கட்சிகளுக்கு சீட்டு மற்றும் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என பேசி உள்ளார். பொத்தாம் பொதுவாக சொல்லாமல் உங்களிடம் யார் பணம் கேட்டார்கள் என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
யார் பணம் கேட்டார்கள்? நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்? என்பதை வெளிப்படையாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சச்சிதானந்தம் எம்.பி. மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- ஒரு புள்ளியை வைத்துவிட்டு பெரிய கோலம் போடமுடியாது.
- அடியெடுத்து வைத்தவுடன் ஆட்சியை கைப்பற்றிவிட முடியாது என்றார்.
திண்டுக்கல்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். அதைத்தொடர்ந்து ஆயக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் திருமாவளவன் கலந்துகொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
தேர்தலில் அதிக சீட் வேண்டும் என்பதற்காகவோ, பணம் காசு வேண்டும் என்பதற்காகவோ பழனி மலைக் கோயிலுக்கு வரவில்லை. என் முன்னோர் வாழ்ந்த இடம் என்பதனால் அதனை காண்பதற்காகவே வந்துள்ளேன்.
நான் அரசியல் களத்திலே அடியெடுத்து வைத்தபோது எழுப்பிய முழக்கம், எளிய மக்களை அதிகாரமிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பது. அதை அவ்வளவு எளிதில் எட்டிப் பிடித்துவிட முடியாது.
கடந்த 20 ஆண்டுக்கு முன்பு "எனக்கும் முதல்-அமைச்சர் கனவு உண்டு" என்று பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்தேன். அதாவது, எளிய மக்களும் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்பதுதான்.
இன்றைக்கு நாம் முதல் புள்ளியை வைத்திருக்கிறோம். நூற்றுக்கணக்கான புள்ளிகள் வைத்தால்தான் கோலம் போட முடியும். ஒரு புள்ளியை வைத்துவிட்டு பெரிய கோலம் போடமுடியாது.
கட்சியை தொடங்காமலே பலர் ஆட்சிக்கு வர ஆசைப்படுகின்றனர். ஆனால் நாம் அங்குலம், அங்குலமாக வளர்ந்து வருகிறோம்.
தமிழகத்தில் தவிர்க்க முடியாத, அரசியல் விதிகளை திருத்தக்கூடிய கட்சியாக நாம் வலிமை பெற்றுள்ளோம் என தெரிவித்தார்.
- திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார்.
- கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கட்சி நிகழ்ச்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு வருகை தந்தார்.
அப்போது அவர் அங்குள்ள பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
இதைதொடர்ந்து, மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் தரிசனம் மேற்கொண்டார்.
கோவிலுக்கு வருகை தந்த திருமாவளவனுக்கு சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வரவேற்பு வழங்கினார். கோவிலை விட்டு வெளியே வந்த அவரை கோவில் சுற்றுவட்டாரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள் சூழ்ந்துகொண்டனர்.
அவர்களின் குறைகளை திருமாவளவன் கேட்டறிந்தார். பொது மக்கள் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
- பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார்.
- போலி டாக்டர்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் இதுபோல பல்வேறு இடங்களில் கிளீனிக் வைத்து செயல்படுகின்றனர்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகில் உள்ள கவுஞ்சி ராஜபுரத்தை சேர்ந்தவர் சர்வேஸ் (வயது 30) விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரியதர்ஷினி (24). இவர்களுக்கு ஏற்கனவே 2 வயதில் 1 ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் கருவுற்ற பிரியதர்ஷினி கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 20 நாட்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர் வீடு திரும்பினார்.
சில நாட்களிலேயே பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வரும் பிரின்ஸ் என்பவரிடம் சிகிச்சைக்கு சென்றார். அவருக்கு மருந்து மாத்திரைகளை பிரின்ஸ் வழங்கி உள்ளார். இவர் முறையான மருத்துவம் படிக்காமல் தனது வீட்டிலேயே கிளீனிக் போல நடத்தி அப்பகுதி மக்களுக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மீண்டும் பிரியதர்ஷினிக்கு வயிற்று வலி ஏற்படவே பிரின்ஸ்சிடம் சிகிச்சைக்கு வந்துள்ளார். அவர் வலி குறைவதற்காக அதிக வீரியம் கொண்ட ஊசியை அவருக்கு செலுத்தினார். சற்று நேரத்தில் பிரியதர்ஷினிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து கொடைக்கனால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளித்த பிரின்சை தேடி வருகின்றனர். அவர் முறையான மருத்துவம் படிக்காமல் பல வருடங்களாக கிராம மக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார். தற்போது அவரது சிகிச்சையால் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் மற்றும் மருத்துவ துறையினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
போலி டாக்டர்கள் கொடைக்கானல் மலை கிராமங்களில் இதுபோல பல்வேறு இடங்களில் கிளீனிக் வைத்து செயல்படுகின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு நீண்ட தூரம் செல்லவேண்டும் என்பதால் அருகில் கிடைக்கும் மருத்துவத்தை அப்பகுதி கிராம மக்கள் எடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஒருசில டாக்டர்களும் உதவி வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு கொடைக்கானல் மலை கிராமங்களில் போலி டாக்டர்களின் நடமாட்டத்தை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.






